21. கீசகன் வதைச் சருக்கம்

கீசகன் விராடன் தேவியான தன் தமக்கை
சுதேட்டிணையைக் காண வருதல்

அன்ன நாளினில் மன்னவன் தேவியாம் அன்ன மென் நடை,
                          ஆர் அமுது அன்ன சொல்,
சொன்ன சாயல், சுதேட்டிணைதன் திருத் துணைவர் நூற்று
                          ஒருநால்வரில், தோற்றமும்,
மன்னும் ஆண்மையும், தேசும், சிறந்துளான்; வரூதினிக்குத்
                          தலைவன்; முன் தோன்றிய
கன்னல் வேள் அனையான்;-தன் துணைவியைக் காண
                          வந்தனன்,-காண்தகு மேனியான்.

1
உரை
   


சுதேட்டிணையை வணங்கி மீள்கையில், கீசகன்
விரதசாரிணியைக் கண்டு, காமுகனாகி
அவளிடம் பலபல கூறுதல்

தம்பி, அப் பெருந் தையலை நூபுரத் தாளின் வீழ்ந்து,
                          தகவுடன் மீடலும்,
அம்பரத்தவர் கற்பகக் கா நிகர், அந்த அந்தப்புரத்து,
                          அகன் காவினில்,
வெம் புகர்க் களிற்று ஐவர்தம் தேவியாம் விரதசாரிணி,
                          மென் மலர் கொய்து, இளங்
கொம்பொடு ஒத்து, இடை சோரப் பணைத்த பொற்
             கொங்கையாள், இவன் முன்னர்க் குறுகினாள்.

2
உரை
   


இயற்கை ஆன கவினுடைப் பாவையை இறைவன் தேவிக்கு
                          இளையவன் கண்டனன்;
செயற்கை ஆம் நலம் கண்டிலன்; 'யார்கொல் இத் தெரிவை?'
                     என்று தன் சிந்தையின் நோக்கினான்;
மயற்கையால் அழிந்தான், ஐம்புலன்களும்; வழக்கு ஒழிந்து
                          மதி மருண்டான்; இணைக்
கயல் கையான், அக் கயல்தடங் கண்ணியைக் கண்ட
                           காட்சியில், காமுகன் ஆகியே,

3
உரை
   


அருகு நின்ற மகளிரை, 'மற்று இவள் ஆர்கொல்?' என்ன
                           அறியான் வினவினான்;
வரி நெடுங் கண் மகளிரும், 'மாதரார், வண்ண மா மகள்'
                           என்றனர்; மையலால்,
உருகுகின்ற அக் காளையும், நாணம் உற்று ஒடுங்கி நின்ற
                           உயர் தவப் பாவைதன்
இரு பதங்களில் வீழ்ந்து, 'எனது ஆவி நீ!' என்று மீளவும்
                           எத்தனை கூறினான்!

4
உரை
   


அவள் கீசகனைப் பழித்தும் பயமுறுத்தியும் அறிவுரை கூறுதல்

கூறுகின்ற மொழிகளுக்கு உத்தரம் கொடாது, நின்றது ஒர்
                           கொம்பரின்வாய் மறைந்து,
'ஏறுகின்ற பழிகளும், பாவமும், இம்மைதானும், மறுமையும்,
                           பார்த்திலை;
மாறுகின்றிலை, சொல்லத் தகாத புன் மாற்றம், இன்னமும்;
                           மன்னுயிர் யாவும் வந்து,
ஆறுகின்ற குடை நிழல் வேந்தனுக்கு அழிவு செய்தி;
                           அறிவிலி போலும், நீ!

5
உரை
   


'மார சாயகத்தால் உயிர் மாளினும், வசை இலாத
                           மரபின் வந்தோர், பிறர்
தாரம் ஆனவர்தம் முகம் பார்ப்பரோ? தக்கவர்க்குத்
                           தகவு இவையே கொலாம்?
சோரன் ஆதலின் சொற்றாய்; இனித் தவிர்; சுரேசர் ஐவர்தம்
                           காவல் என் தோள் இணை;
வீர! போ; என் அருகு உறில், ஆவி போம், விழித்து இமைக்கும்
                           முன்!' என்று விளம்பினாள்.

6
உரை
   


கீசகன் அவள் காலில் விழுந்து வேண்ட, அவள்
சுதேட்டிணையிடம் சேர்ந்து நிகழ்ந்தன கூறுதல

பேதை இப்படிக் கூறவும், காதல் நோய் பெருகு சிந்தையன்
                           பின்னையும், முன்பு உறா,
'ஆதரத்து எனது ஆர் உயிர் போகினும் அமையும்' என்று,
                           அவள் அம் புயச் சீறடி-
மீது நெற்றி படத் தொழுதான்; வடி வேற்கணாளும்
                           வெகுண்டு, விரைவினில்,
தூதுளங்கனி வாய், முத்த வாள் நகை, சுதேட்டிணைப்
                           பெயராளுழைத் துன்னினாள்.

7
உரை
   


நடுங்கும் மெய்யினள், பேதுறும் நெஞ்சினள், நாணும் நீர்மையள்,
                           நாவினுள் நீர் இலாது,
ஒடுங்கும் மென்மையள், தன்மையினால் புனல் உகுத்த
                     கண்ணினள், ஓவியம் போன்று உளாள்,-
'கடுங் கண் யானைப் பிடர் இருந்து இந் நிலம் காக்கும்
                     வெண்குடைக் காவலன் தேவி! கேள்:-
தொடுங் கழல் கழலான் நின் துணைவன் எற் சுட்டி
                           ஆயிரம் சொல்லல சொல்லினான்;

8
உரை
   


'விரதசாரிணி என்பதும், தேவர் என் மெய் புரக்கும்
                           விரதமும், இங்கு உனக்கு
இரதம் ஆக வர மனைக்கு எய்தும்முன், இயம்பினேன்;
                           எனை யாவரும் இச்சியார்;
சுரதம் ஆடும் மகளிரைத் தேடி, நின் துணைவன்
                           வேட்கையும், சோகமும், மாற்றிடு;
சரதம் ஆக நினையாது ஒழி; நெறி தப்பில், ஆர் உயிர்
                           தப்பும்!' என்று ஓதினாள்.

