8. வசந்த காலச் சருக்கம்

சூரியன் உத்தராயணத்திற்குத் திரும்புதல்

நனி ஆடல் அனற்கடவுள், யமன், நிருதி, நண்ணு திசை,
                               நாள்கள்தோறும்
முனியாமல் நடந்து இளைத்து, 'முன்னையினும் பரிதாபம்
                                முதிர்ந்தது' என்று,
தனி ஆழித் தனி நெடுந் தேர்த் தனிப் பச்சை நிறப் பரியை,
                                சயில ராசன்
பனியால் அவ் விடாய் தணிப்பான், பனிப்பகைவன் பனி
                                செய்வோன் பக்கம்சேர்ந்தான்.

1
உரை
   


வசந்த காலத்தின் ஆட்சி

கலக்கம் உற, இள வேனில் கலகம் எழுந்திடும் பசுந் தண்
                                காவு தோறும்,
சிலைக்கு அணி நாண் முறுக்குவபோல் தென்றலின் பின்
                                சூழல் அளிகள் சேர ஓட,
உலைக் கனலில் கருங் கொல்லன் சிறு குறட்டால் தகடு
                                புரிந்து ஒதுக்கி, மாரன்
கொலைக் கணைகள் சமைப்பனபோல், குயில் அலகால்
                                பல்லவங்கள் கோதுமாலோ!

2
உரை
   


செங் காவி, செங் கமலம், சேதாம்பல், தடம்தொறும் முத் தீக்களாக,
பைங் காவின் நெடுஞ் சினைக் கை மலர் நறுந் தேன்
                                ஆகுதிகள் பலவும் வீழ்க்க,
உங்கார மதுகரங்கள் ஓங்காரச் சுருதி எடுத்து ஓத, வேள்வி
வெங் காமன் இரதியுடன் புரிந்து, தன தென்றல் அம் தேர்மேற்
                                கொண்டானே!

3
உரை
   


கண்ணனும் அருச்சுனனும் தம் தேவியருடன், நகரத்தவரோடு
கூட, வேனில் விழாக் கொண்டாட ஒரு சோலையை அடைதல்

தேவியரும் திருமாலும், செழு மலர்த் தார்த் தனஞ்சயனும்
                                தேவிமாரும்,
மேவி, அனந்தரம், வேனில் விழவு அயர்வான் முரசு
                                அறைந்து, வீதிதோறும்,
ஓவியமும் உயிர்ப்பு எய்த, உபேந்திரனும் இந்திரனும்
                                உவமை சால,
பூஇனமும் சுரும்பும் எனப் புரம் முழுதும் புறப்பட,
                                வண் பொங்கர் சேர்ந்தார்.

4
உரை
   


சோலையில் மகளிர் பூக் கொய்து விளையாடுதல்

கொண்டல் எழ, மின் நுடங்க, கொடுஞ் சாபம் வளைவுற,
                                செங் கோபம் தோன்ற,
வண் தளவும் நறுங் குமிழும் வண்டு அணி காந்தளும்
                                மலர, மலைகள்தோறும்
தண் தரள அருவி விழ, தையலார் வடிவுதொறும்-சாயல்
                                தோகை-
கண்டு, 'நமக்கு இளவேனில் கார்காலம் ஆனது' எனக்
                                களிக்குமாலோ!

5
உரை
   


பாராமல், நகையாமல், பாடாமல், ஆடாமல், பாதம் செங்கை
சேராமல், முக ராகம் வழங்காமல், இகழாமல்,
                                செவ் வாய் ஊறல்
நேராமல், நிழல் அதனை நிகழ்த்தாமல், மலர்ந்து, அழகு
                                நிறைந்த நீழல்
ஆராமம்தொறும், தங்கள் அவயவம் போல்வன கொய்தார்-
                                அணங்கு போல்வார்.

