பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்93

ஆறு கவிகள் -ஒருதொடர்.

     (இ-ள்.)செழு - மிகுந்த, சுடர் - ஒளியையுடைய, மணி -
மாணிக்கத்தையுடைய, பணி - சர்ப்பங்களையும்,திங்கள் -
பிறைச்சந்திரனையுமணிந்த,மௌலியாய் - திருமுடியுடையவனே!
அருவினையினின்- (கடப்பதற்கு)அருமையான கருமங்களால், அழுந்திய
பிறவியின் விழுந்து - தாழ்வான பிறப்புக்களிலே வீழ்ந்து, நாயின்உம்
மெலிந்து - நாயைக் காட்டிலுங் கடைப்பட்டு, அயருவேன் முனம் -
வருந்துகின்ற அடியேனது எதிரில், எழுந்தருளிய - வந்து தரிசனம்
தந்தருளிய,  இஃது - இச்செயல், என்ன மாயம்ஓ-என்ன ஆச்சரியமோ!
(எ-று.)

     தீவினைபோலநல்வினையும்பிறப்புக்குக் காரணமாதலால், உயிரைப்
பந்தப்படுத்துவதிற் பொன்விலங்கும் இருப்புவிலங்கும் போல நல்வினையும்
தீவினையும்தம்முள் ஒப்பனவா மென்க.                        (117)

118.ஆதியேயண்டமு மனைத்துமாயொளிர்
சோதியேகொன்றையந் தொங்கன்மௌலியாய்
வாதியேமரகத வல்லியாளொரு
பாதியேபவளமாம்பரமரூபியே.

     (இ-ள்.) ஆதியே - (எல்லாப்பொருள்களுக்கும்) முதன்மையானவனே!
அண்டம்உம் - உலக வுருண்டைகளும், அனைத்துஉம் - (அவற்றிலுள்ள)
சராசரப்பொருள்களெல்லாமும், ஆய் - ஆகி, ஒளிர் - விளங்குகின்ற,
சோதியே - ஒளியுருவானவனே!  கொன்றை - கொன்றை மலர்களாலாகிய,
அம் - அழகிய, தொங்கல் - திருமாலையைச்சூடிய, மௌலியாய் - முடியை
யுடையவனே!  வாதியே - பேசவல்லவனே!  மரகதவல்லியாள் - மரகத
ரத்தின மயமான பூங்கொடி போன்ற உமாதேவியை, ஒருபாதியே -
இடப்பாகத்திலுடையவனே!  பவளம் ஆம் பரம ரூபியே - (வலப்பாகம்) பவழ
மயமான சிறந்த வடிவமுடையவனே! (எ-று.)

     தொங்கல்-தொங்குவதாகிய மாலை. வாதிஎன்பது - ஸர்வஜ்ஞனென்பது
தோன்ற நின்றது.                                             (118)

119.பையராவணிமணிப் பவளமேனியாய்
செய்யவாய்மரகதச்செல்விபாகனே
ஐயனேசேவடியடைந்தவர்க்கெலாம்
மெய்யனேயெங்குமாய்விளங்குஞ்சோதியே.

     (இ-ள்.) பை-படத்தையுடைய, அரா-நாகங்களை, அணி - ஆபரணமாகத்
தரித்த, மணி-அழகிய, பவளம் மேனியாய் - பவழம்போற் சிவந்த
திருமேனியையுடையவனே!  செய்ய வாய்-சிவந்த வாயையுடைய, மரகதம் -
மரகதரத்தினம்போற் பசுநிறமான, செல்வி- எல்லாச் செல்வங்களுமுடைய
அம்பிகையை, பாகனே-இடப்பக்கத்திற் கொண்டவனே! ஐயனே - தலைவனே!
சே அடி அடைந்தவர்க்கு எலாம்-சிவந்த திருவடிகளைச் சரணமடைந்த