7. அருச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கம்

தருமனது நீதி தவறாத ஆட்சியில் ஒருநாள்,
ஒரு மறையவன் வந்து முறையிடுதல்

துன்பம், பயம், மிடி, நோய், பகை, சோரம், கொலை, எய்தாது;
இன்பம், பொருள், அறன், யாவையும் இயல்பு ஆதலின் எய்தி;
தன் பைங் குடை நிழல் மன்பதை, தரியார் முனை மதியா
வன்பன், தனை நிகர் வாழ்வு உற வரு நாள்களில் ஒருநாள்.

1
உரை
   


அறை ஓத வனம் சூழ் புவி அரசு ஆன அனைத்தும்
திறையோடு இடம் அற நிற்பது ஒர் திரு வாயில் மருங்கே,
இறையோடு உயர் இரு கையும் எடுத்து, எண்ணுற, 'முறையோ,
முறையோ!' என, ஒரு வைதிக முனி வந்து புகுந்தான்.

2
உரை
   


அருச்சுனன் அந்தணனுக்கு அபயம் அளித்து, வில் எடுக்கச்
சென்ற இடத்தில், தருமனுடன் திரௌபதியைக் காணுதல்

கடை காவலர் குறை கூறலும், விசயன், கடிதில், தன்
புடை காவலர் தொழ வந்து, புவித்தேவனை, 'மறையின்
தொடை காவல! இது என்?' என, அவனும், 'தொடு கழலோய்!
விடை காவலர் நிரை கொண்டனர், வில் வேடுவர்' என்றான்.

3
உரை
   

'அஞ்சாது ஒழி, முனி! நீ; உனது ஆனின் கணம் இன்றே
எஞ்சாவகை தருவேன்' என, ஏவுக்கு ஒரு திலகன்,
வெஞ் சாபம் எடுப்பான் வரு விசயன், தருமனுடன்
மஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான்.
4
உரை
   

காணா, மெய்ந் நடுங்கா, ஒளி கருகா, மனம் மிகவும்
நாணா, விரைவொடு சாயக நாண் வெஞ் சிலை கொள்ளா,
சேணாம் நெறி செல்லா, நனி சீறா, அமர் வெல்லா,
மாண் ஆநிரை மீளா, ஒர் இமைப்போதினில் வந்தான்.
5
உரை
   


அந்தணனது ஆநிரையை மீட்டு அளித்தபின், தருமனிடம்
விடைபெற்று, அருச்சுனன் தீர்த்த யாத்திரை போதல்

தொறுக் கொண்டவர் உயிரும், தொறு நிரையும், கவர் சூரன்,
மறுக்கம்படு மறையோன் மனம் மகிழும்படி நல்கி,
பொறுக்கும் தவ முனி சொல்படி, புனிதப் புனல் படிவான்,
நிறுக்கும் துலை நிகர் தம்முனை நிகழ்வோடு, பணிந்தான்.

6
உரை
   


விசயன் கங்கையில் நீராடும்போது அங்கு வந்த
நாககன்னிகையருள் உலூபியை விரும்பி, பில
வழியே அவள் பின் சென்று மணத்தல்

ஆடம்பர மன் வேடம் அகற்றி, தொழுதகு தொல்
வேடம் பெறு மறையோருடன் விசயன், புரவிசயன்
சூடம் தரு பாகீரதி தோய் காலையில், அவணே,
சேடன் தல மடவார் புனல் அயர்வான் எதிர் சென்றார்.

7
உரை
   


ஓடும் கயல் விழியாரில் உலூபிப் பெயரவளோடு,
ஆடும் புனலிடை நின்றவன், அநுராகம் மிகுந்தே,
நாடும் பில வழியே அவள் பின் சென்று, நலத்தால்
நீடும் கொடி மணம் எய்தினன், முகில் போலும் நிறத்தான்.

8
உரை
   


உலூபி இராவானைப் பெற்றெடுத்தல்

இம்மென்று அளி முரல் பாயலில் இன்பத்தை வளர்த்தும்,
பொம்மென் பரிபுர நாள்மலர் பொன் சென்னியில் வைத்தும்,
செம் மென் கனி இதழாளொடு சில்நாள் நலம் உற்றான்;
அம் மென்கொடி அனையாளும் இராவானை அளித்தாள்.

9
உரை
   


பின், விசயன் நாகலோகத்திலிருந்து மீண்டு வந்து,
இமயமலைத் தீர்த்தங்களில் முழுகி, கிழக்கு
நோக்கிச் செல்லுதல்

நாகாதிபன் மகள் மைந்தன் நலம் கண்டு, மகிழ்ந்து,
நாகாதிபன் மகன், மீளவும், நதியின் வழி வந்து,
நாகாதிபன் வண் சாரலின் நல் நீர்கள் படிந்து,
நாகாதிபன் விடும் மும் மதம் நாறும் திசை புக்கான்.

10

உரை
   

யமுனை முதலிய நதிகளில் நீராடிய பின், தென் திசை
நோக்கி வந்து, திருவேங்கடமலை முதலியவற்றில்
நீராடி, இறைவனை வணங்குதல்

நெளிந்து ஆடு அரவு-அணை ஐயன் நிறம் போல நிறக்கும்
களிந்தா நதி முதலாகிய கடவுள் நதி பலவும்,
முளிந்து ஆர் அழல் எழு கான் நெறி, முக் கோலினர் ஆகித்
தெளிந்து ஆறிய பெரியோரொடு சென்று, ஆடினன் அன்றே.

11
உரை
   


பத்திக்கு வரம்பாகிய பார்த்தன், பல தீர்த்தம்
அத் திக்கினும் எத் திக்கினும் ஆம் என்றவை ஆடி,
சித்திக்கு ஒரு விதை ஆகிய தென் நாட்டினை அணுகி,
தத்திச் சொரி அருவித் தட அரவக்கிரி சார்ந்தான்.

12
உரை
   


இச்சைப்படி தன் பேர் அறம் எண்-நான்கும் வளர்க்கும்
பச்சைக்கொடி, விடையோன் ஒரு பாகம் திறை கொண்டாள்,
செச்சைத் தொடை இளையோன் நுகர் தீம் பால் மணம் நாறும்
கச்சைப் பொரு முலையாள், உறை கச்சிப் பதி கண்டான்.