6
உரை
   


மாற்றாத பனிநீரால், மான்மத குங்கும மலய வாசச் சந்தின்
சேற்றால், அச் சோலை எலாம், செங்கழுநீர்த் தடம் போன்ற;
                                சிந்தைத் தாபம்
ஆற்றாத காதலருக்கு அமுதான இளநீரால், அடர்ந்த பூகத்
தாற்றால், அம் மரகதச் செந் துகிரால், அப் பொழில்போன்ற,
                                தடங்கள் எல்லாம்.

7
உரை
   


அருச்சுனன் முதலியோர் தேவிமாரோடு நீர் விளையாடுதல்

மெய் கொண்ட மொழி விசயன் மெய்யின் எழில் இமையாமல்
                                மேன்மேல் நோக்கும்
மை கொண்ட குழல் ஒருத்தி, மற்று அவன் செங் கையில் சிவிறி
                                மழை கண்டு அஞ்சிப்
பொய்கொண்டு வகுத்தனைய மருங்கு அசைய, தனபாரம் புளகம் ஏற,
கைகொண்டு முகம் புதைத்து, தன் விரல் சாளரங்களிலே
                                கண்கள் வைத்தாள்.

8
உரை
   


நங்கை அங்கு ஓர் கொடிஅனையாள் வதன மதி சல
                                மதியாய் நடுங்குமாறு
பங்குனன் தன் திருச் செங் கைப் பங்கயத்தின் சிவிறியினால்,
                                பரிவு கூர,
குங்குமம் கொள் புனல் விடவும், இமையாமல், புனல்வழியே
                                கூர்ந்த பார்வை
செங் கலங்கல் புதுப் புனலுக்கு எதிர் ஓடி விளையாடும்
                                சேல்கள் போலும்!

9
உரை
   


நறை கமழ் தண் துழாய் மாலை நாரணற்கு நண்பான
                                நரனார் செங் கை,
உறையும் மலர்ச் செந்திருவும் ஒவ்வாத பொற்புடையாள்
                                ஒரு பொற்பாவை
நெறி தரு பைங் குழலின்மிசை வீசிய நீர், பெருக்கு ஆற்றின்
                                நிறை நீர் வற்றி,
அறல் படு நுண் கரு மணலின் அரித்து ஒழுகும் சின்னீரோடு
                                அமைந்தது அம்மா.

10
உரை
   

விளிந்து மயில் புறங்கொடுக்கும் மெல்லியலாள் ஒருத்தி,
                                நெடு வேயும் பாகும்
சுளிந்து வரும் கட களிற்றுச் சுவேதவாகனன் கடகத்
                                தோளின் மீது,
தெளிந்த நறுங் கத்தூரிச் சேறு படு சிவிறியின் நீர்
                                சிந்தும் தோற்றம்,
களிந்த கிரிமிசைக் கடவுள்-காளிந்தி பரந்ததெனக்
                                கவினும் மாதோ!
11
உரை
   

பிறை அனைய திலக நுதல் பேதை இளம் பிடி ஒருத்தி,
                                பிடித்த செங்கை
நறை கமழும் பொலஞ் சிவிறி நண்ணிய செஞ் சிந்தூர
                                நாரம் வீச,
அறை கழல் வெஞ் சிலைத் தடக் கை அருச்சுனன்தன் திரு
                                முகத்தில் ஆனபோது,
நிறைமதிமேல் வாள் இரவி கரங்கள் நிரைத்து ஓடுவபோல்
                                நிறத்த மாதோ!
12
உரை
   

கண்ணனும் அருச்சுனனும் மனைக்கு மீளுதல்

பாண்டு மதலையும் காதல் பாவையரும், துழாயோனும்
                                பாவைமாரும்
ஈண்டு பெருஞ் சனத்துடனே இவ்வண்ணம் இடம்தோறும்
                                இனிதின் ஆடி,
ஆண்டு, வரி சிலை மதனும் அவன் படையும் சேவிப்ப,
                                அழகு கூர,
மீண்டு, தம மனைதோறும் நிரை நிரை வாள் விளக்கு
                                ஏந்த மேவினாரே.

