41. பதின்மூன்றாம் போர்ச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

சங்கை இலாவகை யம படரால் உயிர் தளர்
                       பொழுதத்து, அருகே
மங்கையர் சூழ இருந்து அழுது, உள்ளம் மயக்கினும்,
                       யான் மறவேன்-
கங்கையும் நான்மறையும் துளவும் கமழ் கழல் இணையும்,
                       திருமால்
அம் கையின்மீது ஒளிர் சங்கமும், நேமியும்,
                       அஞ்சன மேனியுமே.
1
உரை
   


மன்னரும் சேனைகளும் சூழ, துரோணன் சக்கர
வியூகம் வகுத்து நிற்றல்

நஞ்ச வியாளம் உயர்த்த பதாகை நராதிபன்
                       ஏவலினால்,
விஞ்ச வரூதினி மன்னர் திரண்டனர், விசயனை
                       மேலிடுவான்;
நெஞ்சு அவரால் அழிவுண்ட தபோதனன்
                       நெருநலினும் கடுகி,
பஞ்சவர் கோ முதல்வன்தனை வன்பொடு படை
                       பொர எண்ணினனே.

2
உரை
   


இலக்கணமைந்தனும், மைந்துடை மன்னவன்
                       இளைஞரும், எம்முனையும்
கலக்குற வென்ற கலிங்கரும் உட்படு காவலர் பற்பலரும்,
சிலைக் கை வயம் பெறு சிந்து நராதி செயத்திரதன் சிரமா,
நிலக்கண் எழும் துகள் வானிடை சென்றிட, நின்றனர்
                       பேர் அணியே.

3
உரை
   


அக்கரம் யாவும் உணர்ந்த சிலைக் குரு, ஆசுர
                       சேனை நடுச்
சுக்கிரனார் நிகர் என்ன, வகைப் படு தூசியின்
                       மா முறையே
எக் கரமும் படை கொண்டு எழு சேனையை
                       எயில்கள் வளைப்பனபோல்,
சக்கரயூகம் வகுத்து இரதத்திடை சயம் உற
                       நின்றனனே.

4
உரை
   


திட்டத்துய்மன் மகரவியூகம் வகுத்து, மன்னர் சூழ நிற்றல்

ஒப்பு அறு போரினில் வாகை புனைந்த உதிட்டிரன்,
                       அன்று அடையார்
தப்பு அற எண்ணிய எண்ணம் உணர்ந்து,
                       தனஞ்சயனுக்கும் உரைத்து,
அப்பு அறு கோடையில் வெங் கதிரோன் என,
                       ஆகவ நீள் வரி வில்
துப்பு உறு சிந்தை மகீபர் வரூதினி சூழ,
                       நடந்தனனே.

5
உரை
   


ஈர்-இரு தேரினர், மூவகை யானையர், எண்
                       அறு மா மிசையோர்,
ஓர் இரு-நால் உடை ஐ-இரு பூமியில்
                       உள்ள பதாதியுடன்,
பார் இரு-நாலு திசாமுகமும் படையோடு
                       பரந்து வரும்
பேர் இரு மான வரூதினியின் திரள் பேசுறலாம்
                       அளவோ?

6
உரை
   

வரு படைதன்னை நிறுத்தி விதம்பட, மகரவியூகம்
                       வகுத்து,
ஒரு பகல் யூகமும் இப் பகலுக்கு இனி ஒப்பு
                       அல என்றிடவே,
குருபதியும் திருமாலும் மதிக்க அணிந்து, அடு
                       கோள் அரிபோல்,
துருபதன் மைந்தனும் நின்றனன், அந்தர
                       துந்துபிமீது எழவே.
7
உரை
   


சஞ்சத்தகர் அறைகூவ, விசயன் சென்று, விற்போரில்
அவர்களைத் தோற்று ஓடச் செய்தல்

இத் தகவாக அணிந்து இரு சேனையும் எதிர்
                       முனையும் பொழுதில்,
முத்து அக வெண்குடை மன்னவன் ஏவலின்,
                       முன் பகலின்படியே,
மத்தக மா முதல் ஆகிய நான்மை வரூதினிதன்னொடு சஞ்-
சத்தகர் வந்து அறைகூவ, வெகுண்டு, தனஞ்சயன் ஏகினனே.

8
உரை
   

மால் விடு தேர்மிசையான் வரி சாபம் வளைத்ததும்,
                       மல் இகல் வெங்
கோல் விடு பூசலும், வில்லுடனே பொழி கொண்டல்
                       வியப்பு எனலாம்;
மேல் விடு தேர்களும், யானையும், வாசியும், வீரரும்,
                       மெய் உருவ,
கால் விடு தாரை எழும் சருகு என்ன உடைந்தனர்,
                       கையறவே.
9
உரை
   

பட்டவர் எத்தனை ஆயிரர்; நின்று படாமல்
                       உயிர்ப்புடன் வென்
னிட்டவர் எத்தனை ஆயிரர்; அஞ்சலின், 'ஏகுக!'
                       என்று, அமர்வாய்
விட்டவர் எத்தனை ஆயிரர்; தம் குல மேன்மையும்
                       வெந் திறலும்
கெட்டவர் எத்தனை ஆயிரர்;-அன்று கிரீடி
                       தொடும் கணையால்!
10
உரை
   

ஓர் ஒர் உடம்பினில் ஆயிரம் ஆயிரம் உற்பல
                       வாளி பட,
தாரை படும்படி பொழி முகில் ஒத்தனர், சமர்
                       முனையில், தரியார்;
மாரனை அங்கம் எரித்தருள் கண்ணுதல் வடிவம்
                       எனும்படியே
பார் ஒரு பாதி சிவந்தது, மேனி பரந்து எழு
                       சோரியினால்.
11
உரை
   


திட்டத்துய்மன் துரோணனுடன் போர் செய்ய
முனைந்து, எதிர் நிற்க இயலாது பிறக்கிடுதல்

இந்திரன் மா மகன் இங்கு இவர்தம்முடன் இம்
                       முறை போர் புரிய,
சந்திர சூரிய மண்டலம் ஒத்து அணி தானை
                       இரண்டும் முனைந்து
உந்திய வேலையின், உந்திகள் நாலுடை உந்து
                       இரதத்திடை போய்,
அந்தணன்மேல் வரி சாபம் வளைத்தனன்,
                       ஐவர் படைத்தலைவன்.

12
உரை
   

நூலொடு சாபம் வளைத்து, அவன் மற்று இவன்
                       நொய்தின் உகைத்த வடிக்
கோலொடு கோல் முனை அற்று விழத் தொடு குனி
                       சிலை நாண் அழிய,
சேலொடு சேல் பொரு சீலம் எனும்படி, தேர்கள்
                       இரண்டும், மணிக்
காலொடு கால் பொர, வன் துவசத்தொடு கவசம்
                       அழித்தனனே.
13
உரை
   

அரு முனி ஆதி வதிட்டனும், மன் குல ஆதியும்,
                       அந்தணனாம்
பெரு முனிதானும், உடற்றிய போர் சிலர் பின்
                       பொருதார் உளரோ?
ஒரு முனி ஏழ் கடலும் கரம் ஒன்றில் ஒடுக்கினன்;
                       மன்னனை மேல்
வரு முனி வென்றனன்;-முனிவருடன் பொர வல்லவர்
                       யார், புவிமேல்?
14
உரை
   

வந்து எதிர் முட்டுதலும், தன தேரினை மாறுபடத்
                       திருகி,
சிந்தையும் மானமும் வீரமும் விட்டு, ஒரு செயல்
                       அற, வென்னிடலும்,
'தந்திரநாதன் உடைந்தனன்' என்று, இரு தானையின்
                       மன்னவரும்,
அந்தணன் ஆண்மையும், வன்மையும், வின்மையும்,
                       அன்று துதித்தனரே.
15
உரை
   


திட்டத்துய்மனுக்குத் தருமன் ஆறுதல் கூறுதல்

வேதியன் விட்ட சரங்களின் நொந்து, வெரீஇ வரும்
                       மன்னவனைத்
தாது அவிழ் பொன்-தொடை மார்பில் அணைத்து உயர்
                       தருமன் உரைத்தருள்வான்;
'நீ தவறின், பினை யார் நிலைநிற்பவர்? நிருபர்
                       சிகாமணியே!
மோதி இளைத்தனை; ஆறுக!' எனப்பல
                       முகமன்மொழிந்தனனே.

16
உரை
   


'பகைவரின் சக்கர வியூகத்தைப் பிளக்க வல்லவன் நீயே'
என்று கூறி, அபிமனைத் தருமன் போருக்கு அனுப்புதல்

தன் எதிர் மா மயிலோன் என நின்ற தனஞ்சயன்
                       மா மகவை,
பொன் எதிர் பேர் ஒளி அருள் வடிவு ஆகிய பூபதி,
                       'வருதி!' எனா,
'நின் எதிர் போரினில் நிற்பவர் வேறு இலர்; நேமி
                       வியூகமும் நீ
முன் எதிரா, அமர் புரி பொழுது அன்றி, முரண்
                       குலையாது, இனியே.

17
உரை
   

'என்னை வளைத்திட நென்னல் உடன்று வென்னிட்ட
                       வில் ஆசிரியன்,
மன்னை வளைத்து ஒரு சக்கரயூகம் வகுத்து,
                       எதிர் நின்றனனால்;
நின்னை அளித்த தராபதிதன்னையும் நின்னையுமே
                       ஒழியப்
பின்னை எடுத்த விலோடு எதிர் சென்று, பிளந்திட
                       வல்லவர் யார்?
18
உரை
   

'புல்லுக!' என்றனன்; மார்பு உற அன்பொடு புல்லி,
                       'இமைப்பொழுதில்
செல்லுக!' என்றனன், 'வன் சமரத்திடைசென்று,
                       மிகப் பகையைக்
கொல்லுக!' என்றனன், 'நின் புயம் மேவரு கொற்றவைதன்
                       அருளால்
வெல்லுக!' என்றனன்,-அன்று துரோணனை வென்ற
                       பெருந்தகையே.
19
உரை
   


திட்டத்துய்மன் முதலிய மன்னர் சூழ, அபிமன் தேரில் விரைந்து
போர்க்குச் செல்லுதல்

மூத்த தாதைதன் ஏவலின் கழல் முளரி கைதொழுது,
                       உரன் உறச்
சேர்த்த நாணுடை வில்லன், வெய்ய தெரிந்த வாளியன்,
                       முதுகு உறக்
கோத்த தூணியன், வாள் முதல் பல கொற்றம் முற்றிய
                       படையினன்-
பார்த்தன் மா மகன்-இரதமீது உயர் பரிதியாம்
                       என ஏறினான்.

20
உரை
   

வீர வார் கழல் கழலின்மீது விளங்க, மார்பினில்
                       வெண் நிலா
ஆர மாலை துலங்க, மாசுண வலயம் வாகுவில்
                       அழகு எழ,
சேர வானம் அது இருள் அகற்றும் இரண்டு
                       செஞ்சுடர் என்னவே
சார மா மணி குண்டலங்கள் வயங்க,
                       மௌலி தயங்கவே,
21
உரை
   

இனம் செய் கேண்மை கொள் துருபதேயனும், எண்
                       இல் கோடி மகீபரும்,
கனம் செய் தூரியம் எழ வெகுண்டு எறி கால்
                       எனும்படி கை வர,
தினம் செய் நாதன் நடாவு தேர் நிகர் தேர்
                       விரைந்து செலுத்தினான்-
தனஞ்சயன் தலைநாள் முயன்ற தவம் பலித்தன
                       தன்மையான்.
22
உரை
   


சக்கர வியூகம் கெடும்படி அபிமன் அம்புமழை பொழிய, துரோணன் வென்னிடுதல்

ஓதை கொண்டு அணி நின்ற சக்கரயூக மன்னர்
                       உரம்தொறும்
கோதை தங்கு கரத்தில் வில் உதை கூர வாளி
                       குளிக்கவே,
சீதை கொண்கனும், மேவலார் உயிர் தென்புலத்து
                       இடு தன் பெருந்
தாதையும், தரம் என, இமைப்பிடை தாவு தேரினன்,
                       ஏவினான்.

23
உரை
   

அச்சுதப் பெயர் மாதுலன் புகல் அரிய மந்திரம்
                       அன்பினோடு
உச்சரித்து, ஒரு நொடியினில் பல கோடி பாணம்
                       உடற்றினான்-
எச் சிரத்தையும், எப் புயத்தையும், இடை துணித்தலின்,
                       அடைய முன்
வச்சிரத்தவன் உரைசெய் சக்கர மாறு இலா
                       அணி பாறவே.
24
உரை
   

மல்லல் அம் புய அபிமன் வெஞ் சர மழை
                       அனைத்தையும், மால் என,
பல்ல வெங் கணை கொடு விலக்கி, முனைந்து வந்து,
                       எதிர் பற்றினான்;
வெல்ல வந்த துரோண மா முனி விறல் அழிந்தது;
                       குரு எனும்
சொல் அழிந்தது; வில் அழிந்தது; தேர்
                       அழிந்தது;-தொடைகளால்.
25
உரை
   


அசுவத்தாமனும் கன்னனும், அபிமனை எதிர்த்து, நிலைகெட்டுத்
திரும்புதல்

தந்தை வென்னிடு முன்னர், முப்புர தகனனே
                       நிகர் மகன், மிகச்
சிந்தை கன்றி, வெகுண்டு, தேரொடு சென்று,
                       கால் வளை சிலையினால்
உந்துகின்ற சிலீமுகம் பல பகை முகங்களில்
                       உருவவே,
முந்தினான், அவன் அப்பு மாரியின் முழுகினான்,
                       உடல் முற்றுமே.

26
உரை
   

கன்னன் என்று உலகு எண்ணும் வீரனும், மொய்ம்புடன்
                       பல கணைகள் வான்
மின் ஒழுங்கு ஒரு கோடி என்ன நிறுத்தி, மெய்
                       உற வீசினான்;
அன்னவன் பகழிக் குலங்கள் அநேக மோகரம்
                       ஆகையால்,
'என்ன வெஞ் சமம் இனி நமக்கு?' என ஏறு தேருடன்
                       ஏகினான்.
27
உரை
   


கிருபனும் ிருதவன்மாவும் அபிமன்முன் வில் இழந்து
வெறுங்கையோடு ஓடுதல்

கிருப மா முனிதானும் மேதகு கிருதவன்மனும்
                       ஓர் புறத்து
இருவர் ஆண்மையும் நிலை பெறும்படி சென்று
                       தூவினர், ஏவினால்;
ஒருவனே இவன்; இவன் எடுத்ததும் ஒரு
                       சராசனம்; அம்பிலே
வெருவி ஓடினர், தங்கள் ஓர் இரு வில்லும் அற்று,
                       வெறுங் கையே.

28
உரை
   


சகுனியும், அவனது மகன் முதலிய சுற்றமும் வர, அபிமன்
கணையால் சகுனியின் மகன் மடிய, ஏனையோர் ஓடுதல்

சகுனியும், திருமகனும், மற்று உள தமரும், மேல்
                       இடு தானையோடு
'இகல் நெடுங் களம் வென்று கொள்குவம்!' என்று
                       வந்து எதிர் அணுகினார்;
மகன் விழுந்தனன், மார்பின் மூழ்கிய வாளி ஒன்றினில்;
                       மற்று உளார்
மிக நடுங்கி ஒடுங்கி ஓடினர், வீழும் மன்னர்கள்
                       வீழவே.