9
உரை
   


சுதேட்டிணை திரௌபதியைத் தேற்றி, தன் தம்பியைத்
தன் மனைக்கு வாராவகை கடிந்து கூறுதல

கேகயங்கள் எனும் எழில் சாயலாள் கிளந்த வாசகம்
                           கேட்டு, இடிஏறு உறும்
நாகம் என்ன நடுங்கி, அப் பூங்கொடி நயன நீர் துடைத்து,
                           'உற்றது நன்று!' எனா,
வேகமுற்ற மனத்தொடு தம்பியை மிக முனிந்து, தன் வீடு
               அணுகாவகை, 'ஏகுக!' என்றனள்;என்றலும்,
சோகமோடு ஏகினான், அறம் பாவம் என்று எண்ணலான்.

10
உரை
   


கீசகனது விரகதாபமும், அது குறித்துச்
சுதேட்டிணைக்குச் சேடியர் கூறுதலும்

சென்று தன் மனை புக்கபின், மன்மதன் செருவில் நொந்து
                          அழி சிந்தையன் ஆய் மலர்
மன்றல் மெல் அணை வீழும்; 'வெம் பாலையால் வகுத்ததோ,
                           இம் மலர் அணைதான்!' எனும்;
தென்றல்தன்னையும் 'தீ' எனும்; திங்களைத் 'தினகரன்கொல்?'
                           என்று ஏங்கும்; செயல் அழிந்து,
அன்று அவன் கருங் கங்குலில் பட்ட பாடு அவனை
                           அல்லதை யார் பாடுவார்களே!

11
உரை
   


பாவிதன் மனைச் சேடியர் ஆனவர் பலரும் வந்து,
                           படியுடை மன்னவன்
தேவிதன்னை வணங்கி, அக் காமுகன் சிந்தை நோயும்
                           செயலும் புகன்று, 'எழில்
காவி அம் கண்ணவளைத் தனது கண் காணினும்
                           தணியும், கடுங் காதலும்;
ஆவியும் பெறும்; மெய் அணுகான்; நினது ஆணை'
                           என்றனர், ஆதரம் ஆற்றுவார்.

12
உரை
   


கீசகன் நிலைக்கு வருந்தி, மலர்மாலையை அவனுக்கு
அளித்து மீளுமாறு விரதசாரிணியைச் சுதேட்டிணை
வேண்ட, அவள் அங்ஙனமேகொண்டு செல்லுதல்

'பாசகாரிகள் ஆம் ஐம் புலன்களும் பரிவு கூரப் பரிந்து,
                           உயர்ந்தோர் புகல்
வாசகாதிகள் கற்றும் தெளிந்திலை; மதன வேதத்தின்
                           மார்க்கமும் பார்த்திலை;
நாச காலம் வரும்பொழுது, ஆண்மையும், ஞானமும்,
                           கெடுமோ? நறுந் தார் முடிக்
கீசகா!' என்று அழுதனள்-அம் மொழி கேட்ட போது,
                           அக் கிளி நிகர் மென் சொலாள்.

13
உரை
   


ஆகுலத்தொடு நெஞ்சம் தளர்ந்து தன் அருகில்
                           நின்ற அருந்ததியே நிகர்
மீ குலக்கொடிதன் இரு தாள்மிசை வீழ்ந்து, 'நின்தன்
                           விழி அருள் உண்டு எனில்,
கோ குலத்தில் உயர்ந்த என் காதலன் கோலும் நீதியும்
                           குன்றா; எனது உரை
நீ குலைக்கில், அனைத்தும் இன்றே கெடும்; நேரிழாய்!
                                இது நெஞ்சுறக் கேட்டியால்:

14
உரை
   


'இளையன் ஆதலின், என் இளையோன் மனத்து எண்ணம்
                       இன்றி இகல் மதன் அம்பினால்
அளையும் மேனியன் ஆகி, நின் மெய்ந் நலம் ஆதரித்து,
                       இன்று அடாது செய் நீர்மையால்,
விளையுமே கொடு வெம் பழி; இப் பழி விளைவுறாமல்,
                       விரகின் அக் காதல் நோய்
களையும் ஆறு எண்ணின், ஆங்கு அவன் ஆவியும் காத்து,
                       நின் பெருங் கற்பையும் காக்குமால்.

15
உரை
   


'எண்ணுகின்றனன் யான் ஒன்று; நீ மறாது, எனது வாய்மை
                         எதிர்கொண்டு, இளையவன்
நண்ணும் இல்லிடைச் சென்று, இந்த நாள்மலர் நறை கொள்
                         மாலையை நல்கினை மீளுவாய்;
கண்ணின் நின் உருக் காணினும், மற்று அவன் கன்னம்
                         இன்புறக் கட்டுரை கேட்பினும்,
வண்ண மா மகளே! உயிர் நிற்கும்; நீ வாழி! ஏகி
                         வருக!' என வாழ்த்தினாள்.

16
உரை
   


மொழி அலாத மொழியைச் சுதேட்டிணை மொழிந்த போது,
                           முதுக்குறைவு உள்ள அப்
பழி இலா மொழிப் பாவை, 'வெம் பாதகம் பகர்தி; என்னை
                           வெறாது ஒழி, பாவை! நீ;
அழிவு இலாத பெருங் கிளைக்கு அல்லல் கூர் அழிவு
                           வந்தது அறிந்திலை' என்று, தன்
விழிகள் ஆரம் சொரிய, கொடுத்த பூ வேரி மாலைகொண்டு,
                           ஏகினள், மின் அனாள்.

