44. பதினாறாம் போர்ச் சருக்கம்


கடவுள் வாழ்த்து

மாதுலன் ஆகியும் ஏதிலன் ஆகிய வஞ்சன் கஞ்சன் வரவிட்ட
பூதனைதன் உயிர் முலை பொழி பாலொடு போதர உண்ட புயல் வண்ணா!
மாதவ, யாதவ, வாசவ, கேசவ, மாயா, ஆயா, மதுசூதா!
ஆதியும் அந்தமும் ஆகிய நின் புகழ் அல்லாது உரையேன், அடியேனே!

1
உரை
   


துரியோதனன் கன்னனைச் சேனாதிபதியாக்கி, களம்
புக, ஐவரும் படைகளுடன் எதிரேற்றல

'கங்கை மகன், சிலையின் குரு என்பவர், காதி மலைந்தே கையற்றார்;
இங்கு இனி என் உயிர் நண்பனை அல்லது, வெல்ல வல்லோர்
                                இலர்' என்றே,
'அங்கர் பிரானை வரூதினியின் பதி ஆக!' என்று அருள்செய்து,
                                அவனோடும்
வெங் களம் உற்றனன்-நஞ்சு உமிழும் கொடி வேக நாகவிறலோனே!

2
உரை
   

சொல் தவறாத துரோணனை மௌலி துணித்த திட்டத்துய்மன்னும்,
கொற்றவர் ஐவரும், மற்று உள பூபரும், வைனதேயக் கொடியோனும்,
உற்று எழு கச ரத துரக பதாதிகள் ஆன சேனையுடனே சென்று,
'இற்றை அருஞ் சமம் வெல்லுதல் எம் கடன்' என்று துன்றி
                                எதிர் கொண்டார்.
3
உரை
   


கன்னன் மகர வியூகமும், திட்டத்துய்மன்
சக்கர வியூகமும் வகுத்தல்

கற்கியும், வண்டுஇனம் மொய்க்க மதம் பொழி கரியும்,
                                தேரும், காலாளும்,
பொற் கொடியும், குடை வர்க்கமும், மாலையும், ஒன்னார்
                                எண்ணும் பூபாலர்,
நிற்கும் நிலம்தொறும் நிற்கும் நிலம்தொறும், நின்று நின்று
                                வினை செய்ய,
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகரவியூகம்
                                வகுத்தானே.

4
உரை
   

'பானுவின் மைந்தன் முனைந்து மகீபதி மைந்தன் சேனாபதி ஆனான்;
போன அருஞ் சமர் போக; தனித்தனி பொருது வேறும், போர்' என்றே,
சேனையின் மன்னவர் யாவரும், வெம் பரிமாவின்மேலும் தேர்மேலும்
யானையின்மேலும் இருந்தவர், அவ்வவர் தம்மோடு
                          அம்ம இகலுற்றார்.
5
உரை
   

நாமம் இரண்டொடு பத்துடை நாயகன் நவில, வெஞ் சேனையின் நாதன்,
மா மரு கொற்ற வரூதினி வேலையை மருவார் அஞ்சி வெருவெய்த,
நேமி வியூகமதாக வகுத்து, இடை நின்று போர் செய் நிலயத்தில்,
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம்
                                மேல் கொண்டான்.
6
உரை
   


காசி அரசனும் வீமனும் யானைமீது ஏறிப் பொருதல

அடிக் கை கனத்து, மதம் பொழி ஆழியின் அளவும் புகரால்
                                அழகு எய்தி,
மடிக்கினும், மண் உறு கையது; செந் நிற வாயது; தேயா மதிதன்னை
ஒடித்து இரு பக்கமும் வைத்தென மகரிகை ஒன்றி, ஒன்றி
                                ஒன்னார் மெய்
இடிக்கும் மருப்பது; புன்னையின் நாள்மலர் என்னும் சீரது,
                                இரு கண்ணும்.