29
உரை
   


விகன்னன் முதலிய துரியோதனன் தம்பியரும், வேறு
அரசர்களும் வந்து அபிமன் முன் நிற்க இயலாது ஏகுதல்

வில் முகந்து எழு வாளி வாளி விலக்க வந்த
                       விகன்னனும்,
துன்முகன் தலையாக மற்று உள துணைவரும்
                       சமர் துன்னினார்;
நல் முகம் பெறு விசயன் மைந்தனும், 'நான் உமக்கு
                       எதிர் அன்று; நீர்
பின் முகம் பட ஓடி இன்று உயிர் பிழையும்' என்று,
                       உரை பேசினான்.

30
உரை
   

மற்றும் மற்றும் முனைந்து வந்து மலைந்த வெஞ்
                       சின மன்னர் மெய்ம்
முற்றும் முற்றும் இவன் கை வாளிகள் முனை
                       புதைந்திட மூழ்கலால்,
இற்ற இற்ற படைக்கலங்களும், எய்த்த எய்த்த
                       பதாதியும்,
அற்ற அற்ற விதங்கொள் வாகமும் ஆகி ஏகினர்,
                       அடையவே.
31
உரை
   


தருமனிடம் விடை பெற்று, வீமன் பல மன்னர் சூழ, அபிமனுக்கு
உதவ வருதல

இளையவன் தனி மதலை தெவ்வர் இளைக்க
                       இப்படி இகல் செய,
தளை அவிழ்ந்த அலங்கல் மீளி சமீரணன்
                       திருமதலை போய்,
வளைய வன் சிலை மன்னவன் கழல் மலர்
                       வணங்கி, வணங்கலார்
உளைய வந்து அமர் முடுகி நின்றமை கண்டு,
                       சோகமொடு உரைசெய்தான்:

32
உரை
   

'தோல் அநேகம், அநேகம் நேமி, துரங்கமங்கள்
                       அநேகம், நீள்
வேல் அநேகம், அநேகம் வாள், வரி வில் அநேக
                       விதம் பட,
கால் அநேகம் எழுந்தது ஒத்து அமர் ஆடுகின்ற
                       களத்திடை,
பாலனே கடிது ஏகி, வெம் முனை பயிலுவான்
                       ஒரு பாவமே!
33
உரை
   

'எனக்கு நீ விடை நல்குக!' என்று அவன் இரு
                       பதம் தொழுது, யாரினும்
தனக்கு நேர் தனை அல்லது இல் என வெல்ல
                       வல்லது ஓர் தண்டினான்,
மனக்கு நேர் வரு தேரினன், பல மண்டலீகரும்
                       மன்னரும்,
சினக் குழாம் உறு சேனையும், புடை சூழ, அன்று
                       எதிர் செல்லவே,
34
உரை
   


வீமன் சென்ற திசைகளில் எல்லாம் சக்கர வியூகம் சிதைதல்

சாயை ஒத்து எழு சேனையோடு எதிர் தடவி,
                       மன் குல அடவியில்
தீயை ஒத்து விளங்கும் மாருதி சென்று மண்டிய
                       திசையெலாம்,
மாயை ஒத்து ஒரு வடிவம் இன்றி, வகுத்த
                       சக்கர மண்டலம்
ஈயை ஒத்தது; கலுழன் ஒத்தனன், ஈறு இலா
                       அரி ஏறு அனான்.

35
உரை
   

கலிங்கர், சோனகர், மகதர், கன்னடர், கங்கர்,
                       கொங்கணர், கௌசலர்,
தெலுங்கர், ஆரியர், துளுவர், பப்பரர், சீனர்,
                       சாவகர், சிங்களர்,
குலிங்கர், மாளவர், களமர், ஒட்டியர், குகுரர்,
                       கொப்பளர், கூபகர்,
புலிங்க சாலம் எனச் சதாகதி புதல்வனோடு
                       உறு போர் செய்தார்.
36
உரை
   

பொருத பற் பல பாடை மன்னவர் பொன்னிலம்
                       குடி புகுதவே,
விருத வித்தகனுடன் வரும் பல பாடை
                       மன்னவர் வெட்டினார்;
ஒரு திறத்த வலீமுகங்கள் உறுக்கி ஓடி
                       உடன்ற நாள்,
நிருதர் பட்டது பட்டு இறந்தனர், நேமியுள்
                       படும் நிருபரே.
37
உரை
   


படையின் நிலை கண்டு, துரியோதனன், 'சகுனி முதலியோர்
சென்று, அபிமனை வீமன் அணுகாவகை வளைத்தால்,
பின் இருவரையும் வெல்லுதல் எளிதாம்' எனல்

மண்டு கொண்டலின் மிக அதிர்ந்து மருத்தின்
                       மைந்தன் உருத்து எழும்
தண்டு கொண்டு வியூகமாகிய சக்கரத்தை
                       உடைத்தலால்,
விண்டு கொண்டு முருக்கும் மாருதி மீள
                       வந்தனனாம் என,
கண்டு கொண்டனன், வெஞ் சினக் கனல் நின்று
                       காய்தரு கண்ணினான்.

38
உரை
   

'நப முகில் முழங்கி ஏறி இடிவிட நடுநடுநடுங்கி
                       மாயும் அரவு என,
உபரி எழுகின்ற சீயம் வர வர உடையும் இப
                       சங்கம் ஓடுவன என,
அபிமன் ஒருவன் கை ஏவின் நம படை அடைய
                       நெளிகின்றது ஆய பொழுதினில்,
விபினமிசை மண்டு தீயொடு அனிலமும் விரவும்
                       இயல்பு, அந்த வீமன் அணுகிலே.
39
உரை
   

'சகுனியுடன் விந்துபூரி முதலிய தரணிபர் அடங்க
                       ஏகி, மகபதி
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளைமின்,
                       வரு கந்தவாகன் மதலையை;
விகனனும், மடங்கல் போலும் இளைஞரும், விருதர்
                       பலரும், துரோணன் மதலையும்,
இகல் மலையில் இந்த நாழிகையில் இவர் இருவரையும்
                       வென்று கோறல் எளிதுஅரோ!'
40
உரை
   


மன்னன் பணித்தபடி வீரர் சென்று, இருவர் முன்னும் நிற்கலாற்றாது மீளுதல்

என உயர் புயங்ககேது உரைசெய, இவனை விடை
                       கொண்டு வீரர் அனைவரும்,
முனை பட அணிந்து, கால முகில் என முரசினம்
                       முழங்க, ஓடி, எதிர் எதிர்
கனல் என வெகுண்டு, சேனை பல பல கச ரத
                       துரங்க ராசியுடன் வர,
அனில குல மைந்தனான பதியொடும், அபிமனொடும்,
                       வந்து போரில் முடுகவே,

41
உரை
   

விழி மலர் சிவந்து, கோல மதி நுதல் வெயர் வர,
                       இரண்டு தோளும் முறை முறை
அழகு உற விளங்க, மூரல் நிலவு எழ, அணி மகர
                       குண்டலாதி வெயில் எழ,
முழவினொடு சிங்க நாதம் எழ, எழ, முடுகி எதிர்
                       சென்று மோதி, அவர் அவர்
எழில் வடிவம் எங்கும் வாளி உதையினன், இரதமிசை
                       நின்ற வாயு மதலையே.
42
உரை
   

மணி முடி சிரங்களோடு தறிபட, வலயமொடு அணிந்த
                       தோள்கள் தறிபட,
அணி கழலொடு உந்து தாள்கள் தறிபட, அயிலொடு
                       கரங்கள் ஆன தறிபட,
நணிய இரதங்கள் சாய, இவுளிகள் நடுவு அற,
                       வளைந்த சாபம் முதலிய
துணி பட, அழிந்து, மீள நடவினர்-துவச புயகன்
                       பதாதி நிருபரே.
43
உரை
   

விசயன் மகனும், தன்மீது வரும் வரும் விருதர்
                       உடலங்கள் யாவும் நிரை நிரை,
தசை, குருதி, என்பு, மூளை, இவை இவை
                       தரணிமிசை சிந்தி வேறுபட விழ,
அசைய இரதம் கடாவி, வளைதரும் அணி
                       சிலையும் அம்பும் ஆகி, முனை முனை
திசைதொறும் நடந்து சீற, ரவி எதிர் திமிர
                       படலங்கள் ஆன, அடையவே.
44
உரை
   


மீண்ட மன்னரை வசை மொழிந்து, அருகு வந்த
சயத்திரதனோடு துரியோதனன் இன் சொல் பகர்தல

இருவர் எதிரும் பொறாமல் முடுகிய இரு படையும்
                       நொந்து மீள, அவனிபன்
வெருவொடு தளர்ந்து போன நிருபரை மிக வசை
                       மொழிந்து, போத நகைசெய்து,
கருகி முகம், நெஞ்சு கோப அனல்கொடு கதுவி,
                       நயனங்கள் சேய நிறம் உற,
அருகு வரு சிந்துராச திலகனொடு அபரிமிதம்
                       இன் சொலாக உரைசெய்தான்:

45
உரை
   

'மறன் உடையை; செம் பொன் மேரு கிரி நிகர் வலி
                       உடையை; வென்றி கூரும் அரசியல்
அறன் உடையை; பஞ்ச பாணன் என வடிவு அழகு
                       உடையை; நின்ற சேனை அரசரில்
நிறன் உடையை; திங்கள் சூடி வியன் நதி நிறை
                       புனல் பரந்து உலாவு மவுலியர்
திறனுடைய மன்றல் நாறும் மலர் அடி தெளிவொடு
                       பணிந்த ஞான முடிவினை;
46
உரை
   


விசயனையும் அபிமனையும் கொன்றைமாலையை
இடையே இட்டுப் பிரித்து, அபிமனை எளிதில்
வெல்லத் துரியோதனன் உபாயம் உரைத்தல்

'வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன்
                       மருகன்தனோடு வரை புரை
புயம் உடைய தண்ட வீமன் உறில், இரு பொருநரையும்
                       இன்று பூசல் பொர அரிது;
அயல் இவர் அகன்று போகில், அமர் பொர அறவும்
                       எளிது; உண்டு உபாயம்; நுதல் எரி
நயனன் அருள் கொன்றை மாலைதனை இவர் நடு
                       இடில் இரண்டு பாலும் அகல்வரே

47
உரை
   

'அரன் முடி அணிந்த தாமம் இது என அடிகொடு
                       கடந்து போக வெருவுவர்;
பரவை நிகர் நம் பதாதி அவனிபர் பலருடன்
                       வளைந்து கோலி, அமரிடை
வரம் உற வணங்கு நாளில் அருள் செய்து மனம்
                       மகிழ மங்கை பாகன் உதவிய
உரனுடைய தண்டினால் இவ் அபிமனை உயிர்
                       கவர்தல் இன்று சால உறுதியே.'
48
உரை
   


மன்னன் குறித்த வண்ணம் சயத்திரதன் கொன்றை
மாலையை எறிய, வென்று மீண்ட அபிமன், அதனைக்
கடவாது திரும்பவும் பொர வருதல்

என இவன் மொழிந்த போதில், அவன் இவன் இணை
                       அடி வணங்கி, 'யாது நினைவு? இனி,
உனது நினைவு எஞ்சிடாமல், அபிமனை உயிர் கவர்வன்'
                       என்று தேற உரைசெய்து,
கனக தரு மன்றல் மாலை என ஒளிர் கடி இதழி அம்
                       தண் மாலை, பரமனை
மனன் உற உணர்ந்து, நாவில் நிகழ்தரு மறையொடு,
                       வளைந்து வீழ எறியவே,

49
உரை
   

எறி தொடையல், சங்கபாணி மருமகன் இகலும் அமர்
                       வென்று மீளும் அளவையில்,
நெறியிடை விளங்கி வாள கிரி என நிமிர்வு உற
                       வளைந்து சூடி வருதலும்,
அறிவுடன் இறைஞ்சி, 'ஆதி பகவனது அணி முடி
                       அலங்கலாகும்; அடையலர்
முறிய இனி மண்டு போரில் அமர் செய்து, முடிதும்!' என
                       வந்து, மீள முடுகவே,
50
உரை
   


துரியோதனன் சேனைகள் ஓட, வீமன் அபிமன்
நின்ற இடம் குறுக வருதலும், கொன்றைமாலையைக்
கண்டு பின் தங்கி நிற்றலும்

பரிசன குமாரன் விடும்
எரி கணைகளால் முடுகு
தரியலர் பதாதி படை
நெரிய வரு காலையிலே,

51
உரை
   

'விறல் அபிமன் நின்ற களம்
உறுதும், இனி' என்று நனி
குறுகலும், விலங்கியது,
நறை இதழி அம் தொடையே.
52
உரை
   

'இன்று அமரின் யாரும் உயிர்
பொன்றிடினும், ஈசன் அணி
கொன்றை கடவேன்' என, முன்
நின்றனன், நராதிபனே.
53
உரை
   


'மாலையால் பிரித்து அபிமனை வென்று விட இயலாது'
என வீமன் நொந்து கூறி, மீண்டு செல்லுதல

'முந்து வடி வாள் அமரின்
வந்து அணுகுவான், மதலை;
நிந்தனைகொல் ஆம் இது!' என,
நொந்து சில கூறினனே:

54
உரை
   

'இந்த மது மாலை இடை
தந்து, அபிமன் ஆர் உயிரை
உந்திவிடவோ? எளிது,
சிந்து பதி சேவகமே!
55
உரை
   

'விரகு பட, எப்பொழுதும்
முரண் அமர் தொடக்கும் வலி
உரக துவசற்கு ஒழிய,
அரசரில் எவர்க்கு உளதோ?
56
உரை
   

'தன் மகனையும் சமரில்
வன்மையொடு கொன்று ஒழிய,
மன் முனை திரண்டிடினும்,
என் மகன் மடிந்திடுமோ?'
57
உரை
   

என்று, இதழி மாலைதனை
நின்று தொழுது, அன்பினொடு
சென்றனன்-இடிம்பனை முன்
வென்ற திறல் வீமனுமே.
58
உரை
   


மாலை கடவாமல் வந்த அபிமனோடு பொருதல்

மாலை கடவாமல் வரு
பாலன், அரசர்க்கு நடு,
வேலை வடவைக் கனலி
போல் ஒளிர, நின்றனனே.

59
உரை
   

யாளி என நின்ற வய
மீளியை வளைந்து, பல
வாளிகள் பொழிந்தனர்கள்,
கூளிகள் நடம்செயவே.
60
உரை
   

பற்பலரும் அர்த்த ரதர்
வில் பல வணக்கி, எதிர்
சொல் பொலி வயப் பகழி
சிற்சில தொடுத்தனரே.
61
உரை
   

பெய் கணை அடங்க, இவன்
எய் கணை விலக்கியிட,
மொய் கணை அனந்தம் அவர்
மெய்கள் நைய உந்தினனே.
62
உரை
   


கன்னனும் அபிமனும் பொருதல்

கன்னனும், மடங்கல் அபி-
மன்னுவும், உடன்று, முனை
முன் இரதமும் கடவி,
மன் அமர் தொடங்கினரே.