17
உரை
   


ஆண்டு வந்த துருபதன் மா மகள், 'அடைந்த நாள்
                           தொட்டு, அமரர் ஒர் ஐவரே
தீண்டல் அன்றி, ஒருவரும் என்னை மெய் தீண்டுவார்
                           இலை' என்று என்று செப்பவும்,
நீண்ட செங் கைத் தரணிபன் காதலி நினைவு இலாமல்,
                           'நெறி அற்ற தம்பிபால்,
மீண்டும் அவ் வழி ஏகு!' என்று உரைப்பதே!-விதியை
                           யாவர் விலக்க வல்லார்களே?

18
உரை
   


உதய காலத்தில் விரதசாரிணி கீசகன் மனைபுகுதலும்,
அவன் தகாத மொழி சொல்ல, அவள் சூரியனை
வணங்கித் தன் துன்பம் போக்க வேண்டுதலும்

மாது அவள் கீசகன் மனையில் ஏக, அல்
போது அகலவும், அவன் புலம்பல் போகவும்,
பாதம் இல் வன் திறல் பாகன் ஊர்ந்த தேர்
ஆதபன் உதய வெற்பு அணுகினான்அரோ!

19
உரை
   


தருக்கிய காமுகன் தகாது சொல்லவே,
உருக் கிளர் சாயலோடு உளம் அழிந்து போய்,
முருக்கு இதழ் வல்லி, தன் முளரிச் செங் கையால்
அருக்கனை இறைஞ்சினாள், அழிவு இல் கற்பினாள்.

20
உரை
   


'துரங்கம் ஓர் ஏழுடன் சோதி கூர் மணிக்
கரங்கள் ஓர் ஆயிரம் கவினத் தோன்றினாய்!
வரம் கொள்வேன், நின்னை யான்; "மரபு பொன்றும்" என்று
இரங்குறும் என் அகத்து இடரை நீக்குவாய்!'

21
உரை
   


என்றுகொண்டு, என்றினைப் பணிந்து, மன்றலால்
கன்றிய கீசகக் கலகன் முன்பு போய்,
மன்றல் அம் தொடையலும் வழங்கி, மெய் வெரீஇ,
நின்றனளால், நிலை நின்ற கற்பினாள்.

22
உரை
   


கீசகன் காம நோய் வெதுப்ப, அமளியில்
துன்புற்றிருந்த நிலை

காமரு குளிரி, பைங் கதலி மெல் அடை,
தாமரை வளையம், வண் தாது அறா மலர்,
ஆம் முறை அனைத்தும் மெல் அமளிமேல் விரித்து,
ஈம வல் எரியின்மேல் என்ன, வைகினான்.

23
உரை
   


சாந்தொடு தண் பனிநீரும் தாமமும்
ஏந்திய கரத்தினர், ஏழைமார் பலர்,
காந்திய கனல்மிசை காட்டும் நெய் என,
வேந்தனது உடலகம் வெதும்ப, வீசினார்.

24
உரை
   


விரதசாரிணியைக் கண்டு கீசகன், 'வருக!' என
அழைத்து, அவளைப் பற்றுதற்குத் தொடர, அவள் ஓடி
வந்து அரசவையில் வீழ்தல்

தாக்கிய காம நோய் தழைக்க, அன்புற
நோக்கிய திசை எலாம் காணும் நோக்கினான்,
'பாக்கியம் நெஞ்சுறப் பலித்தது!' என்னவே,
நீக்கிய மடந்தை முன் நிற்றல் கண்டுளான்.

25
உரை
   


'வந்தனள், என்னுடை மா தவப் பயன்!
வந்தனள், என்னுடை வழிபடும் தெய்வம்!
வந்தனள், என்னுடை ஆவி! வாழ்வுற,
வந்தனள், என்னுடை வண்ண மங்கையே!

26
உரை
   


'வருக நீ, அருகுற! மதுர வாசகம்
தருக, நீ இரு செவி தழைக்க! உள்ளம் நின்று
உருக, நீ தழுவுக உடலம்! தேம் உறப்
பருக நீ வழங்குக, பவள வாய்!' எனா,

27
உரை
   


கிடந்தவன் எழுந்து, ஒரு கேடு வந்துறா
மடந்தையைத் தழுவுவான் வந்து சார்தலும்,
விடம் திகழ் விழியினாள் ஓட, வேட்கையால்
தொடர்ந்தனன், அறிவு இலாச் சோரன்தானுமே.

28
உரை
   


ஓடிய மடக்கொடி உலகு காவலன்
சூடிய மணி முடி துலங்கு கோயிலின்,
வாடிய கொடி என, வந்து வீழ்ந்தனள்-
நீடிய வேத்தவை நிருபர் காணவே.

29
உரை
   


அங்கும் அவன் வந்து அவள் கையைத் தீண்ட
நினைக்கவே, சூரியன் ஏவலால் ஒரு கிங்கரன்
அவனைப் புறத்தே எடுத்து வீசுதல்

தொழும் தகை மனுகுலத் தோன்றல் கண் எதிர்
விழுந்து அழும் தெரிவையை, வேட்கை நோயினால்
அழுந்திய காமுகன், அச்சம் இன்றியே,
செழுந் துணைக் கைத்தலம் தீண்ட உன்னினான்.

30
உரை
   


உன்னும் அவ் அளவையின், உருளை ஒன்றுடைப்
பொன் நெடுந் தேரவன் புகல, மற்றொரு
வல் நெடுங் கிங்கரன், சூறை மாருதம்
என்ன, வந்து அடுத்து, அயல் எடுத்து வீசினான்.

31
உரை
   


விராடன் கீசகன் செயலைக் கண்டியாது வாளா இருத்தல

கண்டனன் இருந்த மண் காவல் வேந்தனும்,
எண் தகு நெறி முறை இடறு கீசகன்
திண் திறல் வலிமையும், செயலும், சிந்தையில்
கொண்டு, ஒரு வாய்மையும் கூற அஞ்சினான்.