7
உரை
   

திலகமும் ஓடையும் இலகுறு நெற்றியது; ஆலவட்டச் செவியாலே,
பல திசை மாருதம் உய்ப்பது; செம் புகர் பட்டின் தொழிலின்
                                பயில்கிற்பது;
உலகினை மேல்கொளுமவனது எனக் களி ஊறியதால்; அங்குலம் ஒத்து,
குலவிய மத்தகம் ஒத்த கழுத்தில் உயர்ந்தது, அம் பொன்
                                குவடு என்ன.
8
உரை
   

உரத்தினில் முச் சுழி உடையது; தாள் வலி கல்தூண் ஒப்பு என்று உரை
                                செய்யும் தரத்தது;
வெண்ணெய் நிறத்த நகத்தது; தண் அம் துளவன் நிலை ஒத்த
                          திரத்தினது; ஆமை கிடந்த எனும் புற
அடியது; அங்கம் திண்ணென்றே
உரத்தது; நல் உதரத்தது; இளங் கமுகு ஒத்தது அம்ம, வாலதி;
9
உரை
   

தூணும் விலங்கும் முறிப்பது; பாகு பரிக்கோல் யாவும் தூரத்தே
காணினும், நின்று கொதிப்பது; தன் நிழல் கண்டு சீறும் கருத்தது;
நீள் நடம் முதலிய தொழில் ஒரு நாலும் நிரந்தது; மேரு நிகர் என்னச்
சேண் உயர் போதர, எழு முழம் உடையது;-தெவ்வர் அஞ்சும்
                                அவ் வேழம்.
10
உரை
   

ஆசு இல் அருந் திறல் ஆசுகன் மைந்தனும், ஆண்மைக்கு எண்ணும்
                                அடல் வீரன்
காசி நரேசனும், ஏழ் உயர், ஏழ் மத மாரி சிந்தும், கரி மேலோர்,
தூசியின் வந்து, முனைந்து முனைந்து இரு தோலும் போர் செய்ய,
வாசவர் ஓர் இருவோர், இரு கார்மிசை மலைவது என்ன, மலைவுற்றார்.
11
உரை
   

அங்குசம், வார்த்தை, வன் தாள், அடைவினில் பயிற்றி, ஏனை
வெங் கதி நடையோடு ஓட்டம் விதமுற விரைவின் காட்டி,
அங்க சாரியினால் நல் நூல் அறிஞர் கொண்டாட ஊர்ந்து,
செங் கையில் சிலையும் கோலி, தீ விழித்து உடன்று சேர்ந்தார்.
12
உரை
   

கோடு கைம் முதலா ஒன்பது உறுப்பினும் கோறல் வல்ல
நீடு உயர் மாவும் மாவும், நெருப்பு எழ முனைந்து சீற,
ஆடவர்தாமும் எண் இல் அம்பு மா மழைகள் ஏவி,
சேடனும் அமரர் கோவும் வெருக் கொள, செருச் செய்தாரே.
13
உரை
   


காசிராசன் கேமதூர்த்தி வேல் எறிய, வீமன் அவனது
யானையை வீழ்த்தலும், அவன் தன் தண்டினால்
வீமன் யானையை வீழ்த்தலும்

ஆசுகன் குமரன் வல் வில் ஆசுகம் பொறாமல், அஞ்சி,
காசி மன் கேமதூர்த்தி காய் அயில் ஒன்று வாங்கி,
வீசி, அக் காளை மார்பின் எறிதலும், வீமன் ஏ ஒன்று
ஏசு இல் அவ் வேலும் தெவ்வன் யானையும் துணிய எய்தான்.

14
உரை
   

கேமன் அக் கரியினின்றும், கிரியினின்றும் இழியும் ஆளி
ஆம் என, தரணி எய்தி, அடல் வயிர்த் தண்டு ஒன்று ஏந்தி,
வீமன் அன்று ஊர்ந்த வெங் கை வெற்பினைப் புடைத்து
                                வீழ்த்தான்;
பூ மரு தாரினானும் பூவின்மேல், சுரும்பின் பாய்ந்தான்.
15
உரை
   


இருவரும் கதைப் போர் புரிய, அதில்
கேமனை வீமன் கொல்லுதல்

கரி அமர்க்கு ஒருவரான இருவரும், காலில் நின்று,
பரிய அக் கதைப்போர் வல்ல பார்த்திவர் பலரும் காண,
'கிரியொடு கிரி செய் பூசல் இது' எனக் கிளக்குமாறு,
புரிவு இலார் பொருத போர் மற்று யாவரே புகல வல்லார்?