13
உரை
   

அயனார் புரி மக சாலையும், அணி அத்திகிரிக்கே
மயனார் செய் திருக் கோயிலும், மா நீழலின் வைகு எண்
புயனார் உறை மெய்க் கோலமும், உள் அன்பொடு போற்றி,
பயன் ஆர் புனல் நதி ஏழும், அந் நகரூடு படிந்தான்.
14
உரை
   

பெற்றாள் சகத் அண்டங்கள் அனைத்தும், அவை பெற்றும்
முற்றா முகிழ் முலையாளொடு முக்கண்ணர் விரும்பும்
பற்றாம் என, மிக்கோர் இகழ் பற்று ஒன்றினும், உண்மை
கற்றார் தொழும் அருணாசலம் அன்போடு கை தொழுதான்.
15
உரை
   


உருகும் கமழ் நெய் பால் இரு பாலும் கரை ஒத்துப்
பெருகும் துறை ஏழ் ஏழு பிறப்பும் கெட மூழ்கி,
கருகும் கரு முகில் மேனியர், கவி ஞானியர் கண்ணில்
பருகும் சுவை அமுது ஆனவர், பாதம் தலை வைத்தான்.

16
உரை
   


ஐஆனனன் இயல் வாணனை அடிமைக் கொள, மெய்யே
பொய் ஆவணம் எழுதும் பதி பொற்போடு வணங்கா,
மெய் ஆகம அதிகைத் திரு வீரட்டமும், நேமிக்
கையாளன் அகீந்திரபுரமும் கண்டு, கை தொழுதான்.

17
உரை
   


இன்னம் பல பல யோனியில் எய்தா நெறி பெறவே,
முன்னம், பலர் அடி தேடவும் முடி தேடவும் எட்டா,
அன்னம் பல பயில் வார் புனல் அணி தில்லையுள் ஆடும்,
பொன் அம்பல நாதன் கழல் பொற்போடு பணிந்தான்.

18
உரை
   

இலங்காபுரி முன் செற்றவன் இரு போதும் வணங்க,
துலங்கு ஆடு அரவு-அணைமேல் அறி துயில்
                                 கொண்டவர் பொன்-தாள்,
பொலம் காவிரி இருபாலும் வர, பூதல மங்கைக்கு
அலங்காரம் அளிக்கும் தென் அரங்கத்திடை, தொழுதான்.
19
உரை
   

பல தீர்த்தங்கள் ஆடி, மதுரைக்கு வந்த விசயன்,
பாண்டியனைக் கண்டு உரையாடுதல்

வளவன் பதி முதலாக வயங்கும் பதிதோறும்
துளவம் கமழ் அதி சீதள தோயங்கள் படிந்தே,
இள வண் தமிழ் எழுது ஏடு முன் எதிர் ஏறிய துறை சூழ்,
தளவம் கமழ் புறவம் செறி, தண் கூடல் புகுந்தான்.
20
உரை
   


குன்றில் இள வாடை வரும் பொழுது எல்லாம் மலர்ந்த
                                 திருக் கொன்றை நாற,
தென்றல் வரும் பொழுது எல்லாம் செழுஞ் சாந்தின் மணம்
                                 நாறும் செல்வ வீதி,
நன்று அறிவார் வீற்றிருக்கும் நான்மாடக் கூடல் வள
                                 நகரி ஆளும்,
வென்றி புனை வடி சுடர் வேல், மீனவனை வானவர்
                                 கோன் மதலை கண்டான்.

21
உரை
   


அந் நிலத்தினவர் அல்லா அந்தணரோடு இவன்
                                 அவனுக்கு ஆசி கூற,
'எந் நிலத்தீர்? எப் பதியீர்? எத் திசைக்குப் போகின்றீர்?'
                                 என்று போற்றி,
சென்னியர்க்கும் வில்லவர்க்கும் மணிமுடி ஆம் கனை கழல்
                                 கால் செழியன் கேட்ப,
'கன்னியைக் கண்ணுற்று, ஆட வந்தனம்' என்றனன்,
                            மெய்ம்மைக் கடவுள் போல்வான்.

22
உரை
   


பாண்டியன் அருச்சுனன் முதலியோருக்குச்
சோலையில் விருந்து அளித்தல்

வெய்தின் மகபதி முடியில் வளை எறிந்து, மீண்ட நாள்,
                                 விண்ணின் மாதர்
கொய்து மலர் தொலையாத குளிர் தருக்கள் ஒரு கோடி
                                 கொண்டு போந்து,
மை தவழ் தன் தடங் கோயில் வரூதமதன் ஒரு மருங்கு
                                 வைத்த காவில்,
கைதவர் கோன், மற்று அவர்க்குப் போனகம் செய்து,
                                 அருந்தும் இடம் கற்பித்தானே.

23
உரை
   

சோலையில் தோழியருடன் விளையாட வந்த
பாண்டியன் மகள் சித்திராங்கதையைக் கண்டு,
விசயன் காதல் கொள்ளுதல்

வேதியரோடு அக் காவில் இளைப்பாறி இருந்த அளவில்
                                 மின் குழாம்போல்
தாதியரும் சேடியரும் தற் சூழ, சிலை மதனன் தனி சேவிக்க,
சோதி அரிச் சிலம்பு அரற்ற, துணைநெடுங் கண் செவி
                                 அளப்ப, தொடித் தோள் வீசி,
ஆதி அரவிந்தை என, நிருபன் மகள் விளையாடற்கு ஆங்கு வந்தாள்.
24
உரை
   

பச்சென்ற திரு நிறமும், சேயிதழும், வெண் நகையும்,
                                 பார்வை என்னும்
நச்சு அம்பும், அமுது ஊற நவிற்றுகின்ற மட மொழியும்,
                                 நாணும், பூணும்,
கச்சின்கண் அடங்காத கன தனமும், நுண் இடையும்,
                                 கண்டு சோர்ந்து,
பிச்சன்போல் ஆயினன்-அப் பெண்கொடி மெய்ந்நலம்
                                 முழுதும் பெறுவான் நின்றான்.
25
உரை
   


புத்திரர் வேறு இல்லாது, புரிவு அரிய தவம் புரிந்து, பூழி வேந்தன்,
சித்திரவாகனன் பயந்த சித்திராங்கதை என்னும் செஞ் சொல் வஞ்சி
பத்திரமும், நறு மலரும், அவயவம்போல் விளங்குவன
                                 பலவும் கொய்து,
மித்திர மா மகளிருடன் விரவி, ஒரு செய்குன்றில் மேவினாளே.

