5. திரௌபதி மாலை இட்ட சருக்கம்

துருபதன் தன் மகளுக்குச் சுயம்வரநாள் குறித்தலும்,
அரசிளங் குமரர் வந்து திரளுதலும்

இங்கு, இவர், இவ்வாறு இந்த இருக்கையில் இருக்கும் நாளில்,
அம் கண் மா ஞாலம் எங்கும், 'அரக்கு மாளிகையின் வீந்தார்,
பங்கம் இல் குணத்தால் மிக்க பாண்டவர்' என்று மாழ்க,
துங்க வேல் துருபதன்தான் சூழ்ந்தது சொல்லல் உற்றாம்:

1
உரை
   


'வரத்தினால் பிறந்தவாறும், வான்மொழி புகன்றவாறும்,
சிரத்தினால் வணங்கிக் கேட்பத் தேசிகன் உரைத்தவாறும்,
உரத்தினார் கெடாதவாறும், உணர்ந்து, தன் பேதை இன்னம்
சரத்தினால் உயர்ந்த வின்மைத் தனஞ்சயற்கு உரியள்' என்னா,

2
உரை
   


'தான் வரித்தவற்கே எய்த உரியள் என் தனயை' என்று,
கான் வரிச் சுரும்பு உண் மாலைக் காவலர்க்கு ஓலை போக்க,
மான் வரிக் கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள், மலர் பூஒன்றைத்
தேன் வரித்தென்ன வந்து, திரண்டது, குமரர் சேனை.

3
உரை
   

சுயம்வரச் செய்தி கேட்டு, பாண்டவர்கள்
தாயுடன் புறப்பட்டுச் செல்லுதல்

ஆங்கு அது நிகழ்ந்த மாற்றம், அந்தணன் ஒருவன் வந்தோன்
ஈங்கு இவர்க்கு உரைப்ப, மைந்தர் ஐவரும் யாயும் கேட்டு,
பாங்குடைப் பதியில் வாழும் பார்ப்பன மாக்களோடும்
தாங்க அருங் கொடிய கானம், தம் மனத் தேரில் போனார்.
4
உரை
   

வழியில் வியாதன் தோன்றி, அடுத்து நிகழ இருக்கும்
செய்தியைப் பாண்டவர்க்குக் குறிப்பாகக் கூறிப் போதல்

சார தந்திரத்தில் மிக்க தபோதனன், சதுர் வேதங்கள்
பாரதம்தன்னோடு ஐந்தாம் படியினால் பகர்ந்த மூர்த்தி,
நாரத முனியை ஒப்பான், நராதிபர் நடந்து செல்லும்
நீரத நெறியில், வாவி நிறைந்த நீர் என்ன, நின்றான்.
5
உரை
   


வணங்கலும், வாழ்த்தி, 'முந்த வந்து நீர் வாழ்வு செய்தீர்;
இணங்கி, நும் கேண்மை கொள்வான் இச்சையால், யாகசேனன்,
அணங்கினை அன்று வேள்வி அழலிடை அளித்தான்; அந்தச்
சுணங்கு அணி முலையாள் நாளைச் சூட்டுவள், தொடையல் மாதோ.

6
உரை
   


'இப் பகல் இரவும் வைகாது ஏகி, ஆங்கு எய்தும்; அங்கண்,
அப் பகல் மன்றல் பெற்றால், தோற்றுதல் ஆண்மை' என்று,
செப்பியே முனிவன் போக, சிறுவரும் பெரிய கங்குல்,
மைப் புறப் பார்த்தன் செங் கை மணி விளக்கு ஆர, போனார்.

7
உரை
   


கங்கைத் துறையில், சித்திரரதன் என்பவன்
போரிட்டு, அருச்சுனனால் தோல்வியுறல்

புத்திரன் பேரர், கங்கைப் பூந் துறை அடைந்த போதில்,
குத்திர விஞ்சை வேந்தன் குறுகி, வெங் கொடும் போர் செய்ய,
சித்திரத்தேரோன்தன்னை, தேவர் கோன் மதலை, செந் தீ
அத்திரத்து, இருந்தைத் தேரோன் ஆக்கினன், இமைப்பின் அம்மா!

8
உரை
   

தோற்றவன் விசயனுக்குத் தோழனாக, பின்னர், வழியில்
தௌமிய முனியைக் கண்டு வணங்கி, அம்முனியுடனே
எஞ்சிய வழியையும்கடந்து போதல்

தோற்றவன் திரிந்து மீண்டு, தோழன் அவ் விசயற்கு ஆக,
ஆற்ற அரும் புனலும் யாறும் அவன் துணையாக நீந்தி,
சாற்றும் உற்கச தீரத்துத் தௌமிய முனியைக் கண்டு,
போற்றி, மற்று அவன்தனோடும் புன் நெறிப் புறம் விட்டாரே.
9
உரை
   

உதய காலத்தில் பாண்டவர்க்கு நல் நிமித்தங்கள்
தோன்றுதல்

புலர்ந்தன, கங்குல் போதும், பொழிதரு பனியும்; சேர
மலர்ந்தன, மனமும் கண்ணும்; வயங்கின, திசையும் பாரும்;
அலர்ந்தன, தடமும் காவும்; ஆர்த்தன, புள்ளும் மாவும்;
கலந்தன, குருகும் பேடும்; கலித்தன, முரசும் சங்கும்.
10
உரை
   


'குன்றமும் கொடிய கானும், கூர் இருள் கங்குல், நீங்கி,
நன்றுநன்று, உதவ வந்தீர்; நடந்து, நீர் இளைத்தீர்போலும்!'
என்று கொண்டு, உவகையோடும், இன் மலர்க் கழுநீர் வாச
மன்றல் அம் தென்றல் வீசி, வழி விடாய் தணித்தது அன்றே.

11
உரை
   


வெறி படு முளரி மொக்குள் விரி பதம் நோக்கிச் சுற்றும்
பொறி வரி வண்டின் ஈட்டம் புறத்து இருந்து இரங்க,
                                               வண்டு ஒன்று
இறகரால் வீசி, உள் புக்கு, இன் மது நுகர்தல் கண்டு,
நெறியில் நல் நிமித்தம் ஆக, நெஞ்சுற நினைந்து, சென்றார்.

12
உரை
   


வண் துறை மருங்கின், ஆங்கு, ஓர் மாங்கனி வீழ்தல் கண்டே,
தண் துறை மீன்கள் எல்லாம் தம்தமக்கு இரை என்று எய்த,
விண்டு உறை கிழிய ஓடி, வென்று, ஒரு வாளை தன் வாய்க்
கொண்டு உறை வலிமை நோக்கி, குறிப்பினால் உவகை கூர்ந்தார்.

