தாயர், சானகியைத் தழுவிக்கொண்டு வருந்துதல் 2466. | பின்னர் வீரரைப் பெற்ற பெற்றி அப் பொன் அனார்களும், சனகன் பூவையைத் துன்னி, மார்பு உறத் தொடர்ந்து புல்லினார்; இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார். |
பின்னர் - பிறது; வீரரைப் பெற்ற பெற்றி அப்பொன் அனார்களும் -இராமன் முதலிய நால்வரையும் பெற்ற தன்மையுடைய அந்தப் பொன்போன்ற அரசமாதேவியர் மூவரும்; சனகன் பூவையை - சனகன் மகளாகிய சானகியை; துன்னி - நெருங்கி; மார்புஉறத்தொடர்ந்து புல்லினார் - பற்றிக்கொண்டு மார்பிற் கட்டியணைத்து; இன்னல் வேலை புக்கு - துன்பக் கடலிற் புகுந்து; இழிந்து - உள்ளே இறங்கி; அழுந்துவார்- அமிழ்பவராக ஆனார்கள். சனகன் மகள் சானகி, பூவை - உவமவாகுபெயர். பொன் போன்றார் - தேவியர்; போற்றிப் பாதுகாக்கப்படுபவர் என்னும் பொருளில், தழுவிய அளவில் துயரம் மீக்கூர்ந்தபடியை இவ்வாறு உரைத்தார். 92 |