பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்267

பெற்றுக் கொண்டு,புண்டரிகன் பெயர் நாடு பொறித்தோன் -
புண்டரீகனென்ற (தன் பெயரை நாட்டில் எழுதிவைத்திருப்பவன்,-திண்திறல்
மாருதி சேய் வருவானை- மிக்க வலிமையுடைய வாயுபுத்திரனான
வீமசேனன் வருபவனை,கண்டனன்-கண்டு, அங்கு- அப்போது, அழல்
கான்றிடு கண்ணான்-நெருப்பைவெளிப்படுத்துகின்ற
கண்களையுடையவனாய்,-(எ-று.)

    மாருதிசேய்-மாருதியென்னப்படுகிற சேய்என்று இருபெயரொட்டு:
சேய்என்பது குமாரன் என்ற வடசொல்போலத் தமிழில் வழங்குவது என்க:
இது செம்மைநிறமுடைய முருகக்கடவுளைமுதலிற் காட்டி, பிறகு
இலக்கணையால்அவன்போல் அழகு வலிமை முதலியனவுள்ள மைந்தனைக்
காட்டும்.  இனி மாருதி-வாயுகுமாரனானவீமன், சேய்வருவானை-
சேய்மையில் வருபவனைஎன்றுமாம்.  கண்டனன்-முற்றெச்சம்.  கண்ணான்
என்பதைக் குறிப்பு முற்றாகமுடித்தலும் ஒன்று.                 (409)

73.-புண்டரீகனென்றஅவ்வரக்கன் வீமசேனனை
நோக்கிக்கூறலுறுதல்.

உருத்துமுகிற்குல முருமுடன்மட்கச்
சிரித்திதழ்கவ்வி யெயிற்றிணைதின்றாங்கு
அரித்துவசன்றனைநோக்கியரக்கன்
கருத்துடனின்றிவை கட்டுரைசெய்வான்.

     (இ-ள்.)முகில் குலம் - மேகங்களின் கூட்டம், உருமுடன்-இடியுடனே,
மட்க-மங்கும்படி, உருத்து சிரித்து - சினங்கொண்டு சிரித்து, இதழ் கவ்வி-
(பற்களால்) உதட்டைக் கடித்தும், எயிறு இணைதின்று-இரண்டு
கோரப்பற்களைமென்றும், ஆங்கு-அப்போது, அரி துவசன் தனைநோக்கி-
சிங்கக் கொடியை யுடையவனானவீமசேனனைப்பார்த்து, அரக்கன்-அந்தப்
புண்டரீகனென்ற இராட்சதன், நின்று-இருந்தவண்ணம்,கருத்துடன்-
மனப்பூர்வமாக, இவை-இவ்வார்த்தைகளை,கட்டுரை செய்வான்-உறுதிச்
சொற்களாகக் கூறுபவனானான்;(எ-று.)-புண்டரீகனென்னும்அரக்கன்
கூறுவனவற்றை மேற்கவியிற் காண்க.

     சிரித்தல்இதழ்கவ்வுதல் எயிற்றிணைதின்னுதல்- சினக்குறி.  வீமன்
தனது பலபராக்கிரமங்கட்கு அறிகுறியாகச் சிங்கத்தைத் துவசத்திற்
கொண்டனன்போலும்.  உட்குடன்மட்க என்று பிரதிபேதம்.        (410)

74.-புண்டரீகவரக்கன்கூறிய உரை.

யானுறைகானக மென்றிமையோரும்
தானவர்தாமு மிதற்கிடைசாரார்
மானுடனீயிவண் வந்ததுசுவையாம்
ஊனிடவோவிஃ துரைத்திடுகென்றான்.