13
உரை
   

'மாக் குரல் அளக வல்லி வதுவையின் அழகு காண,
தாக்கு உரல் அடி கொள் யானைத் தரணிபர் எவரும் வந்தார்;
வீக்கும் நல் மிளிர் பொன் பூணீர்! விரைவுடன் வம்மின்!' என்று,
கூக்குரல் விளிப்ப போலும், கோகிலக் குரலும் கேட்டார்.
14
உரை
   

நீடுதல் இல்லை; இன்றே, நிருபதி கன்னி மன்றல்
கூடுதல் இவர்க்கு உண்டாகும்; கொற்றவர் குறை பொறாதே,
ஓடுதல் உண்மை' என்னா, தோகைகள் ஓகையோடும்
ஆடுதல் நோக்கி நோக்கி, அகம் மகிழ்ந்து, ஏகினாரே.
15
உரை
   


பூ எலாம் சுரும்பு மொய்ப்ப, புனல் எலாம் புள்ளு வைக,
மா எலாம் துணையின் மேவ, மரன் எலாம் வல்லி புல்ல,
ஏ எலாம் பயின்ற விற் கை ஏற்று இளஞ் சிங்கம் போல்வார்
கா எலாம், மருங்குதோறும் கண்டு, கண் களித்துப் போனார்.

16
உரை
   


துருபதனுக்கு உரிய பாஞ்சால நகரினுள்
பாண்டவர் புகுதல்

வாரண மாயை சூழ்ந்த மாயவன் தோற்றம் போலப்
பேர் ஒளி பம்பி ஆர்க்கும் பேசஅருஞ் சிறப்பிற்று ஆகி,
பூரண கும்பம், பொற் கோபுரங்களால் பொலிந்து தோன்றும்,
ஆரவம் மிகுந்த பல் புள் அகழி சூழ் புரிசை கண்டார்.
17
உரை
   


மங்கல முழவம் விம்ம, மன்னு பல் இயங்கள் ஆர்ப்ப,
சங்குஇனம் முழங்க, எல்லாத் தானையும் பரந்து சூழ,
எங்கணும் நெருங்கி வைகும் இராச மண்டலங்களோடும்,
துங்க வேல் துருபதன்தன் தொல்லை மா நகரி புக்கார்.

18
உரை
   

அப்பொழுது, அந் நகர் இருந்த தோற்றம்

தொடங்கியும், தொடக்கம் தொட்டுத் துகள் அற வளர்ந்தும், மீள
மடங்கியும், செல்லுகின்ற மன்னுயிர் உலகம் எல்லாம்,
முடங்கிய சார்ங்கச் செங் கை முகுந்தன் வாய்ப் புகுந்து காலத்து,
அடங்கிய உதரம் போன்றது, அந்த மா நகரி அம்மா!
19
உரை
   

'குழைப் புறம் கடந்த செங் கண், குறு நகை,
                                கொவ்வைச் செவ் வாய்,
இழைப் பொலி, முலையினாளுக்கு இற்றைநாள் வதுவை' என்று,
மழைப் புற மாடம் ஏறி, வருநரை மலர்க் கை காட்டி,
அழைப்பன போன்ற, வீதி அணி கொடி ஆடை எல்லாம்.
20

உரை
   

அந் நகரிலே, தாயை ஒரு குலாலன் மனையில் இருத்திவிட்டு,
பாண்டவர் சுயம்வர மண்டபம் சேர்தல்

விண் தலம் புதைத்த பைம் பொன் துகில் இடு விதான நீழல்,
மண்டு அகில் புகையில் மூழ்கி, ஆவண மறுகில் செல்வம்
கண்டு கண்டு, அரிஏறு ஆனின் கவினுடை நெடுந் தோல்
                                போர்த்துக்
கொண்டன செயலார், ஆங்கு, ஓர் குலாலனது இருக்கை சேர்ந்தார்.

21
உரை
   


ஆங்கண், நல் தவத்தால் மிக்க அன்னையை இருத்தி, மைந்தர்
தாங்கள் முன் துணையாய் வந்த தாபதர்தம்மோடு எய்தி,
தூங்கணங்குரீஇயின், மஞ்சத் தலம்தொறும் தூங்குகின்ற
தேம் கள் மாத் தெரியல் வேந்தர் சேர்ந்த
                                 பேர் அவையில் ஆனார்.

22
உரை
   


திரௌபதியின் மனநிலை

'ஆதியில் குந்தி மைந்தர் ஐவர்க்கும் உரியள் ஆம்' என்று
ஓதிய விதியினால், நெஞ்சு உலப்புறா உவகை கூர்வாள்;
'சோதிடம் பொய்யாது' என்றும், 'தோன்றுவர், உரியோர்' என்றும்,
தாதியர் தேற்றத் தேற்ற, தன் மனத் தளர்வு தீர்வாள்;

23
உரை
   

சூட்டிய தொடையல் மாலைத் தோழியர், வைகல்தோறும்,
தீட்டிய படங்களும் தம் சிந்தையும் பொலிவு கொள்ள,
கோட்டிய சிலையினோடும், கொடி மணித் தேரினோடும்,
காட்டிய கோலம் அன்றி, பிறிது ஒன்றும் காண்கிலாதாள்;
24
உரை
   

'ஆண்டு, எரிப் பிறந்த போதே, அன்பினால் எந்தை நேர்ந்த
பூண் தெரி மார்பன், இன்று, இப் பொன் அவை பொலியத்
                                 தோன்றி,
ஈண்டு எரி முன்னர் மன்னர் இழிவுற, வேட்டிலானேல்,
மீண்டு எரி புகுவன்' என்னும் எண்ணமே விழையும் நீராள்;
25
உரை
   


தோழியர் திரௌபதியைக் கோலம் செய்து, சுயம்வர
மண்டபத்திற்கு அழைத்து வருதல்

கோண் பிறை நுதலாள்தன்னைக் கோதையர் பலரும் கூடி,
சேண் புனல் பல கொண்டு ஆட்டி, செழுந் துகில்
                                 தொழுது சேர்த்தி,
பூண்பன இசையப் பூட்டி, புகை கமழ் தாமம் சூட்டி,
காண்பவர் ஆண்மை தேய, காமவேள் கலகம் செய்தார்.

