2461.கல் நகு திரள புயக் கணவன் பின் செல,
நல் நகர் ஒத்தது, நடந்த கானமும்;
‘மன்னவன் துஞ்சினன்’ என்ற மாற்றத்தால்
அன்னமும் துயர்க் கடல் அடிவைத்தாள் அரோ!

     கல் நகு - கல்லை இகழ்கிற;  திரள் புயக் கணவன் - திரண்ட
தோளை உடைய கணவனாகிய இராமன்;  பின் செல  - பின்னே
செல்லுதலால்;  நடந்த கானமும்- சீதை நடந்து சென்ற காடும்;  நல் நகர்
ஒத்தது
- (அவளுக்குத் துயரைத் தராமல்) நல்ல அயோத்தி நகரைப்
போலவே இருந்தது;  (இப்போது) ‘மன்னவன் துஞ்சினன்’ என்ற
மாற்றத்தால்
- தயரதன் இறந்தான் என்ற வார்த்தையால்;  அன்னமும் -
சீதையும்; துயர்க்கடல் - துக்கம் என்ற கடலில்; அடி வைத்தாள் - கால்
வைத்து நடக்கத்தொடங்கியவள் ஆனாள்.

     இராமனுடன் சென்ற காரணத்தால் காடு புகுந்தும் துயரை அறியாமல்
இருந்தவள், தயரதன் இறந்தான் என்று கேட்டபோது முதன்முதலில் துன்பம்
என்பது இன்னதென அறிந்தாள் என்பதை இவ்வாறு கூறினார். ‘அரோ’ -
அசை.                                                       87