63
உரை
   

அங்கர் பதி தேரில் இவன்
வெங் கணைகள் நாலு விட,
மங்குல் என, நாலு துர-
கங்களும் விழுந்தனவே.
64
உரை
   

தொடுத்த சிலை கோலி, அவன்
எடுத்த சிலையும் கொடியும்
நடுத் தறிய வெட்டி, முனை
கெடுத்தனன், அனந்தரமே.
65
உரை
   


கன்னன் ஏக, துரியோதனன் துணைவர்
வந்து பொருது முதுகிடுதல்

இரவி மகன் ஏகுதலும்,
அரவ துவசன் துணைவர்
விரவினர், வளைந்து தம
புரவி அணி தேர் படவே.

66
உரை
   

விட்ட இரதத்தினொடு
வட்ட வரி வில் குரிசில்
தொட்ட கணை தைக்க, அவர்
கெட்டு, முதுகிட்டனரே.
67
உரை
   


துரோணனும் அசுவத்தாமனும் எதிர் வர, அபிமன்
தான் ஒருவனாய் இருவரையும் வெல்லுதல்

சுகன் நிகர் துரோணனொடு,
மகன், விசயன் மைந்தன் எதிர்
முகன் அமரில் வந்து, புர-
தகனன் என நின்றனரே.

68
உரை
   

நிற்கும் நிலை நின்று, வரி
விற்களும் வளைத்தனர்கள்,
உற்கைகளின் நூறு பல
பொற் கணை தொடுத்தனரே.
69
உரை
   

வரு கணை விலக்கி, எதிர்
பொரு கணைகளாலே,
ஒருவன் ஒர் இமைப் பொழுதில்
இருவரையும் வென்றான்.
70
உரை
   

தேர்முகம் இழந்தும், இரு
கார்முகம் இழந்தும்,
போர்முகம் இழந்தும், அவர்
நேர் முகம் இழந்தார்.
71
உரை
   


துன்முகன் அமர் செய்து, கிரீடம் இழத்தல

துன்முகனும், அன்று அமரின்
முன் முன் அமர் செய்தே,
வன்மிகம் மறிந்தது என
நல் முடி தறிந்தான்.

72
உரை
   


சல்லியனும் அவன் மகன் உருமித்திரனும் வர,
அபிமனால் உருமித்திரன் உயிர் இழக்க, அவன் புறகிடுதல்

சித்திர வில் வீரன் எனும்
மத்திரர் பிரானும்,
புத்திரரில் ஆதி உரு-
மித்திரனும், வந்தார்.

73
உரை
   

வந்து, அபிமனோடு அமரின்
முந்தி, இருவோரும்
சிந்து கணை மாரிகளின்
அந்தரம் மறைத்தார்.
74
உரை
   

அவர் அவர் எடுத்த இரு
தவரும் நடு வெட்டா,
இவர் கணை விலக்குவன
கவர் கணை தொடுத்தான்.
75
உரை
   

மைந்தன் ஒரு வாளியினில்
அந்தரம் அடைந்தான்;
நொந்து பல வாளியொடு
தந்தை புறகிட்டான்.
76
உரை
   


அபிமனால் இறந்தோரும் உடைந்து ஓடினோரும் பலர்

வென்று அமரில் வாள் அபிமன்
நின்ற நிலை கண்டே,
ஒன்று பட மா இரதர்
சென்றன உடைந்தே.

77
உரை
   

கெட்டவர்கள் இன்னர் என
முட்ட உரைக்கொண்ணா;
பட்டவர் அநேகர், இவன்
விட்ட கணையாலே.
78
உரை
   


பிளப்புண்ட பகைவரின் சக்கர வியூகத்தில் அபிமன் புகுதல்

முன் சக்ரயூகம் பிளப்புண்ட பின், முன்பினோடும்
பொன் சக்ரம் என்ன வெறித் தாமம் பொலிந்து சூழ,
வில் சக்ரம் ஆக, மணித் தேரினின்மீது நிற்பான்,
கல் சக்ரம் ஆக நடு ஊர் செங்கதிரொடு ஒத்தான்.

79
உரை
   

வடாதும் தெனாதும், பர ராசர் வகுத்த நேமி,
குடாதும் குணாதும், அவற்று உட்படு கோணம் நான்கும்,
விடாது உந்து தேரின்மிசை எங்கும் விராய போது,
சடா துங்க மௌலிப் புரசூதனன் தன்னை ஒத்தான்.
80
உரை
   


அரசகுமாரர்கள் பதினாயிரர் சூழ, துரியோதனன்
மகன் வந்து அபிமனை வளைந்து, அவன்
முன் நிற்க ஆற்றாது ஓடுதல்

'வில் மைந்து கொண்டு தகுவோர்தமை வென்ற வீரன்
நல் மைந்தனுக்கு முதுகு இட்டனர்' என்று நாணி,
மன் மைந்தர் எண் இல் பதினாயிரர் வந்து சூழ,
தன் மைந்தனையும் உடன் ஏவினன், சர்ப்பகேது.

81
உரை
   

மேல் வந்த வேந்தன் மகனும், பல வேந்தும், ஊழிக்
கால் வந்து வேலைக் கடல்தன்னைக் கலக்குமாபோல்,
நூல் வந்த கொற்றச் சிலை ஆசுகம் நொய்தின் ஏவி,
மால் வந்த கைக் குன்று அனையானை முன்
                  வந்து சூழ்ந்தார்.
82
உரை
   

முன் முன்பு முந்திப் பலர் ஏவிய மூரி வாளி
தன் முன்பு தூவும் மலர்போல் இரு தாளில் வீழ,
வில் முன்பு உடையோன் ஒரு வில்லின்
                   விசித்த அம்பால்,
பின் முன்பு பட்ட, பல கோடி பிறங்கு சேனை.
83
உரை
   

அரவு உயர்த்தவன் மதலையொடு, அடலுடை அரசர்
                   புத்திரர் அனைவரும், எழு பரி
இரவி பொன் கதிர் தெறுதலின் இரிதரும் இருள் என,
                   திசை திசை தொறும் முதுகிட,
உரனுடைப் பணை முழவு உறழ் திணி புயன் ஒரு
                   சமர்த்தனும், ஒரு தனி இரதமும்,
விரவி, முன் பொரு களம் அழகுறும்வகை விறல் வயப்
                   புலி என எதிர் முடுகவே,
84
உரை
   


அபிமன் எதிர் வந்த இலக்கணகுமரனோடு பொருது,
அவனது உயிரைப் போக்குதல்

வளைய முத்து உதிர் விழியுடை வரி சிலை மதனன்
                   மைத்துனன், அவனிபர் பலரையும்
இளை எனப் புறமிட அமர் பொருத பின், இளைய
                   வித்தகன் எதிருற வருதலும்,
முளை எயிற்று இள நிலவு எழ, அகல் வெளி முகடு
                   உடைப்பது ஓர் நகை செய்து கடவினன்,
உளை வயப் பரி இரதமும் இரதமும் உரனொடு ஒத்தின,
                   உருள்களும் உடையவே.

85
உரை
   

ரகு குலத்தவன் இளவலும், நிசிசரர் இறை அளித்தருள்
                   இளவலும், இருவரும்
நிகர் என, துணை விழி கடை நிமிர்தர, நெறி கடைப்
                   புருவமும் மிக முரிதர,
முகில் இடித்தென, எழு கடல்களும் மிக மொகுமொகுத்தென,
                   அனிலமும் அனலமும்
உகம் முடித்தென, முறை முறை பல பல உரையெடுத்தனர்,
                   ஒருவரொடு ஒருவரே.
86
உரை
   

'ஞெலி மரத்தினும் மனன் எரி எழ எழ, நிருபர்
                   விட்டன கச ரத துரகமும்
மெலிவு எழப் பிறகிடவும், நின் ஒரு தனி விறல்
                   குறித்து இரதமும் எதிர் கடவினை;
ஒலிபடுத்து எதிர் வரின், விரி சுடர் எதிர் உலவு
                   விட்டிலின் உயிர் அழிகுவை!' என,
வலியுறுத்தினன், அவனிபன் மதலையை, வலிய
                   வச்சிரன் மதலைதன் மதலையே.
87
உரை
   

இவனும், அப்பொழுது எதிர் ஒலி என, நனி இகல்
                   அருச்சுனன் மதலையை, 'உனது உயிர்
அவனிபர்க்கு எதிர் கவருவன், ஒரு நொடி அளவையில்
                   பொருது!' என, முனை அணுகினன்.
சிவன் வளைத்த பொன்மலையினும் வலியின சிலை
                   வளைத்தனர் இருவரும்; எறிதரு
பவனன் மைக் கடல் வடவையின் முனிதரு பருவம்
                   ஒத்தது, படுகளம் முழுதுமே.
88
உரை
   

துரகதத்து உடல் கெழுமின சில கணை; துவசம்
                   அற்றிட விரவின சில கணை;
இருவர் நெற்றியும் எழுதின சில கணை; இரு
                   புயத்திடை சொருகின சில கணை;
அரணி ஒத்து எரி கதுவின சில கணை; அகல்
                   முகட்டையும் உருவின சில கணை;
முரண் இலக்கணகுமரனும் அபிமனும், முடுகி,
                   இப்படி முரண் அமர் புரியவே,
89
உரை
   

மழை முகிற்குலம் நிகர் திரு வடிவினன் மருகன்
                   முட்டியும், நிலையும், மெய் வலிமையும்,
அழகு உறத் தொடு கணை குருபதி மகன்
                   அவயவத்தினில் அடைவுற முழுகின;
கழல்கள் அற்றன; இரு தொடை நழுவின; கவசம்
                   அற்றது; கர மலர் புயமுடன்
முழுதும் அற்றன; ஒளி விடு நவ மணி முகுடம்
                   அற்றது, முகிழ் நகை முகனொடே.
90
உரை
   


தன் மகன் இறந்தது கேட்டு, கண்ணீர் சொரிய நின்ற
துரியோதனன், 'இப்பொழுதே அபிமனைச் செகுக்க
வேண்டும்' என மன்னர்களுக்கு ஆணையிடுதல்

'இலக்கணகுமரன், வெங் கான் எரித்தவன்
                   குமரன் ஏவால்,
அலக்கண் உற்று, ஆவி மாய்ந்தான், அமரிடை'
                   என்று கேட்டு,
கலக் கணீர் சொரிய நின்று, கண்ணிலி
                   குமரன் வெம்பி,
வலக்கண் நேர் முனிவரோடும் மன்னவரோடும்
                   சொல்வான்:

91
உரை
   

'மன்னவர் மைந்தரோடு என் மைந்தனைக்
                   கொன்ற மைந்தன் -
தன்னையும் இமைப்பில் சென்று சயம் உறச்
                   செகுத்திலீரேல்,
பின்னை இவ் அரசும் வேண்டேன்; பெருமித
                   வாழ்வும் வேண்டேன்;
என் உயிர் தானும் வேண்டேன்' என்றனன்,
                   இராசராசன்.
92
உரை
   

தனித் தனி அரசர் எல்லாம், தாள் இணை
                   பணிந்து போற்றி,
'பனித்து உயிர் பொன்றி வீழ, பார்த்தன் மா
                   மகனை, இன்னே
குனித்த வில் நிமிராவண்ணம் கொடுஞ் சமர்க்
                   கொன்றிலேமேல்,
இனித் தனு என்று போரில் எடுக்கிலேம்,
                   இறைவ!' என்றார்.
93
உரை
   


அசுவத்தாமன், துரோணன், மற்றும் மன்னர்கள்,
யாவரும் ஒன்றுகூடி, அபிமனை வளைத்தல

குன்ற வில்லவனை ஒக்கும் குமரனும்,
                   பகைகள் ஆறும்
வென்ற வில் முனியும், மற்றும் வேந்தராய்
                   அருகு தொக்கு
நின்ற வில் விருதர் யாரும், நிருபன் மா
                   மதலை ஆவி
பொன்ற வில் வளைத்தோன் தன்னைப் புலி
                   வளைந்தென்னச் சூழ்ந்தார்.

94
உரை
   

போர் ஒரு முகத்தால் அன்றி, பொருப்பு
                   ஒன்றில் புணரி ஏழும்
கார் ஒரு முகமாய் மொண்டு கணக்கு அறப்
                   பொழியுமாபோல்,
தேர் ஒரு வளையமாகச் சென்று, திண்
                   சிலைகள் கோலி,
ஓர் ஒரு வீரர் கோடி ஆசுகம் உடற்றினாரே.
95
உரை
   


அபிமன் எய்த அம்பினால், பலர் உயிர்
இழத்தலும் சின்னபின்னப் படுதலும்

தரணிபர் எய்த எய்த சரங்களைச் சரங்களாலே
முரண் அற விலக்கி, பாதம் முடி அளவாக,
                   அந்தக்
கரணமும் புலனும் மெய்யும் கலங்கி, அக்
                   கணத்தில் யாரும்
மரணம் என்று உன்ன, வல் வில் வளைத்தனன்,
                   வளைவு இலாதான்.

96
உரை
   

ஆகவம்தன்னில் முந்த மனு குலத்து அரசன்
                   பட்டான்;
கேகயன் குமரன் மாய்ந்தான்; கிருபன் வில்
                   ஒடிந்து மீண்டான்;
மாகதக் குரிசிலோடு மகுடவர்த்தனர் அநேகர்
நாகம் உற்றனர்கள்; கோடி நரபதி குமரர் வீந்தார்.
97
உரை
   

சிலை அழிந்தவர் அநேகர்; தேர் அழிந்தவர் அநேகர்;
தலை அழிந்தவர் அநேகர்; தாள் அழிந்தவர் அநேகர்;
நிலை அழிந்தவர் அநேகர்; நெஞ்சு அழிந்தவர் அநேகர்;
துலை அழிந்தவர் அநேகர்; தோள் அழிந்தவர் அநேகர்.
98
உரை
   

இனைவு அருஞ் சகுனி மைந்தர் எழுவரும்,
                   துணைவர் உள்ளார்
அனைவரும், ஆவி மாள அமர் அழிந்து,
                   அவனும் போனான்;
துனை வரும் புரவித் தேர்த் துச்சாதனன்
                   துணைவரோடு
முனை வரும் அளவில், பாலன் முனை வெரீஇ,
                   முதுகு தந்தான்.
99
உரை
   


காவலர் உடைதல் கண்டு, கன்னனைத் துரியோதனன் அனுப்புதல்

காவலர் உடைதல் கண்டு, கன்னனை அரசன்
                   பார்த்து,
'கேவலம் அல்ல இப் போர், கிரீடி வந்து
                   இவனைக் கூடின்;
நீ வலையாகின் சென்று, நேர் மலைந்து
                   அடர்த்தி' என்ன,
கோவலன் மருகன்தன்னைக் குறுகினன்,
                   கொடையால் மிக்கோன்.

100
உரை
   


கன்னன் முதலில் அபிமனால் தன் தேர் முதலியன
இழந்து, பின் மீண்டும் வந்து பொருது, அபிமனுடைய
தேர் முதலியவற்றைச் சிதைத்தல்

மன் முரி குவவுத் திண் தோள் வாசவன்
                   பேரன்தன்னோடு
அல் முரி இரவி மைந்தன் அருஞ் சமர்
                   விளைத்த காலை,
செல் முரிந்தென்ன ஏறு தேர் முரிந்து,
                   எடுத்த வாகை
வில் முரிந்து, உள்ளம்தானும் மிக முரிந்து,
                   உடைந்து மீண்டான்.