26
உரை
   

'வந்தனர் குமரர் யாரும் வருக!' என மகிழ்ந்து போற்றி,
சந்து அணி முலையினாளை, தாயினும் பரிவு கூர்ந்தோர்,
கந்தனும் உவமை ஆற்றாக் காவலர் காமத் தீயில்
இந்தனம் இடுவது ஏய்ப்ப, வேத்தவை ஏற்றினாரே.
27
உரை
   


திரௌபதியைக் கண்ட அரசர்களின் நிலையும், திரௌபதி
பாண்டவரின் வரவை எதிர் நோக்குதலும்

வெங் கழல், படைக் கை, வேந்தர் விழிகளால், விளங்கும் மேனிப்
பொங்கு அழல் பிறந்த பாவை பொற்பினைப் பொலிய நோக்கி,
பைங் கழைத் தனுவோன் செங் கைப் பகழியால் பாவம் எய்தி,
அங்கு அழல் பட்ட நெய்போல் அனைவரும் உருகினாரே.
28
உரை
   

மங்குலின் மங்குல் மூடி, வயங்கு ஒளி மறைந்து தோன்றாச்
செங் கதிர்ச் செல்வன் போல, சீர் கெழு வடிவம் மாறி,
அங்கு அவர் இருந்த தன்மை அறிந்ததோ-செறிந்த பொய்கைப்
பங்கயம் போன்றதால், அப் பரிவுறு பாவை பார்வை?
29
உரை
   

அப்பொழுது திட்டத்துய்மன், 'சுழலும் எந்திரத்
திகிரியின் நடுவிலுள்ள இலக்கை எய்பவருக்கே
திரௌபதி உரியள்' என்று அறிவித்தல்

மனக் கடுங் காதல் விம்ம, மாலை தாழ் புயங்கள் வாட,
'எனக்கு எனக்கு' என்று என்று ஏமாந்து இருந்த காவலரை நோக்கி,
சினக் கடம் ஒழுகும் கன்னக் களிற்றினான் திட்டத்துய்மன்,
நினைக்கவும் அரியது ஒன்றை நினைவினோடு உரைசெய்வானே:
30
உரை
   


'சிலை இது; சிலீமுகங்கள் இவை; கடுந் திரிகை வேகத்து
இலை முகத்து உழலுகின்ற எந்திரத் திகிரி நாப்பண்
நிலை இலா இலக்கும் அஃதே; நெஞ்சுற யாவன் எய்தான்,
கலை வலீர்! அவற்கே அந்தக் கன்னியும் உரியள்' என்றான்.

31
உரை
   


அது கேட்ட அரசர்களின் நிலை

இச் சொல் பழனப் பாஞ்சாலர்க்கு இறைவன் புதல்வன்
                                 இயம்புதல் கேட்டு,
அச் சொல் தம்தம் செவிக்கு உரும்மேறு ஆகக் கலங்கும்
                                 அரவு அன்னார்,
கச்சைப் பொருது, புடை பரந்து, கதித்து, பணைக்கும், கதிர் ஆரப்
பச்சைக் குரும்பை இளமுலைமேல் பரிவால், நாணம் பிரிவுற்றார்.

32
உரை
   


கண்போல் அம்பும் நுதல் போலும் கடுங் கார்முகமும்,
                                 காண்தொறும், அத்
திண் போர் வேந்தர் மனக் கலக்கம் செப்பும் தகைத்து அன்று;
                                 ஆனாலும்,
விண் போய் உழன்று சுழல் இலக்கை மெய்யே எய்து, வீழ்த்தி,
                                   மலர்ப்
பெண் போல்வாளைக் கைப்பிடிக்கும் பேராசையினால், பேதுற்றார்.

33
உரை
   

செவிலித் தாயர் அவையிலிருந்த அரசர்களை, 'இவர்
இன்னார் இன்னார்' என்று சுட்டிக் காட்டி, அறிவித்தல்

திருந்து ஆர் மன்றல் குழல் அணங்கின் செவிலித் தாயர்,
                                 கடல் கடைந்து
வருந்தா அமுதம் நிகர்வாளை மயில்போல் கொண்டு,
                                 மன் அவை புக்கு
இருந்தார், இருந்த காவலரை, 'இன்னோர் இன்னோர் இவர்' என்று,
முருந்து ஆர் பவளத் துவர் இதழ் வாய் முகிழ் வாள் நகைக்கு
                                 மொழிகின்றார்:
34
உரை
   

'மாற்றம் பிறிது ஒன்று உரையான், இவ் வன் போர் வில்லின்
                                 வலி நோக்கி,
சீற்றம் சிந்தை கொண்டு அழல, பொய்யே மலர்ந்த
                                 திருமுகத்தான்,
'ஏற்றம்தன்னில் வேறு ஒருவர் இப் பேர் உலகில் இலர்' என்னத்
தோற்றம் படைத்தோன்தனைக் காட்டி, 'துரியோதனன், மற்று
                                 இவன்' என்றார்.
35
உரை
   

'மணியின் கிரண வெயில் எறிப்ப, மண் ஏழ் தாங்கும்
                                 நச்சு எயிற்றுப்
பணியின் முடி நாயகத் தலையின் பாங்கே நிரைத்த
                                 பல் தலைபோல்,
துணியும் கொடுமை வகிர் அன்ன துணைவர், துச்சாதனன்
                                 முதலோர்,
அணியும் கழற் கால் சுயோதனனுக்கு அருகு ஆசனத்தர்,
                                 இவர்' என்றார்.
36
உரை
   

'உலைவந்து அயரும் சூல் மந்திக்கு உருகா, நிலம்
                                 கீண்டு, உதவு குலக்
கலை, வன் பலவின் சுளை கீறி, களிப்போடு அளிக்கும் காந்தாரத்
தலைவன் சகுனி இவன் கண்டாய்; தக்கோர் ஆடாச் சூதுக்கும்,
நிலை வஞ்சனைக்கும், தரணிபரில் யாரே இவற்கு நிகர்?' என்றார்.
37
உரை
   

'பேசாது ஒடுங்கும் பேர் அறிவால், பெரும் போர் வலியால்,
                                 பிறப்பால், மெய்த்
தேசால், இயற்றும் பல படையால், திண் தோள் வலியால்,
                                 செஞ் சிலைக் கை
ஆசான் மைந்தன் இவன்தனக்கு இங்கு, யாரே உவமை? அமரரிலும்
ஈசானனை மற்று ஒரு சிறிது ஒப்பு எனலாம்; அல்லது இலை' என்றார்.
38
உரை
   

'பெண்மைக்கு இரதி என வந்த பெண் ஆர் அமுதே! பேர் உலகில்
உண்மைக்கு இவனே; வலிக்கு இவனே; உறவுக்கு இவனே;
                                 உரைக்கு இவனே;
திண்மைக்கு இவனே; நெறிக்கு இவனே; தேசுக்கு இவனே;
                                 சிலைக்கு இவனே;
வண்மைக்கு இவனே;-கன்னன் எனும் மன்னன் கண்டாய்
                                 மற்று இவனே!
39
உரை
   

'அலத்தால் முன்னம் பிளந்த பகை அடர்ப்பான் கருதி,
                                               பிளப்புண்ட
சலத்தால் யமுனை பிணித்ததெனத் தயங்கும்படி சேர்
                                               தானையினான்,
குலத்தால் உயர்ந்த வசுதேவன் குமரன், களபக் கொங்கையர்
                                               மெய்ந்
நலத்தால் மகிழும் சிந்தையினான், நறுந் தார் இராமன் இவன்'
                                               என்றார்.
40
உரை
   


'இந்தக் குரிசில் யது குலத்துக்கு எல்லாம் திலகம் எனுமாறு
வந்து உற்பவித்து, பொதுவருடன் வளரும் கள்ள மா மாயன்;
முந்த, கஞ்ச மாமன் உயிர் முடித்தான்; இவற்கு முகில் ஊர்தி
அந்தப் புரத்தில் ஆராமம், அந்தப்புரத்துக்கு ஆராமம்.

