பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்23

சல்லியன்,இன்று - இன்றைக்கு, நின்மேல் அன்றி - உன்மேலல்லாமல், வேறு
ஒருவர்மேல், செல்லான் - (போர்செய்தற்குச்) செல்லான்:  இருவருமே -
நீங்கள் இரண்டு பேருமே, முனைந்து முனைந்து - மிகவும் உக்கிரங்கொண்டு,
இரவி கடல் விழும் அளவும் - சூரியன் மேல்கடலில்விழுந்து
அஸ்தமிக்கும்வரையிலும், இகல் செய்தாலும் - போர்செய்தாலும், உமக்கு -
உங்களுக்கு, ஒருவர் ஒருவரை வேறல் ஒண்ணாது - ஒருவர் மற்றொருத்தரை
வெல்லுதல் முடியாது, என்றும் உரைசெய்தான் - என்றுங் கூறினான்,
(கண்ணன்); (எ - று.)

     உன்னாலும்தனியே சல்லியனை யெதிர்த்துப் பொருது
வெல்லமுடியாதென்பது, இதன் உட்கோள்.  வரை யென்னுங் கணுவின்
பெயர்,அதனையுடைய மூங்கிலுக்குச் சினையாகுபெயரும், அது பின்பு
மூங்கில்விளையும் மலைக்குத் தானியாகுபெயரு மாதலால், இருமடியாகுபெயர்.
தோளுக்கு மலையுவமை, பருமைக்கும், ஆயுதங்களால் அழித்தற்கு அரிய
வலிமைக்கு மென்க.  முதலடி - உவமையணி.  அவநி என்ற சொல் -
காக்கப்படுதற்குரிய தென்று காரணப்பொருள்படும்.  வெரு வரு - வெரு வா
என்ற இரண்டுபகுதிகளுஞ் சேர்ந்து ஒருசொல் தன்மைப்பட்ட வெருவா
என்பதன் விகாரம்.  இருவிர் என முன்னிலையாக் கூறவேண்டுமிடத்து
இருவர்எனப்படர்க்கையாக் கூறினது - இடவழுவமைதி.  சூரியனாதியோரது
உதயஅஸ்தமனங்களைக் கீழ்க்கடலினின்று எழுந்து மேல்கடலில்
மூழ்குவதாகக்கூறுதல், கவிமரபு.  வேறல் - தொழிற்பெயர்;  வெல் - பகுதி.
ஒண்ணாது=ஒன்றாது; மரூஉ.  அமைந்து - எச்சத்திரிபு.  முனைந்து முனைந்து
- அடுக்கு, மிகுதிப்பொருளது.                              (18)

19.பார்த்தனொருவனுஞ் சென்றுபரித்தாமாவுடன்மலையப்
                                படைஞரோடு,
மாத்திரி மைந்தரி லிளையோன் சௌபலனைவெல்லவிகன்
                                மாவலோனும்,
மூத்தவன் மைந்தரை வெல்ல முனைப்பவனன் மைந்தனோடு
                             மூண்டுவெம்போர்,
கோத்தருமமத்திரத்தார்கோவையுயிர் கவர்தியெனக்
                                 கூறியிட்டான்.

     (இ -ள்.) கோ தரும - தருமராசனே! பார்த்தன் ஒருவனும் சென்று -
அருச்சுனனொருத்தன் மாத்திரம் தனியேபோய், பரித்தாமாவுடன் மலைய -
அசுவத்தாமாவுடன் போர்செய்ய,- மாத்திரி மைந்தரில் இளையோன் -
மாத்திரியின் புத்திரரிருவருள் இளையவனான சகதேவன், படைஞரோடும் -
சேனைவீரர்களுடனே (சென்று), சௌபலனை வெல்ல - சகுனியைச்சயிக்க,
இகல் மாவலோனும் - வலியகுதிரைத்தொழிலிலே வல்லவனான நகுலனும்,
மூத்தவன் மைந்தரை வெல்ல - (உங்கள்) தமையனான கர்ணனது
புத்திரர்களைச் சயிக்க,-(நீ), முனை பவனன் மைந்தனோடு -
போர்வன்மையுடைய வாயுகுமாரனான வீமனுடனே, (சென்று), வெம்போர்
மூண்டு - கொடிய யுத்தத்தை முயன்று செய்து, மத்திரத்தார் கோவை -
மத்திரநாட்டார்க்கு அரசனான சல்லியனை, உயிர் கவர்தி - கொல்வாய்,
என-என்று, கூறியிட்டான் - (கண்ணன்) சொல்லிமுடித்தான்; (எ - று.)