26
உரை
   

விசயன் சித்திராங்கதையைத் தனியிடத்துக் கண்டு,
கந்தருவ முறையால் இன்பம் துய்த்தல்

முன் உருவம்தனை மாற்றி, முகில் வாகன் திரு மதலை
                                 மோகி ஆகி,
தன் உருவம்தனைக் கொண்டு, சாமனிலும் காமனிலும்
                                 தயங்கும் மெய்யோன்,
பொன் உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின்
                                 பூந் தண் நீழல்,
மின் உருவ நுண் இடையாள் விழி களிக்கும்படி
                                 நின்றான், வீரர் ஏறே.
27
உரை
   


வண்டானம் திரி தடத்து வரி வண்டின் இனம் பாட,
                                 மயில்கள் ஆட,
தண் தார் மெய்க் கிளிக் கூட்டம் சான்றோர்கள் உரை
                                 பயிற்ற, தமிழ்கள் மூன்றும்
கொண்டாடி, இளம் பூவைக் குழாம் தலை சாய்த்து,
                        உளம் உருகும் குன்றின் ஆங்கண்,
கண்டாள் அக் குமரனை, தம் கொடிக் கயலைப் புறம்
                                 காணும் கண்ணினாளே.

28
உரை
   

செந்திருவை அனையாளும், திருமாலை அனையானும், சிந்தை ஒன்றாய்,
வந்து இருவர் விலோசனமும் தடை இன்றி உறவாடி,
                                 மகிழ்ச்சி கூர்ந்து,
வெந்து உருவம் இழந்த மதன் மீளவும் வந்து இரதியுடன்
                                 மேவுமாபோல்,
கந்தருவ முறைமையினால், கடவுளர்க்கும் கிடையாத
                                 காமம் துய்த்தார்.
29
உரை
   

பின், சித்திராங்கதை தோழியரிடம் வந்து,
நிகழ்ந்தவற்றை உரைத்தல்

கூடி இருவரும் ஒருவர் என இதயம் கலந்ததற்பின்,
                                 குறித்த தூநீர்
ஆடிய வந்ததும், தன்னை அருச்சுனன் என்பதும்,
                                 இளமான் அறியக் கூறி,
' 'நீடியது' என்று ஐயுறுவர்; நீ இனி ஏகு' என உரைப்ப,
                                 நெடுங்கண்ணாள் போய்,
சேடியருக்கு, அஞ் ஞான்று நிகழ்ந்த எலாம், மகிழ்ந்து
                                 உருகிச் செப்பினாளே.
30
உரை
   


சித்திராங்கதை காதல் நோயால் வருந்துதல்

கவுரியர் கோன் திருமகளைக் கண் அனையார்
                                 கொண்டுபோய், கன்னிமாடத்து
அவிரும் மணிப் பரியங்கத்து ஐஅமளி ஏற்றிய பின்,
                                 அனங்கன் போரால்,
நவிருடை மா மயல் உழந்து, நயனங்கள் பொருந்தாமல்,
                                 நாண் உறாமல்,
'தவிர்க!' எனவும் தவிராமல், தன் விரகம் கரை அழிந்து,
                                 தளர்ந்தாள் மன்னோ.

31
உரை
   


தங்கள் மலைச் சந்தனத்தை, 'தழல் குழம்போ, இது!'
                                 என்னும்; தாபம் தோன்ற,
தங்கள் கடல் தண் முத்தைக் கண் முத்தால் நீறு
                                 ஆக்கும்; தக்கோர் ஆய்ந்த
தங்கள் தமிழ்க் குழல் இசையைத் தன் செவிக்கு, 'விடம்!'
                                 என்னும்; தபனன் ஏக,
தங்கள் குலக் கலை மதியை, 'தபனன்' எனும்; என்
                                 பட்டாள் தனி பொறாதாள்!

32
உரை
   


செவிலித்தாயர் நிகழ்ந்தவற்றை மன்னனுக்கு
அறிவித்தலும், அது கேட்டு மன்னன் மகிழ்தலும்

அங்கு உயிர்போல் இரு மருங்கும் ஆய மட மகளிர் இருந்து,
                                 ஆற்ற ஆற்ற,
கங்குல் எனும் பெருங் கடலைக் கரை கண்டாள்; கடல்புறத்தே
                                 கதிரும் கண்டாள்;
இங்கு இவள் போய், மலர்க் காவின், எழில் விசயற்கு ஈடு
                                 அழிந்த இன்னல் எல்லாம்,
சங்கு எறியும் தடம் பொருநைத் துறைவனுக்குச்
                                 செவிலியராம் தாயர் சொன்னார்.

33
உரை
   

ஐந் தருவின் நீழலில் வாழ் அரியுடனே ஓர் அரியாசனத்தில் வைகி,
புந்தி உற ஒருவரும் முன் பூணாத மணி ஆரம் பூண்ட கோமான்
அந்த உரை செவிப்படலும், 'அதி தூரம் விழைவுடன் சென்று
                                 ஆடு தீர்த்தம்
வந்தது, நம் தவப் பயன்' என்று உட்கொண்டான், மகோததியும்
                                 வணங்கும் தாளான்.
34
உரை
   


மையல் நோயால் இரவைக் கழித்த விசயன்,
துயிலுணர்ந்து, அந்தணருடன் காலைக் கடன் செய்தல்

வழுதி திரு மகள் கொடுத்த மையலினால், வடிவமும்
                                 தன் மனமும் வேறா,
பொழுது விடிவளவும், மதன் பூசலிலே கருத்து அழிந்து,
                                 பூவாம் வாளி
உழுத கொடும் புண் வழியே ஊசி நுழைந்தெனத்
                                 தென்றல் ஊர ஊர,
விழி துயிலா விசயனும், அவ் விபுதருடன் துயிலுணர்ந்து,
                                 விதியும் செய்தான்.
35
உரை
   