41
உரை
   

'தண்ணம் துளவோன்தனக்கு இளவல் இவன்காண்-மின்னே!-
                                  சாத்தகி என்று
எண்ணும் போச குலத் தலைவன், எவரும் சூழ
                                 இருக்கின்றான்;
கண்ணன்தன்னை அவமதித்துக் கழறும் புன்சொல்
                                 கார்முகத்தைத்
திண்ணென் கருத்தான், ஈங்கு இவன்காண் சேதிப் பெருமான்,
                                 சிசுபாலன்.
42
உரை
   


'தார் வண்டு இமிரத் தேன் ஒழுகும் தடந் தோள் வீரன்
                                 சராசந்தன்,
போர் வெஞ் சரத்தால் யாவரையும் புறம் கண்டு அன்றிப்
                                 போகாதான்;
சீர் வண் மதுராபுரி விடுத்து, துவாரகையினில் சென்று ஒதுங்க,
கார்வண்ணனையும் நெடுங் காலம் வென்றான், இவன்காண்!'
                                 என்றாரே.
43
உரை
   

'பனைக்கைப் பிறை வெண் கோட்டு அயிராபதமே போலும்
                                 பகட்டில் இவன்
வினைக்கண் புகுந்தால், எதிர் நின்று வேறு ஆர் இவனை
                                 வெல்கிற்பார்?
முனைக்கண் செங் கண் தீ உமிழும் முகத்தான்-மாதே!-
                                 பகதத்தன்;
தனக்குத் தானே நிகர் என்னத் தருக்கொடு ஈண்டே
                                 இருக்கின்றான்.
44
உரை
   

'இவன், சல்லியன் என்று உரை சான்ற, இகல் வேல்
                                 மன்னர்க்கு ஏறு அனையான்;
இவன், தன் பகைவர் யாவரையும் இமையோர் ஆக்கும்
                                 எழில் நீலன்;
இவன், தண் தமிழ் தேர் அடல் வழுதி; இவன், தேர்
                                 இரவிகுல வளவன்;
இவன், செந் தழலோன் மரபு ஆகி, ஈர்-ஏழ் உலகும்
                                 புகழ் சேரன்.
45
உரை
   

வில் ஆண்மையினால் வெங் கருப்பு வில்லோன்தனக்கே
                                 நிகர் என்னப்
பல்லார் புகழும் பான்மையினால், பதினெண் புவிக்கும்
                                 பதியாய
எல்லா அரசும், நின்பொருட்டால், ஈண்டே திரண்ட-இன்
                                 அமுதச்
சொல்லாய்! நல்லாய்! மென் பூவாய்! தோகாய்! பாவாய்!
                                 துரௌபதியே!
46
உரை
   

'இவரில், தனது தோள் வலியால் அரிஏறு என்ன
                                 எழுந்திருந்து, அத்
தவரில் புரி நாண் உற ஏற்றி, தழல் கால் முனை
                                 வெஞ் சாயகத்தால்
பவரின் செறிய நிரைத்து உருளும் பல்வாய்த் திகிரிப்
                                 பயில் இலக்கைக்
கவரின், செழுந் தார் புனைந்து அவனைக் கைக்கொண்டிடு
                                 நீ கடிது' என்றார்.
47
உரை
   

அரசர்களில் சிலர் சோர்வுற, சிலர்
இலக்கை எய்யக் கிளர்ந்து எழுதல்

முத்த நகை, பவள இதழ், குளிர் வெண் திங்கள் முகத்தாளைக்
                         கைத்தாயர் மொழிந்தகாலை,
சித்திரம் ஒத்து உணர்வு அழிந்து, தம்தம் பைம் பொன் திகழ்
                 அரியாசனத்து இருந்தார் சிற்சில் வேந்தர்;
அத் தனுவின் பெருமையையும், இலக்கத்து உள்ள அருமையையும்,
                         கருதாமல் ஆண்மை கூறி,
எத்தனை எத்தனை வேந்தர், ஆசை கூர, 'யான், யான்' என்று
                         எழுந்திருந்தார், யானைபோல்வார்!
48
உரை
   

கண்ணன் பலராமனிடம் பாண்டு மைந்தர் உரு மாறி
இருந்தமை உரைத்து, கிளர்ந்தெழுந்த தன்
குலத்தாரைத் தடுத்தல்

தனு எடுத்து, நாண் பிணிப்பான் கிளரா நின்ற தன் குலத்தில்
                         அவனிபரைத் தடுத்து, வேதப்
பனுவலுக்கும் தவத்தினுக்கும் உரிய வேள்விப் பார்ப்பன
                         மாக்களின் இடையே, பாண்டு மைந்தர்
அனு உருக்கொண்டு, உரு மாறி, இருந்த தன்மை அறிந்தருளி,
                         அலாயுதனோடு அருளிச்செய்தான்-
மனு முறைக்கு வரம்பு ஆகி, வருத்தம் வீட, மா நிலமீது
                         அவதரித்த வாசுதேவன்.
49
உரை
   

அரசர் பலரும் வில் திறம் காட்ட முயன்று, தோல்வியுறுதல்

பலரும் உடன் அகங்கரித்து, மேரு சாரப் பார வரி சிலையின்
                         நிலை பார்த்து மீண்டார்;
பலரும் ஒரு கையில் பிடிக்க அடங்கா வில்லின் பருமைதனைக்
                         குறித்து, மனம் பதைக்கப் போனார்;
பலரும் மலர்க் கைப் படுத்திப் பெயர்க்க மாட்டார், பணைத்
             தோள் நொந்து, 'அமையும்' என, பயந்து நின்றார்;
பலரும் எடுத்து, அணி மணி நாண் பூட்ட வாராப் பரிசொடு
                      மற்று அதன் வலிமை பகர்ந்தே, விட்டார்.
50
உரை
   


வல்லியம்போல் நடந்து, தனு இரு கையாலும் வாரி எடுத்து,
                         எதிர் நிறுத்தி, மல்லல் வாகுச்
சல்லியனும் நாண் ஏற்ற முடியாது, அந்தத் தனுவுடனே
                         தன் தனுவும் தகர, வீழ்ந்தான்;
வில்லியரில் முன் எண்ணத் தக்க வின்மை வேந்து அடு
                     போர்ப் பகதத்தன், வில் வேதத்தில்
சொல்லியவாறு எடுத்து ஊன்றி, மற்றைக் கையால் தொல்
                 வலி நாணியும் எடுத்து, தோளும் சோர்ந்தான்.

