தகவுடைய பாண்டவரும் வண்ண மாதுந்தனித்தெண்ணிப் பரகாய சரிதர் போலப், புகலரிய பழையதமவடிவங் கொண்டார் போனபக லவனுதயப் பொருப்பின் மீண்டான். |
(இ -ள்.) இவை - இவ்வார்த்தைகளை, மகன் - (தன்) புதல்வனான உத்தரன், உரைத்த அளவில் - சொல்லியவளவிலே, தாதை கேட்டு - அந்த உத்தரனது தந்தையாகிய விராடராசன்கேட்டு, மனம் நடுங்கி-, நெகிழ்ச்சியுடன் - மனத்தளர்ச்சியுடனே, மகிழ்ச்சி கூர்ந்தான் - சந்தோஷம் மிகப்பெற்றான்: பகல் அமரில் - பகற்பொழுதைய போரிலே, ஏறிய மெய் பராகம் - தன்னுடம்பிற் படிந்த புழுதி, மாற - போகும்படி, பகலோன்உம் - சூரியனும், புனல் படிவான் - நீராடுதற்கு, பரவை சேர்ந்தான் - (மேல்திசைக்) கடலை யடைந்தான் [அஸ்தமித்தான்]; (அவ்விராத்திரியில்), தகவு உடைய பாண்டவர்உம் - பெருமையையுடைய பாண்டுபுத்திரரைந்துபேரும், வண்ணம் மாது உம் - வண்ணமகளாகிய திரௌபதியும், தனித்து எண்ணி - தனியாக இருந்து இரகசியமாக ஆலோசித்து, பர காய சரிதர் போல - பரகாயப் பிரவேசஞ் செய்தவர்கள்போல, புகல் அரிய பழைய தம் வடிவம் கொண்டார் - வருணித்துச்சொல்லுதற்கு அருமையாகவுள்ள பழமையான தங்களது நிசரூபத்தை யடைந்தார்கள்; போன பகலவன் - அஸ்தமித்த சூரியன், உதயம் பொருப்பில் மீண்டான் - திரும்பி உதயகிரியில் வந்தான் [உதித்தான்]; (எ - று.)-மற்று - அசை. மிகச்சிறந்தவர்களாகிய பாண்டவர்களையும் திரௌபதியையும் தன் கீழ் அடங்கிய பரிவாரங்களாகக் கொண்டிருந்ததையும், தருமபுத்திரனைக் கவறுகொண்டு அடித்ததையுங் கருதி விராடன் மன நடுங்கினன். உரைத்தளவு - தொகுத்தல். நெகிழ்ச்சியும் - மனநடுக்கத்தாலானதே. மகிழ்ச்சி - பாண்டவர் தன்னிடத்து வாழுமாறு தான் பாக்கியஞ்செய்திருந்ததைக் கருதியதனாலாகியது. மாலைப்பொழுதில் விளங்குகின்ற சூரியனது இயற்கைச் சிவப்பைப் பகற்பொழுதிற் போர்க்களத்தினின்று எழுந்த புழுதி படிந்ததனாலாகியதாகவும், இயல்பில் அஸ்தமிப்பதை அப்புழுதி நீங்க மேல்கடலிற் குளிப்பதற்குச்சென்றதாகவும் வருணித்தவாறாம்; தற்குறிப்பேற்றவணி. பரகாயசரிதர் - தமது உடம்பை விட்டு வேறோருடம்பிற்புகுந்திருந்து மீண்டும் தமது உடம்பில் வருபவர்; இது, ஒருவகை யோகசித்தி: கூடுவிட்டுக் கூடுபாய்தலெனப்படும். (300) நிரைமீட்சிச் சருக்கம் முற்றிற்று. ----- |