பக்கம் எண் :

178பாரதம்சௌப்திக பருவம்

'போரில்வந்த பாவந்தொலையத் தவஞ்செய்து உய்ந்திடுவாய்' என்று
உறுதிமொழி கூறினான்.  இங்ஙனங் கூறியதனால், துரியோதனனுக்கு
அந்திமதசையிலுண்டான நல்லெண்ணம் வெளியாம்.  உயர்விடை நல்குதல் -
மரியாதையோடு அனுமதிகொடுத்து அனுப்புதல்.                    (230)

27.-கிருதனும் கிருபனும்சென்றபின் துரியோதனன்
சஞ்சயனோடு பேசுதல்.

வெஞ்சராசனவீரனுமாமனும்
நெஞ்சமாழ்குறநின்றவர்போனபின்
கஞ்சநாண்மலர்க்கண்புனல்சோர்வருஞ்
சஞ்சயாரியன்றன்னொடுகூறுவான்.

     (இ -ள்.) வெம் சராசன வீரனும் - கொடிய வில்லில்வல்ல வீரனான
கிருதவர்மாவும், மாமனும் - (அசுவத்தாமனது) மாதுலனான கிருபாசாரியனும்,
நெஞ்சம் மாழ்குற நின்றவர் - மனங்கலங்க நின்றவர்களாய், போனபின் -
(அவ்விடம்விட்டுச்) சென்றபின்பு, - நாள் கஞ்சம் மலர் - அன்று மலர்ந்த
[புதிய] தாமரைமலர்போன்ற, கண் - கண்களினின்று, புனல் சோர்வரும் -
நீர்பெருகப்பெற்ற, சஞ்சய ஆரியன் தன்னொடு - சஞ்சய முனிவனுடனே,
கூறுவான் - (துரியோதனன் சிலவார்த்தை) சொல்பவனானான்; (எ - று.)

    கீழ்க் கவியினால் அசுவத்தாமன் துரியோதனனிடம் விடைபெற்றுச்
சென்றமை பெறப்பட்டதனால், மற்றைய கிருதனும் கிருபனும் சென்றதனை
இதிற் கூறினார்.  கீழ்க்கவியில் அசுவத்தாமனது பிரஸ்தாபம் வந்ததனால்,
இக்கவியில் 'மாமன்' என்றது, அவனுடைய மாமன்மேல் நின்றது.  இனி
'வெம்சராசனவீரன்' என்பதற்கு - அசுவத்தாமனென்றே உரைத்து,
கிருதவர்மாவை உபலட்சணத்தாற் பெறவைத்தலும் உண்டு.        (231)

28.-இரண்டு கவிகள் -சஞ்சயனை நோக்கித் துரியோதனன்
கூறியன.

யாயொடெந்தையிரக்கமுறாவகை
ஆயவின்சொலினாற்றுயராற்றிட
நீயெழுந்தருணின்மொழிவல்லபந்
தூயசிந்தைச்சுரர்களும்வல்லரோ.

     (இ -ள்.) யாயொடு - (எனது) தாயும், எந்தை - (எனது) தந்தையும்,
இரக்கம் உறா வகை - (யாங்கள் இறந்ததனால்) விசனம் மிகாதபடி, ஆய
இன்சொலினால் - பொருந்திய இனிய வார்த்தைகளால், துயர் ஆற்றிட -
(அவர்களுடைய) துன்பங்களைத் தணிப்பதற்கு, நீ எழுந்தருள் - நீ
சென்றருள்வாயாக; நின் மொழி வல்லபம் - பேசுவதில் உனக்குள்ள
வல்லமையை, தூய சிந்தை சுரர்களும் வல்லரோ - பரிசுத்தமான
மனத்தையுடைய  தேவர்களும் உடையரோ? [அல்லரென்றபடி]; (எ - று.)

     யாய்- காந்தாரி, எந்தை - திருதராஷ்டிரன், ஆய இன்சொல் -
பயனில்நன்மையானவையும் சமயத்துக்கு ஏற்றவையும் கேட்பதற்கு