2470. | ‘வரதன் துஞ்சினான்; வையம் ஆணையால், சரதன் நின்னதே; மகுடம் தாங்கலாய், விரத வேடம், நீ என்கொல் வேண்டுவான்? பரத! கூறு’ எனாப் பரிந்து கூறினான். |
‘பரத!-; வரதன் துஞ்சினான் - மேலானவனாய தயரதன் இறந்தான்; வையம்- நிலவுலகம்;ஆணையால் - (அவனது ) கட்டளையால்;சரதம் - உண்மையாக;நின்னதே - நின்னுடையதே; (அவ்வாறிருக்க) நீ மகுடம் தாங்கலாய் - நீ மணிமுடிசூடாமல்; விரத வேடம் - தவ வேடத்தை; வேண்டுவான் - விரும்பி அணிந்தது; என்கொல்? - எதனால்’; கூறு’ - சொல்வாய்; எனா - என்று; பரிந்து - அன்பு கொண்டு; கூறினான் - கேட்டு மொழிந்தான். வரதன் - வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுப்பவன் எனலும் ஆம். “ஈந்தே கடந்தான் இரப்போர்க் கடல்” (172.) என்றார் முன்னும். வேண்டுவான் எதிர்கால வினையெச்சம்; இங்குத் தொழிற்பெயர்த் தன்மையாய் வந்தது. ‘வேண்டுதல் என் சொல்’ என உரைக்க. 96 |