32
உரை
   


பலாயனன் ஒரு மராமரத்தைப் பிடுங்குதற்கு வெகுண்டு
நோக்க, கங்கன் குறிப்பினால் அதனைத் தடுத்தல்

அடு தொழில் பலாயனன் அழுத மின்னையும்
கடுமையில் பின்தொடர் காளைதன்னையும்,
படர் உறக் கண்டு, தன் பாங்கர் நின்றது ஓர்
விடவியைப் பிடுங்குவான், வெகுண்டு, நோக்கினான்.

33
உரை
   


கனிட்டனது எண்ணம் அக் கங்கன் ஆகிய
முனித்தகை உணர்ந்து, அவன் முகத்தை நோக்கி, 'இத்
தனிப் பெரு மராமரம் தழல் கொளுந்திடாது;
உனக்கு அடும் இந்தனம் அன்று' என்று ஓதினான்.

34
உரை
   


விரதசாரிணி விராடனிடம் முறையிடுதல்

' "தீண்டுதல் தகாது" என, செம்மை ஒன்று இலான்
வேண்டிய செய்வது வேத்து நீதியோ?
ஆண்தகை! இதற்கு நீ, "அல்ல, ஆம்" எனா,
ஈண்டு ஒரு மொழி கொடாது இருப்பது என்கொலோ?

35
உரை
   


'அன்புடைத் தேவிதன் அருகு, தோழியாய்,
நின் பெருங் கோயிலில் நீடு வைகினேன்;
என் பெரு வினையினால், இன்று, உன் மைத்துனன்
தன் புய வலியினால் தழுவ உன்னினான்.

36
உரை
   


'பெருந் தகை அன்று இது; பேசல் அன்றி, நீ
இருந்தனை; உனக்கு அரசு எங்ஙன் செல்வது?
வருந்தினர் வருத்தம் நீ மாற்றலாய் எனில்,
அருந் திறல் அரச! நின் ஆணை பொன்றுமே!'

37
உரை
   


புழுதி படிந்த கோலத்துடன் கண்ணீர் பாய,
சுதேட்டிணையை அடுத்து, விரதசாரிணி வருந்துதல்

என, இவள் புலம்பி, மெய் ஏய்ந்த பூழியும்,
கனதனம் நனைத்திடும் கண்ணின் நீருமாய்,
மனம் மிக மறுகிட, மன்னன் தேவிபால்
இனைவுடன் எய்தி வீழ்ந்து, ஏங்கி, விம்மினாள்.

38
உரை
   


கங்கன் விராடனை இடித்துரைத்து, அறிவுரை பகர்தல்

'பூதலம் ஆண்மையால் புரக்கும் மன்னவர்
தீ தொழில் புரிஞரைத் தெண்டியார்எனின்,
நீதியும் செல்வமும் நிலை பெறும்கொலோ'
"ஏதிலர், தமர்" என இரண்டு பார்ப்பரோ?

39
உரை
   


'யாரும் இல் ஒருத்தி நின் இல்லில் வைகினால்,
ஆர்வம் உற்று அவள்வயின் அன்பு கூர்வது,
வீரமோ' தருமமோ? விருப்பமோ? இவை
பூரியர் அலாதவர் புரிதல் போதுமோ?

40
உரை
   


'கீசகன்ஆயினும் கேடு செய்தனன்;
ஆசை நோய் மன்பதை அனைத்தினுக்கும் உண்டு;
ஏசு இது நினக்கும்' என்று, இருந்த வேந்தொடும்
வாசகம் பல சொனான், மறை வலானுமே.

41
உரை
   


விராடன் கருத்து அழிந்து தன் மனை புக, பலாயனன்
மடைப்பள்ளியை அடைதல்

முன்னுற முனிவரன் மொழிந்த வாய்மையும்,
இன்னலோடு அழுது அவள் இசைத்த வாய்மையும்,
கன்னம் ஊடுறச் சுட, கருத்து அழிந்து, போய்,
மன்னனும், தன் திரு மனையில் எய்தினான்.

42
உரை
   


கண் நெருப்பு எழ, இரு கைந் நெருப்பு எழ,
உள் நெருப்பு எழ, தனது உடல் நெருப்பு எழ,
மண் நெருப்பு எழ, வரு மடை இல் எய்தினான்-
திண் நெருப்பினும் மிகு சினம் கொள் வீமனே.

43
உரை
   


சூரியன் மறைதலும், பாண்டவர் முதலியோரின்
மனக்கலக்கமும்

பன்னிருவரினும் நாள்தொறும் கனக பருப்பதம்
                           வலம் வரும் தேரோன்
மின் நிகர் மருங்குல் விரதசாரிணிபால் விளைவுறு
                           துயரமது உணர்ந்து,
தன்ஒரு மரபில் தோன்றலை வெறுத்து, தனிப்
                           பெருந் தேர் குட பொருப்பின்
சென்னியின் உருள, உருட்டி, அத் திசையும் சிவப்புற,
                           தானும் மெய் சிவந்தான்.

44
உரை
   


குந்திதன் புதல்வர் ஐவரும் சோகம் முதிர்ந்திட,
                           இதயமும் கொதித்தார்;
வெந் திறல் வடி வேல் விராடனும், தனது வேத்தியல்
                           பொன்றலின், வெறுத்தான்;
செந் திரு அனைய சுதேட்டிணை என்னும் தெரிவையும்
                           தெருமரல் உழந்தாள்;
அந்த மா நகரில் அனைவரும் நைந்தார்; ஆர்கொலோ,
                           ஆகுலம் உறாதார்?