101
உரை
   

தேறினான்; தேறி, துச்சாதனன் தரும் செம்
                   பொன் தேரின்
ஏறினான்; மீள வில்லும் எரி கணை பலவும்
                   கொண்டு
தூறினான்; அபிமன் செங் கைத் தொடைகளால்
                   எதிர்த்தல் அஞ்சி
மாறினான், முகமும் தேரும் வரி வில்லும்
                   அழிந்து மன்னோ.
102
உரை
   

தூண்டினன், மேலாள் ஆகி, துனை பரித்
                   தடந் தேர் தூண்டி,
மீண்டனன் காலாள் ஆகி விழுந்தனன்;
                   தெளிந்து, மீளத்
தாண்டின பரித் தேர் தேடி, சாபமும் தேடி,
                   நெஞ்சால்
பூண்டனன், பொருவான்-தன் கைப் பொரு
                   கணைப் புயங்கம் போல்வான்.
103
உரை
   

வில் குனித்து, இரவி மைந்தன் விடும் விடும்
                   கணைகள் பட்டு,
பற்குனன் மைந்தன் திண் தேர்ப் பரிகளும்
                   பாகும் பட்டு,
முன் குனித்து எய்த வில்லும் முரிந்தது;
                   மூரித் தேரும்
நிற்கும் நல் நிலைமை குன்றி, நேமியும்
                   நெறிந்தது அன்றே.
104
உரை
   


தேர் இழந்த அபிமன் வாள் ஏந்தி,
தரையில் பாய்ந்து பொருதல்

தன்னை அத் தனயன் செய்த தாழ்வு எலாம்
                   தனையன்தன்னை
பின்னை அத் தந்தை செய்து, பின்னிடாது
                   அசைந்து நிற்ப,
முன்னைய புரவித் தேரும் மூரி வெஞ்
                   சிலையும் இன்றி,
மின்னை ஒத்து இலங்கும் வாளோடு அவனிமேல்
                   விரைந்து பாய்ந்தான்.

105
உரை
   

வாளொடு பரிசை ஏந்தி, மண்டலம்
                   பயிற்றி, இற்றை
நாளொடு துறக்கம் எய்த நயந்தனன்
                   நின்ற வீரன்,
தோளொடு புரையும் செம் பொன் மேருவைச்
                   சுடரோன் நாகக்
கோளொடு சூழ்வது என்ன, சுழற்றினான்,
                   குமரர் ஏறே.
106
உரை
   

'தேர் போனது; பரி போனது; சிலை போனது;
                  சிறுவன்
போர் போனது; இனிச் சென்று அமர் புரிவோம்
                   என நினையா,
கார்போல் நனி அதிரா, இதழ் மடியா,
                   எறி கடல்வாய்
நீர்போல் உடன் மொய்த்தார்,-வெருவுற்று
                   ஓடிய நிருபர்.
107
உரை
   


துச்சாதனன் மகன் துச்சனி, 'அபிமனை மாய்ப்பேன்!'
என வந்து, அவன் வாளினால் மடிதல்

துச்சாதனன் மகன், மன்னர் தொழும் துச்சனி
                   என்னும்
நச்சு ஆடு அரவு அனையான், 'இனி நானே
                   பழி கொள்வேன்,
இச் சாயகம் ஒன்றால்!' என எய்தான்; அவன்
                   முடியோடு
அச் சாயகம் வடி வாள்கொடு அறுத்தான்,
                   அடல் அபிமன்.

108
உரை
   


அது கண்டு துரோணன் அம்பு பல எய்ய, அபிமன்
தன் வாளால் அவற்றைத் துணித்து, அவனது
தேர் முதலியவற்றையும் சிதைத்தல்

துரியோதனன் மகனும், பொரு துச்சாதனன்
                   மகனும்,
புரி யோதன முனை வென்றமை புரி வில்
                   முனி கருதா,
அரி ஓம் எனும் மறையால் அடல் அம்பு
                   ஆயிரம் எய்தான்;
வரி ஓலிடு கழலான், அவை வாள் கொண்டு
                   துணித்தான்.

109
உரை
   

சொரியும் கணை மழை ஏவு துரோணாரியன் வில்லும்,
பரியும், கடவு இரதத்தொடு பாகும் பல பலவாய்
முரியும்படி, வடி வாள்கொடு மோதா, அமர் காதா,
விரியும் சுடர் என நின்றனன், விசயன் திருமகனே.
110
உரை
   


பின்னும் துரோணன் மும்முறை தேர் இழந்து,
மீண்டும் தேரில் வந்து வாளியினால்
அபிமனது வலக்கையைத் துணித்தல்

ஒருக் கால் அழி தேர் அன்றியும், உருள் ஆழி
                       கொள் தேர்மேல்
இருக் கால் வர, முக் கால் வர, எக் காலும்
                       அழித்தே,
பெருக்கு ஆறு அணை செய்தொத்து, அவிர்
                       பிள்ளைப் பிறை அனையான்,
செருக்கால் நகை செய்தான், வரி சிலை
                       ஆசிரியனையே.

111
உரை
   

முன்னும் சுருதியினால் உயர் முனி, வீரனை முனியா,
பின்னும், பனி வரைபோல் ஒரு பெருந் தேர்மிசை
                       கொள்ளா,
மன்னும் சிலை குனியா, முனை வடி வாளொடு கையும்
மின்னும் பிறை முக வாளியின் வீழும்படி விட்டான்.
112
உரை
   

பேணார் உயிர் பருகும் பசி பெட்ப, பகு வாய் வெங்
கோள் நாகம் உலாவந்து, எதிர், கொடுநா எறிவதுபோல்,
பூண் ஆர் கடகக் கையொடு புகர் வாளமும் மண்மேல்,
நீள் நாகர் வியக்கும்படி, விழ, மீளியும் நின்றான்.
113
உரை
   

இரு தோள்களின் ஒரு தோள் முனி இகல்
                       வாளியின் விழவும்,
ஒரு தோள் கொடு பொர நிற்பது ஒர் மத
                       வாரணம் ஒத்தான்-
கருது ஓகையொடு அளகாபதிதனயோர் கதி பெற, முன்
மருது ஓர் அடி இணை சாடிய மாயன் திருமருகன்.
114
உரை
   


ஒற்றைக் கையோடு நின்ற அபிமன்,
கண்ணனிடம் பெற்ற மந்திரத்தால், ஓர்
உருளையைச் சக்கரமாக்கிப் பொருதல்

தன் மாதுலன் முதல் நாள் உரைதரு மந்திரம் ஒன்றால்,
எல் மா மணி உருள் ஒன்றினை எறி சக்கரம் ஆக்கி,
கல் மாரி விலக்கும் கிரி என, மேல் வரு கருதார்
வில் மாரி விலக்கா, அதுகொடு யாரையும் வீழ்த்தான்.

115
உரை
   


ஒரு கையுடன் சக்கரத்தால் அபிமன் செய்யும் போர்
கண்டு புழுங்கி, துரியோதனன் சயத்திரதனை அழைத்து,
அபிமன் உயிர் கவர ஏவுதல்

ஒரு கையினில் உருள் நேமிகொடு ஓடித் திசைதோறும்
வரு கை அற எறிவான் உயர் வனமாலியை ஒத்தான்;
இரு கை ஒருவரை மண்ணில் இறைஞ்சா முடி இறைவன்
பொருகை அற, அபிமன் பொரு போர் கண்டு புழுங்கா,

116
உரை
   

'ஒருவன் நம் படைத் தலைவர்கள் எவரையும் ஒரு கை
                  கொண்டு அடல் திகிரியின் விழ
எதிர்பொருவது என் கொல்? இச் சிறுவனொடு ஒரு படி
            பொழுது சென்றது; எப்பொழுது அமர் முடிவது?
வெருவரும் திறல் தரணிபர்களில் இவன் விளிய
                  வென்றிடத் தகுமவர் இலர்; இனி
அருளுடன் சயத்திரதனை அழை' என, அவனும் வந்து
                  புக்கனன் ஒரு நொடியிலே.
117
உரை
   

'அருகு நின்ற கொற்றவர்களும், அவர் அவர் அரிய திண்
                       திறல் குமரரும், அமரில் உன்
மருகனும் படப் பொருதனன்; மகபதி மகன் மகன்தனைப்
                       பசுபதி அருளிய
உரு கெழும் கதைப் படைகொடு கவருதி உயிரை' என்று
                       எடுத்து உரைசெய, அரசனை
இரு கையும் குவித்து, அருளுடன் விடைகொளும் எழில்
               கொள் சிந்துவுக்கு ஒரு தனி முதல்வனே.
118
உரை
   


சயத்திரதன் கதையுடன் பொர வர, பகைவர்
களத்தே இட்டு ஓடிய ஒரு கதையை அபிமன்
கையில் தாங்கிச் செருப் புரிதல்

உரக வெங் கொடித் தரணிபன் அலமரும் உளம்
                       மகிழ்ந்திட,'கதி பல பட வரு
துரகதம் பிணித்து, அணி கொள் இரதமிசை துவசமும்
                       தொடுத்து, அடல் உடை வலவனை,
'விரைவுடன் செலுத்துக' என, உரைசெய்து, விழி
                       சிவந்து, சிற்றிள மதி புனைதரு
கரக வண் புனல் சடை முடியவன் அடி கருதி நின்று,
                       எடுத்தனன், ஒரு கதையுமே.

119
உரை
   

மறலி தண்டு எனக் கொலை புரி தொழில் மிக வலிய
                  தண்டு கைக் கொளும் அளவினில், இவன்
விறல் புனைந்த கைத் திகிரியை ஒழிய, முன் வினை
                 அழிந்து பற்றலர் முதுகிட விழு
திறல் விளங்கு பொன் கதைகொடு, விரைவொடு திருகி,
                  'நின் கதைக்கு இது கதை' என உரை
உற விளம்பி, அப் பொரு களம் முழுவதும் உரும்
                  எறிந்தது ஒத்து உவகையொடு அதிரவே,
120
உரை
   

சினவும் சிங்கம் ஒத்து, இருவரும் முறை முறை திருகி,
                  வெஞ் செருப் புரிதலின், எழும் ஒலி,
கனல் வளைந்து சுட்டு அனிலமும் எறிதரு கடல்
                  அதிர்ந்தென, கனம் அதிர்வன என,
மினல் பரந்து எழத் திசைகளின் முடிவு உற, வெடிகொடு
                  அண்டபித்தியும் உடைதர எழ,
மனம் அழன்று பொற் கிரி நிகர் தம புய வலிமை
                 ; கொண்டு உடற்றினர், வயம் மலியவே.
121
உரை
   

உரிய சிந்துவுக்கு அரசனது இரு புயம் ஒடிய, என்பு
                  நெக்கு உடல் முரிதர, உரம்
நெரிய, வெங் குடர்க் கொடி நெடு வளையமும் நிமிர,
                  வன் தொடைப்புடை மிடை நடை உற,
அரிய கண் கனல் பொறி எழ, மணிமுடி அழகு அழிந்து
                  பொற் பிதிர்பட, உதிர்பட,
எரி எழும் சினத்தொடு தனது ஒரு கையின் இலகு தண்டம்
                  இட்டு, இகலுடன் எறியவே,
122
உரை
   

வசை அறும் புகழ்க் குருகுல திலகனை, மருது இரண்டு
                  ஒடித்தவர் திருமருகனை,
விசயன் மைந்தனை, பணை முகில்மிசை வரு விபுதர்தம்
                  குலத்து அதிபதி பெயரனை,
அசைவு இல் வன் திறல் பகை முனை நிருபரை அடைய
                  வென்ற கட்டழகுடை அபிமனை,
இசை கொள் சிந்துவுக்கு அரசனும் ஒரு கதை இரு கை
                  கொண்டு எடுத்து இகலுடன் எறியவே,
123
உரை
   


சயத்திரதனது தேர் முதலியவற்றை அபிமன் அழிக்க,
அவனும் தரையில் குதித்துக் கதை கொண்டு பொருதல்

கரம் இழந்து மற்று ஒரு கரமிசை ஒரு கதை கொள்
                  வெஞ் சினக் களிறு அனையவன், இவன்
இரதமும் தகர்த்து, உறு கதியுடன் வரும் இவுளியும்,
                  துணித்து, அடலுடை வலவனை
முரணுடன் புடைத்து, அணி துவசமும் விழ முதுகு
                  கண்ட பின், சரபம்அது எனும் வகை
அரன் வழங்கு பொன் கதையுடன் அவனியில் அவனும்
                  முன் குதித்து, அடலுடன் முனையவே,

124
உரை
   

பதயுகங்கள் ஒத்திய வலி பல கண பண புயங்கர்
                  பற்பல முடி சிதறின;
எதிர்கொள் தண்டம் மொத்திய ஒலி திசைகளில் இபம்
                  அடங்க மெய்ப் பிடியொடு சிதறின;
கதியில் வந்த சித்திரம் என முறை முறை கதுவி
                  மண்டலித்து, ஒரு பகல் முழுவதும்
அதிசயம் படப் பொருதனர், எதிர் எதிர், அபிமனும்
                  சயத்திரதனும் அமரிலே.
125
உரை
   


அபிமனது போர்த்திறம் கண்டு, யாவரும் வியத்தல்

உலைவு இல் தண்டினில் பரிசனன் மதலையும் உவமை
                  இன்று என, பகழியின் மழை பொழி
சிலையின் வன் தொழில் திறலுடை மகபதி சிறுவனும்
                  தனக்கு எதிர் இலன் இனி என,
மலையும் வெஞ் சமத்து, ஒரு தனி முது புய வலிமை
                  கண்டு, பொற்புறு கழல் அபிமனை,
அலை நெடுங் கடல் தரணிபர் அனைவரும், அமரரும்
                  துதித்தனர், முகடு அதிரவே.

126
உரை
   

கழுகு பந்தர் இட்டன, மிசை; விசையொடு கழுது
                  இனங்கள் இட்டன, பல கரணமும்;
எழு கவந்தம் இட்டன, பல பவுரிகள்; இரு புறங்கள்
                  இட்டன எதிர் அழிபடை;
ஒழுகு செம் புனல் குருதியின் வரு நதி உததியும்
                  சிவப்பு உறும்வகை பெருகலின்,
முழுகி எஞ்சி இட்டன, சுழி இடை இடை முகிலின்
                  வெங் குரல் கச ரத துரகமே.
127
உரை
   

முறைமை இன்றி, எத் தரணிபர்களும் எதிர் முடுக வந்து,
                  முன் தெறுதலின், அவர் அவர்
பொறை அழிந்து கெட்டு, அனைவரும் வெருவொடு
                  புறமிடும்படிக்கு ஒரு தனி பொருத பின்,
நிறை வலம்புரித் தொடை கமழ் புயகிரி நிருப துங்கன்
                  மைத்துனன் உளம் வெருவர,
அறை பெருங் கதைப் படைகொடு வலியுற அமர் புரிந்து
                  இளைத்தனன், அடல் அபிமனே.
128
உரை
   


அபிமன் தளர்வுற்ற நிலையில் சயத்திரதன் கதையினால்
அவனை மாய்த்தல்

இவன் மயங்கி மெய்த் தளர்வுடன் மெலிவுறும் இறுதி
                  கண்டு, 'இனித் தெறுவது கடன்' என,
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு
                  வந்து அடுத்து, அணி புய வலிகொடு
சிவனை அஞ்செழுத்து உரைசெய்து, தொழுது, ஒரு
                  சிகர தண்டம் விட்டு எறிதலின், எறிதரு
பவனன் அன்று குத்தின கிரி என விசை பட விழுந்தது,
                  அப் பரு மணி மகுடமே.

