37. ஒன்பதாம் போர்ச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

பேர் ஆறு மூழ்கி, மறை நூல் பிதற்றி, மிடறும்
              பிளந்து, பிறவித்
தூர் ஆறுமாறு நினையாமல், உங்கள் தொழிலே
              புரிந்த சுமடீர்!
ஓர் ஆறு பேத சமயங்களுக்கும் உருவாகி
              நின்ற ஒருவன்
ஈர்-ஆறு நாமம் உரைசெய்து, மண்கொடு இடுவார்கள்
              காணும் இமையோர்.
1
உரை
   


துரியோதனன் முந்திய இரவில் கன்னனை அழைத்துப்
போர் செய்யுமாறு வேண்ட, அவன், 'வீடுமன்
தோற்றால் நான் பொருவேன்' எனல்

முன் போர் உடைந்து, தனது இல் அடைந்த முடி
              மன்னன், முன்னை இரவில்
தன் போலும் மாமன்அவனோடு கேடு தரு
              தம்பியோடு கருதி,
'பின் போதில் வண்மை ஒழிவானை ஓடி அழை!'
              என்று பேச, அவனும்
மின்போல் இறந்த இளையோர்கள் பாடு வினவா
              இருந்த பொழுதே,

2
உரை
   


'மா வில் எடுத்து, என் இளையோர்கள் கந்தவகன்
              மைந்தன் முன்பு, சிவன் முன்
பூ வில் எடுத்த மதன் ஆனவாறு புகல்கிற்பது
              அல்ல; அனிகக்
கோ வில் எடுத்து என்? மறை நாலும் வல்ல குரு
              வில் எடுத்து என்? இனிமேல்,
நீ வில் எடுக்கில் அனைவேமும் உய்தும்; நினையாரும்
              வாகை புனையார்.'

3
உரை
   


என்னும் சொல் அண்ணல் செவி ஏற, நெஞ்சம் எரி ஏற,
              வெய்தின் மொழிவான்:
'முன் உந்தை தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்கொல்?
              அம் பொன் முடியாய்!
தன் உந்து தேரும், வரி வில்லும் உண்டு, சரம் உண்டு;
              நாளை அவனே
உன்னும் களத்தில் அவர் வானம் ஆள, உலகு
              ஆளுவிப்பன் உனையே.

4
உரை
   


'வில் கவ்வு வாளி அடல் ஐவர்மீது விட அஞ்சி,
              வீரர் எதிரே
புல்கவ்வுமாகில், விரைவோடு கங்குல் புலரா முன்
              வந்து பொருவேன்;
சொல் கவ்வையாக நினையற்க! கொன்று சுரர் நாடு
              அளிப்பன், இனி உன்
சில் கவ்வை தீர அவருக்கும் நின்ற திருமாலினுக்கும்!' எனவே,

5
உரை
   


கன்னன் மொழியை வீடுமனுக்கு உரைக்குமாறு
துச்சாதனனைத் துரியோதனன் அனுப்ப, அவன்
சென்று சொல்லுதல்

'துச்சாதனா! இம் மொழி சென்று கங்கை சுதனுக்கு
              உரைக்க' எனவே,
நச்சு ஆடு அராவை அனையானும் அங்கு ஒர் நொடி
              உற்ற போழ்தில் நடவா,
எச் சாபம் மன்னும் அணி யூகம் ஆன இரதம்தனக்கு
              நடு ஓர்
அச்சாணி ஆன அவனுக்கு இவன் சொல் அடைவே
              புகன்றனன்அரோ.

6
உரை
   


துச்சாதனனுக்கு வீடுமன் உரைத்த மறுமொழி

பேரன் புகன்ற மொழி கேள்விசெய்து, பெரியோன்
              முகிழ்த்து நகையா,
'வீரம் புகன்று என், இனி நான் உமக்கு? விசயற்
              செறுத்தல் முடியாது;
"ஈரம் துறந்த ஒரு நூறு பேரை மகுடம்
              துணிப்பல்!" எனவே
நேர் அன்று அவைக்கண் உரைசெய்த வாய்மை
              நிறைவேறும், நாளை உடனே.