16
உரை
   

தண்டொடு தண்டம் ஏந்தி, சாரிகை பலவும் காட்டி,
'கொண்டலின் முழக்கு ஈது' என்ன, 'குரை கடல் ஒலி ஈது' என்ன,
கண்டவர்க்கு அன்றிக் கேட்டார்க்கு உரைப்பு அருங்
                                கணக்கின் தாக்கி,
கொண்டு வன் காயம் ஒன்றால் கேமனை வீமன் கொன்றான்.
17
உரை
   


சிதறிய சேனையைக் கன்னன் ஒன்று சேர்த்தலும்,
பாண்டவர் சேனையும் ஓர் அணியாக வந்து பொருதலும்

'எறிந்த தண்டு அமரில் கேமன் இறந்தனன்' என்ற போழ்தின்,
முறிந்தது, வேலை ஞாலம் முழுதுடை நிருபன் சேனை;
அறிந்து, எதிர் ஊன்றி, வென்றி ஆண் தகைக் கன்னன் மீளப்
பிறிந்த பல் அணியும் ஒன்ற, பேர் அணி ஆக்கி நின்றான்.

18
உரை
   

பேர் அணிகலம் சேர் மார்பன் பேர் அணி ஆக்கி நின்ற
போர் அணி மிக்க சேனைப் பொலிவு கண்டு, ஒலி கொள் வண்டு ஆர்
தார் அணி அலங்கல் மௌலித் தருமன் மா மதலை சேனை,
ஓர் அணியாகக் கூடி, உடன்று எதிர் நடந்தது அன்றே.
19
உரை
   


நாற்படைகளின் வரவும் திறனும்

மகரிகையும் இரு பணைகளும், விரி நுதல் மருவு கலனொடு மினல்
                                என ஒளி விட,
இகலி அளி முரல் இரு கவுளினும் உடன் இழியும் மத மழை குமிழிகள்
                                எழ எழ,
அகலம் உடையன முதுகு இரு புடையினும், அணியும் மணி கண கண
                                என, அதிர்தரு
ககன முகில் என உயர் வடிவு உடையன, கதியின் விததியின்
                                முடுகின-கரிகளே.

20
உரை
   

நிறனில் மிகுவன நவமணிகளின் இயல் நெடிய கொடுமுடி நிகர்வன
                                மகுடமும்,
அறையும் அருவியை உவமை கொள் சவரமும், அடவி நிகர் என
                                அசைவுறு துவசமும்,
முறையின் நறை கமழ் தொடைபடு மலர்களும், முடுகும் இடனுடை
                                முழைகளும் உடையன-
இறகர் கொடு பல மலை திரிவன என இகலி, இசை பெற, நடவின-இரதமே.
21
உரை
   

அடலில் வலிமையில் விரைவினில் உயர்வன, அகில புவனமும்
                                நொடியினில் வருவன,
பொடியின்மிசை வெளி புதைதர விடுவன, புணரியிடை அலை
                                அலையொடு பொருவன,
மிடல் இல் அடு படை மடிதர நிமிர்வன, விரியும் நறு மலர்
                                கமழ் முக உயிரன,
படியில் ஒரு படி நிலை அறு கதியன, பவனம் என நனி
                                பரவின -பரிகளே.
22
உரை
   

அரிய விலையன அணிகலன் அடையவும் அறலின் முழுகின அரு
                                நவமணி என,
வரி வில் முதலிய பல படைகளும் உடல் வலிய செலவுறு பவனச
                                குலம் என,
நெரிய வருவன வகைபடு மிடல் அணி நிமிர எழுவன நிரைகெழு திரை என,
விரிவின் அளவு அறு சலநிதி நிகர் என, வெகுளி மிகு கதி கடுகினர்-விருதரே.
23
உரை
   