51
உரை
   

பூ கதன் ஆகிய அன்றே, பகைவர் எல்லாம் போற்ற வளர்ந்து,
                     உலகு ஆளப் புனைந்த மௌலி
மாகதனும் வில் எடுத்து, வரி நாண் வில்லின் மார்பளவும்
                      போக்கினான்; வன் போர் நீலன்,
'சாகதன்' என்று அவை துதிக்க, நெடு நாண் கொற்றத் தனு ஒரு
                    சாண் எனக் கொணர்ந்தான்; 'சாணே அல்ல,
வேக தனு நால் விரல்' என்று உரைக்க, நாணி வீக்கினான்,
                      வலம்புரித் தார் வேந்தர் வேந்தே.
52
உரை
   


கலை வருத்தம் அறக் கற்ற கன்னன் என்னும் கழற் காளை,
                      அரன் இருந்த கயிலை என்னும்
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன, மன் அவையில்
                      வலியுடனே வந்து தோன்றி,
நிலை வருத்தம் அற நின்று, பரிய கோல நீள் வரி நாண்
                      மயிர்க்கிடைக்கீழ் நின்றது என்ன,
சிலை வருத்தம் அற வளைத்து, வளைந்த வண்ணச் சிலைக் கால்
                      தன் முடித் தலையைச் சிந்த, வீழ்ந்தான்.
53
உரை
   

அந்தணர் வடிவுடன் இருந்த அருச்சுனன், அவையில்
எழுந்து பேசி, திட்டத்துய்மனிடம் அனுமதி
பெற்று, இலக்கை எய்தல்

அரவ நெடுங் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும்
                      அங்கு ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி,
உரவு மெலிந்து, எழில் மாழ்கி, செயல் வேறு இன்றி, உள்ளம்
                    அழிந்து, இருந்ததன்பின், உரும் ஏறு என்ன,
கரவுடன் அந்தணர் நாப்பண் இருந்த கொற்றக் கரு முகில்
                      வாகனன் புதல்வன், கரிய மேனி
இரவிகுலச் சிறுவனைப்போல் எழுந்து, மன்றல் இளங்கொடி
                      தம்முனை நோக்கி, இயம்பினானே:
54
உரை
   

பின்னும் ஆறு குழந்தைகளை ஆற்றில் எறிதல்

'மன் மரபில் பிறந்து, இரு தோள் வலியால், இந்த மண் ஆளும்
                      அவர்க்கு அன்றி, மறை நூல் வாணர்
தொல் மரபில் பிறந்தவரும் இலக்கு வீழ்த்தால், சூட்டுமோ
                      தொடையல், இளந்தோகை?' என்ன,
தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன், 'தகவு அன்றோ?
                      மன்றலுக்குத் தாழ்வோ?' என்றான்;
வில் மரபில் சிறந்த நெடு வில்லை, ஈசன் மேரு கிரி
                      எடுத்ததென, விரைவில் கொண்டான்.
55
உரை
   

கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக,
                      தனி நெடு நாண் கிளர ஏற்றி,
தளர்வு அறு சாயகம் தொடுத்து, கற்றோர் யாரும், 'தனு நூலுக்கு
                      ஆசிரியன் தானே' என்ன,
உளர் திகிரிச் சுழல் இலக்கை, அவையோர்தங்கள் ஊக்கமுடன்
                      விழ, எய்தனன் உரவுத் தோளான்.
வளரும் அருந் தவ வேள்வி முனிவர் ஆர்த்தார்; வாச நறு மலர்
                      சொரிந்து, வானோர் ஆர்த்தார்.
56
உரை
   

திரௌபதி அருச்சுனனுக்கு மாலை இடுதல்

'தாம் சாரற்கு அரிய தனு வளைத்தான்' என்று, தரணிபர்தம்
                      முகம் கருக, தனுவினோடும்
பூஞ் சாரல் மணி நீல கிரிபோல் நின்ற பூசுரனை, 'இவன்
                      அவனே போன்ம்' என்று எண்ணி,
பாஞ்சாலர் பதி கன்னி இரு தன் செங் கண் பங்கயத்தால்
                      பாங்காகப் பரிந்து நோக்கி,
தேம் சார நறுங் கழுநீர்ச் செய்ய தாமம் செம் மணி கால்
                      அருவிஎனச் சேர்த்தினாளே.
57
உரை
   

அருச்சுனன் திரௌபதியோடும் சகோதரரோடும் செல்லுதல்

அந்தர துந்துபி முழங்க, சங்கம் ஆர்ப்ப, ஆனக துந்துபி
                      முதல்வன் ஆதி ஆக
வந்திருந்த பேர் அவையை மதியான் ஆகி, மாலை இடு
                      பசுஞ் செம்பொன் மாலையோடும்,
சந்திரனும் உரோகிணியும் என்ன, முன்னர், தான் வளைத்த
                      தடஞ் சிலை கைத்தலத்தில் ஏந்தி,
இந்திர சூனுவும் எழுந்து, ஆங்கு ஏகலுற்றான்- இரு புறமும்
                      துணைவர் வர, இணை இலாதான்.

58
உரை
   

கங்கை சந்தனுவைக் கண்டித்தல்

'பார்ப்பான் வந்து, ஒரு கோடி அரசைச் சேரப் பரிபவித்து,
                      பாஞ்சாலன் பயந்த தெய்வச்
சீர்ப் பாவைதனை வலியால் கொண்டுபோக, செயல் இன்றி
                      இருந்தீர்! என் செய்தீர்?' என்று,
வேர்ப்பு ஆடு நுதல் சிவந்த விழியன் ஆகி, விழியிலான் மகன்
                      கழற, வெகுண்டு, மேன்மேல்,
ஆர்ப்பாகக் கொதித்து எழுந்தது, உகாந்த காலத்து ஆர்க்கும்
                      மகராலயம்போல், அரசர் ஈட்டம்.
59
உரை
   

விசயனும் வீமனும் எதிர்த்துப் பொர, மறையவர்களும்
இவர்களுடன் கூடிப் பொருதல்

முருத்து வாள் நகை, துவர்வாய், முகத்தினாளை மூத்தோன்
                      பின் நிறுத்தி, அமர் முருக்குமாறு,
மருத்துவான் திரு மகனும் மருத்தின் செல்வ மைந்தனுமே
                      புரிந்திட்டார்; மறையோர் உள்ளார்
உருத்து, வாய் மடித்து எழுந்து, கோகு தட்டிட்டு, ஊன்றிய தண்டு
                      எதிர் ஓச்சி, உடன்ற வேந்தர்
கருத்து வார்தக வெருக்கொண்டு ஓட ஓட, கை உரம் காட்டினர்,
                      வளர்த்த கனலே அன்னார்.
60
உரை
   


விசயன் மறையவரை விலக்கி, எதிர்த்த கன்னனை வெல்ல,
வீமனிடம் சல்லியன் தோற்று ஓடுதல்

மிகைத்த முனிவரர் முனிந்த உறுதி நோக்கி, வென்று எடுத்த
                      வில் தடக் கை விசயன், சற்றே
நகைத்து நகைத்து, அவர் அவரை விலக்கி, 'என் முன் நமன்
                      வரினும் பிளப்பல்' என நவிலாநின்றான்;
புகைத்த கனல் விழிக் கன்னன் தருக்கால் எள்ளி, பூசுரன் என்று
                      அவமதித்து, புனை வில் வாங்கி,
உகைத்த பகழியும் உகைத்தான்; உரனும், தன் கை ஒரு கணையால்
                      உடன் பிளந்தான், உரும்ஏறு ஒப்பான்.

