பக்கம் எண் :

220பாரதம்உத்தியோக பருவம்

    கர்ணன் சமாதானத்தில் பாண்டவரோடு கூடாவிடின், உன் மக்கள்
அறுவருள் கர்ணனாவது அர்ச்சுனனாவது இறத்தல் திண்ணம்; அவ்விருவருள்
அருச்சுனன் இறப்பானாயின் அது, மற்றை நால்வர் பாண்டவரும் அழிதற்குக்
காரணமாய் முடியும்; ஆதலால் அதனினும் கர்ணனொருவன் இறப்பதே மேல்;
ஆகையால் அவனைப் பாண்டவரோடு கூட்டுதற்கும், கூட்டமுடியாவிடின்
நாகாஸ்திரத்தை இரண்டாமுறை செலுத்தாதபடி வரங்கேட்டற்குமாகச்
செல்வதேதகுதியான தொழிலெனக் கண்ணன் உறுதி கூறினான்.
தலைகளைந்து படைத்தபன்னகம் - ஐந்தலைநாகம்.  உய்வு அருஞ்சமர் -
நேராதபடி தப்புவித்தற்குக்கூடாத போர் என்றுமாம்.  துயரம் ஆறி என்றும்
பிரிக்கலாம்.  ஓகாரங்கள் -வினாவகையால், முன்னது நன்றன் றென்றும்,
பின்னது நன்றே யென்றும்உணர்த்தும்.                          (222)

163.-இதுவும், அடுத்தகவியும்- சூரியாஸ்தமன வருணனை.

காளமாமுகிலின்மேனிகரியநாயகனுந்தேற்றி
மீளமாதவத்தின்மிக்கவிதுரன்வாழ்மனையினெய்த
வாளமால்வரையில்வெய்யோன்குறுகினன்வருணன்றிக்கில்
நீளமால்யானைநெற்றிநிறத்தசெந்திலகம்போன்றே.

     (இ -ள்.) காளம் மா முகிலின் - கரியபெரிய மேகம்போல,
மேனிகரிய -திருமேனிநிறம் கறுத்துள்ள, நாயகனும் - கண்ணபிரானும், -
தேற்றி -(இங்ஙனம் குந்தியைச்) சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு, - மா
தவத்தின் மிக்கவிதுரன் வாழ் மனையின் - சிறந்ததவத்தில் மிகுந்த விதுரன்
வசிக்கிறதிருமாளிகையிலே, மீள எய்த - மறுபடியும் போய்ச்சேர,-
வெய்யோன் -சூரியன், நீளம் மால் யானை நெற்றி செம் நிறத்த திலகம்
போன்று -நீட்சியையுடைய பெரியதொரு யானையினது நெற்றியில் அமைந்த
சிவந்தநிறத்தையுடைய (சிந்தூரத்) திலகத்தையொத்து, வருணன் திக்கில் -
வருணனைத் தெய்வமாகவுடைய மேற்குத்திக்கிலே, வாளம் மால் வரையில் -
பெரிய சக்கரவாளகிரியில், குறுகினன் - போய்ச்சேர்ந்தான்
[அஸ்தமித்தானென்றபடி]; (எ - று.)

     உவமையணி. மேற்குத்திக்கில் அஸ்தகிரியை யடைந்தா னென்பதைச்
சக்கரவாளகிரியில் ஒரு பகுதியை அடைந்தானெனக் கூறியது.  வாள எனப்
பதம்பிரித்து, வாள் என்பதன்மேற் பிறந்த குறிப்புப்பெயரெச்சமாக் கொண்டு,
ஒளியையுடைய என்றுமாம்.  அஷ்ட திக்குப்பாலகருள், மேற்குத் திக்குக்குத்
தலைவன், வருணன்.  கண்ணன் விதுரன்மனையிற் சேர்கையில், சூரியன்
வாளமால்வரையிற் குறுகினன் என உடனிகழ்ச்சிப்பொருளைத் தருதலால்,
எய்தவென்னுஞ் செயவெனெச்சம் - நிகழ்காலத்தது.             (223)

164.

நாற்றிசையுலகுதன்னினான்மறையுணர்ந்தோர்தாமும்
போற்றிசைமாலையென்னும்பொற்புடையணங்குவைக
மாற்றிசைவிலாதசெம்பொன்மண்டபந்தன்னிலாதி
மேற்றிசைக்கடவுளிட்டவெயின்மணிப்பீடம்போன்றான்.