பஞ்சவரின் நடுப்பிறந்தோன் பஞ்சவன் பேரவை
                                எய்திப்பஞ்ச பாண,
வஞ்சகன்செய் வஞ்சனையால் மதிமயங்கி இருந்துழிஅம்
                                மதுரை வேந்தன்,
சஞ்சரிக நறுமலர்த்தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து தழீஇக்
                                கொண்டு ஆங்கண்,
அஞ்சல் இனி உனக்குரியள் யான் பயந்த கடற்பிறவா அமுதம்
                                என்றான்.
36
உரை
   

மன்னன் விசயனிடம் ஒரு வேண்டுகோள் விடுக்க,
அவனும் அதற்கு இசைதல்

கேண்மதி, ஓர் மொழி: முன்னம் கேண்மையின் நம் குலத்து
                                 ஒருவன் கிரீசன் தன்னைத்
தாள் மலர் அன்புறப் பணிந்து தவம் புரிந்தான், மகப்
                                 பொருட்டால்; தரித்த கொன்றை
நாள்மலரோன் வெளி நின்று, அந் நரபதிக்கு, 'நின் குலத்து
                                 நரேசர் யார்க்கும்,
வாள் மருவும் கரதலத்தோய்! ஓர் ஒரு மா மகவு' என்று
                                 வரமும் ஈந்தான்.
37
உரை
   

'அன்று உரைத்த வரத்தின் வழி அனேகர் அவனிபரும் மகவு
                                 அளித்தார், ஒன்று ஒன்று;
ஒன்று உரைக்க மறாது ஒழி நீ; ஒரு மகவும் பெண் மகவாய்
                                 உதித்தது, என்பால்;
நன்று உரைக்கும் மொழியாய்! என் நவ்வி பெறும் மகவு எனக்கே
                                 நல்க வேண்டும்'
என்று உரைத்தான்; மன்றல் பெற இருந்தோனும், மாமன் உரைக்கு
                                 இசைந்தான் அன்றே.
38
உரை
   

சித்திராங்கதைக்கும் விசயனுக்கும் திருமணம் நிகழ்தல்

தெண்திரை கை தொழு கழலோன் திருமகட்கு வதுவை என,
                                 சேர சோழர்,
எண் திசையின் முடி வேந்தர் எல்லோரும் முனி கணத்தோர்
                                 எவரும் ஈண்ட,
அண்டர் பிரான் அளித்த சிலை ஆண்தகையை அலங்காரம்
                                 அனைத்தும் செய்து,
மண்டபம் ஒன்றினில் அறு கால் வண்ண மணிப்
                  பலகையின்மேல் வைத்தார் அன்றே.
39
உரை
   

கோ மடந்தை களி கூர, புகழ் மடந்தை களி கூர,
                                 கொற்ற விந்தை
மா மடந்தை களி கூர, மண வினை ஒப்பனைக்கு
                                 உரிய மடந்தைமார்கள்
பூ மடந்தை அனையாளைப் பூட்டிய வெண் தரள
                                 மணிப் பூண்களாலே
நா மடந்தை நிகர் ஆக்கி, நாயகன்தன் வலப் பாகம்
                                 நண்ணுவித்தார்.
40
உரை
   


இந்திரனும் சசியும் என, இறையோனும் உமையும் என,
                                 எம்பிரானும்
செந் திருவும் என, காமதேவும் இரதியும் என,
                                 வெஞ் சிலைவலோனும்
சந்து அணி பூண் முலையாளும், சதுர் மறையோர் சடங்கு
                                 இயற்ற, தழல் சான்று ஆக,
துந்துபியின் குலம் முழங்க, சுரிசங்கின் குழாம் தழங்க,
                                 துலங்க வேட்டார்.

41
உரை
   

இருவரும் இன்பம் துய்த்து வாழும் நாளில்,
பப்புருவாகனன் என்னும் புதல்வனைப் பெற்றுச்
சித்திரவாகனனுக்கு கொடுத்தல்

நோக்கிய கண் இமையாமல் நோக்கி நோக்கி, நுண்ணிய மென்
                     புலவியிலே நொந்து நொந்து,
தேக்கிய செங் கனி இதழ் ஆர் அமுது உண்டு உண்டு,
                சேர்த்திய கைந் நெகிழாமல் சேர்ந்து சேர்ந்து,
தூக்கிய பொன் துலையின் அநுராகம் மேன்மேல் தொடர,
                  அரும் பெரும் போகம் துய்த்தார்; முன்னைப்
பாக்கியம் வந்து இருவருக்கும் பலித்தது அல்லால், பாயல்
                     நலத்து இப்படி யார் பயன் பெற்றாரே?

42
உரை
   


பல் நாளில் நெடும் போகம் பயின்ற பின்னர், பப்புருவாகனன்
                     என்னும் பைதல்-திங்கள்
அன்னானை அவள் பயந்தாள்; பயந்த போதே, அம் மகவை
                     உவகையுடன் அவனும் ஈந்தான்;
தென்னா என்று அளி முரல, வேம்பின் தண் தார்த் தேம் பரிசில்
                     வழங்கு புயத் தென்னர் கோவும்,
'நின்னால் என் மரபு நிலை பெற்றது!' என்று, நேயமுடன் கவர்ந்து,
                     துயர் நீங்கினானே.
43
உரை
   

பின், அருச்சுனன் சித்திராங்கதையை நீங்கி,
வழுதிநாட்டுள்ள தீர்த்தங்கள் பலவற்றில் நீராடுதல்

பார்த்தன், அருச்சுனன், கரியோன், விசயன், பாகசாதனி,
                     சவ்வியசாசி, பற்குனன், பார்
ஏத்து தனஞ்சயன், கிரீடி, சுவேத வாகன், எனும் நாமம்
                     படைத்த பிரான், யாழோர் இன்பம்
வாய்த்த இதழ் அமுத மொழிப் பேதை தாதை மனை இருக்க,
                     திரு வழுதி வள நாட்டு உள்ள
தீர்த்தம் முழுவதும் ஆடி, அன்பால் தென்பால் திருமலையும்
                     கை தொழுது சிந்தித்தானே.
44
உரை
   

கன்றிய வெங் கரன் முதலோர் களத்தில் வீழ, கவி குல
                     நாயகன் இதயம் கலங்கி வீழ,
ஒன்று பட மரம் ஏழும், உததி ஏழும், ஊடுருவச் சரம்
                     தொடுத்த ஒரு வில் வீரன்,
துன்றி எழுபது வெள்ளம் குரங்கின் சேனை சூழ் போத,
                     வாய்த்த திருத் துணைவனோடும்
சென்ற வழி, இன்று அளவும் துளவம் நாறும் சேது, தரிசனம்
                     செய்தான், திறல் வல்லோனே..