61
உரை
   

குன்றால் மெய் வகுத்தனைய வீமன், தன்மேல் கொல்
                     இயல் செய் சல்லியனைக் குத்தி வீழ்த்தி,
கன்றால் முன் விளவு எறிந்த கண்ணன் என்ன, கால்
                    முடியோடு உற வளைத்து, வான்மேல் வீசி-
நின்றான்; மற்று அவன் அயலே தெறித்து வீழ்ந்து, நெஞ்சு
                      ஒடிந்தான்; இருவரும் முன் நில்லார் ஆகி,
'வென்றாலும், தோற்றாலும், வசையே, வெம் போர்
               வேதியரோடு உடற்றல்!' என, மீண்டு போனார்.
62
உரை
   


கண்ணன் விலக்க ஏனைய அரசர்கள் தம்தம்
நகரம் போய்ச் சேர்தல்

'வண்ண நூல் முனிவர் அல்லர்; மருத்துவான், மருத்து, நல்கும்
அண்ணல் அம் குமரர் ஆம்' என்று அயிர்ப்புறும் அரசர் யாரும்,
கண்ணனால் விலக்கப்பட்டு, கடி நகர்தோறும், தங்கள்
எண்ணமும் பயனும் வேறா எய்தினர் என்ப மன்னோ.
63
உரை
   


குயவன் வீடு சென்ற பாண்டவர், குந்தியிடம்,
'இன்று ஓர் ஐயம் பெற்றோம்; என்
செய்வது?' என்று கேட்டல்

அன்று இலக்கு எய்த கோவும், துணைவரும், ஆன வெம் போர்
வென்று, கொற்றவையோடு ஒக்கும் மின்இடைப் பொன்னும் தாமும்
சென்று, மட்கலம் செய் கம்மி செழு மனை முன்றில் எய்தி,
'இன்று பெற்றனம், ஓர் ஐயம்; என் செய்வது, இதனை?' என்றார்.
64
உரை
   

'ஐவரும் ஒருசேர அருந்தும்' என்று கூறி, உள்ளிருந்து
வெளிவந்த குந்தி திரௌபதியைப் பார்த்தல்

உள் இருந்து, அன்னை, மைந்தர் உரைத்த சொல் கேட்டு, 'தேவர்
தெள் அமுது என்ன, மக்காள்! சேர நீர் அருந்தும்' என்னா,
புள்ளினம் ஒடுங்கும் மாலைப் பொழுது இவள் புறம்பர் எய்தி,
கள் அவிழ் கூந்தலாளைக் கரும்பு என விரும்பி, கண்டாள்.
65
உரை
   

தான் சொன்ன வார்த்தை குறித்துக் குந்தி இரங்குதலும்,
தருமன் தேற்றத் தேறுதலும்

'என் நினைந்து, என் சொன்னேன்! மற்று என் செய்தேன்!'
                            என்று சோரும்
அன்னையை வணங்கி, 'நின்சொல் ஆரணப் படியது ஆகும்;
நின் நினைவு அன்றால்; எங்கள் நெஞ்சிலும் நினைவு உண்டு'
                            என்றான் -
தன் நிகர் இலாத கேள்வி சான்ற சீர்த் தருமன் என்பான்.
66
உரை
   

பார் அனைத்தினும் தன் நாமம் பரப்பிய பார்த்தன் என்னும்
வீரனைப் பயந்த பாவை, 'விதிவழி இது' என்று எண்ணி,
மாரனுக்கு அரசு நல்கும் மங்கையும் தானும், அந்தக்
கார் இருள் கங்குல், மைந்தர் கட்டுரை கசிந்து கேட்டாள்.
67
உரை
   

துருபதன் ஒற்றரால் செய்தி தெரிந்து, மறுநாள்
அவர்களை அரண்மனைக்கு அழைத்து, உபசரித்தல்

பொன் தொடி, கனக மாலை, பொலங் குழை, பூவைதன்னைப்
பெற்ற பூபதி அவ் வீரர் பெருமித வாய்மை எல்லாம்
ஒற்றரால் உணர்ந்து, நெஞ்சத்து உவகையோடு, ஐயம் இன்றி,
மற்றை நாள் வந்து, கொற்ற வாழ் மனை கொண்டு புக்கான்.
68
உரை
   

அடுத்த பல் பொருளும் வைக்க, ஆயுதம் அன்றி வேறு ஒன்று
எடுத்திலர் என்றும், வேத முனிவரர் அல்லர் என்றும்,
கொடுத்தன சிறப்பினோடும் குரு மணித் தவிசின் ஏற்றி,
தொடுத்த தார்க் குருக்கள் என்றே துணிந்தனன், யாகசேனன்.ம்.
69
உரை
   

துருபதன், 'இன்று வதுவை செய்விப்போம்' என்ன, தருமன்,
'ஐவரும் இவளை மணப்போம்' என்றல்

'கை வரு சிலையின் வென்று கைப் பிடித்தவனுக்கு இன்றே
மை வரு கண்ணினாளை வதுவை செய்திடுதும்' என்ன,
நெய் வரு முனை கொள் கூர் வேல் நிருபனை நோக்கி, 'யாங்கள்
ஐவரும் வேட்டும்' என்றான், அசைவு இலா அறத்தின் மைந்தன்.
70
உரை
   

தருமன் சொல்லால் துருபதன் தளர, அப்பொழுது
வியாதன் தோன்றி, ஐவருக்கும் மணம்
செய்வித்தற்குரிய முறைமையை விளக்குதல்

தருமன் மா மதலை சொல்லால் தளர்வுறு காலை, 'மாலை
நிருப! நின் மனத்தில் ஐயம் நீக்குக! நீக்குக!' என்னாத்
துருபதன் முன்னர் வந்து தோன்றினன்- சுருதி யாவும்
விரை மலர் விதியின் மிஞ்ச விதித்தருள் வியாதன் என்பான்.
71
உரை
   

தொழுது பொன்-தவிசின் ஏற்றி, சூழ்ந்தனர் இருந்து கேட்ப,
முழுது உணர் கேள்வி ஞான முனி குலத்து அரசு போல்வான்,
'பழுது அறு கன்னிதன்னைப் பாண்டவர் ஐவருக்கும்
எழுதஅரு மறையின் வேள்வி இயற்றுதற்கு இயற்கை கேண்மோ:
72
உரை
   


வியாதன் உரைத்த திரௌபதியின் முற்பிறப்பு வரலாறு

'மூள் ஆர் அழல் உற்பவித்தாள் இவள், முன் பவத்தில்,
நாளாயணி என்று உரை சால் பெரு நாமம் மிக்காள்;
வாள் ஆர் தடங் கண் அவட்கு, ஆரணவாணர்க்கு என்றும்
கேள் ஆன மௌற்கல்லியன் என்பவன், கேள்வன் ஆனான்.
73
உரை
   

