2783. | ‘தனையர் ஆயினார் தந்தை தாயரை வினையின் நல்லது ஓர் இசையை வேய்தலோ? நினையல் ஓவிடா நெடிய வன் பழி புனைதலோ? - ஐய! புதல்வர் ஆதல்தான். |
‘ஐய! - பரதனே; தனையர் ஆயினார் - மகனாகப் பிறந்தவர்கள்; புதல்வர் ஆதல்தான் -புதல்வர் என்னும் சிறப்பினைப் பெறுவது; தந்தை தாயரை -தம் தந்தையை, தாயை; வினையின்- தாம்செய்யும் செயல்களால்; நல்லது ஓர்இசையை வேய்தலோ- நல்லதாகிய ஒரு புகழை அடையும்படி செய்தலாலா? (அல்லது); நினையல்ஓவிடா - என்றும் மனத்தை விட்டு நீங்காத; நெடிய வன் வழி புனைதலோ - நீண்டகொடிய பழியை அணிவிப்பதனாலா? எதனால்? புதல்வர் ஆதல் பெற்றோர்க்கு இசை வேய்தலால்தான் எனின் பெற்றோர் சொல்வழி நின்று செயல் ஆற்றுதலே அதனை உண்டாக்கும்; அவர் சொல்லுக்கு மாறுபடுவது அதனை உண்டாக்காது, பழியை ஆக்கும் என்பதாம். ‘தான்’ உரையசை. பிறப்பால் தனையர் ஆயினும் செயல்சிறப்பால் புதல்வர் ஆவர் என்பது கருத்து. 109 |