தினங்கள்[பதின்மூன்றுவருஷங்கள்], சென்ற - (பெரும்பாலுங்) கழிந்தன; (ஆகையால்), இனி - இனிமேல், அடல் ஐவர் - வலிமையையுடைய பஞ்சபாண்டவர்கள், நம்முடன் - நம்மோடு ஒப்பாக, பார் ஆள வரும் முன்னர் - பூமியை ஆளுவதற்கு வரும் முன்னமே, உறை நாடு - (அவர்கள் உருத்தெரியாமல் மறைந்து) வசிக்கின்ற தேசத்தை, பார்மின்கள் - (இன்னதென்று தேடிக்) கண்டறியுங்கள்,' என்று - என்று சொல்லி, ஓர் ஆயிரம் கோடி ஒற்று ஆள் - ஓர் ஆயிரகோடி வேவுகாரர்களை, விடுத்தான் - (தேசங்கள் தோறும்) அனுப்பினான்; அ ஒற்று ஆள்கள்உம் - அவ்வொற்றர்களும், வார் ஆழி சூழ் - நீண்ட கடல் சூழ்ந்த, எல்லை உற - நிலவுலகம்முழுவதும், ஓடி - ஓடிச்சென்று (தேடி), (அவர்களிருக்குமிடம் அறிந்துகொள்ளாமலே), விரைவின்கண் - சீக்கிரமாக, வந்தார்கள் -; (எ - று.) இன்னுமுள்ள சிலநாள்களுங் கழிந்தால் அஞ்ஞாதவாசமும் முடிந்து மீண்டும் பாண்டவர்கள் உலகாளவருவார்கள், அச்சில நாள்களும் கழிவதற்கு முன்னமே அவர்களை இன்னவிடத்து இன்னாரென்று கண்டுபிடிக்க வேண்டும்: அங்ஙனங் கண்டுபிடித்தால் முன்னையேற்பாட்டின்படி மீண்டும் அவர்களைக் காட்டுக்கே துரத்திவிடலாமென்கிற கெடுநினைவால், இவ்வாறு கூறினான்: இதனை "அரிவையோ டகன்று நீவி ரைவரு மடவி யெய்திச், சுரர்தின மீரா றங்கட் டுன்னுதிர் மன்னுநாட்டின், ஒருவரு மறியா வண்ண மொருதின முறைதிர் உங்கள், பெருவிறலரசும் வாழ்வும் பின்னுறப்பெறுதி ரென்றான்," "மறைந்துறை நாளினும்மை மற்றுளோ ரீண்டுளாரென், றறிந்திடின் மீண்டு மிவ்வா றரணிய மடைதி றென்றான்" என்று கீழ்ச்சூதுபோர்ச்சருக்கத்திற் கூறியவாற்றால் அறிக. இத்தகைய கெடுநினைவுகள் பற்றியே, துரியோதனனை 'வெங்கோதார் மனத்தோன்" என்றது. இங்ஙன் பாண்டவரை வஞ்சனையாலன்றி வீரத்தால் வெல்லுதல் அரிதென்னும் நோக்கத்தால், 'அடலைவர்' என்றான். அடல் - தேகபலம், புத்திபலம் என்பன: துரியோதனன்பேச்சு ஆகையால், இங்குத் தெய்வ பலத்தைக் கொள்ளலாகாது. மனிதர்க்கு ஒருவருடம் தேவர்க்கு ஒரு நாளாதலால், 'சுரர்க்கு உள்ளநாள்' எனப்பட்டது. முன்பு துரியோதனாதியர் தவணைகூறும்பொழுது, பதின்மூன்றுவருடமென்று சொன்னால் கேட்பதற்கு பயங்கரமாயிருக்குமென்று கருதி அங்ஙனங் கூறாமல் அதனைமறைத்து மேல்நோக்கில் எளிதென்று தோன்றுமாறு 'தேவமானத்தாற் பதின்மூன்றுநாள்' என்று சுருக்கமாகக்கூறியமைபற்றி, இங்கும் அங்ஙனமேகூறப்பட்டது; பாண்டவர்கள் தேவாமிசமாதல்பற்றியும், அவர்கட்கு அங்ஙனம் வரையறைகூறுதல் சாலும். 'ஈராறும் ஒன்றும் சுரர்க்குள்ள நாள் சென்ற' என்றது - வனவாசஞ்செய்யவேண்டிய பன்னிரண்டாண்டுகளும், அஞ்ஞாதவாசஞ் செய்யவேண்டிய ஓராண்டிற் பல நாள்களும் கழிந்தன வென்றபடி. வனவாசகாலம் 'ஈராறும்' என்றும், அஜ்ஞாதவாச காலம் ஒன்றும் என்றும் பகுத்துக் கூறப்பட்டன. கடத்தற்கு அருமையில் அப்பன்னிரண்டுநாளுக்கு ஈடாகும் இவ்வொருநாளேயென்பது இங்குப் |