45
உரை
   

வன் திரை வெங் களிற்று இனங்கள் இரண்டு பாலும் மலையாமல்
                     இடும் கணையமரனே போலும்;
தன் தலைகள் அமிழாமல் எடுப்பான், மேருத் தாழ் கடலில்
                     நீட்டியது ஓர் தடக் கை போலும்;
அன்றி இரு பூ தலமும் இரு தட்டாக, அகத்தியன் வாழ்
                     குன்றினையும், அணி முக்கோணக்
குன்றினையும், சீர்தூக்கி நிறுப்பதாக, கோகனதன் அமைத்த
                     துலைக் கோலும் போலும்.
46
உரை
   

அண்டர், 'தம கங்கையினும் வரன் உண்டு' என்று என்று,
             அரம்பையரோடு அவனியில் வந்து, ஆடும் கன்னித்
தண் துறையும், தண் பொருநைப் பாவ நாசத் தடந் துறையும்
                     படிந்து, நதித் தடமே போந்து,
பண்டு மழுப் படையோன் அம் மழுவால் கொண்ட பாக்கிய
                     பூமியும், சேரன் பதிகள் யாவும்,
கண்டு, மனம் களி கூரச் சென்று, மேலைக் கடல் கண்டான்,
                     உரகதலம் கண்டு மீண்டான்.

47
உரை
   

அரம்பையர் ஐவரின் சாபம் நீக்கி, விசயன்
கோகன்னத்தை அடைதல்

அந்த நெடுந் திசைப் புனல்கள் ஆடும் நாளில், ஐந்து தடத்து
                     அரம்பையர் ஓர் ஐவர் சேர,
இந்திரன் வெஞ் சாபத்தால், இடங்கர் ஆகி, இடர் உழந்தோர்
                     பழைய வடிவு எய்த நல்கி,
சிந்து திரை நதி பலவும் சென்று தோய்ந்து, திங்களுடன் அரவு
                     உறவு செய்யும் வேணிக்
கொந்து அவிழும் மலர் இதழித் தொடையோன் வைகும் கொடி
                     மதில் சூழ் கோகன்னம் குறுகினானே.
48
உரை
   


உடன் வந்த மறையவரைக் கோகன்னப்பதியில் இருத்தி,
விசயன் துவாரகை சென்று, சுபத்திரையை மணக்க
விரும்பி, துறவு வேடம் பூணுதல்

ஆகன்னம் உறச் செம் பொன் வரை வில் வாங்கி, அவுணர்
                     புரம் கட்டழித்தோன் அடியில் வீழ்ந்து,
கோகன்ன வளம் பதியில் தன் பின் வந்த குல முனிவர்தமை
                     இருத்தி, கோட்டுக் கோட்டு
நாகு அன்னப் பெடையுடனே ஆடும் கஞ்ச நறை வாவி வண்
                     துவரை நண்ணி, ஆங்கண்,
பாகு அன்ன மொழிக் கனிவாய் முத்த மூரல் பாவை நலம் பெற
                     முக் கோல் பகவன் ஆனான்.

49
உரை
   


அடுத்துள்ள இரைவதக கிரியில் விசயன்
இருத்தலும், மழை மிகப் பொழிதலும்

வெங் கதிர் போய்க் குட திசையில் வீழ்ந்த பின்னர், வீழாமல்
                     மாலையின்வாய் மீண்டும் அந்தச்
செங் கதிர் வந்து எழுந்தது என, மீது போர்த்த செய்ய
                     ஆடையும் தானும், தீர்த்த வாரிச்
சங்கு அதிரும் மணி வீதி நகரி சூழ்ந்த தடஞ் சாரல்
                     இரைவதக சயிலம் நண்ணி,
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய்,
                ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான்.

50

உரை
   

'இந்திரற்குத் திருமதலை மன்றல் எண்ணி, யாதவர்கோன் வளம்
                     பதியில் எய்தினான்' என்று,
அந்தரத்தை நீலத்தால் விதானம் ஆக்கி, அண்டம் உற இடி
                     முரசம் ஆர்ப்ப ஆர்ப்ப,
வந்து இரட்டை வரி சிலையால் பஞ்ச வண்ண மகர தோரணம்
                     நாட்டி, வயங்கும் மின்னால்
முந்துறத் தீபமும் எடுத்து, தாரை முத்தால், முழுப் பொரி சிந்தின,
                     கால முகில்கள் அம்மா.
51
உரை
   


விசயன் கண்ணனை நினைக்க, அவனும் அங்கு வந்து,
விசயனது எண்ணத்தைத் தெரிந்து, மறுநாள் வருவதாகச்
சொல்லி, துவாரகை சேர்தல்

'யாம் கருதி வரும் கருமம் முடிப்பான் எண்ணில், இராமன் முதல்
                     யது குலத்தோர் இசையார்' என்று,
பாங்குடனே தனக்கு உயிர் ஆம் துளப மௌலிப் பரந்தாமன்தனை
                     நினைந்தான், பார்த்தன், ஆக,
பூங் கமல மலர் ஓடை அனையான், தானும், பொன் நெடுந்
                     தேர்ப் பாகனுமே ஆகப் போந்து,
நீங்கு அரிய நண்பினனாய், நெடு நாள் நீங்கு நேயத்தோன்
                     நினைவின்வழி நேர்பட்டானே.