45
உரை
   


விரதசாரிணி பலாயனனை அடுத்துப் பகை முடிக்க வேண்ட,
அவன், 'இன்று இரவே அவனை முடிப்பேன்!' எனல்

அனைவரும் துயின்று, கங்குலும் பானாள் ஆனபின்,
                           அழுத கண்ணீரோடு
இனைவரு தையல், கண்கள் நீர் மல்க, இறைமகன்
                           மடைப்பளி எய்தி,
'நினை வரு செற்றம் முடித்திட வல்லார் நீ அலது
                           இல்லை; இக் கங்குல்,
கனைவரு கழலாய்! புரிவது யாது?' என்றாள்; காளையும்
                           கனன்று, இவை சொல்வான்:

46
உரை
   


'பொறை எனப்படுவது ஆடவர்தமக்குப் பூண் எனப்
                           புகலினும், பொருந்தார்
முறை அறப் புரிந்தால், அக் கணத்து அவர்தம் முடித்தலை
                           துணிப்பதே முழுப் பூண்;
நறை மலர்க் குழலார்தமக்கு மெய் அகலா நாணமே
                           நலம் செய் பூண் எனினும்,
நிறையுடைப் பெரும் பூண், அமளிவாய் நாணம் நிகழ்வுறா
                           நிகழ்ச்சியே அன்றோ?

47
உரை
   


'அரசவைப் புறத்தில் சௌபலன் சூதில் அழிந்த
                           நாளினும், எமை அடக்கி,
முரச வெங் கொடியோன் தேசு அழித்தனனால்; இன்றும்
                     அம் முறைமையே மொழிந்தான்;
புரசை வெங் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர் உகிர்
                           மடங்கல்போல், இன்னே,
துரிசு அறப் பொருது, கீசகன் உடலம் துணிப்பன், யான்,
                           துணைவரோடு' என்றான்.

48
உரை
   


விரதசாரிணி தருமன் தடுத்ததற்குக் காரணம் கூறி,
இரண்டொரு நாள் கழிந்தபின் கீசகனை இரவில்
கொல்லலாம் எனல்

மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு, அந்த மருச்சகன்
                           மடக்கொடி உரைப்பாள்:
'உரைத்த நாள் எல்லாம் சில் பகல் ஒழிய ஒழிந்தன,
                           ஒழிவு இலா உரவோய்!
"அருத்தியோடு ஒருவர் அறிவுறாவண்ணம் இருந்த
                           சீர் அழிவுறும்" என்னும்
கருத்து நின் தம்முற்கு உண்மையின் தடுத்தான், காலமும்
                           தேயமும் உணர்வான்.

49
உரை
   


'பாயும் வெஞ் சிறகர்க் கலுழன்முன் பட்ட பாந்தள்போல்,
                           கீசகன் பதைப்ப,
காயுமது இந்தக் கங்குலில் கடன் அன்று; ஒரு பகல்
                           இரு பகல் கழிந்தால்,
'நேயமோடு இன்று வந்து கந்தருவர் நேர்பட மலைந்தனர்"
                           என்னும்
தூய சொல் விளையப் பொருவதே உறுதி' என்ன,
                           அத் திரௌபதி சொன்னாள்.

50
உரை
   


'ஐ' என இவனும், தன்னை முன் பயந்த ஆர் அழல்
                           அனைய கற்புடைய
தையல்தன் மொழியைத் தானும் உட்கொண்டு, தகு
                           செயல் விரகுடன் சாற்றி,
வெய்ய தன் சினமும், தன் புய வலிபோல்
                           மேலுற மேலுற வளர,
நெய் உறு கனலின் பொங்கி, அக் கங்குல் நீந்தினான்,
                           வேந்தனுக்கு இளையோன்.

51
உரை
   


மற்றைநாள் விரதசாரிணியைக் கீசகன் கண்டு,
அவளது கருத்தை உசாவுதல்

அற்றை நாள் இரவில் தன் பரிதாபம் ஆறிய
                           அறிவுடைக் கொடியும்,
மற்றை நாள், அந்தச் சுதேட்டிணை கோயில் மன்னவன்
                           மைத்துனன் வரலும்,
கற்றை வார் குழலில் பூழியும், கண்ணீர் கலந்த வான்
                    கொங்கையும், சுமந்து, ஆங்கு,
ஒற்றை மென் கொடிபோல் நின்றனள்; அவனும், உளம்
                    கவர் அவள் நிலை கண்டான்.

52
உரை
   


கலைமதி கண்ட காந்தக்கல் என உருகிச் சிந்தை,
தலைமகன் அல்லான், வஞ்சம் தனக்கு ஒரு
                           வடிவம் ஆனோன்,
நிலை பெறு கற்பினாளை நேர்உற நோக்கி, பின்னும்,
உலைவு உறு காதல் மிஞ்ச, உரன் அழிந்து,
                           உரைக்கலுற்றான்:

53
உரை
   


'மன்னவன் வாழ்வும், இந்த வள நகர் வாழ்வும், எல்லாம்
என்னது வலி கொண்டு என்பது, இன்று, உனக்கு
                           ஏற்பக் கண்டாய்;
உன்னை மெய் காக்கும் தேவர் உறுதியும், உரனும், கண்டாய்;
என்னைகொல், இனி உன் எண்?' என்று, இரு
                           கரம் கூப்பினானே.

54
உரை
   


விரதசாரிணி தான் ஒருப்பட்டமை கூறி,
சந்தித்தற்கு உரிய குறியிடமும் தெரிவித்தல்

'கருத்து இனி முடியும்' என்று, கடுங் கனல்
                           முகத்தில் தோன்றும்
திருத் தகு பாவை, அந்தத் தீயவன்தன்னை நோக்கி,
'வருத்தம் நீ உறவும் முன்னர் மறுத்தனன்; மரபினாலும்,
சரித்திரத்தாலும், கொண்ட தவ விரதத்தினாலும்.

55
உரை
   


'கந்தருவரும் மற்று என்னைக் காப்பது மறந்தார்போலும்!
இந்திரன் எனினும் மாதர் எளிமையின் ஒருப்பட்டு எய்தார்;
புந்தியில் ஒன்றும் கொள்ளேல்; ஆர் இருள்
                           பொழுதில், இன்று,
சந்து அணி குவவுத் தோளாய்! தனித்து நீ வருதி!' என்றாள்.