7
உரை
   


'ஒரு நாளும் நீவிர் பொறுமின்கள்; உம்மை உலகு
              ஆளுவிக்க வருவோர்
வரு நாள் தொடங்கி அமர் செய்து, தெவ்வை மடிவிப்பர்,
              சொன்ன வகையே;
குருநாடும் மற்றை வளநாடும் எய்தி, நுமரோடு
              இயைந்து குழுமி,
பெரு நாள் இருந்து, நனி வாழ்திர்!' என்று, விடை நல்கி
              விட்ட பிறகே,

8
உரை
   


மறுநாள் வீடுமன் தன் சேனையைச் சருப்பதோபத்திர
வியூகமாக வகுத்தல்

கண்ணும் துயின்று, துயிலும் உணர்ந்து, சிறுகாலை
              உள்ள கடனும்
எண்ணும் கருத்தின் வழியே இயற்றி, இகல்
              மன்னர் சூழ வரவே,
மண்ணும் குலுங்க, வரையும் குலுங்க, எழு தூளி
              மாதிரமும் மால்
விண்ணும் புதைக்க, அடல் ஆகவத்தின் மிசை
              சென்று புக்கு, விரகால்,

9
உரை
   


நாகம் குறித்த கொடி மன்னர் மன்னை நடுவே
              நிறுத்தி, அடைவே
பாகங்கள்தோறும் ஒரு கோடி மன்னர் பகதத்தனோடு
              நிறுவி,
பூ கம்பம் ஆக, இனமோடு அலம்புசனும் முன்பு
              போக, ஒரு பேர்
யூகம் சருப்பதோபத்ரம் ஆக அணி செய்து,
              மான உரவோன்,              

10
உரை
   


தருமனது சேனை பற்ப வியூகம் வகுத்து நிற்றல்

நின்றான், அமர்க்கண் அவர் அங்கு நிற்க, இவர் இங்கு,
              'நென்னல் நிருதன்
கொன்றான்' என, தன் மதலைக்கு ஒர் எண்மர் எழுவோரை
              நீடு கொலை செய்து,
ஒன்றாக மன்னர் பலர் ஆவி கொண்ட உரவோனும்,
              உம்பர் பகை போய்
வென்றானும், மற்றை இளையோரும், ஒன்றின் ரகு அற்ற
              கோவும், முதலோர்,

11
உரை
   

மற்று உள்ள மன்னர் புடை போத, முன்னர் மழைமேனி
              மாயன் வரவே,
உற்று உள்ள வீரரொடு சேனை நாதன் அணி நிற்க, ஒண்
              கொய் உளை மா
முன் துள்ள, எங்கும் எழு பூழி துள்ள, முரசங்கள்
              துள்ள, மிகவும்
செற்று உள்ளம் மேவு கனல் துள்ள, வந்து செரு வெங்
              களத்தினிடையே,
12
உரை
   

செம் பற்பராக, முடி, மா மதாணி, செறி தொங்கல்,
              வாகு வலயம்,
பைம் பற்ப ராக மலர் வல்லியோடு திருமேனி
              சோதி பயில்வான்,
வெம் பற்ப ராக வரை யூகமாக, முறையால் அணிந்து,
              வெயில் கால்
அம் பற்ப ராக பதி என்ன நிற்க, அமர் ஆடல்
              உற்ற பொழுதே,
13
உரை
   


அலம்புசன் வந்து, வீமனோடு வாட்போர் செய்து,
ஒரு கரம் துணிபடுதல்

இந்திரனும் ஏனை இமையோர்களும் நடுங்க,
அந்தரமும் எண் திசையும் நின்று அதிர, அதிரா,
வெந் திறல் அலங்கல் புனை வீமனுடன் மலைவான்
வந்தனன், அலம்புசன், வலம் புனை புயத்தான்.

