31. மூன்றாம் போர்ச் சருக்கம்

கடவுள் வாழ்த்து


தம்தம் உறியில், அவர் வைத்த தயிர் பால்
                 வெண்ணெய் எட்டாமல்,
குந்தி, உரலின்மிசை ஏறி, இளங் கோவியர்முன்
                 கூத்தாடி,
நந்தன் மனையில் அசோதை இரு நயனம்
                 களிக்க விளையாடும்
மைந்தன் இரு தாள் ஒரு நாளும் மறவாதாரே
                 பிறவாதார்.
1
உரை
   


வீடுமன் கருட வியூகமும், கண்ணன் அர்த்த
சந்திர வியூகமும் வகுத்தல

ஏலா அமரில் மூன்றாம் நாள், இரண்டு படையும்
                 திரண்டு ஏற,
கால் ஆர் திண் தேர் வீடுமனும் வகுத்தான், கடுங்
                 காருட யூகம்;
மேலாம் வென்றிப் பாண்டவர் தம் வெஞ் சேனையைக்
                 கொண்டு, எஞ்சாமல்
தோலா அர்த்த சந்த்ரப் பேர் வியூகம் வகுத்தான்,
                 துளவோனே.

2
உரை
   

போரே தொடங்கி இரு படையும் புகுந்த பொழுதில்,
                 உகம் தொலைத்த
காரே தொடங்கி, கார்கோள் வெங் கடுங் கால் கலிகொண்டு,
                 ஆர்ப்பனபோல்,
வாரே தொடங்கும் பணைக் குலமும், மணிக் காகளமும்,
                 உடன் முழங்க,
பாரே தொடங்கி, எவ் உலகும் அடைவே செவிடு
                 பட்டனவே.
3
உரை
   


விசயனையும் அபிமனையும் வீடுமன்
முதலியோர் வளைத்தல

சொல் ஆர் கேள்விக் கங்கை மகன், துரோணன்,
                 முதலாம் அதிரதரும்,
எல் ஆர் இரத, கய, துரங்கம், ஏல் ஆளுடனே,
                 காலாளும்,
வில்லால் முன்நாள் தமைத் துரந்த வீரன்தனையும்
                 சிறுவனையும்,
மல்லால் வஞ்ச மல் அடர்த்த மாயன்தனையும்,
                 வளைத்தாரே.

4
உரை
   


துரியோதனன் முதலியோர் வீமனை வளைத்துப்
போர் புரிதல்

சூரர்க்கு எல்லாம் முதல் எண்ணும் துரியோதனனும்
                 தம்பியரும்,
ஆரக் கவிகைக் காந்தாரன் முதலா உள்ள
                 அவனிபரும்,
சேரத் திரண்டு, கரிகள் ஒரு சிங்கம் வளைத்தது
                 என, சிங்க
வீரத் துவசன் நின்றுழிப் போய், வளைத்தார்,
                 சமரம் விளைத்தாரே.

5
உரை
   

வரத்தால், மறையால், தாம் பெற்ற வரி சாபங்கள்
                 பிடித்த தனிக்
கரத்தால், மறைந்தது, அவரவர்தம் கடைக்கண்;
                 படைக்கண் விரைந்து விடும்
சரத்தால் மறைந்தது, அகல் வானம்; தரணிதலம்
                 அச் சரம் துணித்த
சிரத்தால் மறைந்தது; உகு குருதிச் சேற்றால் மறைந்த,
                 திசை நான்கும்.
6
உரை
   


கடோற்கசன் அம்பால் துரியோதனன் உணர்வு அற்று விழ,
அபிமன் வேல் எறிந்து அவனது தேர்ச் சாரதியை மாய்த்தல்

துவசம் பிளந்து, தேர் ஊரும் துரகம் பிளந்து,
                 சுடர் மணிப் பொன்
கவசம் பிளந்து, மார்பகமும் பிளந்து, ஊடு
                 உருவ, கடோற்கசன்தான்
நவ சந்திர மா முனை வாளி தொடுத்தான்;
                 தொடுத்த நாழிகையில்,
அவசம் பிறந்து, தம்பியர்முன் விழுந்தான்
                 ஒருவர்க்கு அழியாதோன்.

