பரதனை அரசாட்சி ஏற்குமாறு இராமன் ஆணையிடல்  

2488. ‘பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என்
வசம் செய்தால், அது முறைமையோ? வசைக்கு
அசைந்த எந்தையார் அருள, அன்று நான்
இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ?

     ‘பசைந்த சிந்தை நீ - (என்பால்) அன்புற்ற மனத்தை உடைய நீ;
பரிவின்- (உன்) அன்பினால்;  வையம் - உலகத்தை;  என் வசம்
செய்தால் -
என்னுடையதாகச் செய்தால்;  அது முறைமையோ? - அது
நீதியாகுமோ?; வசைக்கு அசைந்த- பழிக்கு அஞ்சிய; எந்தை யார்- எம்
தந்தையார்; அருள - (கைகேயிக்கு)வரம் அளித்தருள;
அன்று நான்
இசைந்த ஆண்டு எலாம்
- அன்று அதற்குஉடன்பட்டுக் (காடு
புகுவதாக) ஏற்றுக்கொண்ட பதினான்கு ஆண்டுகளும்;  இன்றொடு
ஏறுமோ?  -
இன்றோடு முடிந்துபோய்விடுமோ?

     ஏற்றுக்கொண்டதை யான் நிறைவேற்ற நீ உதவி செய்தல் வேண்டும்
என்று பரதனிடம் தெரிவித்தான் இராமன். அப்படியில்லையேல் தந்தையார்
மேல் பிழிவந்து சேரும். அவரே ‘வசைக்கு அசைந்த’ எந்தையார் - பழிக்கு
அஞ்சுகிறவர் என்றும் குறிப்பித்தான்.                              114