'காதில் கலந்த கடைக் கண்ணிதன் கற்பும் அன்பும்
சோதித்தல் உன்னி, தணியாத துவக்கு நோயன்,
கோதித்த நெஞ்சன், பெரு மூப்பினன், கூர்ந்து நாளும்
வாதித்தல் அன்றி, மகிழா மனை வாழ்வு பூண்டான்.
74
உரை
   

'கச்சிற்கு அடங்கா முலையாள்-அக் கணவன் உண்ட
மிச்சில்புறத்து விரல் வீழவும், வீழ்தல் மிஞ்சி,
குச்சித்தல் இன்றி, நுகர்ந்தாள்-கொடுங் காம நோய்கொண்டு
இச்சித்த இன்பம் நுகராமல் இளைத்த மெய்யாள்.
75
உரை
   

'அன்பன் தெரிவை வழிபாடு கண்டு, ஆர்வம் எய்தி,
துன்பம் பயந்த பிணியால் அழி தோற்றம் மாற்றி,
தன் பங்கை ஈசன் திறை நல்க முன் சாபம் வாங்கும்
வன்பன் தனக்கும் கிடையாத வடிவு கொண்டான்.
76
உரை
   

"மின்னே! உனக்கு மிகு கற்புடை மீனும் ஒவ்வாள்;
இன்னே, வரம் வேண்டுவ வேண்டுக, ஈண்டை!' என்ன,
'நின் நேயம் என்றும் பிரியா நலன் நேர்க!' என்றாள்,
தன் நேர் இலாத மனைவாழ்வில் தவத்தில் மிக்காள்.
77
உரை
   

'குன்றும் நதியும், மரனும் பைங் கொடியும், ஆகி,
துன்றும் துணையாய்ப் பல யோனிகள்தோறும் எய்தி,
நின்றும், சரித்தும், அரும் போகம் நெடிது துய்த்தார்,
என்றும் பிரியாது இருவோரும் இதயம் ஒத்தே.
78
உரை
   

'இந்தப் பிறப்பில் நலம் எய்தி, இறந்த பின்னும்,
சிந்தித்தவண்ணம் இவள் இந்திரசேனை ஆகி,
அந்தப் பதியை அடைந்தாள்; மற்று அவனும் அஞ்சி,
வந்தித்த தொல்லை அரு மா தவம் மன்னி நின்றான்.
79
உரை
   

'அன்னோன் அகல, அவன்மேல் அவள் ஆசை விஞ்சி,
'என்னோ புரிவது, இனி?' என்றலும், ஏந்தல் கூற்றால்,
தன் ஓர் வடிவின் ஒரு கூறு ஒரு தையல் ஆளும்
முன்னோனை நோக்கித் தவம் செய்தனள், மூரல் வாயாள்.
80
உரை
   


'ஐந்து ஆனனத்தோன் அருள் செய்ய, அழகில் மிக்காள்,
ஐந்து ஆன சொல்லால், 'கணவன்-தருக, ஐய!' என்றாள்;
ஐந்து ஆன சொல்லான் அளித்தான், மற்று அவனும்-முன் நாள்,
ஐந்து ஆன போகம் இவள் எய்தியவாறு அறிந்தே.

81
உரை
   

'முன் நின்ற தேவன் மொழியின்படி, கங்கை மூழ்கி,
தன்னந்தனி நின்று அழுகின்ற அத் தையல் கண்ணீர்
பொன் அம் கமல வனம் ஆன புதுமை நோக்கி,
'என்?' என்று, இவளை இமையோர் பதி எய்தினானே.
82
உரை
   


அவனை, ' தொடர்பால் வருக!' என்ன, அவனும், ஆங்கண்
சிவனைச் சிறிதும் மதியாது, எதிர் சென்றகாலை,
'இவனுக்கு என் மேன்மை?' எனச் சீறலும், எஞ்சினான்போல்,
புவனத்து எவரும் நகையாட, புலம்பி வீழ்ந்தான்.
83
உரை
   

'வெவ் ஆயுதங்கள் உதவாமல் விபுதநாதன்
இவ்வாறு வீழ, மழுவாளி, இமைப்பில் மீண்டும்,
அவ் வாசவற்குப் பிலம் ஒன்றில் அடைத்த வச்ரக்
கை வாசவர்கள் ஒரு நால்வரைக் காட்டினானே.
84
உரை
   

'வன் பாதலத்தில் வரு நால்வரும், வானின் வந்த
புன் பாகசாதனனும், தன் அடி போற்றி நிற்ப,
'அன்பால் மகிழ்நர் இவட்கு ஐவரும் ஆதிர்!' என்று,
மென் பாவை பங்கன் விதிக்க, புவிமீது வந்தார்.
85
உரை
   

'தருமன், பவனன், தினநாதன் தனயர்தம்பால்
வரும் இந்த நால்வர், அவர் நால்வரும்; மாலை மார்பா!
தெருமந்த இந்தச் சிலை வீரன், இத் தேவர்க்கு எல்லாம்
பெரு மன்; பிறப்பிற்கு அவனே முன் பிதாவும் ஆனான்.
86
உரை
   

'இம் மாது, தொல்லை அரு மா தவத்து எல்லை கண்ட
அம் மாது; இவள் காதலர் ஐவரும் ஆக!' என்று,
தெவ் மாதர் முன் பூண் கவர் மன்னன் தெளியுமாறு
வெம் மா தவத்தோன் பெரு ஞான விழியும் ஈந்தான்.
87
உரை
   

வியாதன் மொழியால் மனம் தெளிவுற்ற துருபதன், திரௌபதியை ஐவருக்கும் ஒரு நல்ல நாளில் மணம் புரிவித்தல்

ஓதாது உணர்ந்து, மறை நாலும் உருவு செய்த,
வேதாவும் ஒவ்வா, வியாதன் மொழி வெள்ள நீரால்,
கோதான நெஞ்சைக் குளிப்பாட்டினன்; கோடி கோடி
தூதான வண்டு துதை மாலை கொள் சோமகேசன்.
88
உரை
   

வியப்போடு தொல்லை முனி சொல் தலைமீது கொண்டு,
பயப்போன், மகள்மேல் புரிகின்ற பரிவினுக்கும்,
வயப் போர் நிருபர் பெருமைக்கும் வலிக்கும், ஈடா,
நயப்போடு மன்றல் அயர்வித்தனன், நன்கு ஓர் நாளில்.
89
உரை
   

தருமன் முதலிய ஐவரும் முறையே சடங்குடன் திரௌபதியை மணத்தல்

பாடும் சுருதி மறைவாணரும், பாரில் உள்ள
சூடும் கனக முடி வேந்தரும், தொக்கு நிற்ப,
நீடும் கதிர் மா மணித் தூண்கள் நிரைத்த பத்தி
ஆடும் கொடி மண்டபம் எய்தினர், அண்டர் போல்வார்.
90
உரை
   


குறிக்கும் பணிலம் முதல் ஆயிரம் கோடியாகப்
பிறிக்கும் கருவி இடம்தோறும் பிளிறி ஆர்ப்ப,
செறிக்கும் கழற் கால் அறன் மைந்தனைச் செம்பொன் வேதி
எறிக்கும் கிரண மணிப் பீடம்அது ஏற்றினாரே.