7
உரை
   

நாகம் துவசம் என உயர்த்தோன் நடுங்காமுன்னம்,
                 நண்ணலரை
மாகம்தனில் சென்று அமர் கடந்து, வரும் மைந்து
                 உடையோன் திருமைந்தன்,
வேகம் பட நின்று, ஒரு சமர வேலால், மீண்டும்
                 அவ் வேந்தன்
பாகன்தனது மருமத்தில் பாய்ந்தான், அவனும்
                 மாய்ந்தானே.
8
உரை
   


செய்தி கேட்ட வீடுமன் விசயனையும் கண்ணனையும் விடுத்து,
துரியோதனன் கிடந்த இடம் வந்து, அவனை எடுத்துத்
தேர்மேல் கொண்டு மூர்ச்சை தெளிவித்தல்

'விழுந்தான், வேலால் தேர்ப் பாகன்; வெஞ்
                 சாயகத்தால், விறல் வேந்தர்
தொழும் தாள் அரசன்தானும் உயிர் சோர்ந்தான்'
                 என்னும் தொனி கேட்டு,
செழுந் தார் வாகை விசயனையும் திருமாலையும்
                 விட்டு, ஒரு முனையாய்
எழுந்தான்-மந்தாகினி மைந்தன், இளைததோர் தமக்கு
                 ஓர் எயில் போல்வான்.

9
உரை
   

வண்டு ஆர் அலங்கல் வலம்புரியோன் மார்பம்
                 துளைத்த வாளி வழி
கண்டான்; எடுத்து, தாழ்ந்த திருக் கையால் அணைத்து,
                 கால் தேரில்
கொண்டான்; ஆவி தரு மருந்து கொடுத்தான்; அவனும்
                 கொடுத்த மருந்து
உண்டான்; உண்ட கணத்தினில் மீண்டு உணர்ந்தான்,
                 உலகு ஏழ் உடையானே.
10
உரை
   


துரியோதனனைப் படை வகுப்பில் நிறுத்தி, கடோற்
கசன், அபிமன், முதலிய வீரர்கள் பின்னிடுமாறு
வீடுமன் வெம்போர் புரிதல்

மன்னன்தனை அச் சந்தனுவின் மைந்தன் பெரும்
                 பேர் அணி நிறுவி,
'பொன் அம் குன்றே, இவன் சிலையும்; இவனே
                 காணும் புராரி' என
மின்னும் கழற் கால் வீமனுடன் வெம் போர்
                 விளைத்து, விடலையர் ஆய்
முன் நின்றவரும் பின்னிட, தன் முனை வாளியினால்
                 வினை செய்தான்.

11
உரை
   


மருமங்களினும், புயங்களினும், வதனங்களினும்,
                
கண்களினும்,
செருமும்படி வெங் கணை மாரி சிந்திச் சிந்தி,
                
சிரம் துணித்து,
தருமன் சேனைப் பரவை எலாம் தானே ஆகி,
                
தலைநாளில்
பொரு மந்தர மால் வரை போல, திரிந்தான், வெம்
                
போர் புரிந்தானே.

12
உரை
   


வீடுமனது போர் கண்டும் விசயன் வாளா இருக்கவே,
கண்ணன் ஆழியுடன் தேரிலிருந்து இறங்குதலும்,
விசயன் ஓடி அவன் பாதத்தைத் தொழுது துதித்தலும்

மலை ஒத்து அதிரும் கட களிறும், வய மா
                 அணியும், மான் தேரும்,
தொலையத் தொலைய, யாவரையும் சுடு வெங்
                 கணையால் துரந்து துரந்து,
அலையத் தரங்கம் எறி கடல்வாய் வடவானலம்போல்
                 அவன் நின்ற
நிலையைக் கண்டும், காணான்போல் நின்றான், விசயன்,
                 நிகர் இல்லான்.

13
உரை
   


'கான் எரி துற்றென வீடுமன் இப்படி காதி
                
மலைந்திடவும்,
மானம் நினைத்திலை, சாபம் எடுத்திலை, வாளி
                
தொடுத்திலை, நீ!
ஏன் இது, உனக்கு?' என மாயன் உரைத்து,
                
அவன் ஏறு இரதத்து இழியா'
'ஆனது எனக்கு இனி ஆக!' எனத் தனி
                
ஆழி எடுத்தனனே.

14
உரை
   


ஆழி எடுத்தனன், வீடுமனைப் பொருது ஆவி
                
அழித்திடுவான்,
ஊழிமுகக் கனல்போல் எழும் அப் பொழுது,
                
ஓடி அருச்சுனனும்,
தாழிதனக்கு முன் வீடு கொடுத்தருள் தாள்
                
இணையைப் பிடியா,
'வாழி! உனக்கு இவனோ எதிர்? வித்தக! மாய!'
                