14
உரை
   

செருவில் வெருவா நிருத சேகரன், வயப் போர்
மருவு சுடர் வாளினுடன், வந்த நிலை காணா,
இரவி வரு தேர் அனைய தேரின்மிசை இழியா,
'உரும் உரும்' எனா, விரைவின் ஓடி எதிர் வந்தான்.
15
உரை
   

யாளி ஒர் இரண்டு இகல் புரிந்தது என இகலா,
மீளிமையினாலும் வலியாலும் விறல் மிக்கோன்,
வாளின்மிசை வாளதனை வைத்து, அடல் அரக்கன்
தோளில் ஒரு தோள் நிலன் உறும்படி துணித்தான்.
16
உரை
   


இருவரும் மற்போர் புரிதல்

அற்ற திரள் தோள் துணிய, அச்சம் அறவே நின்று,
உற்றுழியும், வாள் உரகம் என்ன உளன் ஆகி,
மற்றை ஒரு தோளின்மிசை தட்டி, 'இனி மற்போர்
பற்றுக!' என, வீமன் உடல் பற்றுபு புகுந்தான்.

17
உரை
   

குத்துவர்; திரிப்பர்; இரு குன்று அனைய
              தோள் கொண்டு
ஒத்துவர்; வயப் புலிகள் என்ன உடன் ஓடித்
தத்துவர்; உரத்தொடு உரம் மூழ்க, முது தகர்போல்,
மொத்துவர்; சினத்தொடு எதிர் முட்டுவர், சிரத்தால்.
18
உரை
   


மற்போர்க்கு இளைத்தபின், அரக்கன்
விற்போர் தொடங்குதல

மல் வலி அழிந்து, பிறை வாள் எயிறு அரக்கன்,
'வில் வலி அறிந்திடுதும்!' என்று வில் எடுத்தான்;
கல் வலிய தோள் விடலை கன்றி வில் எடுத்தான்;
தொல் வலியினோடு இருவரும் கணை தொடுத்தார்.

19
உரை
   

கணைகள் அவை ஒன்றினுடன் ஒன்று எதிர் கடித்துப்
பிணைபட விழுந்த செயல் கண்டு, நனி பேதுற்று,
'இணை இலது, இவர்க்கு; இனி, இரண்டு அனிகினிக்கும்
புணையும் இவர்' என்றனர், புரந்தரனொடு இமையோர்.
20
உரை
   

மலையினையும் வாசுகியையும் பொருவும் நாணும்
சிலையும் அற, மேல் ஒரு செழுங் கணை தொடுத்தான்-
தொலைவு இல் பகையான பகன் மார்பும், இரு தோளும்,
குலைகுலையுமாறு நனி குத்தி, உயிர் கொண்டான்.
21
உரை
   


'விற்போர் பயன் இன்று' என்று அரக்கன் அந்தரம்
சென்று, மலையைக் கையால் எடுத்து
வீமன்மேல் எறிதல்

மந்தரமும் மந்தரமும் என்ன அமர் மலைவான்,
'அந்தரம் இது அல்ல' என, அந்தர நெறிப் போய்,
கந்தர நெடுங் கிரி கரத்தினில் எடுத்து, அச்
சுந்தரன் வயங்கு திரள் தோள்தனில் எறிந்தான்.

22
உரை
   


அருகு நின்ற அபிமன் அம்பினால் மலையைத் துகளாக்குதல

எறியும் அளவில், குரிசில் இளவல் திருமைந்தன்,
குறியினொடு வெஞ் சிலை குனித்து, அருகு நின்றான்,
பொறியிலவன் வீசிய பொருப்பு ஒர் அணு ஆகி
முறியும்வகை, பல் பகழி, முகில் என, விடுத்தான்.

23
உரை
   


வீமன் வேலால் அரக்கனை மார்பில் எறிய,
அவன் இறந்துபடுதல்

வில் அபிமன் வெங் கணைகள், விசையொடு
              அவன் எறியும்
கல் அசலம் நீறு படுவித்த திறல் கண்டே,
'கொல்ல இனி வேண்டும்' என, வெய்யது ஒரு
              கூர் வேல்
வல் அடல் அரக்கன் அகல் மார்பின்மிசை விட்டான்.

24
உரை
   

விட்ட வடி வேல் உருவ, வேல் உருவும் முன்னே
பட்டு அவனும் வீழ, இரு பாலும் வரு சேனை
முட்டவும், இவன் கணை முனைக்கு எதிர் இலக்காய்,
கெட்டனர், நிசாசரர்கள்; கிரிகள் என வீழ்ந்தார்.
25
உரை
   


அரக்கரும் பல மன்னர்களும் வீமன் கதையால் மடிதல்

ஆறு படி நூறு படி ஆயிரம் அரக்கர்,
மாறுபடு பாடை வட மன்னர் ஒரு கோடி,
ஊறுபட வெங் கதை கொடு அன்று
              அவன் உடைக்க,
சேறு படும் மூளைகள் தெறித்தன சிரத்தால்.

