பக்கம் எண் :

98பாரதம்ஆரணிய பருவம்

வாளியை-உனது திருநாமத்தைப்பெற்ற தெய்வத் தன்மையையுடைய
பாசுபதாஸ்திரத்தை, தந்தருள் - கொடுத்தருளுவாயாக,'என்றனன்-என்று
கேட்டுக்கொண்டான்;(எ-று.)

     பாரதஅமர் என்பதற்கு-பரதவமிசத்தாருள் நிகழும் போர் என்று
பொருள்:பார் அதம் அமர் என்றுபிரித்து-பூமியிலுள்ள துஷ்டரை
நாசப்படுத்தும் போர் என்று உரைப்பாருமுளர்.  சிந்த=சிந்துவிக்க:
பிறவினைப் பொருளில் வந்த தன்வினை: சிதற என்று தன்வினையே
யாகவுமாம்.                                          (128)

129. சிவபெருமான்அருச்சுனனுக்குப் பாசுபதத்தையீதல்.

ஐயனுமம்மையோ டருள்புரிந்துபின்
வெய்யபொற்றூணியும் வில்லுமந்த்ரமும்
துய்யபாசுபதமெய்த் தொடையுமுட்டியும்
ஒய்யெனநிலையுடனுதவினானரோ.

     (இ-ள்.)ஐயன்உம்-தலைவனானசிவபிரானும், அம்மையோடு-
பார்வதியுடனே, அருள் புரிந்து-கருணைசெய்து, பின்-உடனே, வெய்ய
பொன் தூணிஉம்-(பகைவர்களுக்குப்)பயங்கரமானபொன்னாலாகிய
அம்புப்புட்டிலையும்,வில்உம்-வில்லையும்,மந்த்ரம்உம்-உரிய
மந்திரத்தையும், துய்ய பாசுபதம் மெய் தொடைஉம்-பரிசுத்தமான பாசுபதம்
என்கிற உண்மையான அஸ்திரத்தையும், முட்டிஉம்-அவ்வில்லையும்
அம்பையும் பிடிக்கும் விதத்தையும், நிலையுடன்-நிலையுடனே,ஒய்யென-
விரைவாக, உதவினான்-தந்தருளினார்;

     வில் வளைத்துஅம்பைஎய்வார் நிற்றற்கு உரியநிலை-ஆலீடம்,
பிரதியாலீடம், பைசாசம், மண்டலம் என நால்வகைப்படும்:அவற்றுள்
வலக்கால் மண்டலித்து இடக்கால் முந்துறல், ஆலீட நிலை: வலக்கால்
முந்துற்று இடக்கால் மண்டலித்தல், பிரதியாலீட நிலை:ஒருகாலில்நின்று
ஒருகால் முடக்கல், பைசாச நிலை;இருகாலும் பக்கல் வளைய
மண்டலித்தல், மண்டலநிலை: இனி, வேறுவகையாகக் கூறுவாரு முளர்.
தூணியையும் வில்லையும்தொடையையும் உதவுதல்-தருதல்:
மந்திரத்தையும் முட்டியையும் நிலையையும்உதவுதல்-உபதேசித்தல்.  இனி,
முட்டி என்பதற்கு-கைக்கவசம் என்றும்,  நிலையென்பதற்கு-
உடற்கவசமென்றும் பொருளுரைப்பாரு முளர்.  மெய்த்தொடை -
பழுதுபடாமற் குறித்த இலக்கிற் சென்று தாக்கும் அம்பு என்றவாறு. (129)

130. சிவபெருமான்கயிலைக்கு ஏகுதல்.         

பெற்றனன் விசயனும் பேயும்பூதமும்
சுற்றியகணங்களுஞ் சுருதியோசையும்
வெற்றிகொள்பெற்றமும் விழைந்துசூழவே
கற்றையஞ்சடையவன் கயிலையேகினான்.