முரசு, கரடிகை, கிணை, துடி, பெருமரம், முருடு, படு பறை,
                                முதலிய கருவிகள்
அரச வரி வளை, கொடு வயிர், எழு குழல், அரவ விருதுகள்
                                முதலிய கருவிகள்,
உரை செய் கருவிகள், முழுவதும் எழு வகை உலகம் முடிவுற
                                உக இறுதியில் எழு
கரை செய் கடல் என, எறி வளி என, மிசை கஞலி, உரும் எறி
                                கனம் என, அதிரவே.
24
உரை
   

எறியும் முரசமும் எரி விழி உரகமும் எழுது கொடி உடையவர்
                                இரு படையினும்,
வெறி கொள் மதமலைகளும் மதமலைகளும், விசயம் மிகுவன
                                இரதமும் இரதமும்,
நெறி கொள் நவ கதி இவுளியும் இவுளியும், நிருதர் குலம் நிகர்
                                விருதரும் விருதரும்,
நறிய தொடை முடி நிருபரும் நிருபரும், நடலை அமரிடை,
                                அடலுடன் உடலவே.
25
உரை
   


கன்னனும் நகுலனும் பரிமீது அமர்ந்து பொருதல்

இரவி மதலையும், இரவி தன் மதலையர் இருவர் மதலையும், இருவரும்,
                                எதிர் எதிர்,
புரவிமிசை விசை பட வலம் இடம் நிகழ் புரிவினுடன் அமர் பொரு
                                பல கதிகளின்
அரவின் அதிபதி முடி கெழு சுடிகையின் அருண மணி வெயில் அவனியில்
                                எழ, நனி பரவி இருள்
வர, நிரை நிரை எழு துகள் பகல் செய் ஒளி வெயில் பருகின செருகியே.

26
உரை
   

அசைவு இல் தொடை அடி, கசை, குசை உரம், நினைவு அறியும்
                                உணர்வின; வளமையும் உடையன;
வசை இல் சுழியன; பழுது அறு வடிவின; வருணம் மொழி குரல்
                                மன வலி மிகுவன;
விசை கொள் பல கதியினும் விரைவு உறுவன; விபுதர் குலபதி விடு
                                பரி நிகர்வன;-
இசைகள் ஒருபது திசைகளும் எழுதிய இறைவர் இருவரும்
                                மிசைகொளும் இவுளியே.
27
உரை
   

முடியும் ஒரு கவிகையும் இரு கவரியும் முதிரும் எரி விட முரண்
                                அரவு எழுதிய
கொடியும் உடையவன் எலுவலும், முரசு உயர் கொடியில் எழுதிய
                                குருபதி இளவலும்,
நெடிய வரி சிலை நிலை பெற வளையவும், நிமிர விடு கணை
                                நிரைநிரை முடுகவும்,
இடியில் எழு மடி அதிர் குரல் விளையவும் இவுளி அமர் கடிது
                                இகலொடு புரியவே,
28
உரை
   


நகுலன் கணைகளால் கன்னன் குதிரை இழந்து,
இரதத்தில் புக, நகுலனும் குதிரையை விட்டுத்
தேரில் ஏறிப் பொருதல்

நகுலன் விடு கணை விதரண குணபதி நடவு குரகத நடை பயில்
                                குரம் அற,
இகலும் வரி சிலை நடு அற, வடம் அற, இடு கவசம் அற, எழுத
                                அரும் இரு புய
சிகரி புதையவும், உரம் முழுகவும், நுதல் திலகம் என ஒளி திகழவும்,
                                மலைதலின்,
மகிழ்வு சினம் எனும் இரு குணமுடன் மனம் மறுக, நிலனிடை வலன்
                                உற இழியவே,

29
உரை
   

இழியும் அளவையின் வினை உடை வலவன் ஓர் இரதம் விரைவொடு
                                கொடுவர, விரி கதிர்
பொழியும் இள வெயில் இரவி முன் உதவிய புதல்வன் விறலொடு
                                புகுதலும், உயர் பரி
ஒழிய, நகுலனும் ஒரு தன் இரதமிசை உபரிசரர் என, உரனொடு புகுதர,
விழியின் மணி நிகர் வலவனும் வலவனும், விசைய குரகதம்
                                விசையொடு கடவவே,
30
உரை
   