56
உரை
   


அக் கொடி உரைத்த மாற்றம் அவன் செவிக்கு
                           அமுதம் ஆகிப்
புக்கு, உயிர் நிறுத்தி, மெய்யும் புளகு எழ, இளகி நெஞ்சம்,
மிக்கது ஓர் வேட்கை கூர, விடுத்தலின், வேந்தன் கோயில்
கொக்கின்மேல் குயில்கள் கூவும் குளிர் பொழில்
                           குறியும் சொன்னாள்.

57
உரை
   

குருட்டு இயல் மதியினானை, கோது இலா அறிவில் மிக்காள்,
மருட்டினள் ஆகி, 'அந்த வளர் தடம் பொழிலின் ஓர் சார்,
இருட்டிடை நிலவு காட்டும் இன்ப மண்டபத்தில் வம்மின்;
உருள் தடந் தேரோய்!' என்றாள்; அவனும்
                           அஃது ஒருப்பட்டானே.

58
உரை
   

பின் வீமனை அவள் அடுத்து, கீசகனுக்குத் தான்
கூறியவற்றைத் தெரிவித்தல்

குறி அவன்தனக்கு நேர்ந்த கொடிய வெங் கொலை
                           வேற் கண்ணாள்,
தறி பொரு களிற்றின் அன்ன, சமீரணன் மகனை எய்தி,
செறிவொடு, அக் காளையோடு செப்பிய யாவும் செப்பி,
பிறிது ஒரு கருத்தும் இன்றி, பெரும் பகல் போக்கினாளே.

59
உரை
   


கீசகன் குறியிடம் செல்ல, வீமனும் பெண்
கோலம்கொண்டு திரௌபதியுடன் அங்கு அவன்
வருகையை நோக்கி இருத்தல்

எல்லை எண் திசையும் போன இருள் எலாம் மீண்டு துன்ற,
எல்லையின் தலைவன் ஆன இரவியும் குட வெற்பு எய்த,
எல்லை இல் காதலோனும் இடை இருளிடையே, அந்த
எல்லையை நோக்கிச் சென்றான், யமன்திசை
                           என்ன மன்னோ.

60
உரை
   

வடு அறத் தெவ்வர் போரும், மன்னவன் உணவும், கையால்
அடு தொழிற்கு உரிய செம் பொன் வரை இரண்டு
                           அனைய தோளான்,
உடு முகத்து இன்மை வானம் ஒளி அற இருண்ட கங்குல்
நடுவுறு அப் பொழுதில், செவ்வி நவ்வியர்
                           கோலம் கொண்டான்.

61
உரை
   


அங்கியில் தோன்றும் நாளாயனியுடன், அள்ளிக்கொள்ளப்
பொங்கிய இருளில், முன்னம் புகன்ற அப் பொங்கரூடு
தங்கிய தவள மாடம்தன்னிடைப் புகுந்து, சான்ற
இங்கிதத்துடனே நோக்கி, இருந்தனன், இமைப்பு இலாதான்.

62
உரை
   


திரௌபதியை அப்பால் மறைத்து வைத்து, வீமன்
மண்டபத்தில் இருக்க, கீசகனும் அடுத்து, காதல்
மொழி பல புகல்தல்

அணங்கு அன சாயலாளை அப்புறம் கரந்து வைத்து,
மணம் கமழ் அலங்கல் மார்பன் மண்டபத்து இருந்த காலை,
பிணம் கலன் அணிந்தது அன்ன, பேர் எழில்
                           பெற்றியான், நெஞ்சு
உணங்க, நாப் புலர, வந்து, அவ் உயர்
                           பொழிலூடு சேர்ந்தான்,

63
உரை
   


சாந்தினால் மெழுகிய தவள மாளிகை
ஏய்ந்த பொன்-தூணிடை இலங்கும் மின் எனச்
சேர்ந்து உறை பெண் உருக் கண்டு, சிந்தையில்
கூர்ந்த பேர் ஆர்வமோடு இறைஞ்சிக் கூறுவான்:

64
உரை
   


'என் பெருந் தவப் பயன் என்று அறிந்திலேன்;
மின் புரை மருங்குலாய்! வேட்கை விஞ்சலால்,
புன் பிழை செய்தனன்; பொறுத்தி, நீ!' என,
அன்புடன் சிலம்பு அணி அடியில் வீழ்ந்து, மேல்,

65
உரை
   


'பைங் குலைக் குரும்பையைப் பழித்த கொங்கையாய்!
மங்குலைப் புழுகு அளை வைத்த கூந்தலாய்!
கங்குலில் கால் வழி காட்ட வந்தது, இன்று,
இங்கு உலப்புறும் எனது ஆவி ஈயவோ?

66
உரை
   


'கிஞ்சுகம் மலர்ந்து, நின் கிள்ளை வாய்மையால்,
'அஞ்சல்!' என்று ஓர் உரை அளித்தல் காண்கிலேன்;
நஞ்சு அன விழிக்கடை நயந்த பார்வை கொண்டு,
எஞ்சும் என் உயிரினை எடுப்பது என்று நீ!

67
உரை
   


'வழிபடு தெய்வமும், மற்றும், முற்றும், நீ!
இழிபடு பிறர் முகம் என்றும் நோக்கலேன்;
கழிபடர் உற்றது, என் காம நோய்!' எனா,
மொழி பல கூறினான், முகம் புகுந்துளான்.

68
உரை
   


வீமன் நகைத்து, கீசகனை இரு கையால் பற்றி வீழ்த்தி, அவனுடன் பொருதல்

கீசகன் இம் முறை கிளந்த பற்பல
வாசகம் கேட்டலும், மலம் கொள் நெஞ்சுடைப்
பூசகர் பூசை கொள்ளாத புன் பவ
நாசகக் கடவுள்போல், நகைத்து, நோக்கியே,

69
உரை
   


பெண்ணுடை உருக்கொளும் பெற்ற மா மகன்
கண்ணுடைப் பொறி எழும் கனலின் வந்திட,
மண்ணுடைக் காவலன் மைத்துனன்தனை
எண்ணுடைக் கைகளால் இரு கை பற்றினான்.