எனத் தொழுதான்.

15
உரை
   


அது கண்டு, வீடுமனும் தன் தேரினின்று
இறங்கி, கண்ணனைத் துதித்தல

வாசவன் முன் பெறு காளை தொழத் தொழ,
                 மாறுபடச் சினவும்
கேசவன் இப்படி மேல் வருகிற்பது கேவலம்
                 உற்று உணரா,
'நாசம் நமக்கு உறு காலம் நணித்து!' என
                 நாடி, நடுக்கமுடன்,
தேசு அணி பொன்-தட மேரு எனத் திரி
                 தேரினை விட்டு இழியா,

16
உரை
   


'ஆரண கற்பித! மாதவ! அச்சுத! ஆழியிடைத் துயிலும்
காரண! சிற்குண ரூப! மலர்க் கொடி காதல் மனத்து உறையும்
நாரண! அற்புத! வானவருக்கு ஒரு நாயக! நிற் பணியும்
வாரணம் முத்தி விசாலதலத்திடை வாழ்வுற வைத்தவனே!

17
உரை
   

'ஆவி அழித்தனை, தூணில் உதித்து, அடல்
                 ஆடகனைத் தலை நாள்;
மாவலியை, சிறு மாண் உருவத்துடன், வார் சிறை
                 வைத்தனையால்;
ஏவில் அரக்கனை வீழ அடர்த்தனை; யான் ஒர்
                 இலக்கு எனவோ,
நீ வலியின் சினம் மூளும் மனத்தொடு நேமி
                 எடுத்ததுவே
18
உரை
   


'வான் நரகில் புகுதாமல் எனக்கு உயர் வான்
                 உலகைத் தருவான்,
நீ நினைவு உற்றது போன பிறப்பில் என் நீடு
                 தவப் பயனே;
யானும் இனிப் பிறவாமல் அளித்தருள்; ஈச!'
                 எனப் பரவா,
ஞான மனத்தொடு, நா குழற, பல நாடி,
                 உரைத்தனனே.

19
உரை
   


கண்ணன் சினம் ஆறி நிற்க, தான் பொருவதாகச் சொல்லி,
கண்ணனுடன் தேரில் சென்று, விசயன் கடும் போர் விளைத்தல்

ஆரியன் அப்பொழுது ஆறினன் நிற்கவும்,
                 ஆடல் அருச்சுனனும்,
தாரை வடிக் கணை ஆயிரம் உய்ப்பது ஒர்
                 சாபம் வளைத்து, அதிரா,
'யார் எதிர் நிற்பினும், யாவர் தடுப்பினும், யான்
                 இனி இப் பகலே
சேர முருக்குவன்; ஏறுக!' எனத் தன தேர்மிசை
                 புக்கனனே.

20
உரை
   


நீறு படுத்தினன் மா மகுடத் திரள்; நீள் நில
                
வைப்பு அடையச்
சேறு படுத்தினன், மூளைகளின் தசை; சேர்
                
குருதிப் புனலால்
ஆறு படுத்தினன்; ஓர் ஒருவர்க்கு எதிர் ஆயிரம்
                
வைக் கணையால்
ஈறு படுத்தினன்; வீடுமன் விட்டவர் யாவர்
                
பிழைத்தவரே?

21
உரை
   


வாயு வடிக் கணை, வாசவன் வைக் கணை, வாருண
                
மெய்க் கணை, செந்
தீயின் வடிக் கணை, தேவர் சுடர்க் கணை, சேர
                
விடுத்தமையால்,
ஆயம் முனைப் படு தேர் அணி பட்டன; ஆள்
                
அணி பட்டன; வெங்
காய் கரி பட்டன; பாய் பரி பட்டன; காவலர் பட்டனரே.

22
உரை
   


நாடி ஒளித்தனர், சூழ் புனல் மத்திர நாடன் முதல் பலரும்;
கூடி ஒளித்தனர், மா ரதரில் திறல் கூரும் வயப் படையோர்;
ஓடி ஒளித்தனர் ஆடு அமரில் துரியோதனனுக்கு இளையோர்;
வாடி ஒளித்தனர், மாகதர், ஒட்டியர், மாளவர், குச்சரரே.