91
உரை
   

இடத் தோள் இவட்கும், வலத் தோள் இவ் இறைவனுக்கும்,
திடத்தோடு உரைத்த குறியின் பயன் சேர்ந்து தோய,
விடத்தோடு அமுதம் கலந்தென்ன மிளிரும் வேற்கண்
வடத்தோடு விம்மும் முலையாளை வலத்தில் வைத்தார்.
92
உரை
   


கேள்விக்கு ஒருவன் எனும் தௌமியன் கீத வேத
வேள்விக்கு வேண்டுவன யாவும் விதியின் ஈட்டி,
மூள்வித்த செந் தீக் கரி ஆக, முரசு உயர்த்த
வாள் வித்தகற்கு வரமான சடங்கு செய்தான்.

93
உரை
   

பல் மங்கலமும் உடன் வைகிய பண்பினாளை
நல் மங்கலப் பூண் துகிலோடு நயந்து சாத்தி,
தன்மம் கலந்த மனத்தோனை அத் தையலோடும்
தொல் மங்கலச் செஞ் சுடர்த் தீ வலம் சூழுவித்தார்.
94
உரை
   

கங்குல், பவள வனம்மீது கடல் தரங்கம்
பொங்கி, தரளத் திரள் சிந்திப் பொழியுமாபோல்,
அங்கிப் புறத்து, திருக் காப்பு அணி அம் கை ஏந்தி,
செங் கண் கரிய குழலாள் பொரி சிந்தினாளே.
95
உரை
   

இவ்வாறு மன்றல் அயர்வித்தபின், ஈன்ற காதல்
வெவ் ஆர் அழலில் முறை மூழ்கினள் மீண்டு தோன்ற,
மை வார் அளக வடமீன் நிகர் கற்பினாளை
அவ்வாறு மற்றை ஒரு நால்வரும் அன்று வேட்டார்.
96
உரை
   

யாகசேனன் ஐவர்க்கும் பல வகை வரிசைகள் அளித்தல்

மாரன் கரும்பு வளரும்படி வார்த்த நீரால்
ஈரம் புலராக் கரத்தோருக்கு, யாகசேனன்,
'தேரும், பரியும், களிறும், திரள் சேனை யாவும்,
பாரும், தனமும், உமது' என்று பலவும் ஈந்தான்.
97
உரை
   

பாண்டவர் மன்றல் பெற்ற செய்தி அறிந்து, துரியோதனாதியர் மீண்டு வந்து பொருதல்

'ஆண்டு மன்றல் பெற்று அங்குரித்தார், இகல்
பாண்டு மைந்தர்' எனும் சொல் பரவலும்,
தாண்டு வெம் பரித் தேர்த் தார்த்தராட்டிரர்
மீண்டும் வந்து, அவர்மேல் வினை செய்யவே.
98
உரை
   

போரில் பாண்டவர்க்குத் தோற்று, பகைவர் அனைவரும் தம் ஊருக்கு மீளுதல்

சென்ற சேனையும், திட்டத்துய்மன்னுடன்
நின்ற சேனையும், நேர் உறு பூசலில்,
கொன்ற சேனை ஒழி குரு சேனையை
வென்ற சேனை வெகுண்டு, வென் கண்டதே.
99
உரை
   

சாலும் வஞ்சச் சகுனியொடு எண்ணிய
நாலு மைந்தரும் நச்சு எயிறு ஆகவும்,
வாலும் மெய்யும் வருக்கங்கள் ஆகவும்,
ஆலும் வெம் பகை ஆடு அரவு ஆனதே.
100
உரை
   


அந்த நாகம் அழல் உமிழ் கண் விடம்
சிந்த, மேல் விடு சீற்றமும் தோற்றமும்,
முந்த, வார் சிலைக் கைம் முகில் வாகனன்
மைந்தன் வாளி மழைகளின் மாய்ந்தவே.

101
உரை
   

சமர வேழ முகாசுரன் சாய்ந்தனன்
குமரனால் என, கோ நகுலன்தனால்,
அமரில் யானை அணி முகத்தோடு மெய்
தமர் பட, புறம்தந்தனன், கன்னனே.
102
உரை
   


முன்னிடச் சமர் மோதும் சகுனியை,
மின்னிடைப் புயங்கம் வெருக் கொண்டென,
தன் இடக் கைத் தனுவொடும் தேரொடும்
பின்னிடப் பொருதான், அவன் பின்னவன்.

103
உரை
   

தண் மதிக் குடைத் தம்முனும், தம்பியும்,
எண்ணும் மற்றை இளைஞர்கள் யாவரும்,
கண் உறக் களம் காணும் முன், தீயினால்
வெண்ணெய் ஒத்து உடைந்தார், விறல் வீமனால்.
104
உரை
   

விரோசனக் கதிர் மைந்தனும், வேந்தனும்,
சரோசனத் திறல் தம்பியும், மாமனும்,
புரோசனப் பெயர்ப் புன்மதிதன்னை நொந்து,
அரோசனத்துடன் அத்தினம் நண்ணினார்.
105
உரை
   

பாண்டவர் பாஞ்சாலத்தில் சிறப்புற்றிருத்தல்

முந்து போரில் முதுகிடும் வேந்தரால்,
விந்தைதன்னையும் மேதக வேட்டபின்,
அந்த மா நகர் ஐவரும், மாமனும்,
வந்த கண்ணனும், அன்புடன் வைகினார்.
106
உரை
   

திருதராட்டிரன் பாண்டவர்க்கு அரசு அளிக்கக் கருதி,
அவர்களை அத்தினாபுரிக்கு வரவழைத்தல்

தும்பை சூடிய வேல் துரியோதனன்
வெம்பு போரில் முதுகிட்டு மீண்டபின்,
தம்பி கூறு தருமனுக்கு ஈயுமாறு,
அம்பிகேயன் அமைச்சரொடு எண்ணினான்.
107
உரை
   

தாதினால் பொலி தார் வரை மார்பரை,
தூதினால், தங்கள் தொல் பதி சேர்த்தினான்-
'காதினால் பயன் இன்று' என, கண்கள்போல்
கோதினால் தெரியா மனக் கோளினான்.
108
உரை
   

பாண்டவர் அரசு பெறும்பொருட்டு,
அத்தினாபுரி வந்து தங்குதல்

வீடுமற்கும் விதுரற்கும் ஏற்க, அந்
நாடு முற்றும் நரபதி நல்கவே,
ஆடு பொற்கொடி அந் நகர் வைகினார்-
நீடு வில்-திறலோர் நெடுங் காலமே.
109
உரை