70
உரை
   


பற்றினான்; பற்றிய பாணியால் எழச்
சுற்றினான், கறங்கு என; தூணம் ஒன்றினோடு
எற்றினான், சென்னியை; எடுத்த தன் வினை
முற்றினான், நெடும் பெரு மூச்சன் ஆகியே.

71
உரை
   


வீமனை, பிடித்த கை விலக்கி, மற்று அவன்
மா முகத்து இரு கையும் மாறி மோதினான்;
தீ முகத்தவனை, அச் செம்மல், மீளவும்
சாமுகத்தவன் எனத் தள்ளி, வீழ்த்தினான்.

72
உரை
   


ஓர் ஒரு குத்து ஒரு உருமு வீழ்ந்தென
மேருவொடு ஒத்த தோள் வீமன் குத்தலும்,
ஈரிடத்தினும் விலா எலும்பு நெக்கன,
கூர் உகிர்த் தலைகளால் குருதி கக்கவே,

73
உரை
   


கேளொடு கெடுதரு கீசகன் கழல்
தாளொடு தாள் உறத் தாக்கி, மல் கெழு
தோளொடு தோள் உறத் தோய்ந்து, கன்னல் வில்
வேளொடு வரு நலம் விஞ்ச, மேவினான்.

74
உரை
   


தாழ் வரைத் தடக் கையால், தையலாள் எதிர்,
காழ் வரப் பொரு திறல் காளைதன்னையும்,
சூழ்வரச் சூறையில் சுற்றி, பார்மிசை
வீழ்வரப் புடைத்தனன், மிடலில் விஞ்சினான்.

75
உரை
   


விழுந்தவன் மீளவும் வெய்துயிர்த்தனன்;
எழுந்து, தன் பகைவனது இருண்ட குஞ்சியை
அழுந்த வல் விரல்களால் சுற்றி, ஆய் மரக்
கழுந்து எனப் புடைத்தனன், கைகள் சேப்பவே.

76
உரை
   


புடைத்தனன் இவன், அவன் புடைத்த கைகளை
விடைத்தனன் அகற்றி, மெய்ம் மேவு பூதியும்
துடைத்தனன் ஆகி, அத் தோன்றல் வாயினை
உடைத்தனன், ஒரு கையால் ஒரு கை பற்றியே.

77
உரை
   


வீரமும், வலிமையும், விரகும், ஒத்தவர்
தீரமும், தெளிவும், நாம் செப்பற்பாலவோ?
'நேரமும் சென்றது நிசை' எனா, மிகு
சூரமும் செற்றமும் உடைய தோன்றலே,

78
உரை
   


கீசகன் உடலைச் சுருக்கி, அவன்
ஆவியை வீமன் போக்குதல்

மன்னவன் மைத்துனன் மார்பு ஒடிந்திட,
சென்னியும் தாள்களும் சேர ஒன்றிட,
தன் இரு செங் கையால் தாக்கி, வான் தசை
துன்னிய மலை எனச் சுருக்கினான்அரோ!

79
உரை
   


மாற்றினான், அவன் பெரு மையல் ஆவியைக்
கூற்றினார் கைக்கொளக் கொடுத்து, தன் சினம்
ஆற்றினான்; அத் திறல் ஆர்கொல் வல்லவர்,
காற்றினால் வரு திறல் காளை அல்லதே?

80
உரை
   


பண்ணிய வினைகளின் பயன் அலாது, தாம்
எண்ணிய கருமம் மற்று யாவர் எய்தினார்?
திண்ணிய கீசகன் செய்த தீங்கு இவன்
புண்ணியம் ஆனதால், புகல்வது என்கொலாம்?

81
உரை
   


வீமன் திரௌபதியை அழைத்து, கீசகன் உடலை அவள்
பாதத்தில் வைத்து, அவள் நன்கு காண, மராமரத்தால்
நெருப்பு எழச் செய்தல்

செங் கை கால் உடலொடு சென்னி துன்றிட,
அங்கையால் அடக்கி நின்று, அநேகம் ஆயிரம்
வெங் கை யானையின் மிடல் வீமன், வெற்பு அன
கொங்கையாள் தன்னையும் கூவினான்அரோ!

82
உரை
   


பூங்கொடி அனையவள் புறவடிப் புறத்து,
ஓங்கிய கீசகன் உடல்-பிழம்பினை,
'நீங்கிய வாய்மைகள் நிகழ்ந்தது!' என்னவே,
பாங்கினில் வைத்து, அடல் பவனன் மைந்தனே,

83
உரை
   


விடும் குழை மராமரம் ஒன்று வேருடன்
பிடுங்கினன், கைகளால் பிசைந்து, தீ எழ,
'சுடும்கொல்!' என்று அஞ்சிலன், சுவாலை செய்தனன்,
நெடுங் கணாள் கண்டு, தன் துயரம் நீங்கவே.

84
உரை
   


கீசகன் தம்பிமார் துயிலுணர்ந்து, தீபங்களுடன்
சோலையை நேடுதல்

தோட்டு மென் மலர்ச் சோலையின் ஓதையும்,
மோட்டு வன் கர முட்டியின் ஓதையும்,
மாட்டு, வண் சுதை மண்டபத்து ஓதையும்,
கேட்டு, உணர்ந்தனர், கீசகன் தம்பிமார்.

85
உரை
   


'தொய்யில் ஆதி சுதேட்டிணைக்கு ஒப்பனை
கையில் ஆர் அழகு ஏறக் கவின் செயும்
தையலாள் பொருட்டாகத் தனக்கு உறும்
மையலால், மிக வாடி, வருந்தினான்;

86
உரை
   


'வண்டு அறாத மலர்க் குழல் வல்லியைக்
கண்ட காவில், இக் கங்குல் பொழுதிடைச்
சண்ட வேகக் களிறு அன்ன தன்மையான்
கொண்ட மாலின் குறுகினன் போலுமால்.

