யென்று) ஆழ்ந்ததுயரத்தைக்கொண்டிருந்த, திரௌபதிக்கு-,அறிய - தெரியுமாறு [விளக்கமாக],கூறினார்-;-இறந்துமீண்டதும் என்றும் பாடம். (723) இந்தச்சருக்கத்துக்கதை வியாசபாரத்திற்கூறியபடி சுருக்கமாகக் காட்டப்படும்: வருமாறு:-யுதிஷ்டிரன்முதலாயினோர் காமியக வனத்தினின்று த்வைதவனத்திற்கு மீண்டும் வந்தனர்;அங்கே ஒருமான் மரத்திலுராயும்போது தன்கொம்பிலேமாட்டிக்கொண்ட பிராமணனொருவனுடைய அரணிக்கட்டையுடன் ஓடிவிட்டது. அந்தப் பிராமணனுடைய வேண்டுகோளினால் அதை மீட்டுத் தரும் பொருட்டு அந்தமானைப் பாண்டவர் தொடர்ந்து சென்றனர்: வெகுதூரம் பாண்டவர்களை அலைக்கழித்ததும் அந்த மான் மறைந்திட்டதாக, அந்தப் பாண்டவர்கள் களைப்படைந்து அங்கோர் ஆலமரத்தடியில் தங்கினர். பிறகு பாண்டவர்கள் தண்ணீர்பருகவேணுமென்ற வேட்கையினராயினர். அப்பால் யுதிஷ்டிரனுடைய உத்தரவினால் நகுலன் மரத்தின்மீதுஏறிச் சமீபத்தில் ஒருபொய்கையிருத்தலைக் கண்டு சொல்ல, பின்பு முறையே நகுலன்முதலிய நால்வரும் தண்ணீர்கொணருமாறு அப்பொய்கையை யடைந்து ஆங்குள்ள இயக்கன் சொல்லைக் கேளாமல் தண்ணீர்பருகி உயிர்நீங்கி மீண்டுவராதிருந்தனர். அதுகண்ட யுதிஷ்டிரன் ஆங்குச் சென்று பொய்கைக்கரையிலே விழுந்துகிடக்கிற தம்பிமாரைக்கண்டு மிகவும்புலம்பினான். பின்பு அப்பொய்கைநீரை அவ்யுதிஷ்டிரன் பருகச் சென்றானாக, இயக்கன் தோன்றி, 'யான்கேட்கும் வினாக்களுக்கு விடையிறுத்தபின்னரன்றி முன்பு தண்ணீர் பருகற்க'என்றுதடுக்க, யுதிஷ்டிரனும் தண்ணீரைப்பருகாது அவ்வியக்கன்கேட்கும் வினாக்களுக்கெல்லாம் ஏற்ற விடையளித்தான். அதனால் மனமுவந்த இயக்கன், வீமன் முதலிய நால்வரையும் உயிர்ப்பித்தான். அப்பால் அந்த இயக்கன் யுதிஷ்டிரனிடத்துத் தான் யமதருமராசனென்பதையும் சீலத்தை யாராயும்பொருட்டே அரணிக்கட்டையைக்கவர்தல் முதலியன தான் செய்தவை யென்றுங் கூறி, அவ்யுதிஷ்டிரனுக்கு வேண்டிய வரங்களைத் தந்து சென்றிட்டா னென்பது. நச்சுப்பொய்கைச்சருக்கம் முற்றிற்று. ----------------- ஆரணிய பருவம்முற்றுப்பெற்றது. |