52
உரை
   


யதி ஆகி அவண் இருந்த தோழன்தன்னை யது குல நாயகன்
                     பரிவோடு இறைஞ்ச, அன்பால்
அதியான நெடுஞ் சுருதி ஆசி கூறி, ஆகம் உறத் தழீஇ,
                     மகிழ்வுற்று, ஆல நீழல்
மதி ஆர் செஞ் சடை முடியோன் என்ன வைகி, வந்தவாறு
                     உரைப்ப, நெடுமாலும் கேட்டு,
துதியாடி, 'காலையிலே வருதும்' என்று, சொற்று, இமைப்பில்
                     மீளவும் போய், துவரை சேர்ந்தான்.
53
உரை
   


இந்திரவிழாக் கொண்டாடப் பலராமன், சுபத்திரை
முதலியோர் பரிவாரத்துடன் இரைவதக கிரிக்கு
வருதலும், யாவரும் அங்கு இருந்த அருச்சுன
முனிவனைத் தொழுதலும்

ஆதவன் வந்து உதிப்பதன் முன் மற்றை நாளில் அணி நகர்
                     வாழ் சனம் அனைத்தும் அந்தக் குன்றில்
மாதவனது ஏவலினால், மழைக் காலத்து, வாசவற்கு விழா
                     அயர்வான் வந்தகாலை,
யாதவரில் போசரில் மற்று உள்ள வேந்தர் யாவரும் சூழ்வர,
                     நறுந் தார் இராமன் வந்தான்;
சூது அடர் பச்சிளங் கொங்கை, பச்சை மேனி, சுபத்திரையும்
                     தோழியர்கள் சூழ, வந்தாள்.

54
உரை
   

முக்கோலும், கமண்டலமும், செங்கல் தூசும், முந்நூலும்,
                     சிகையுமாய் முதிர்ந்து தோன்றும்
அக் கோலம் அனைவரும் கைதொழுது, நோக்கி, அருள் நலம்
             பெற்று அகன்றதன் பின், அனைத்து உலோகத்து
எக் கோல யோனிகட்கும் உயிராய், தோற்றம் ஈர்-ஐந்தாய்,
                     பாற்கடலினிடையே வைகும்
மைக் கோல முகில் வண்ணன்தானும் எய்தி, மன வணக்கம்
                     புரிவோனை வணங்கினானே.
55
உரை
   

கண்ணன் அருச்சுன முனியைத் தனியே கண்டு, சுபத்திரையைப்
பெறச் சூழ்ச்சி உரைத்து, பின் சுபத்திரையை அழைத்து,
முனிவனுக்குப் பணிவிடை செய்யுமாறு அவளைப் பணித்தல்

துன்னி இருவரும் ஒருப்பட்டு இருந்தகாலை, சுபத்திரை
                     அத் தடங் குன்றின் சூழல் ஓர் சார்,
மின்னிய பைம் புயலின் எழில் இரேகை போல வெளிப் படலும்,
                     மெய் புளகம் மேன்மேல் ஏறி,
கன்னி இளந் தளிர்க் கடம்பு மலர்ந்தது என்னக் கண்ட விழி
                     இமையாத காட்சி காணா,
மன்னிய மா தவத்தோனை மந்த மூரல் மாதவன்
                 மைத்துனமையினால் மகிழ்ச்சி கூர்ந்தே,
56
உரை
   

'அடிகள் திருவுளத்து எண்ணம் எம்மனோர்கள் அறியின்
                     இசையலர்; பலர் இங்கு அறிவுறாமல்,
கடி அயர்வுற்று உம் பதி கொண்டு அடைக!' என்றும், 'காவலர்க்குக்
                     கடன்' என்றும், கசியக் கூறி,
கொடி இடை வெங் களப முலைக் கன்னி மானைக் கூய், 'அணங்கே!
                     மெய்ம்மை உறக் கொண்ட கோலப்
படிவ முனிக்கு இரு பருவம் பணித்த ஏவல் பரிவுடன் நீ புரி'
                     என்று பணித்திட்டானே..
57
உரை
   


தன் மனையில் வந்துள்ள அருச்சுன முனியின்
மாயவேடத்தைச் சுபத்திரை அறியாது, தோழியருடன்
தனி அறையில் துயிலுதல்

உள் அடங்கிய காம வெங் கனல் புறத்து ஓடிக்
கொள்ளை கொண்டு உடல் மறைத்தென, கூறையும் தானும்
மெள்ள வந்து, தன் கடி மனை மேவிய வேடக்
கள்ள வஞ்சனை அறிந்திலள், கற்புடைக் கன்னி.

58
உரை
   

'ஈங்கு வந்தது என் தவப் பயன்' என்று கொண்டு எண்ணி,
ஆங்கு உவந்து ஒரு மனையிடை அருந் தவன் துயில,
தூங்கு கண்ணினள் சுபத்திரை, தோழியர் பலரும்
பாங்கு வைக, மற்று ஒரு மனை புகுந்து கண்படுத்தாள்.
59
உரை
   

அருச்சுனன் விரகக் கனலால் பல நாள் வெதும்புதல்

புடவி எங்கணும் புதைய, வான் பொழிதரு புனலால்,
அடவி ஆர் அழல் அவியவும், அவிந்திலது, ஐயோ!-
தடவி வாடை மெய் கொளுத்திட, தனஞ்சயற்கு அணங்கின்
விட விலோசனக் கடை தரு விரக வெங் கனலே.
60
உரை
   


மதன லீலையில் பழுது அற வழிபடும் பாவை
வதன வாள் மதி வந்து முன் நிற்கவும், மருண்டு, அச்
சதனம் மேவரும் தபோதனன்தனக்கு, வெம் மோக
விதன வல் இருள் விடிந்திலது, ஆர் இருள் விடிந்தும்.

61
உரை
   

அற்றை நாள் முதல் அநேக நாள், அகில் மணம் கமழும்
கற்றை வார் குழல் கன்னிகை வழிபடக் கருத்தால்,
'இற்றை மா மதன் பூசலுக்கு என் செய்வோம்!' என்று என்று,
ஒற்றை அன்றில்போல் மெய்ம் மெலிந்து, உள்ளமும், உடைந்தான்.
62
உரை
   


அருச்சுன முனியின் அவயவநலம் கண்டு, சுபத்திரை ஐயுறுதல்

நல் இலக்கணம் பலவுடை அவயவ நலத்தால்,
வில் இலக்கணத் தழும்புடைக் கரங்களால், மிகவும்
தொல் இலக்கணம் பலவுடைச் சுபத்திரை, ஒரு தன்
இல்லில் அக் கணவனை, 'இவன் யார்கொல்!' என்று அயிர்த்தாள்.