129
உரை
   

தலை துணிந்து தத்திட விழ, இவன் ஒரு தனது திண்
                  கையில் கதைகொடு தரியலன்
நிலை அறிந்து புக்கு உரன் உற எறிதலின், நெரிநெரிந்தது,
                  அத் தரணிபன் உடலமும்;
மலை மறிந்தது ஒத்து அபிமனது உடலமும் மகிதலந்தனில்
                  தரி அற விழுதலின்,
அலை எறிந்து மைக் கடல் புரளுவது என, அரவம்
                  விஞ்சியிட்டது களம் அடையவே.
130
உரை
   


அபிமனது மறைவுக்குக் கவி இரங்குதல்

மாயனாம் திருமாமன்; தனஞ்சயனாம் திருத்தாதை;
                  வானோர்க்கு எல்லாம்
நாயனாம் பிதாமகன்; மற்று ஒரு கோடி நராதிபராம்
                  நண்பாய் வந்தோர்; சேயனாம்
அபிமனுவாம், செயத்திரதன் கைப்படுவான்! செயற்கை
                  வெவ்வேறு
ஆய நாள், அவனிதலத்து, அவ் விதியை வெல்லும்
                  விரகு ஆர் வல்லாரே?

131
உரை
   

சேடன் முடி நெளிய வரு செம் பொன் தேர் அழிவதோ,
                  அந்தோ, அந்தோ!
கேடக வாள் அணி வலயக் கிளர் புயத் தோள் அறுவதோ,
                  அந்தோ, அந்தோ!
கூடக வெங் கதை ஒன்றால் சிந்து பதி கொல்வதோ,
                  அந்தோ, அந்தோ!
ஆடு அமரில் ஒருவரும் வந்து உதவாமல் இருப்பதோ,
                  அந்தோ, அந்தோ!
132
உரை
   

கன்னனையும் தேர் அழித்தான், கந்தனிலும் வலியனே,
                  அந்தோ, அந்தோ!
மன்னவர் ஐவரும் இருக்க, மைந்தன் உயிர் அழிவதே,
                  அந்தோ, அந்தோ!
பொன்னுலகோர் வியந்து உருகிப் புந்தியினால் மலர்
                  பொழிந்தார், அந்தோ, அந்தோ!
அன்ன நெடுந் துவசன் இவற்கு ஆயு மிகக் கொடுத்திலனே,
                  அந்தோ, அந்தோ!
133
உரை
   

சரம் அறுத்தான், வில் அறுத்தான், கொடி அறுத்தான்,
                  தேர் அறுத்தான், சமர பூமி
உரம் அறுத்தான், முதல் பொருத உதய தினகரன்
                  மைந்தன்; உடன்று சீறிக்
கரம் அறுத்தான், நடுப் பொருத கார்முகத்தின் குரு;
                  விசயன் காளைதன்னைச்
சிரம் அறுத்தான், பின் பொருத சயத்திரதன்; இவன்
                  வீரம் செப்பலாமோ!
134
உரை
   


பகைப்புலத்தாரின் மகிழ்ச்சி

எட்டு ஆனைத் தம்பமுடன் சயத் தம்பம் நாட்டிய
                  பேர் இறைவன் மைந்தன்
பட்டான் என்பது கேட்டுத் திருகினார், முதுகிட்டுப்
                  பறந்த வீரர்;
ஒட்டாமல் செயிர் அமரில் உயிர் இழந்த தன் புதல்வற்கு
                  உருகும் சோகம்
விட்டான், 'வெஞ் சமரம் இனி வென்றோம்!' என்று
                  உட்கொண்டான், வேந்தர் வேந்தன்.

135
உரை
   

'ஓர் இரண்டு வயவர் முனைந்து உடன் பொருதல்
                  உலகியற்கை; ஒருவன் தன்மேல்
போர் இரண்டு புறமும் வளைந்து, ஒரு கோடி முடி
                  வேந்தர் பொருது கொன்றார்;
தேர் இரண்டு கிடையாத குறை அன்றோ, களத்து
                  அவிந்தான், சிறுவன்!' என்று என்று,
ஈர்-இரண்டு பெயர் ஒழிய மற்று உள்ளார் அழுது
                  இரங்கி என் பட்டாரே!'
136
உரை
   


தருமன் அபிமனது மரணச் செய்தி கேட்டுப் புலம்புதல்

'தாள் விசயம் பெற முனைந்து, சக்கரயூகம் பிளந்து,
                  தானே நின்று,
வாள் விசயன் திருமதலை, வானோரும் வியந்து
                  உரைக்க, மாய்ந்தான்!' என்று,
வேள்வியினால், உண்மையினால், திண்மையினால்,
                  தண் அளியால் விறலால், பல் நூற்
கேள்வியினால் மிகுந்து, எவர்க்கும் கேளான
                  உதிட்டிரனும் கேட்டான் அன்றே.

137
உரை
   

' "பிறந்த தினம் முதலாகப் பெற்றெடுத்த விடலையினும்
                  பீடும் தேசும்
சிறந்தனை"என்று உனைக் கொண்டே தெவ்வரை வென்று
                  உலகு ஆளச் சிந்தித்தேன் யான்;
மறந்தனையோ, எங்களையும்? மாலையினால்
                  வளைப்புண்டு, மருவார் போரில்
இறந்தனையோ? என் கண்ணே! என் உயிரே! அபிமா!
                  இன்று என் செய்தாயே!
138
உரை
   

'தேன் இருக்கும் நறு மலர்த் தார்ச் சிலை விசயன்
                  இருக்க, வரைத் திண்தோள் வீமன்-
தான் இருக்க, மா நகுல சாதேவர் தாம் இருக்க,
                  தமராய் வந்து
வான் இருக்கின் முடிவான மரகத மா மலை இருக்க,
                  வாழ்வான் எண்ணி
யான் இருக்க, வினை அறியா இளஞ் சிங்கம் இறப்பதே?
                  என்னே! என்னே!
139
உரை
   

'நின்றனையே எனைக் காத்து; "நீ ஏகு" என்று யான்
                  உரைப்ப, நெடுந் தேர் ஊர்ந்து
சென்றனையே இமைப் பொழுதில்; திகிரியையும்
                  உடைத்தனையே; தெவ்வர் ஓட,
வென்றனையே; சுயோதனன்தன் மகவுடனே மகவு
                  அனைத்தும் விடம் கால் அம்பின்
கொன்றனையே; நின் ஆண்மை மீண்டு உரைக்கக்
                  கூசினையோ?-குமரர் ஏறே!
140
உரை
   

'உனக்கு உதவி ஒருவர் அற, ஒரு தனி நின்று
                  அமர் உடற்றி, ஒழிந்த மாற்றம்,
தனக்கு நிகர் தான் ஆன தனஞ்சயனும் கேட்கின்,
                  உயிர் தரிக்குமோதான்?
எனக்கு அவனி தர இருந்தது இத்தனையோ?
                  மகனே!' என்று என்று மாழ்கி,
மனக் கவலையுடன் அழிந்து, மணித் தேரின் மிசை
                  வீழ்ந்தான், மன்னர் கோவே.
141
உரை
   


வீமன் புலம்புதல

'சங்கலார், இடை வளைத்த சக்கரத்தை உடைப்பதற்குத்
                  தமியேன் எய்தி,
அங்கு உலாவரும் இரதத்து அரசரையும் தொலைத்து,
                  உன்னை அடுப்பான் வந்தேன்;
பங்கு எலாம் மரகதமாம் பவள நிறப் பொருப்பு உதவு
                  பைம் பொன் கொன்றைத்
தொங்கலால் உனை வளைத்த சூழ்ச்சியை இன்று
                  அறிந்திலனே, தோன்றலே! நான்.

142
உரை
   

'மின்னாமல் இடித்தது என வீழ்த்த பொலந் தொடையாலும்,
                  விடையோன் ஈந்த
பொன் ஆர் வெங் கதையாலும், அல்லது, அபிமனை
                  அமரில் பொர வல்லார் யார்?
தன் ஆண்மை நிலை நிறுத்தி, சங்கம் முழக்கிய வீர
                  சிங்க சாப
என் ஆனை இறந்து பட, இன்னமும் நான் இவ் உயிர்
                  கொண்டு இருக்கின்றேனே!
143
உரை
   

'எடுத்த படை அனைத்தினுக்கும் எதிர் இல்லை எனக்
                  கலைகள் எல்லாம் உன்னை
அடுத்தது கண்டு, ஐயா! நின் ஆர் உயிர்க்குக் கரைந்து
                  கரைந்து ஐயுற்றேன் யான்;
விடுத்த பெருந்தாதை இரு விழி களிப்பப் பகை வென்று
                  மீளாது, என்னைக்
கெடுத்தனையே! பிழைத்தனை என்று இனி ஒருவர்
                  வந்துஉரைக்கக் கேளேன் கொல்லோ?'
144
உரை
   


தருமனும் அருச்சுனனை ஒழிந்த தம்பியரும்
அழுது புலம்பியிருக்க, அருக்கன் மறைதல்

என்று என்று, வீமனும் தன் இளையோரும் அழுது
                  அரற்ற, 'இறந்தோன் வீரம்
நன்று!' என்று, தளம் இரண்டின் நரபாலர் பலர்
                  திரண்டு நவிலா நிற்ப,
அன்று, என்று மனம் மருளுற்று, அபிமன் அடு
                  தலைக் குன்றை அடுத்து, மேலைக்
குன்று என்று தடுமாறி, பின்னையும் போய்த் தனது
                  தடங் குன்று சேர்ந்தான்.

145
உரை
   


விசயன் தெற்குத் திக்கில் வெற்றிகொண்டு மீள,
யாவும் உணரும் கண்ணன் இந்திரனை நினைத்து,
அவனது புதல்வனைக் காக்குமாறு கூறுதல்

இந் நிலத்து அவனி பாலர் இவ் வகை
                  இரங்கி ஏங்க,
தென் நிலத்து எதிர்ந்துளாரைத் தென்
                  நிலம்தன்னில் ஏற்றி,
எந் நிலத்தினும் தன் ஆண்மைக்கு எதிர்
                  இலா விசயன்தானும்,
அந் நிலத்து அகன்று, மீண்டான் உற்றவாறு
                  அறிகிலாதான்.

146
உரை
   

போனது வருவது எல்லாம் புரை அற
                  உணருகிற்கும்
மான் அதிர் கனகத் திண் தேர் வலவனாம்
                  மதுரை மன்னன்,
தேன் அதிர் கடுக்கை மாலை இடு
                  சயத்திரதன்தன்னால்
ஆனதும் குறித்து, வானோர் அரசையும்
                  குறிக்கலுற்றான்.
147
உரை
   


வழியில், இந்திரன் முனி வடிவில் வந்து, இறந்த தன்
புதல்வனுடன் தீப் பாய இருத்தல் கண்டு, கண்ணன்
அந்தணனை விலக்குமாறு விசயனுக்குக் கூறுதல்

மதித்தலும், மனத்தில் தோன்றும் வலாரியை,
                  குறிப்பினால், 'உன்
கதித் தடந் திண் தேர் மைந்தன் உயிரை
                  நீ காத்தி' என்ன,
துதித்து அவன் தொழுது, மாயச் சூழ்ச்சியால்
                  முனியும் ஆகி,
'விதித்தலைப் பட்ட காதல் சுதனுடன் விளிவேன்!'
                  என்னா,

148
உரை
   

நெறியிடை, இவர்கள் காண நெருப்பினை
                  வளர்த்து, தானும்
பொறி உற வீழும்காலை, புவனங்கள்
                  அனைத்தும் ஈன்றோன்,
அறிவுடை விசயற்கு, 'இந்த அந்தணன்
                  தழலில் வீழாது,
எறி கணை வரி வில் வீர! விலக்கு நீ
                  ஈண்டை' என்றான்.
149
உரை
   


விசயன் அந்தணனைத் தடுத்துக் கூற,
அவன், 'நின் மகன் இறந்தாலும் என்
வார்த்தையை மறாது ஒழி' என்றல்

என்றலும் விசயன் எய்தி, 'எந்தை! நீ
                  எரியில் வாளா
பொன்றல்; உய்ந்திருந்தால், இன்னம் புதல்வரைப்
                  பெறலும் ஆகும்;
நன்று அல, தவத்தின் மிக்கோய், நல் உயிர்
                  செகுத்தல்! என்னா,
குன்றினும் வலிய தோளான் முனிவனைத்
                  தழுவிக்கொண்டான்.

150
உரை
   

'வீதலும் பிழைத்தல்தானும் விதி வழி
                  அன்றி, நம்மால்
ஆதலும் அழிவும் உண்டோ? நின்னில்
                  வேறு அறிஞர் உண்டோ?
பூதலம் தன்னில் யாவர் புதல்வரோடு
                  இறந்தார்? ஐயா!
சாதல் இங்கு இயற்கை அன்று' என்று,
                  அருளுடன் தடுத்த காலை,
151
உரை
   

தன் மகனுடன் தீ மூழ்கத் தவிர்ந்த நல்
                  தவனும், மீள,
வில் மகன் ஆகி நின்ற விசயனை
                  வெகுண்டு நோக்கி,
'என் மகன் இறக்க, என்னை இருத்தினை
                  ஆயின், அம்ம
நின் மகன் இறந்தால், என் சொல் மறாது ஒழி,
                  நீயும்!' என்றான்.
152
உரை
   


அருச்சுனனும் ஒருப்பட்டு மேலே போகும்
போது பேரொலி செவிப்படுதல்

ஐ எனத் தொழுது வீரன் அந்தணன்
                  உயிரை மீட்டு,
மை எனக் கரிய மேனி வலவனும் தானும்
                  திண் தேர்
ஒய்யெனச் செலுத்து காலை, வேலையின்
                  ஓதைதானும்
பொய் எனப் பரந்து, ஓர் ஓதை செவிகளைப்
                  புதைத்தது அன்றே.

153
உரை
   


பாசறை அணுகும் முன்னம், விசயன் பக்கத்திலுள்ள
ஆயுதங்களைக் கண்ணன் அப்புறப்படுத்துதல்

பாசறை அணுகும் முன்னம், பாசடைப்
                  பதுமம் போல
மாசு அற விளங்கும் மேனி வண் துழாய்
                  அலங்கல் மூர்த்தி,
ஆசு அறு வரி வில் காளை அம் கையும்
                  அருகும் நீங்காத்
தேசு உறு படைகள் யாவும் ஒழித்தனன்,
                  தீமை தீர்ப்பான்.

154
உரை
   


'அரற்று ஒலியின் காரணம் என்?' என விசயன் கேட்ப,
கண்ணன் யாதும் உரையாது கண்ணீர் சிந்துதல்

அம் கை ஆர்த்து, அனைத்துளோரும் அரற்று
                  பேர் அரவம் கேட்டு,
கங்கை அம் பழன நாடன் கண்ணனை
                  வணங்கி நோக்கி,
'இங்கு அயல் எழுந்த கோடம் யாது?' என,
                  யாதும் சொல்லான்,
பங்கய நெடுங் கண் சேப்ப, நித்திலம்
                  பரப்பினானே.