13
உரை
   


இளவேனில் அகல, முதுவேனில் தோன்றுதல்

நெடு வேனில் புகுதர மேல், இளவேனில் அகன்றதற்பின்,
                                நிகர் இல் கஞ்சப்
படு ஏய் வெள் வளையமும், தண் பட்டு ஆலவட்டமும்,
                                செம்படீரச் சேறும்,
உடு ஏய் நித்திலத் தொடையும், ஊடு உறு மண்டபத் தடமும்,
                                ஒழுகி நீண்ட
வடு ஏய் கண் மடந்தையர்க்கும் மகிழ்நருக்கும் அமைந்தன,
                                வான்மனைகள் எல்லாம்.

14
உரை
   


மடவாரைக் கூடிய கணவரும், கணவரைப்
பிரிந்த மடவாரும் உற்ற நிலை

திலக நுதல் குறு வியர், தம் செவிப் பூவில்
                           அளிஇனத்தின் சிறகர்க் காற்றால்
புலர, மது நுகர் மாதர் புன்முறுவல் இதழ் ஊறல்
                                புதிதின் மாந்தி,
இலகு பரிமள புளக ஈர முலைத் தடம் மூழ்கி,
                                இரதி கேள்வன்
கலகமிடும் பரிதாபம் அகற்றினார்-இனிமையுடன்
                                கலந்த கேள்வர்.

15
உரை
   

மார வசந்தனை அகன்று, வயங்குறு வெங் கோடையினால்
                                மறுகி, ஆற்றாது,
ஆர் அமளி மது மலரில், ஆர வடங்களில், பனிநீர்
                                ஆரச் சேற்றில்
ஈர நெடுங் குழல் இசையில், இயங்கிய சாமரக் காற்றில்,
                                இள நிலாவில்,
பேர் அழலும் புகுந்தது எனப் பிணங்கினார்-தம்
                                கேள்வர்ப் பிரிந்த மாதர்.
16
உரை
   


காற்றும் நீரும் கோடையில் வறட்சியுற்ற நிலை

கோடை வெயில் சுடச் சுட மெய் கொளுந்தி இறந்தன
                                போல, கொண்டல், கோடை,
வாடை, சிறு தென்றல், எனும் மாருதங்கள் எம் மருங்கும்
                                வழக்கம் இன்றி,
ஆடையில், வெண்சாமரத்தில், ஆலவட்டத்தினில், உயிர்ப்பில்,
                                அழகு ஆர் நெற்றி
ஓடை முக மத கயத்தின் தழை செவியில், பல் இறகில்,
                                ஒளித்தமாதோ.

17
உரை
   


தாழி நறுங் குவளை அம் தார்த் தருமன் மகன் அருட்
                                புனலும், தரங்க வேலை
ஊழி நெடும் பெரும் புனலும், உடலில் உறு வெயர்ப்
                                புனலும், ஊறி ஊறிப்
பாழிதொறும் இறைக்கின்ற பைம் புனலும், அல்லது,
                                வெம் பருவம்தன்னால்
பூழி படு கமர் வாய நானிலத்துப் புகலுதற்கு ஓர்
                                புனலும் உண்டோ?

18
உரை
   


கண்ணனும் அருச்சுனனும் உடன் இருத்தல்

நீகாரம் மழை பொழிய, நித்தில வெண் குடை நிழற்ற,
                                நீல வாள்-கண்,
பாகு ஆரும் மொழி, மடவார் மணிக் கவரி இரு
                                மருங்கும் பயில வீச,
கார்காலம் புகுந்து செழுங் காள முகில் இரண்டு
                                ஒருபால் கலந்ததென்ன
ஆகாரம் அழகு எறிப்ப, இருவரும் ஆங்கு உடன் இருந்தார்,
                                ஆவி போல்வார்.

19
உரை