87
உரை
   


'தூவி வாசம், துளி மதுச் சோலையில்,
ஏவலால் இயற்றும் எழில் பாவை மெய்
காவல் ஆகிய கந்தருவப் பெயர்த்
தேவரால், வெஞ் செரு உளது ஆனதோ!'

88
உரை
   


அழிந்த கீசகன் அன்றி, மற்று உண்டு என
மொழிந்த தம்பியர் நூற்றொரு மூவரும்,
கழிந்த தீ உமிழ் கண்ணினர் ஆய், 'உயிர்
ஒழிந்து போதும்!' என்று உன்னினர், ஓடினார்.

89
உரை
   


நகரி எங்கும் வெருவர, நள் இருள்
நுகருமாறு பல் நூறு ஒளித் தீபமோடு,
அகரு நாறு தண் காவில், அரும் பகல்
நிகரும் என்ன, நெருங்கினர், நேடினார்.

90
உரை
   


கீசகன் உடலைக் கண்ட தம்பிமார், அவன்
மரணத்திற்குக் காரணமான வண்ண மகளையும்
அவனோடு வைத்து எரிக்க எண்ணுதல்

சுதை நிலா ஒளி சூழ் மண்டபத்திடை,
சிதையும் மெய்யொடும், செம் பொற் சிலம்பு என,
கதைவலான் வெங் கடுங் கொடுங் கைகளால்
வதை செய் தம்முன் வடிவு கண்டார்களே!

91
உரை
   


'எண் இலா மனத்து எம்முனை, எண்ணுடை
விண்ணுளார் சிலர் வீத்ததற்கு ஏதுவாம்
வண்ண மா மகள்தன்னையும், வன்னியால்
அண்ணலோடும் அடுதும்!' என்றார்களே.

92
உரை
   


உபகீசகர் திரௌபதியைப் பற்ற, அவள் அரற்றுதல்

சொல்லும் ஆடவர் சொல்லினர்ஆயினும்,
கொல்லுமோ கனல், தான் பெற்ற கோதையை?
மல்லல் மாலையினார் வந்து பற்றலும்,
அல்லல் கூர, அரற்றினளால், அவள்.

93
உரை
   


'வெருவரும் கருங் கங்குலில், வெங் கொலை
நிருபர், என்னை நெருப்பிடை வீழ்த்துவான்
கருதினார்கள்; மெய் காக்கும் கடவுள்காள்!
வருதிர்!' என்று கண் வார் புனல் சோரவே,

94
உரை
   


வீமன் விரைந்து வந்து, மரங்களைப் பிடுங்கிப் புடைத்து,
உபகீசகர்கள் ஓட ஓடக் கொன்று அழித்தல்

மடைப் பெரும் பள்ளி எய்திய மாருதி,
'கிடைப்பது அன்று இக் கிளர் பெரும் போர்' எனா,
தொடைப் பெரும் பவனத்து, அனல் சோர்தரப்
புடைப்ப, ஓடினன், போர் மத மா அனான்.

95
உரை
   


'அகப் பொழில் கண்ட அம் மரம் யாவையும்,
மிகப் பிடுங்கினன், வேரொடும் கோட்டொடும்;
உக, புடைத்தனன்; ஓடத் தொடங்கினார்,
தகச் செயா மதிக் கீசகன் தம்பிமார்.

96
உரை
   


போன போன திசைதொறும் போய்த் தொடர்ந்து,
ஆன வானவன், ஒக்க, அக் கோட்டினால்,
மானமும், அவர் ஆவியும், வாங்கினான்;
ஏனையோர்களும் தம்முனொடு எய்தினார்.

97
உரை
   


உபகீசகர்களின் மரணத்தால் அரசன் மாளிகையோர்
வருந்த, வீமனும் திரௌபதியும் தத்தம்
இடத்தைச் சேர்தல்

துவன்று கற்புடைத் தோகையை விட்டு, முன்
நுவன்ற கீசகர் நூற்றொரு மூவரும்,
அவன்தன் வாகுவினால் அழிவுண்டபின்,
கவன்றதால், அக் கடி நகர் எங்குமே.

98
உரை
   


'கற்கும் யாழுடைக் கந்தருவர்க்கு எதிர்
நிற்பரோ, உடன் நேர் பொர மானவர்?
கிற்கும் மைந்துடைக் கீசகர் யாவரும்
தற்கினால் மடிந்தார்; தகவு ஒன்று இலார்.'

99
உரை
   


என்று மா நகர் யாவும் நடுங்கிட,
துன்று கங்குலில் சோரர்தம் ஆர் உயிர்
பொன்றுவித்த பொருநனும் பூவையும்,
சென்று, தத்தம சேர்விடம் நண்ணினார்.

100
உரை
   


சூரியன் உதிக்கவே, கீசகர் மரணம் எங்கும் பரவுதல்

கரிய கங்குல், கனை இருள் போர்வையோடு
இரிய, வந்த இருள்வலி தன்னினும்,
புரியின், அன்று புரிந்த அப் போரும், வன்
கிரியின் மன்னும் கிளர் விளக்கு ஆனதே.

101
உரை
   


தன் மைத்துனன்மார் மரணத்தால் விராடன் மெலிவுறுதல்

புலியினும், பெரும் போரில், தனித்தனி
வலியர் ஆகிய மைத்துனர் யாரையும்
பலியிடும் கந்தருவரைப் பார்க்கவே,
மெலிவு உழந்தனன், விற் கை விராடனே.

102
உரை
   


'கரந்து உறையும் காலம் கழிந்ததுஆதலின், விரைவில்
வெளிப்படுவோம்!' என்ற எண்ணத்தோடு
பாண்டவர் இருத்தல்

காண்தகும் தம வேடம் கரந்து உறை
ஆண்டு சென்றது, இனிச் சில நாள் என;
'மீண்டு தோன்றுதும்!' என்று விரதராம்
பாண்டு மைந்தரும், பான்மையின் நண்ணினார்.

103
உரை