155
உரை
   


விசயன் வற்புறுத்திக் கேட்ப, கண்ணன் அபிமனுக்கு உற்றவாறு கூறுதல்

வன்கணன் இளகி, செங் கண் மால் அடி
                  வீழ்ந்து, 'மேன்மேல்
என் கணும் தோளும் மார்பும் இடன் உறத்
                  துடிக்கை மாறா;
நின் கணும் அருவி சோர நின்றனை;
                  இன்று போரில்,
புன்கண் உற்றவர்கள் மற்று என் புதல்வரோ?
                  துணைவர் தாமோ?

156
உரை
   

'திரு உளத்து உணராது இல்லை, செப்புக!'
                  என்று அயர்வான்தன்னை
மருவுறத் தழுவி, 'திங்கள் மரபினுக்கு உரிய
                  செல்வா!
வெருவுறப் பகையை வென்ற வீரன், என்
                  மருகன்!' என்று என்று,
அரு வரைத் தோளினானுக்கு உற்றவாறு
                  அனைத்தும் சொன்னான்.
157
உரை
   


புத்திர சோகத்தால் அருச்சுனன் தேரினின்று பூமியில் விழ,
கண்ணன் தழுவி எடுத்துச் சோகம் மாற்றுதல

மைத்துனன் உரைத்த மாற்றம் மைத்துனன்
                  செவிக்குத் தீக் கோல்
ஒத்து, இரு புறனும் வேவ, உள் உறச்
                  சுட்ட போது,
புத்திர சோகம் என்னும் நஞ்சினால்
                  பொன்றினான்போல்,
அத் தடந் தேரினின்றும் அவனிமேல்
                  அயர்ந்து, வீழ்ந்தான்.

158
உரை
   

அயர்ந்தனன் விழுந்த கோவை அச்சுதன்
                  பரிவோடு ஏந்தி,
புயம் தழீஇ எடுத்து, வாசப் பூசு நீர்
                  தெளித்து மாற்ற,
பயம் தரு கொடிய கூடபாகலம் தணிந்து,
                  மெல்லக்
கயம் தெளிவு உற்றது என்னக் கண் மலர்ந்து,
                  அழுதலுற்றான்:
159
உரை
   


விசயனது புலம்பல்

"போரினில் துணைவரோடும் புயங்க கேதனனை
                  வென்று,
பார் எனக்கு அளித்தி நீயே" என்று உளம்
                  பரிவு கூர்ந்தேன்;
நேர் உனக்கு ஒருவர் இல்லாய்! நீ களம்
                  பட்டாய்ஆகில்,
ஆர் இனிச் செகுக்க வல்லார்?-ஐவருக்கு
                  உரிய கோவே!

160
உரை
   

'சக்கரம் பிளந்தவாறும், தரியலர் உடைந்தவாறும்,
துக்கரம் ஆன கொன்றைத் தொடையலால்
                  வளைத்தவாறும்,
மெய்க் கரம் துணிந்தவாறும், மீண்டு உருத்து
                  அடர்த்தவாறும்,
உக்கிரமுடன் என் முன்னே ஓடி வந்து, உரை
                  செய்யாயோ?
161
உரை
   

'பன்னக அரசன் பெற்ற பாவை மா
                  மதலைதன்னை
முன் உற முனையில் தோற்றேன்; மூர்க்கனேன்
                  முடியாது உண்டோ?
உன்னையும் இன்று தோற்றேன்; உன்னுடன்
                  தொடர்ந்து வாராது,
இன்னமும் இருக்கின்றேன் யான்; என் உயிர்க்கு
                  இறுதி உண்டோ?
162
உரை
   

'கதிரவன் உதிக்கும் முன்னே கண் துயில்
                  உணர்த்தி, என்னை
அதிர் அமர்க் கோலம் கொள்வான் அறிவுறுத்து
                  உரைக்க வல்லாய்;
முதிர் அமர் முருக்கி மீண்டேன்; இத்தனைப்
                  போதும் முன்போல்
எதிர் வரக் காண்கிலேன்; இங்கு இல்லையோ?
                  என் செய்தாயோ?
163
உரை
   

'தந்திரம் யாவும் இன்றி, தனித்து நீ தானே
                  போர் செய்து,
"அந்தரம் அமையும்" என்று, இவ் அகல்
                  இடம் துறந்த ஐயா!
'மைந்துடன் நம்மைக் காண மகன் மகன்
                  வருகின்றான்' என்று,
இந்திரன் ஏவ, உன்னை இமையவர்
                  எதிர் கொண்டாரோ?
164
உரை
   

'தேர் அழிந்து, எடுத்த வில்லும் செங்
                  கதிர் வாளும் இன்றி,
ஓர் உதவியும் பெறாமல் ஒழிந்து, உயிர்
                  அழிந்த மைந்தா!
போர் அமர் உடற்றி, நீ அப் பொன்நகர்
                  அடைந்த போது, உன்
பேர் அமர் ஆண்மை கேட்டு, பிதாமகன்
                  என் சொன்னானோ?
165
உரை
   

'மல் புயக் குன்றில் ஒன்று வாளுடன்
                  வீழ்ந்த பின்னும்,
பொற்பு உறப் பொருத நீ அப் பொன்னுலகு
                  அடைந்த காலை,
அற்புதப் படைகள் வல்லாய்! அபிமனே!
                  அமரர் ஊரும்,
கற்பகக் காவும், வானில் கங்கையும்,
                  காட்டினாரோ?
166
உரை
   

'வளைத்த வில் நிமிராவண்ணம் வாளியால்,
                  மாவும் தேரும்
துளைத்து, முன் காலாள் ஆகத் துரோணனைத்
                  துரந்த வீரா!
'திளைத்த வெஞ் சமரில் நொந்து, தனஞ்சயன்
                  சிறுவன் மேனி
இளைத்தது!' என்று இந்திராணி இன் அமுது
                  ஊட்டினாளோ?'
167
உரை
   


ஐவரும் புலம்பி நெஞ்சழிந்த காலத்து, முனிவர்
பலருடன் வியாத முனி வந்து தேற்றி மீளுதல

என்ன மகவான் மகன் இரங்கினன் அரற்ற,
முன்னவர்கள் பின்னவர்கள் முறை முறை புலம்ப,
சென்னி கரம் வைத்து அனைவரும் கலுழி செய்ய,
அன்ன பொழுது, ஆரணம் அளித்த முனி வந்தான்.

168
உரை
   

வந்த முனி, மற்றும் உடன் வரு முனிவரோடும்
அந்த நரபாலர் கண் அரும் புனல் துடைத்து,
கந்தன் நிகர் மைந்தனொடு கையற நினைக்கும்
பந்தனை அறுக்கும் மொழி பற்பல பகர்ந்தான்:
169
உரை
   

'தாயரொடு தந்தையர்கள், தாரமொடு தனயோர்,
தூய துணைவோர்களொடு சுற்றம் என நின்றோர்,
மாயை எனும் வல்லபம் மயக்குறும் மயக்கால்
ஆய உறவு அல்லது, அவர் ஆர்? முடிவில் யாம் ஆர்?
170
உரை
   

'வந்து பிறவாத மனை இல்லை; முலை மாறித்
தந்து பரியாமல் ஒழி தாயர்களும் இல்லை;
புந்தி உணர்வு அற்றவர் புலம்புறுவது அல்லால்,
இந்த உலகத்து அறிஞர் யாதினும் மயங்கார்.
171
உரை
   

'உம்மையினும், யார் உறவு உணர்ந்திலம்; இனிப் போம்
அம்மையினும், யாவர் உறவு ஆவர் என அறியேம்;
இம்மையில் நிகழ்ந்த உறவு இத்தனை; இரங்கல்,
மும்மையும் உணர்ந்து வரும் மூதறிவினீரே!
172
உரை
   

'ஆற்றி உமது ஆண்மை அழியாமல் இரும்' என்று என்று,
ஏற்றி அடைவே, சுருதி யாவையும் எடுத்துத்
தேற்றி உரைசெய்து, தன சேவடி இறைஞ்சிப்
போற்றிய மகீபரை இருத்தி, முனி போனான்.
173
உரை
   


விசயன் பின்னும் சோகம் தாங்காது, நகுலனைக்
கனல் வளர்க்கச் செய்து, தீப் பாயும் நிலையில், முன்
அருச்சுனன் தடுத்த அந்தணன் வந்து விலக்குதல்

தேற்றினும் மகப் பரிவு தேறல் அரிது அன்றே!
ஆற்ற அரிது ஆதலின், அருச்சுனன், அரற்றா,
'மாற்று அரிய பேர் அழல் வளர்த்தி!' என வல்லே
ஏற்றது உணராது, தனது இளவலொடு உரைத்தான்.

174
உரை
   

மத்திரை மகன் கனல் வளர்க்க, அதனூடே,
மித்திரரும் யாவரும் விலக்கவும் விலங்கான்,
'சித்திரவில்லூடு உயிர் செகுப்பல்' என நின்றான்-
புத்திரர் இலா இடர் பொறுத்திடலும் ஆமோ?
175
உரை
   

அன்பொடு துழாய் முதல்வன் அப்பொழுது அழைக்க,
முன்பு தழல் மூழ்கல் ஒழி முனி விரைவின் வாரா,
'நின் புதல்வனோடு எரியின் நீ புகுதல் நெறியோ,
என் புதல்வனோடு எனை இறப்பது தவிர்த்தோய்?
176
உரை
   


அந்தணன் விலக்க எரிபுகுதல் தவிர்ந்த விசயன்,
பின் தருமன் முதலியோரை வெகுளுதல்

'வழிப்பட வழக்கின் வழி வருக' என, முனிவன்
மொழிப்படி பொறுத்து, அழலின் மூழ்கு தொழில் மாறி,
விழிப் புனலின் மூழ்கி, மனம் வெந்து தளர்வு உறுவோன்
பழிப்படு சுரத்தில் முளி பாதவம்அது ஆனான்.

177
உரை
   

'காமர் பிறை அன்ன சிறு காளைதனை வாளா
ஏமம் உறு வெஞ் சமரில் ஏவினர்கள்!' என்னா,
மா முரசு அணிந்த கொடி மன்னனையும், வண் தார்
வீமனையும், நின்ற இளையோரையும் வெகுண்டான்.
178
உரை
   


'நாளை அந்திப்பொழுதிற்குள் சயத்திரதனை முடிப்பேன்!'
என விசயன் வஞ்சினம் மொழிதல்

'சிந்து பதி ஆகிய செயத்திரதனைத் தேர்
உந்து அமரின் நாளை உரும் ஏறு என உடற்றா,
அந்தி படும் அவ் அளவின் ஆவி கவரேனேல்,
வெந் தழலின் வீழ்வன்; இது வேத மொழி!' என்றான்.

179
உரை
   

'இன்று அமரில், வாள் அபிமன் இன் உயிர் இழக்கக்
கொன்றவனை, நாளை உயிர் கோறல் புரியேனேல்,
மன்றில் ஒரு சார்புற வழக்கினை உரைக்கும்
புன் தொழிலர் வீழ் நரகு புக்கு உழலுவேனே!
180
உரை
   

'மோது அமரின் என் மகன் முடித் தலை துணித்த
பாதகனை நான் எதிர் படப் பொருதிலேனேல்,
தாதையுடனே மொழி தகாதன பிதற்றும்
பேதை மகன் எய்து நெறி பெற்றுடையன் ஆவேன்!
181
உரை
   

'சேய் அனைய என் மதலை பொன்ற அமர் செய்தோன்
மாய, முன் அடர்த்து, வய வாகை புனையேனேல்,
தாயர் பசி கண்டு, நனி தன் பசி தணிக்கும்
நாய் அனைய புல்லர் உறு நரகில் உறுவேனே!
182
உரை
   

'வஞ்சனையில் என் மகனை எஞ்ச முன் மலைந்தோன்
நெஞ்சம் எரி உண்ண அமர் நேர் பொருதிலேனேல்,
தஞ்சு என அடைந்தவர் தமக்கு இடர் நினைக்கும்
நஞ்சு அனைய பாதகர் நடக்கு நெறி சேர்வேன்!
183
உரை
   

'வினையில் என் மகன்தன் உயிர் வேறு செய்வித்தோனைக்
குனி சிலையின் நாளை உயிர் கோறல் புரியேனேல்,
மனைவி அயலான் மருவல் கண்டும், அவள் கையால்
தினை அளவும் ஓர் பொழுது தின்றவனும் ஆவேன்!'
184
உரை
   


விசயன் வஞ்சினம் கேட்டு, தருமன் கண்ணனோடு பேசுதல்

இன்னணம், இருந்தவர்கள் யாவரும் நடுங்க,
மன் அவையில் அன்று பல வஞ்சினம் உரைக்க,
சொன்ன உரை ஆன கனல் சுட்ட செவியோடும்,
பின்னை, அறன் மைந்தன் நெடு மாலினொடு பேசும்:

185
உரை
   

'வடி சுடர் வாளியான் மொழிந்த வஞ்சினப்-
படி சயத்திரதனைப் படுத்தல் கூடுமோ?
பொடி அனல் இவன் புகின், புகுந்து நால்வரும்
இடி பொரும் அரவு என, இறத்தல் திண்ணமே.
186
உரை
   

' "முப்பது கடிகையின் முரண் கொள் மொய்ம்பனைத்
தப்பு அறக் கொல்லுவேன்!' என்று சாற்றுமால்;
அப் பெருஞ் சேனையில் அவனை உள் உறத்
துப்பு உற அணிந்திடின், துன்னல் ஆகுமோ?
187
உரை
   

'எஞ்சின் மற்று என் செய்வேன்?' என்னும் ஏல்வையின்,
'அஞ்சல்!' என்று அறன் மகன் அவலம் ஆற்றினான்-
கஞ்ச வான் பொய்கையில் கராவின் வாய்ப் படு
குஞ்சரம்தனக்கு அருள் கொண்டல் மேனியான்.
188
உரை
   


தருமனைக் கண்ணன் தேற்றி, விசயனொடு கயிலைக்குச்
சென்று, புலரும் முன் வருவதாகக் கூறி இருவரும் போதல்

'இந்திரன் காக்கினும், ஈசன் காக்கினும்,
சிந்துவின் தலைவனைத் தேவர் காக்கினும்,
கந்தனின் சிறந்த நின் கனிட்டன், நாளையே,
மைந்து உறப் பொருது, அவன் மகுடம் கொள்ளுமே.