26
உரை
   

'முன் பகலில் மைந்தனை முருக்கிய அரக்கன்
பின் பகலில் வீழ, வடி வேல்கொடு பிளந்தான்;
சொல் பகல் இலான் இளவல்' என்றனர், துதித்தார்,
அல் பகல் இலா உலகில் வாழ் அமரர் எல்லாம்.
27
உரை
   


காசியர்கள், சேதியர்கள் முதலியோர் விசயன்
வாளியால் மடிதல்

காசியர்கள், சேதியர்கள், மாளவர், கலிங்கர்,
பூசலிடை ஏழு பதினாயிரவர் பொங்கி,
கேசவன் நடாவு கிளர் தேர் கெழு சுவேத
வாசி உடையான் விசயன் வாளியின் மடிந்தார்.

28
உரை
   


வீம விசயர்களால் துரியோதனன் சேனை சிதறுதல் கண்டு,
வீடுமன் வந்து பாஞ்சாலருடன் பொருதல்

துரகத் தடந் தேர்த் தனஞ்சயன் கை வரி வெஞ்
              சாபம் சொரி கணையால்
உரகத் துவசன் பெருஞ் சேனை ஒரு சார் உடைய,
              ஒரு சாரில்
சருகு ஒத்து அனில குமரன் கைத் தண்டால் உடைய,
              கண் சிவந்து,
கருகி, திருகி, மேல் நடந்தான், கங்காநதியாள்
              திருமைந்தன்.

29
உரை
   

பட்டக் களிற்றுப் பாய் புரவிப் பைம் பொன்
              தடந் தேர்ப் பாஞ்சாலர்,
திட்டத்துய்மன் முதலானோர், சிகண்டியுடனே
              எதிர் தோன்ற,
வட்டக் கவிகை வீடுமனும், மன்னற்கு இளைய
              காளையரும்,
எட்டுத் திக்கின் காவலரும், அவரோடு எய்தி
              இகல் செய்தார்.
30
உரை
   

வரி வெஞ் சிலைக் கைக் கௌரவர்க்கு முதல் ஆம்
              முதல்வன் வடிக் கணைகள்
தெரியும் கணத்தில், தெரியாமல் தேரும் தாமும்
              சிலர் பட்டார்;
கரியும் தாமும் சிலர் பட்டார்; கலி வாய் மதுகைக்
              கால் வேகப்
பரியும் தாமும் சிலர் பட்டார்; படாதார் உண்டோ
              பாஞ்சாலர்?
31
உரை
   


சிகண்டியின் கணைக்கு வீடுமன் இலக்காக,
துச்சாதனன் அம்பு எய்து, சிகண்டியின் தேர்
முதலியவற்றைச் சிதைத்தல்

'நீயும் ககனம் குடியேற, நின் பேர் உடலம்
              நீள் நிலத்தில்
தோயும்படி, நிற் பொர நின்றேன்!' என்றே சொல்
              ஆயிரம் சொல்லி,
சேயும் தனக்கு நிகர் இல்லாச் சிகண்டி கடுங்
              கால் சிலை வாங்கி,
காயும் கணைகட்கு இலக்கு ஆனான், காமன்
              கணைக்கும் கலங்காதான்.

32
உரை
   


வில்லோன் சரங்கள் பட நகைசெய்து, அவன்மேல்
              தனது வில் வளையாத்
தொல்லோன் நின்ற நிலை கண்டு, துச்சாதனன் தன்
              சுடு சரத்தால்
பல்லோர் வியப்ப, தங்கள் குலப் பகைவன்
              சேனாபதி இளவல்
செல்லோடு அணவு நெடுங் கொடியும், தேரும்,
              சிலையும், சிதைவித்தான்.

