(இ-ள்.)அழுதுஉம்-(தன்னைக்காணாதபொழுதுவிரகதாபத்தாற்) புலம்பியும், வாள் முறுவல் அரும்பிஉம் - (தன்னைக்கண்டபொழுது) ஒளியையுடைய புன்சிரிப்பைச் செய்தும், களித்துஉம்-களிப்படைந்தும், ஆடிஉம் - ஆநந்தக்கூத்தாடியும். பாடிஉம்-(பலவகைக்) கானங்கள் பாடியும், மகிழ்ந்துஉம் - மகிழ்ச்சியடைந்தும், தொழுதுஉம் - (தன்னை) வணங்கியும், ஆதரித்தும் - (தன்னை)மிக விரும்பியும், விழுந்துஉம்- (தேகம்பரவசமாய்க்) கீழ்விழுந்தும், மேல் எழுந்துஉம்-பின்பு எழுந்துநின்றும், துதித்திட - (தன்னைத்)தோத்திரஞ் செய்ய, தன் பதம் தருவான் - (இப்படிப்பட்ட கோபஸ்திரீகள் முதலிய தன்னடியார்களுக்குத்) தனது திருவடிகளைக்கொடுத்தருளிய கடவுள், (யாரென்னில்),-முசுடர் ஆகி - (சூரிய சந்திர அக்கினியரென்னும்) மூன்று ஒளிகளின் வடிவமாய், ஞாலம்ஆய்-பூமியின் வடிவமாய், விண் ஆய் - ஆகாயத்தின் சொரூபமாய், எங்குஉம்-எவ்விடத்துமுள்ள, முழுதும் ஆய் - எல்லாப் பொருள்களின் உருவமுமாய், மூலம் ஆய் - (இவையெல்லாவற்றிற்கும்) ஆதிகாரணமாய், எழுதுஒணாமறைக்குஉம்எட்டஒணாவடிவத்து - எழுதுதற்கரிய வேதங்களுக்கும் எட்டமுடியாத சொரூபத்தையுடைய, எம்பிரான் - எமது தலைவனும்,உம்பர் நாயகனே - தேவாதி தேவனுமான ஸ்ரீமகாவிஷ்ணுவே; (எ-று.) இது இந்தச்சருக்கத்தின் கடவுள் வணக்கம். கடவுளின் தன்மையைத் தெளிவாகக் கூறுவதனால்அவ்வாறுள்ள கடவுளைவணங்குவோ மென்றது புலனாம். களிப்பு - மிக்க ஆநந்தம். தன்பதம்-தனது வாழிடமான பரமபதமென்றுங் கொள்ளலாம். பஞ்சபூதங்களுள் முதலதாகிய பிருதிவியை 'ஞாலமாய்'என்றும், ஈற்றதாய ஆகாயத்தை 'விண்ணாய்'என்றும், இடையதாகிய அக்கினியை 'முச்சுடராகி'என்றதிற் சேர்த்தும் கூறியதில், கூறப்படாத மற்றையிரண்டையும் அடக்குக. எழுதொணா,எட்டொணா- செயவெனெச்சத்தின் ஈறு தொகுத்தல். ஒணா- ஒன்றாத: மரூஉ. வேதம் எழுதாக்கிளவியாய் அநந்தமாயிருத்தலின், எழுதொணாமறை யெனப்பட்டது. மறைக்கும், உம்மை - எல்லாப்பொருள்களையுமறிந்து உண்மை கூறுகிற அதன் சிறப்பை விளக்கும். தன்பதந்தந்தான் என்று பிரதிபேதம். இதுமுதல் இருபதுகவிகள் - பெரும்பாலும் இரண்டு நான்கு ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றவை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள். (477) 2.-இருடியர்பாண்டவரிடம் கொடியமிருகங்களினின்று அபயம்வேண்டுதல். இந்தநீள்வனத்தின்மன்னவரிவ்வாறின்பமுற்றிருந்தவந்நாளில், அந்தமாவனத்தின்சூழலிற்பயிலு மருந்தவமுனிவரர்பலருந், தந்திபேருழுவையாளியெண் கிவற்றாற் றாமிடருழந்துமெய்தளர்ந்து, வந்துமாமகிபர்க்கபயமென்றவர் வாழ் வனத்திடைப் புகுந்துமன்னினரால். |
|