189
உரை
   

'வெயில் எழுவதன் முன் இவ் விசயன் தன்னொடும்
கயிலை அம் பொருப்பனைக் கண்டு, மீளவும்,
துயில் உணர்த்திடும்படி தோன்றுவோம்' எனா,
அயில் அணி ஆழியான் அவனொடு ஏகினான்.
190
உரை
   


வழியில் விசயன் பசியினால் களைத்து விழ, கண்ணன்
மயக்கம் போக்கி, மாங்கனி முதலிய அருந்தச் செய்தல

ஏகிய நெறியிடை இளைத்து, வாசவற்கு
ஆகிய குமரன் மெய் அயர்ந்து வீழ்தலும்,
போகியின் அறிதுயில் புரியும் நான்மறை
யோகி அம் கையின் அணைத்து, உயக்கம் மாற்றியே,

191
உரை
   

'உண்டிலை அடிசிலும்; உண்ணும் தீம் புனல்
கொண்டிலை; பசிக் கனல் கொளுந்தி, வீழ்ந்தனை;
மண்டு இலை வேலினாய்! மகவின் அன்பினால்,
கண்டிலை, உலகுஇயல் காட்டக் காட்டவே.
192
உரை
   

'மாங்கனி, வாழையின் கனி, வருக்கையின்
தீம் கனி, கன்னலின் செய்ய நீர், உள;
வேம் கனல் பசியும், நின் விடாயும் ஆறவே
ஈங்கு இனிது அருந்துதி; ஏந்தல்!' என்னவே,
193
உரை
   


விசயன், 'சிவசை புரியவில்லையே!' என, தன்னையே பூசிக்குமாறு
கண்ணன் உரைத்தல்

சரிந்தவர் சரிவு அறத் தாங்கும் நாயகன்
பரிந்து, இவை உரைத்தலும், 'பாவை பங்கன்மேல்
புரிந்திலன் இன்னமும் பூசை!' என்றனன்,
வரிந்த வெஞ் சிலைக்கு மண் மதிக்கும் வீரனே.

194
உரை
   


விசயன் கண்ணனைச் சிவாகம விதிப்படி பூசித் து,
கனியும் தீர்த்தமும் உண்டு களைப்பு நீங்குதல்

'மரு வரு கானக மலரினால் எமைப்
பொரு அரு பூசனை புரிதி, ஐய! நீ
இருவரும் ஒருவரே என்பது, இன்று போய்,
அரு வரை அவன் அடி அடைந்து காண்டியே.'

195
உரை
   

என்று அரி இயம்பலும், இரு மருங்கினும்
நின்ற நல் மலர் கொடு, நிகர் இல் கேள்வியான்,
மன்றல் அம் துழாய் முடி மாயன்மேல் மனம்
ஒன்றியே, சிவாகம உரையின் சாத்தினான்.
196
உரை
   

சாத்தினன் தொழுது, பின் தலைவன் தாள் மலர்த்
தீர்த்தமும், கனிகளும், தெவிட்ட உண்டு, தன்
காத்திரம் தேறினன், கருத்தும் தேறினன்;
பார்த்தன் முன் தவப் பயன் பலித்தவாறுஅரோ!
197
உரை
   


கண்ணன் கருடனை நினைக்க, அவன் வந்து,
இருவரையும் கயிலையில் கொண்டு சேர்த்தல்

போய், அரு நெறியிடைப் புள்ளின் வேந்தனைத்
தூயவன் நினைத்தலும், அவனும் தோன்றினான்;
மாயனைத் தோளினும், வலாரி மைந்தனைச்
சேய் எனக் கரத்தினும், சேர ஏந்தியே,

198
உரை
   

நீலம் முற்றிய மலை இரண்டொடு ஒன்று பொற்
சீலம் முற்றிய மலை செல்வது என்னவே,
ஆலம் முற்றிய களத்து ஐயன் வெள்ளி அம்
கோலம் முற்றிய மலை குறுகினான்அரோ.
199
உரை
   

மாற்றினால் விளங்கு பொன் வடிவன், வெஞ் சிறைக்
காற்றினால் விசை உறக் கழன்று போயின,
ஆற்றினால் அறம் புரி அம்மையோடு ஒரு
கூற்றினான் வரை படி கொண்டல் ஏழுமே.
200
உரை
   

பறிந்தன கொடு முடி பலவும்; வேரொடு
மறிந்தன, சாரலின் மரங்கள் யாவையும்;
அறிந்தன, மயில் முதல் ஆன புள்இனம்;
செறிந்தன, பணிந்தன, செய்ய தாள்களே.
201
உரை
   

பாண்டவ சகாயன் ஊர் பறவையின் குலத்து
ஆண்தகை இரு சிறகு அசையும் ஓதையால்,
காண்தகு சடைமுடிக் காலகாலன் மெய்ப்
பூண்டன பணிகளும், புரண்டு வீழ்ந்தவே.
202
உரை
   

விரிந்த பைங் கனை கழல் வயினதேயனை,
விரிந்த வெண் கிரி அரமாதர், மீது கண்டு,
'எரிந்திடு வச்சிரன் இந்த மால் வரைக்கு
அரிந்திலன் சிறகு!' என, ஐயம் எய்தினார்.
203
உரை
   


கயிலைக் காட்சிகள்

நிறை மதி நிகர் என நிறத்த வெள்ளி அம்
பொறை மலை திசைதொறும் பொழியும் வாள் நிலா,
நறை மலர் இதழி சேர் நாதன் வார் சடைப்
பிறை மதி நிலவினும் பிறங்க வீசுமால்.

204
உரை
   


நீர் அறு தருக்களும் தழைக்க நின்று, முன்
நாரதன் முதலியோர் நவிற்று நாத யாழ்,
பாரத அமர் புரி பச்சை மா முகில்
ஆர் அதர் விடாயை வந்து ஆற்றுகின்றதால்.

205
உரை
   

சங்கரன் மணி வரைச் சாரல் மாருதம்,
திங்களின் நிலவு உமிழ் செக்கர் வேணிமேல்
கொங்கு அவிழ் செழு மலர்க் கொன்றை வாசமும்,
கங்கை நுண் துவலையும், கலந்து, வீசுமால்.
206
உரை
   

அங்கு உள விடர் அகத்து அநேகம் ஆயிரம்
பொங்கு அழல் உமிழ் விழிப் புயங்க மா மணி
எங்கணும் இருள் அற இலங்கு சோதியால்,
கங்குலும் பகலவன் கரங்கள் காட்டுமால்.
207
உரை
   


சிவபெருமான் கண்ணனை எதிர்கொண்டு ஆசனத்து
இருத்தி, வந்த காரியம் வினவுதல

செந்திரு மட மயில் கேள்வன் சென்றமை
அந்தி வான் நிறத்தவன் அறிந்து, முன்னமே
நந்தியும் உரைசெயக் கேட்டு, 'நன்று!' எனப்
புந்தியால் மகிழ்ந்து, எதிர் போந்து, புல்லினான்.

208
உரை
   

ஆங்கு ஓர் ஆசனத்திடை இருத்தி ஐயனை,
பாங்கினால் வினவினான், பவள மேனியான்-
ஈங்கு இவன் பிறந்ததும், இளைத்த பார்மகள்
தீங்கு அறப் புரிதரு செயலும், யாவுமே.
209
உரை
   


கண்ணன் சிவபெருமானுக்கு யாவும் சொன்னபின்,

'விசயனை வருக!' என்று சிவபெருமான் அழைத்தல்

கேசவன் புரிவு எலாம் கிரீசன் என்னும் அத்
தேசவன் தெளிவுறச் செப்பிவிட்ட பின்,
வாசவன் புதல்வனை, 'வருக!' என்றலும்,
பாச அன்புடன் அவன் பணிந்து, போற்றினான்.

210
உரை
   


விசயன் சிவபெருமான் எதிரே வந்து, பணிந்து போற்றுதல்

கண்ணன்மேல் அணி மலர் அனைத்தும் காய் கனல்
வண்ணன்மேல் காண்டலும், மனம் களிப்புறா,
'எண்ணின், மேல் இரண்டு என இலது' என்று, அவ் விறல்
அண்ணல் மேனியும் புளகு அரும்பினான்அரோ.

211
உரை
   

'பொங்கு அரா வெயில் மணிப் பூணும், பேணும் நீற்று
அங்கராகமும், உவந்து அணியும் மேனியாய்!
சங்கரா! மேரு வெஞ் சாபம் வாங்கிய
செங் கரா! சிவ சிவ! தேவ தேவனே!
212
உரை
   

'விண்ணிடைத் திரிபுரம் வெந்து நீறு எழப்
பண்ணுடைச் செந் தழல் பரப்பும் மூரலாய்!
எண்ணுடைக் காமனை எரித்த பேர் அழல்
கண்ணுடைக் கடவுளே! கால காலனே!
213
உரை
   


'கை உறு சிலையுடன் கான வேடன் என்று
ஐயுற அருகு வந்து அணுகி, மெய்யுடன்
மெய் உற அமர் புரி விநோதம், நாள் தொறும்,
மை உறு கண்டனே! மறப்பது இல்லையே.

214
உரை
   

'உமையவள் கணவனே! உகாந்த காலனே!
இமைய வில் வீரனே!' என்று கொண்டு, இவன்
அமைவு உறத் துதித்தலின், அவனும் மற்று இவன்
சமைவு கண்டு, ஐயனோடு உவகை சாற்றினான்.
215
உரை
   


சிவபெருமான் உவந்து, கண்ணனோடு பேசி, 'வேண்டுவது
என்?' என, கண்ணன் அம்பு முதலியன வேண்டுதல

'ஆற்றினை, துயர்; மயல் அனைத்தும் மெய் உறத்
தேற்றினை; சிந்தையை, தெளிந்த வாய்மையால்
மாற்றினை; மும் முறைப் பிறப்பும் வந்து நின்
கூற்றினை அடைதலால், பிறவி கொள்ளுமே?'

216
உரை
   

'வேண்டுவது என்கொல் மற்று?' என்ன, வீரனும்,
'பூண்டது ஓர் பறை அறைந்து அன்றிப் போகலேன்;
ஆண்டு, அருள் படைகளால் அவுணர்க் காய்ந்தனன்;
ஈண்டு அருளுதி, விறல் எய்தும் வண்ணமே.
217
உரை
   

'தானவர்ப் பொரு படை கொண்டு, தாரணி
மானவர்ப் பொருவது வழங்கும் அல்லவால்;
கூனல் வில் கணைகளும் குறைவு உறாதது ஓர்
தூ நிழல் பொய்கையும் கொடுத்தி, தோன்றலே!'
218
உரை
   


சிவபெருமான் கண்ணனைப் புகழ்ந்து கூறுதல்

என்றலும் ஈசன் நகைத்து உரைசெய்தனன்: 'யான்
                         என நீ என வேறு
அன்று; இவை யாவும் அளித்திடுதற்கு உனை
                          அல்லது வல்லவர் யார்?
நின்றது ஒர் தூணிடை வந்தனை; யானைமுன்
                          நின்றனை; கஞ்சனையும்
கொன்றனை; மன் அவையூடு உரிய, பல கூறை
                          கொடுத்தனையே.

219
உரை
   

'முன் உரு ஆயினை; நின் திரு நாபியின் முளரியின்
                          வாழ் முனிவன்
தன் உரு ஆகி, இருந்து படைத்தனை, பல சகத்
                          அண்டமும் நீ;
நின் உரு ஆகி அளித்திடுகின்றனை, நித்தவிபூதியினால்;
என் உரு ஆகி அழிக்கவும் நின்றனை, ஏதம்
                          இல் மாதவனே!'
220
உரை
   


சிவபெருமான் விசயனை ஒரு பொய்கையில் மூழ்கச்
செய்து, ஒரு முனிவனால் அம்பு முதலியன
அவனுக்குக் கொடுக்கச் செய்தல்

ஆயிடை நின்ற கிரீடியை, முக்கணன், அங்கு
                          ஒரு பொய்கையிலே,
'போய் இடை மூழ்கு' என, அப் புனலூடு ஒர்
                          புயங்கம் எழுந்தது; அதன்
வாயிடை வந்தனன், மாண் உருவாய் ஒரு மா
                          முனி; அம் முனி அச்
சேய் இடை நீரில் எடுத்தனன், மற்று ஒரு
                          சிலையுடன் வாளியுமே.

221
உரை
   

முப்புரம் நீறு எழு நாளின் இயற்றிய முட்டியும்,
                          நல் நிலையும்,
அப் புரசூதனன் ஏவலின், அந்தணன்
                          அமரர்பிரான் மதலைக்கு
ஒப்புறவோடு பயிற்றி, இதம் கொடு உருத்திர
                          மா மறையும்
செப்பினனால்; அவை பெற்றனன், வென்று
                          செயத்திரதன்-தெறுவான்.
222
உரை
   


மேலும், பல வரங்களைச் சிவபெருமான் கொடுத்து, அவர்களை விடுக்க, அவர்கள் வெள்ளி எழும் காலத்து வந்து பாசறை சேர்தல

'யாது ஒரு போது நினைத்தனை, அவ் வழி
                          எய்தும், உனக்கு, இவை' என்று
ஓதி, அநேக வரங்கள் கொடுத்த பின், உமை
                          ஒரு கூறு உடையோன்,
'பூதல மாது இடர் தீர அருஞ் சமர் புரி தொழில்
                          முற்றிய பின்,
சீதர! நின் பதம் மேவுக!' என்று, அருள்செய்து
                          விடுத்தனனே.

223
உரை
   

எண்ணிய காரியம் எய்தி, இறைஞ்சிய இந்திரன்
                          மா மகனும்,
திண்ணிய நேமி வலம்புரி வாள் கதை சிலையுடை
                          நாயகனும்,
புண்ணியன் மால் வரை நின்று உரகாரி புயங்களும்
                          வன் கரமும்
நண்ணிய காலையில், வெள்ளி எழுந்தது, ஞாயிறு
                          எழும் திசையே.
224
உரை
   


தருமன் கடோற்கசனைத் துரியோதனனிடம், விசயன்
வஞ்சினம் முதலியன உரைத்து வருமாறு, தூது அனுப்புதல்

இங்கு இவர் மூவரும் ஏகினர் மீளும் முன், எறி
                          முரசக் கொடியோன்,
அங்கு உரையாடியது உரைசெயின், மண்மிசை
                          யார் வியவாது ஒழிவார்?
பங்குனன் ஓதிய வஞ்சினமும், பசுபதியிடை ஏகியதும்
கங்குலின் ஏவினன், 'உரை செய்க!' என்று, கடோற்கச
                          மீளியையே.

225
உரை
   

மற்று அவன் முந்துறு தந்தையை வந்து வணங்கி,
                          'முன் வஞ்சனையின்
செற்றவர்தம்முடன் உற்றது சொல்வது சேவகமோ?
                          அறிவோ?
கொற்றவர் மா முடி கமழ் கழலாய்! வலி கூர்
                          திறலும் செயலும்
அற்றவர் போல உரைப்பது என்?' என்று உள்
                          அழன்று புகன்றனனே.
226
உரை
   

'திறன் அறியாமல் உரைத்தனை, மாருதி சிறுவன்
                  எனும்படி, நீ;
மற நெறி ஏன்று, வயிர்த்தவர் கொல்வது வஞ்சனையோ?
                  விரகோ?
அற நெறியே பொருது அல்லது வெல்லுதல்
           ஆண்மைகொலோ? அழகோ? விறல் நெறியாவது
பொய் இலது' என்றனன், மெய்ம்மை உணர்ந்திடுவான்.
227
உரை
   


கடோற்கசன் துரியோதனனிடம் சென்று, செய்தி சொல்லுதல்

நிருதன் நகைத்து, வணங்கி, நிணம் கமழ் நீள்
                          இலை வேலினொடும்
கருதலர் துற்றிய பாசறை அன்று ஒர் கணப்
                          பொழுதில் புகுதா,
ஒரு தன் இலக்கணமைந்தன் இறந்தனன் என்று
                          அழுது உள்அழியும்
விருதுடை வித்தகன் வாயிலில் நின்று, விளித்தனன்
                          ஓர் உரையே.