33
உரை
   


விசயன் நடு வந்து, பகழி வீச, பகைவர் புறமிடுதல்

' "இவனோ இலக்கு ஆம், என் பகழிக்கு" என்பான்
              போல, எம் குலத்தில்
அவனோ செங் கைச் சிலை வீழ்த்தான்; அரசன்
              தம்பிக்கு அழிந்து, இவனும்
தவனோதயத்தில் இருள் என்னச் சாய்ந்தான்' என்று
              தனஞ்சயன் தன்
பவனோதயத் தேர் நடு விட்டான்; பணியார் தாமும்
              புறமிட்டார்.

34
உரை
   

பார்த்தன் கணையால் பட்டவரை, பங்கேருகத்தோன்
              பல கோடி
நாத் தந்திலனே, எண்ணுதற்கு; நாம் ஆர் புகல?
              தே மாலை
மாத் தந்திகளும், புரவிகளும், துணியத் துணிய,
              வழி சோரி
நீத்தம்தன்னால், வடவை முக நெருப்பு ஒத்தது,
              கார் நெடு வேலை,
35
உரை
   


பின், வீடுமன் சிலை ஏந்திப் பொர, விராடன்
இளவல் சதானிகன் மடிதலும், சூரியன் மறைதலும்

மன்னும் சேனை படக் கண்ட வாட் சந்தனுவின்
              திருமைந்தன்,
பின்னும் தனது சிலை ஏந்தி, பேணார் எவரும்
              பின் காட்ட,
துன்னும் பகழி மழை பொழிந்து, துரக்கும் பொழுது,
              விராடபதி
என்னும் குரிசில்தனக்கு இளையோன், இராமற்கு
              இளையோன் எனத் தக்கோன்,

36
உரை
   


பண்ணும் பரிமான் தேர் உடையான், படைத் தேர்
              மன்னர் பலர் சூழ,
எண்ணும் சிலைக் கைச் சதானிகன், வந்து, எதிர்
              ஊன்றுதலும், எண் திசையும்
மண்ணும் திகைக்கும்படி மலைந்தான்-மன் பேர்
              உயிருக்கு ஆர் உயிரும்
கண்ணும் போல்வான், கருதலர்க்குக் கடுங் கால்
              எழுப்பும் கனல் போல்வான்.

37
உரை
   


உற்றுச் சமரில் வில் எடுத்த உரவோன்தன்னை
              உடலோடும்
அற்றுச் சென்னி வேறு ஆகி வீழத் துணித்தே,
              அம்பு ஒன்றால்
செற்று, கங்கை மகன் நிற்ப, சேரார் ஓட,
              தேரோனும்
இற்றுத் தெறித்த மகுடம் என வீழ்ந்தான்,
              புணரிக்கிடை அந்தோ!

38
உரை
   


'திலத்தின் சின்னம் பட முன்னம் சிவேதன் உயிர் கொண்டு
              உடல் சிதைத்தான்;
தலத்தில் கனக முடி சிந்தச் சரத்தால் அழித்தான்,
              சதானிகனை;
வலத்தில் திகிரிதனை உருட்டும் மான் தேர் மச்சத்து
              அவனிபர்தம்
குலத்திற்கு இவனே கூற்று' என்றார், கூற்றும் குலையும்
              கொலை வேலார்,

39
உரை
   


இரு பக்கத்தாரும் பாசறை சேர்தல்

சேந்த நெடுங் கண் முரி புருவத் திட்டத்துய்மன்
              சேனையொடும்,
சார்ந்த நிருபர் ஐவரொடும், தானும் தன் பாசறை
              அடைந்தான்;
பாந்தள் உயர்த்த அரசுடனும், பைம் பொற் கவரி
              மதிக்கவிகை
வேந்தருடனும், போய்ப் புகுந்தான், தன் பாசறையில்
              வீடுமனும்.

40
உரை
   


பரிதி குணக்கில் எழுதல

சென்ற பரிதி, ஆயிரம் பொற் சிகரப் பொருப்புக்கு
              அப் புறத்து
நின்ற இருளை இப் புறத்து நீங்காவண்ணம் குடியேற்றி,
ஒன்ற உலகம் உற்ற துயில் உணர்த்துவான்போல்,
              உதயம் எனும்
குன்றமிசைநின்று, அனைவரையும் கரத்தால் எழுப்ப,
              குணக்கு எழுந்தான்.

41
உரை