பக்கம் எண் :

காண்டவதகனச் சருக்கம்445

31.- இதுவும், அடுத்த கவியும் - அக்கினியின் பலநிறப் புகைகளின்
வருணனை.   

ஆனவாகுலந்தன்னொடுதப்புதற் கணிபடப்பறந்தோங்குந்
தூநிறத்தனகபோதமொத்தன விடையிடையெழுஞ்சுடர்த்தூமம்
கானமேதியுங்கரடியுமேனமுங்கடகரிக்குலந்தாமும்
வானிலேறுவபோன்றன நிரைநிரைவளர்தருகருந்தூமம்.

     (இ-ள்.) இடை இடை எழும் - இடையிடையே மேலெழுகிற, சுடர் தூரம் -
சிறிதுஒளியோடுகூடிய [வெள்ளிய] புகைகள்,- ஆன ஆகுலம்தன்னொடு -
(தீப்பற்றியதனால் தமக்கு) உண்டான வருத்தத்துடனே, தப்புதற்கு - (அதனினின்று)
தப்பிப்பிழைத்தற் பொருட்டு, அணிபட பறந்து ஓங்கும் - வரிசையாகப் பறந்துயர்ந்து
மேலெழுகிற, தூ நிறத்தன கபோதம் - சுத்தமான நிறத்தையுடையனவாகிய
புறாக்களை,ஒத்தன - போன்றன; நிரை நிரை வளர்தரு - வரிசைவரிசையாக
மேலெழுகிற, கருந்தூமம் - கருநிறமான புகைகள்,- வானில் ஏறுவ - (சுற்றிலும்
வளைந்துகொண்டஅந்நெருப்பினின்று தப்புதற்கு) மேலெழுவனவான, கானம்
மேதிஉம் -காட்டெருமைகளையும், கரடிஉம் - கரடிகளையும், ஏனம்உம் -
பன்றிகளையும், கடகரி குலம்உம் - மதயானைக்கூட்டங்களையும், போன்றன-;

     வெண்புகை கபோதத்தை யொத்திருக்க, கருந்தூமங்கள் வானிலேறுங்
கானமேதிமுதலியனபோலுமென்றார்: தற்குறிப்பேற்றவணி. ஆகுலந்தன்னொடு என்பதில், 'ஒடு' - அடைமொழிப்பொருளது.

 
32.வரைத்தடந்தொறுங்கதுவியகடுங்கனன்மண்டலினகல்வானில்
நிரைதெழுந்தசெம்மரகதகனகவா ணீலவெண்ணிறத்தூமம்
தரைத்தலத்தினின்றண்டகோளகையுறச் சதமகன்றடஞ்சாபம்
உரைத்ததன்வளைவறநிமிர்ந்தழகுற வோடுகின்றதுபோலும்.

    (இ-ள்.) வரை தடம் தொறுஉம் - மலைகளி னிடந்தோறும், கதுவிய
கடுங்கனல் மண்டலின் - பற்றிய கொடிய அக்கினி நெருங்குதலினால், அகல்
வானில்நிரைத்து எழுந்த - அகன்ற ஆகாயத்தில் வரிசையாக எழுந்த, செம்
மரகதம் கனகம்வாள் நீலம் வெள் நிறம் தூமம் - செம்மை பசுமை பொன்மை
கருமை வெண்மையென்னும் ஐவகை நிறங்களையுடைய புகையானது,- தட சதமகன்
சாபம் - பெரியஇந்திரதனுசு. உரைத்த தன் வளைவு அற நிமிர்ந்து -
(பிரசித்தமாகச்) சொல்லப்படுகிறதனது வளைவு நீங்க நிமிர்ந்து, தரைத்தலத்தினின்று
அண்டகோளகை உற -பூமியினிடத்தினின்று அண்டகோளத்தின் மேன்முகட்டை
யளாவ, அழகு உறஓடுகின்றது - அழகுமிக நீண்டுசெல்வதை, போலும் - ஒக்கும்;
(எ-று.)

     மலைகளிலுள்ள பலவகைப்பொருள்களை நெருப்பு எரிக்கும் போது,
அவ்வெரிக்கப்படும்பொருளுக்குஏற்பப் புகையின்நிறம் மாறுபடுதல், , இயல்பு.
இங்ஙனம்பலவர்ணங்களையுங் கொண்டு விரவப்பெற்றதான இந்திரவில்லை
உவமைகூறுவர், புகையின்நேரெழுச்சிக்கு ஒப்பாதற்பொருட்டு, 'வளைவற நிமிர்ந்து
தரைத் தலத்தினின்றுஅண்டகோளகையுற ஓடுகின்றது போலும்'