23
உரை
   


விசயன் அம்பினால் பகைவர் சாயக் கண்ணன்
மகிழ்வுறுதலும், வீடுமன் முதலியோர் மன்னனைக்
காத்துப் பாசறை கொண்டு செல்லுதலும்

பார்த்தன் அம்பினால் மேவலார் படைப் பரவை
                 சாயவே, விரவு கோவியர்
தூர்த்தன் அன்புடன் கண்டு, உவந்து, தன் தொக்க
«
                 சனையின் பக்கம் எய்தினான்,
சேர்த்த வெம் பனைக் கொடி மகீபனும், வில் வினோதனும்,
                 செல்வ மைந்தனும்,
காத்து நின்று, தம் காவலன்தனைக் கொண்டு பாசறை
                 கடிதின் எய்தினார்.

24
உரை
   


படுகளக் காட்சிகள்

வெஞ் சரத்தினால் விசயன் வென்ற போர் மிகு
                 களத்தின்வாய் விசையொடு அற்றன
குஞ்சரத்தின் வீழ் கைகள் நாகமே; குருதி வட்டமும்
                 பரிதி வட்டமே;
பஞ்சரத்தொடும் திரியும் யானையின் பக்கம் எங்கணும்
                 பட்டு மூழ்கிய
செஞ் சரத்தின்மேல் சிறகர், பண்டு வச்சிரம் அரிந்திடும்
                 சிறகர் மானுமே.

25
உரை
   

கொற்ற மன்னர் சென்னியின் அணிந்த பொற் கோளம்
                 யாவையும் தாளமாகவே,
அற்றை வெஞ் சமத்து அடல் அருச்சுனன் ஆண்மை
                 பாடி நின்று, அலகை ஆடுமால்;
முற்ற வெம் பிணக் குவையும், வேழமும், முடுகு வாசியும்,
                 தேரும், மொய்ம்பு உறத்
துற்ற குன்று என, ஒன்றுபட்டு எழச் சொரியும் மூளை
                 ஆறு அருவி ஒக்குமே.
26
உரை
   


பமர மும் மதக் கரி, விலாவின் வேல் பட்ட வாய்
                 நிணம் பறிய நிற்பன,
குமரன் வேலின்வாய் அனலம் ஊர்தரும் கோடுடைத்
                 தடங் குன்றம் ஒக்குமால்;
அமரர்கோன் மகன் செங் கை அம்பினால் அற்ற
                 வீரர்தம் தலைகள் கவ்வி, அச்
சமர பூமி சேர் ஞாளி, மானுடத் தலை விலங்கின்
                 இன் தன்மை சாலுமே.

27
உரை
   


சூரியன் மறைதலும், அன்றைய நிகழ்ச்சிகள் குறித்துப்
பாசறையில் வீடுமன் பேசியிருத்தலும்

அன்று வெஞ் சரத்தொடு தறிந்த வாள் அரசர் சோரி
                 மெய்ப் பட்டதுஆதலின்,
சென்று செங் கதிர்ச் செல்வன் வாருணத் திசை அடைந்து,
                 வெண் திரையில் மூழ்கினான்;
நின்று அருச்சுனன் பொர மறந்ததும், நெடிய செங் கண்
                 மால் நேமி தொட்டதும்,
பின்றை வில் எடுத்து அவன் மலைந்ததும், பேசினான்,
                 மகீபதி பிதாமகன்.

28
உரை
   


தருமன் சேனை மகிழ்வாலும், துரியோதனன் சேனை
வருத்தத்தாலும், கண்ணுறங்காது இரவைக் கழித்தல்

தருமன் மா பெருஞ் சேனைதன்னுளார் தங்கள்
                 ஆதரத்தொடு தனஞ்சயன்
பொரு வில் ஆண்மையும், வீமன் மா மகன் பொருத
                 வீரமும் புகழ்ந்து பாடினார்;
அரவ கேதனன் சேனைதன்னுளார் அழிந்த மன்னருக்கு
                 அழுது அரற்றினார்;
இருவர் சேனையும் கண்படாமல், அன்று, இரவு பட்டது
                 என் என்று இயம்புவாம்!

29
உரை
   


சூரியன் கதிர் பரப்பி எழுதல

'நென்னல் அம் கையில் கொண்டது என்னையே, நேமியாக,
                 அந் நீல மேனியான்;
இன்னமும் பொரத் தேடும், ஆகவத்து இன்றும்' என்றுகொண்டு,
                 எண்ணியே கொலோ?
தன் நெடுந் தனிச் சயிலமும் பொலந் தமனியத் தடஞ்
                 சயிலம் ஆகவே,
மின் நெடுஞ் செழுங் கதிர் பரப்பினான்-வெய்ய ஏழ் பரித்
                 தேர் விபாகரன்.

30
உரை