63
உரை
   


சுபத்திரை-அருச்சுனன் உரையாடல்

மங்கை, அங்கு ஒரு நாள், அவன் மலர் அடி வணங்கி,
'எங்கும் வண் புனல் ஆடுதற்கு ஏகினீர் எனினும்,
தங்கும் மா நகர் யாது?' என, தபோதனன்தானும்,
'எங்கள் மா நகர் இந்திரப்பிரத்தம்' என்று இசைத்தான்.

64
உரை
   

என்ற காலையில், இந்திரன் மதலையை ஒழிய,
நின்ற பேரை அந் நெடுங் கணாள் வினவலும், நிருபன்,
'வென்றி மன்னவர் யாரையும் வினவினை; மின்னே!
மன்றல் அம் தொடை விசயனை மறந்தது என்?' என்றான்.
65
உரை
   


'இந்திரப்பிரத்தத்தில் விசயனை ஒழிந்த ஏனையோரை மட்டும் நீ வினவியது ஏன்?' என்ற அருச்சுன முனிக்குச் சுபத்திரையின் தோழி மறுமொழி கூறுதல்

'யாழின் மென் மொழி, எங்கள் நாயகி இவள், அவனுக்கு
ஊழின் அன்புடை மன்றலுக்கு உரியள்ஆதலினால்,
வாழி வெஞ் சிலை விசயனை மறைத்தனள்' என்னா,
தோழி நின்றவள் ஒருத்தி, கை தொழுதனள், சொன்னாள்.

66
உரை
   

' 'பங்குனன் பெருந் தீர்த்த நீர் படிவதற்காகப்
பொங்கு தெண் திரைப் புவி வலம் போந்தனன்' என்றே,
அங்கு நின்று வந்தவர் உரைத்தனர்; அவன் இப்போது
எங்கு உளான் எனத் தெரியுமோ, அடிகளுக்கு?' என்றாள்.
67
உரை
   


பாங்கிக்கு அருச்சுன முனி உரைத்த மறுமொழியிலிருந்து,
அவன் அருச்சுனனே எனச் சுபத்திரை உணர்தல்

பாங்கி நல் உரை தன் செவிப் படுதலும், 'விசயன்
தீங்கு இலன்; பல திசைகளும் சென்று, நீராடி,
கோங்கு இளங் கொழு முகை நிகர் கொங்கையாள் பொருட்டால்,
ஈங்கு வந்து நும் இல்லிடை இருந்தனன்' என்றான்.

68
உரை
   

யதி உரைத்த சொல் கேட்டலும், யாதவி நுதல் வாள்
மதி வியர்த்தது; துடித்தது, குமுத வாய் மலரும்;
புதிய கச்சு அணி குரும்பைகள் அரும்பின, புளகம்;-
பதி இடத்து அரிவையர்க்கு உளம் ஆகுலம் படாதோ?
69
உரை
   


அருச்சுனன் காதல் மிகச் சுபத்திரையின் கையைப்
பற்றுதலும், அச் செய்தியைச் சேடியர் சென்று தேவகிக்கு அறிவித்தலும்

உகவை முத்த மென் பவளமும் நீலமும் ஒளிர,
அகவு பச்சிளந் தோகைபோல் நின்ற அவ் அணங்கை,
மிக விருப்ப நோய் வளர்தலின், மெலிந்த தோள் விசயன்,
தகவுடைத் தன தடக் கையால் வளைக் கரம் தகைந்தான்.

70
உரை
   


தகைந்தபோது, உயிர்ச் சேடியர், 'தவிர்க!' எனச் சில சொல்
பகர்ந்து போய், ஒரு மாதவிப் பந்தரில் புகுந்து,
புகுந்த நீர்மையைத் தேவகி அறியுமா புகன்றார்;
அகைந்த பல் பெருங் கிளைஞரில் ஆர் கொலோ, அறிந்தார்?

71
உரை
   


யாதவர் யாவரும் வேறிடம் சென்றிருந்தமையால்,
தேவகி ஒழிந்தோர்க்கு அச் செய்தி தெரியாமை

அறிவு உறாவகை, அலாயுதன் முதல் வடமதுரை
செறியும் யாதவர் யாரையும் தன்னுடன் சேர்த்து,
மறி கொள் செங் கையன் விழா அயர்வான், பெருந் தீவில்,-
உறியில் வெண் தயிர் உண்டவன்-கொண்டு சென்றுற்றான்.

72
உரை
   


அருச்சுனனும் சுபத்திரையும் நினைந்தபடி
இந்திரனும் கண்ணனும் வந்து சேர்தல்

உற்ற கங்குலில் யாவரும் தணந்தவாறு உணர்ந்து,
பெற்ற தன் பெரும் பிதாவினை முன்னினன், பெரியோன்;
சிற்றிடைப் பெருங்கொங்கையும் தம்முனைத் தியானம்
முற்ற முன்னினள்; இருவரும் முன் முன் வந்துற்றார்.

73
உரை
   


இந்திரனும் இந்திராணியும் மகிழ்ந்து இவ் இருவருக்கும்
கலன் அணிய, கண்ணனது முயற்சியால்
சுபத்திரை-அருச்சுனன் திருமணம் நடைபெறுதல்

இந்திராணியோடு எய்திய இந்திரன்தன்னை
இந்திராபதி எதிர் கொள, துவரை மா மூதூர்ச்
சந்திராதவ மண்டபத்து இடு பொலந் தவிசில்
வந்து இரா, வணங்கிய திருமகனுடன் மகிழ்ந்தான்.