228
உரை
   

எதிர் எதிர் கொற்றவன் வாயிலில் நின்றவர், 'யார்!'
                          என எய்துதலும்'
'அதிர் முரசக் கொடியோன் அரவக் கொடி
                          அரசனிடைப் பகர்வான்
முதிர உரைத்தது ஓர் மொழி உளது; அம் மொழி
                          மொழிதர வந்தனன்; யான்
எதிர் அறு வெற்றி அரிக் கொடியோன் மகன்'
                          என்றனன் விக்ரமனே.
229
உரை
   

அம் மொழி தீ உரும்ஏறு என நீடு அவை அரசர்
                          செவிப்பட, ஓர்
செம் மொழி அற்றவன் மொழிவழி சென்று, ஒரு
                          சிறிதும் மதித்தருளான் 'நும்
மொழி விட்டு ஒரு மெய்ம்மொழி கேண்ம்' என,
                          நோதகு நெஞ்சினனும்'
'வெம் மொழி வித்தக! எம் மொழி நுந்தைதன்
                          மெய்ம்மொழி'? என்றனனே.
230
உரை
   

'தன் திரு மைந்தனை மௌலி துணித்த
                          சயத்திரன்தனை, 'வாள்
வென்றி கொள் காவலர் காவல் மிகுப்பினும்,
                          வெயிலவன் வீழ்வதன்முன்,
கொன்றிடுவேன்! அது தப்பின் அருங்
                          கனலூடு குதித்திடுவேன்!'
என்று மொழிந்து, அரன் வாழ் கயிலாயமும்
                          எய்தினன், வில் விசயன்.
231
உரை
   

"'வஞ்சனையால் அமரில் பகைதன்னை மலைப்பது
                          பாதகம" என்று
அஞ்சினன் ஆதலின், நீ அறியும்படி ஐயன் விடுத்தனனால்;
"எஞ்சினன் நாளை உன் மைத்துனன்' என்று கொள"
                          என்றனன்-வன் திறல் கூர்,
நெஞ்சினில் வேறு ஒரு சஞ்சலம் அற்ற, நிசாசரன்
                          மா மருகன்.
232
உரை
   


துரியோதனன் உரைத்த மறுமொழி

'மன் மைந்தர் பலரொடும் போய், மறித்து ஒருவர்
                          மீளாமல் மலைந்து வீழ,
என் மைந்தன் இறந்திடவும், யாது ஒன்றும் புகலாமல்
                          இருக்கின்றேன் யான்;
தன் மைந்தன் இறந்தனனாம்! தான் தழலில் மூழ்குவனாம்!
                          சபதம் கூறி,
வில் மைந்தின் மிகுந்தவருக்கு அழுது இரங்கி,
                          அரற்றுவது வீரம்தானோ?

233
உரை
   

'பயத்து இரவின் நடுங்கி, அரன் பருப்பதம் புக்கு, அவன்
                          கொடுத்த படையும் வாங்கி,
வயத்து இரதம் மால் கடவ வந்து எதிர் தோன்றுவன்ஆகில்,
                          மகரம் மோதும்
கயத்து, இரவி விழுவதன் முன், கை அறு தன்
                          புதல்வனைப்போல் களத்தில் மாளச்
சயத்திரதன் தொடும் கணையால், தான் படுதல் உறுதி'
                          எனச் சாற்றுவாயே.
234
உரை
   

'என்னினும் பார் தனக்கு உரியன்; சிலைத் தொழிலில் சிலைக்
                          குருவாய் எவரும் போற்றும்
மன்னினும் தான் மிகப் பெரியன்; தண்டு எடுத்தால்
                          உந்தையினும் வலியன் சால;
உன்னினும் தோள் உரன் உடையன்; மதியாமல் இப்படி நீ
                          உரைக்கலாமோ?
தன்னினும் போர்க்கு எளியனோ, சயத்திரதன்-தான்?'
                          என்று சாற்றுவாயே.
235
உரை
   

'ஆளை ஆள் நிலை அறிவது அல்லது, மற்று அறிபவர்
                          யார்? அணிந்த போரில்,
நாளை யார் வெல்வர் எனத் தெரியுமோ?' என நவின்று
                          நகைத்தான் மன்னோ-
பாளை வாய் நெடுங் கமுகின் மிடறு ஒடிய, குலைத்
                          தெங்கின் பழங்கள் வீழ,
வாளை பாய் குரு நாடும், எந் நாடும், முழுது ஆளும்
                          மன்னர் கோமான்.
236
உரை
   


கன்னன் இகழ்ச்சி பொருந்தப் பேசுதல்

'தார் அரசன் மகன், துச்சாதனன் மகன், சல்லியன் மகன்,
                          வேல் சகுனி என்னும்
பேர் அரசன் மகன், முதலா எத்தனை பேர் பட்டாலும்
                          பெரியது அன்றே;
பார் அரசாளுதற்கு இருந்த பார்த்தன் மா மகன்
                          ஒருவன் பட்டான்ஆகில்,
ஆர் அரசுக்கு இனி உரியார்? அந்தோ!' என்று உரைத்தான்
                          மற்று அங்கர் கோமான்.

237
உரை
   

'அங்கு இருந்து, 'சயத்திரதன் ஆவி கவர்ந்திடுவல்!' என
                          ஆண்மை கூறி,
பங்கு இருந்த உமாபதிபால் பணிந்து, வரம் பெறச்
                          சென்றான் பார்த்தன் ஆகில்,
கொங்கு இருந்த தாராய்! நின் குடை நிழற்கீழ் இது
                          காலம் கூட்டம் கூடி,
இங்கு இருந்த ஏழையரேம், என் செய மற்று இருக்கின்றேம்?'
                          என்றும் சொன்னான்.
238
உரை
   


அதற்குக் கடோற்கசன் வெகுண்டு,
அவர்களை இகழ்ச்சியாகப் பேசுதல்

இவன் மொழிந்த இகழ்உரை கேட்டு, இடிம்பன் மருமகன்
                          வெகுளுற்று, 'என் சொன்னாலும்,
அவனி தலம் முழுதும் இனி அரசாள நினைந்திருந்தீர்;
                          அறிவிலீர்காள்!
சிவன் எரி செய் புரம் போலும் பாடிவீடு அழல் ஊட்டி,
                          சேனை யாவும்
பவனன் மகன் மகன் என்னும் பரிசு அறியத் தொலைத்து,
                          ஈடுபடுத்துவேனே.

239
உரை
   

'தசை குருதி நிணம் ஒழுக, தனித் தனியே எதிர்த்தவரைத்
                          தலைகள் சிந்த,
விசையன் வரவேண்டுமோ? மற்று உள்ளார் திரண்டு
                          வரவேண்டுமோதான்?
நிசை புலரும் முனம் முனைந்து, நீறு ஆக்கி விடுகுவன்;
                          "எம் நிருபன் சொன்ன
அசைவு இல் மொழி மறுத்து, உடற்றல் ஆகாது" என்று
                          இருக்கின்றேன்; அறிகிலீரே?
240
உரை
   

'இருவர் எதிர் எதிர் தம்மில் இகல் பொருதல் உலகு
                          இயற்கை; யாரும் கூடி,
பருவம் உறாத் தனிக் குதலைப் பாலகனுக்கு ஆற்றாமல்
                          பறந்து போனீர்;
ஒருவன் நெடுந் தேர் அழிக்க, ஒருவன் மலர்க் கை
                          துணிக்க, ஒருவன் பின்னை,
"பொருவன்" என அறைகூவிப் பொன்றுவித்தான்; இது
                          கொண்டோ புகல்கின்றீரே?'
241
உரை
   


'அவைக்கு ஏற்பப் பேசாத அரக்கி மகனுடன் ஒன்றும்
பேசாதீர்' என்று துரியோதனன் உரைக்க, கடோற்கசன்
+ அவனை இகழ்ந்து பேசி, மீளுதல்

வரைக்கு உவமை பெறும் தடந் தோள் வீமன் மகன்
                   இப்படியே மதியான் ஆகி,
உரைக்கும் மொழி கேட்டு இருந்த உரகம் அணி கொடி
                    வேந்தன், உருத்து நோக்கி,
'இருக்கும் எழில் அவைக்கு ஏற்ப இயம்பாமல், தன்
                    மதத்தால் இயம்புகின்ற
அரக்கி மகனுடன் ஒன்றும் கழறாதீர்!' என்று உரைத்தான்,
                    அரசர் யார்க்கும்.

242
உரை
   

அந்த உரை மீண்டு இவன் கேட்டு, ஆங்கு அவனை
                   நகைத்து, உரைப்பான்: 'அரக்கரேனும்,
சிந்தனையில் விரகு எண்ணார்; செருமுகத்தில் வஞ்சகமும்
                    செய்யார்; ஐயா!
வெந் திறல் கூர் துணைவருக்கு விடம் அருத்தார்; நிரைக்
                    கழுவில் வீழச் செய்யார்;
உந்து புனலிடைப் புதையார்; ஓர் ஊரில் இருப்பு அகற்றார்;
                    உரையும் தப்பார்.
243
உரை
   

'செழுந் தழல் வாழ் மனைக் கொளுவார்; செய்ந்நன்றி
                    கொன்று அறியார்; தீங்கு பூணார்;
அழுந்து மனத்து அழுக்குறார்; அச்சமும் அற்று, அருள்
                    இன்றி, பொய்ச் சூது ஆடார்;
கொழுந்தியரைத் துகில் உரியார்; கொடுங் கானம் அடைவித்துக்
                    கொல்ல எண்ணார்;
எழுந்து அமரில் முதுகிடார்; இவை எல்லாம் அடிகளுக்கே
                    ஏற்ப!' என்றான்.
244
உரை
   

'தேன் இடறிப் பாண் முரலும் செழுந் தாம விசயனுடன்
                    செருவில் வந்தால்,
மானிடரில் பொர வல்லார் சிலர் உண்டோ? தெரியாது,
                    வான் உளோரில்;
கோன் இடை உற்று அருகு இருந்த திறல் வேந்தர்
                    காத்திடினும், குறித்த வீரன்-
தான் இடர் உற்று உயிர் அழிகை தப்பாது!' என்பதும்
                    உரைத்துத் தனயன் மீண்டான்.
245
உரை
   


'நாளை அமரில் சயத்திரதனைக் காக்கவேண்டும்'
எனத் துரோணன்
முதலியோரைத்
துரியோதனன் இரந்து வேண்டுதல்

அரக்கன் அப் பேர் அவை அகன்ற பின், பகை
துரக்கும் வெங் குனி சிலைத் துரோணன்தன்னொடும்,
பரக்கும் வெண் திரைக் கடல் பார் எலாம் உடன்
புரக்க நின்றவன், சில புகழ்ந்து கூறுவான்:

246
உரை
   

'கொடி நெடுஞ் சேனையைக் கூறு செய்து, நீ,
கடிகை முப்பதும் உடன் காக்க வல்லையேல்,
வடிவுடைச் சிந்து மா மகனும் உய்குவன்;
வெடி அனல் குளிக்குவன், விசயன்தானுமே.
247
உரை
   

'நாளை ஓர் பகலுமே, நமக்கு வெய்ய போர்;
காளையர் அனைவரும் காமின், காமின்' என்று,
ஆளையும் அடு களிற்று ஆழி மன்னவன்,
வேளை புக்கவரினும் வீழ்ந்து, வேண்டினான்.
248
உரை
   


'என்னால் இயன்ற அளவு காப்பேன்!' எனத்
துரோணன் உரைத்தல்

'மணி மதில் அரண் என மன்னு சேனையை
அணி பட நிறுத்தி, ஆம் அளவும் காப்பன் யான்!
பணிவுறு புண்ணிய பாவம் முற்றுவ
துணிவுறத் தெரியுமோ? தும்பை மாலையாய்!

249
உரை
   

'முப்பது கடிகையின் மொழிந்த வஞ்சினம்
தப்பது படாதுஎனின், தனஞ்சயன் சிலைக்கு
ஒப்பது ஒன்று இல்லை; மற்று உரைத்தவா செயல்
அப் பதுமாசனன்தனக்கும் ஆகுமோ?
250
உரை
   

'மல்லினால் மல்லரை மலைந்த மால் அவண்
புல்லினான் என்னினும், சிந்து பூபனை
வில்லினால் வெல்ல அரிது' என்று, மீளவும்
சொல்லினான், மறை மொழித் துரோணன்தானுமே.
251
உரை
   


சயத்திரதனைக் காப்பதாகக் கன்னன் முதலியோர் உரைத்தல்

'கோப் பலருடன் பல கூறல்; மற்று அவர்
நாப் பல நவிலினும், நாளை வான் பகல்
தாப் புலி நிகர் சயத்திரதன்தன் உயிர்
காப்பல் யான்!? என்றனன், கதிரின் மைந்தனே.

252
உரை
   

'அல் மருள் திமிரம் எய்து அளவும் நாளை, இத்
தென் மருள் தெரியல் வேல் சிந்து வேந்தனைக்
கல் மருள் திகிரியின் காப்பன் யான்!' என்றான்,
துன்மருடணன் எனும் துணைவன் தானுமே.
253
உரை
   

'விரல் புனை கோதை வல் வில்லின் வல்லவர்
குரல் படச் சேவகம் கூறுகிற்பரோ?
உரல் புரை நீடு அடி ஓடை யானையாய்!
சரற் புயல்ஆனது தனிதம் செய்யுமோ?
254
உரை
   

'பொரு தொழில் விதம் படப் புரிந்த காலையில்,
விருதர்கள் இருவரும் வேறல் கூடுமோ?
ஒரு தலை நின்று இவன் உடற்றும் வின்மையும்,
கருதலன் வின்மையும் காண்டி, காவலா!?
255
உரை
   


ஏனைய மன்னர்களும், ?புலர்ந்த பின் தெவ்வரைச் செகுப்போம்?
என்று கூறி விடை கொள்ளுதல்

என்று சேனாபதி மகன் இயம்பினான்.
நின்ற காவலர்களும், ?நிசை புலர்ந்துழிச்
சென்று போர் புரிந்து, நின் தெவ்வர் யாரையும்
வென்று மீளுதும்? என விடை கொண்டார்அரோ.

256
உரை
   


தருமனைக் கண்ணன் முதலியோர் வந்து துயிலுணர்த்துதல்

பூதனை முலை நுகர் பூந் துழாய் முடி
நாதனும், விசயனும், நலத்தொடு ஏவிய
பூதனும், அருக்கனும், துயில் உணர்த்தினார்,
சேதனர், புகழ் மொழித் திகிரி வேந்தையே.

257
உரை
   


கண்ணனும் கடோற்கசனும் தாம் சென்று வந்த இடத்து
நிகழ்ந்தவற்றைத் தருமனுக்கு உரைத்தல்

கயிலை புக்கதும்; அரன் கணையும், சாபமும்,
வியன் மலர்ப் பொய்கையும், விசயற்கு ஈந்ததும்;
புயல் எனக் கரிய மெய்ப் பூந் துழாயவன்
துயில் உணர் குரிசிலுக்கு அடைவில் சொன்ன பின்,

258
உரை
   

பை திகழ் மணிப் பணிப் பதாகையானிடை
எய்தி அங்கு உரைத்ததும், இருந்த மன்னவர்
வெய்து உறப் புகன்றதும், மீண்டு வந்ததும்,
கொய் தொடைக் கடோற்கசன்தானும் கூறினான்.
259
உரை