74
உரை
   

பொரு அரும் புருகூதனும், புலோம கன்னிகையும்,
இருவரும் தம கலன்களால் இவர் இருவரையும்
மரு வரும்படி அணிதலின், அணி கெழு வனப்பால்,
ஒருவரும் பிறர் ஒப்பலர் என்னுமாறு உயர்ந்தார்.
75
உரை
   

பால், அருந் ததி, நறு நெய், ஆய்ப் பாடியில் கள்ளத்-
தால் அருந்து அதி விரகனது அருளினால், விரைவில்
சால் அருந்ததி தலைவனும், தலைபெறும் பல நுண்
நூலரும், ததி உறப் புகுந்து, ஆசிகள் நுவன்றார்.
76
உரை
   

தொடங்கி நாத வெம் முரசுடன் சுரிமுகம் தழங்க,
சடங்கினால் உயர் ஆகுதித் தழலவன் சான்றா,
விடங்கினால் மிகு விசயன் அக் கன்னியை வேட்டான்;
மடங்கினார் தம பதிதொறும், அவ்வுழி வந்தார்.
77
உரை
   

முன்னம் யாவையும் முடித்தருள் மொய் துழாய் முடியோன்,
கன்னன் ஆர் உயிர் கொள வளர் காளையைத் தழீஇக்கொண்டு,
'அன்ன மென் நடை அரிவையர்பொருட்டு நீ இன்னம்
என்ன என்ன மா தவ உருக் கொள்ளுதி!' என்றான்.
78
உரை
   

கண்ணன் உரைத்தபடி சுபத்திரை தேர் செலுத்த,
அருச்சுனன் இந்திரப்பிரத்தம் நோக்கிச் செல்லுதல்

காமற் பயந்தோன்தனது ஏவலின், காம பாலன்
வாமப் பதிதன்னினும் வாசவ மா பிரத்த
நாமப் பதியே திசை ஆக நடக்கல் உற்றான்,
தாமக் குழலாள் தனித் தேர் விட, சாப வீரன்.
79
உரை
   

கண்ணன் பலராமனுக்குச் செய்தி சொல்ல, அவன்
யாதவருடன் அருச்சுனனைத் தொடர்ந்து சென்று பொருதல்

'வென்றித் துவரை நகர் காவலர்தம்மை வென்று,
மன்றல் குழலின் இளையாளை வலிதின் எய்தி,
குன்றச் சிறகர் அரிந்தோன் மகன் கொண்டுபோனான்'
என்று, அப் பலற்குக் கடல்வண்ணன் இயம்பினானே.
80
உரை
   


சேல் ஆம் பிறப்பின் திருமால் இது செப்பும் முன்னே,
காலாந்தகனும் வெருவும் திறல் காளைதன்னை,
நீலாம்பரனும், யது வீர நிருபர் யாரும்,
நால் ஆம் படையோடு எதிர் சூழ்ந்து, அமர் நாடினாரே.

81
உரை
   

தடுத்தவர்களை வென்று, அருச்சுனன் சுபத்திரையுடன்
இந்திரப்பிரத்தம் சேர்தல்

'அஞ்சேல்! அமரில் நுமர்தம்மையும் ஆவி கொள்ளேன்;
செஞ் சேல் அனைய விழியாய்!' எனத் தேற்றி, அந்த
மஞ்சே அனைய தடந் தேர் அவள் ஊர, வந்த
வெஞ் சேனை முற்றும் புறம்தந்திட, வென்று, போனான்.
82
உரை
   


மடை பட்ட வாளை அகில் நாறும் மருத வேலி
இடை பட்ட தங்கள் வள நாடு சென்று எய்தி, ஆங்கு,
தொடை பட்ட திண் தோள் அறன் காளை துணைவரோடு
நடைபட்டு உருகி, எதிர்கொள்ள, நகரி புக்கான்.

83
உரை
   

கண்ணன் பலராமனுடன் இந்திரப்பிரத்தம் சென்று
உவகைமொழி கூறி, மணமக்களுக்கு வரிசை செய்தல்

முன் போர் விளைத்த முசலப் படை மொய்ம்பினானும்,
தன்போல் உயர்ந்தோர் இலன் ஆன தடங் கண் மாலும்,
பின் போய், இனிய மொழி ஆயிரம் பேசி, மன்றற்கு
அன்போடு உதவும் உபசாரம் அனைத்தும் ஈந்தார்.
84
உரை
   

பலராமன் துவாரகைக்கு மீள, கண்ணன் அருச்சுனனுடன்
இந்திரப்பிரத்தத்தில் இருத்தல்

ஞாலத் தெரிவை களி கூர நடாத்து செங்கோல்
தாலத் துவசன் துவராபதிதன்னில் வைக,
நீலக் கடல்கள் இரண்டு ஆம் என, நெஞ்சொடு ஒத்த
சீலத்தவனோடு அவண் வைகினன், செங் கண் மாலே.
85
உரை
   

சுபத்திரை அபிமன்னுவைப் பெறுதல்

பல் நாள் இவர் இப் பதி சேர்ந்த பின், பங்க சாத
மின் ஆளும் மார்பற்கு உயிர் போலும் விசயன் என்பான்
நல் நாளில் நன்மை தரும் ஓரையில், நல்க, வஞ்சி
அன்னாளிடத்தில் அபிமன்னு அவதரித்தான்.
86
உரை
   


திரௌபதியிடம் ஐவர்க்கும் ஐந்து புதல்வர்கள் தோன்றுதல்

வேதம் சிறக்க, மனு நீதி விளங்க, இப் பார்
ஆதங்கம் ஆற, வரும் ஐவரின் ஐவர் மைந்தர்,
பூதங்கள் ஐந்தில் குணம் ஐந்தும் பொலிந்தவாபோல்,
ஓது அங்கியில் உற்பவித்தாள்வயின் உற்பவித்தார்.

87
உரை
   

படைக்கலம் முதலியன பயின்று சிறந்த ஆறு
புதல்வரினும் அபிமன்னு சிறத்தல்

அம் மாதுலனும், பயந்தோரும், அழகில் மிக்க
இம் மா மகாருக்கு இயற்றும் விதி ஏய்ந்த பின்னர்,
தெம் மாறு வின்மை முதலாய செயல்கள் யாவும்
கைம் மாறு கொண்டு நனி கைவருமாறு கண்டார்.
88
உரை
   

அரிதில் பயந்த அறுவோருளும், ஆண்மைதன்னால்
இருதுக்களின்மேல் இள வேனிலின் தோற்றம் ஏய்ப்ப,
மருதுக்கு இடை போம் மதுசூதன் மருகன், 'வெம் போர்
விருதுக்கு ஒருவன் இவன்' என்ன விளங்கினானே.
89
உரை
   

வசந்த காலத்தின் வருகை

உரனால், அழகால், உரையால், மற்று உவமை இல்லா
நர நாரணர்க்கு நலம் கூர்தரு நண்பு போல்வான்,
அரனார் விழியால் அழிந்து அங்கம் அநங்கம் ஆன
மரனாருடன் நண்பு இசைந்தன்று, வசந்த காலம்.
90
உரை