கடவும் இரதமும் இரதமும் உயர் கதி கடுகி வருதலும், இருவரும்
                                இரு சிலை
அடர வளைவுற, நொடியினில் எயிறுடை அயில் கொள் பகழிகள்
                                அளவு இல சிதறினர்;
புடவி உற அகல் வெளி முழுவதும் இவர் பொழியும் மழை எழு
                                புயல் மழை என விழ,
உடலம் உகு குருதியின் நனையினர், அருகு உதவி செய வரு
                                தரணிபர் உருளவே.
31
உரை
   

இருவர் பரிகளும் உரன் உற முழுகின; இருவர் வலவரும் விழ,
                                எரி கதுவின;
இருவர் இரதமும் அழிய, முன் முடுகின; இருவர் துவசமும் அற,
                                விசை கடுகின;
இருவர் சிலைகளும் நடு அற, மருவின; இருவர் கவசமும்
                                இடை இடை கெழுமின;
இருவர் கவிகையும் மறிதர, வருடின;-இருவர் உடலமும் எழுதின
                                கணைகளே.
32
உரை
   

கன்னனும் பரி நகுலனும் தம காலின் நின்றிடவே,
பின்னரும் பொரு பாகர் தந்த பிறங்கு தேர்மிசையார்,
முன்னர் அம்பு தொடுத்த போரினும் மும் மடங்கு பொர,
மன்னர் யாரும் மதிக்குமாறு மலைந்து போர் செயவே,
33
உரை
   


நகுலனை மீளுமாறு துரத்தி, அவனுடன் வந்தார் இருவரைக்
கொன்று, விசயன் நின்ற இடத்தைக் கன்னன் அணுகுதல

அல்லி நாள்முகை அம்புயங்கள் அலர்த்தும் நாதன் மகன்
சொல்லினால் உயர் ஆயுள் வேதியர் சுதனை, 'இன்று அமரில்
கொல்லின் நா தவறும்கொல்?' என்று, ஒரு கோலினால் அழியா,
வில்லின் நாண் அழியா, 'நடக்க' என மீள விட்டனனே.

34
உரை
   

நின்ற மா நகுலற்கு வன் துணையாகி நின்றிடலால்,
மன்றல் மாலை விசால மார்பினன் மகத பூபனையும்,
வென்றி வேல் முருகற்கு நேர் புகழ் விடதரன்தனையும்,
கொன்று, வாசவன் மைந்தன் மா முனை குறுக ஏகினனே.
35
உரை
   


விசயன் அம்பினால் கன்னன் வலி அழிந்து மீளுதல்

மடங்கல்மேல் எழு மதமும் மேலிட வரு பணைக் கரிபோல்,
விடம் கொள் சாயக வில்லி சென்று, தன் வில் குனித்து, அடு போர்
தொடங்கும் முன், பலர் வில் எடுத்தவர் சொல்லும் வில்லி அவன்
திடம் கொள் மார்பினில் அம்பு இரண்டு தெரிந்து விட்டனனே.

36
உரை
   

அருண வெங் கதிர் ஆயிரத்தவன் அன்பினால் உதவும்
கருணனும் சில பகழி ஓர் இரு கண்ணர் மார்பில் விடா,
'வருணமும் பெயரும் பிறிந்திலர்; மனனும் ஒன்று' எனவே
தருண வாள் நிலவு எழ நகைத்து, உரைதந்து போயினனே.
37
உரை
   

அன்று போர் புரி சேனையின் பதியான வீரனை, 'நீ
இன்று போய் இனி நாளை வா' என இனிது இயம்பினனால்-
வென்றி கூர் வரி வின்மையால் அடல் வெவ் அரக்கரை முன்
கொன்ற காளையை ஒத்த பேர் இசை கொண்ட ஆண்மையினான்.
38
உரை
   


சாத்தகி, சல்லியன், முதலியோர் இருவர்
இருவராய் அங்கங்கே பொருதல்

அல்லி அம்புயம் அனைய கண்ணினன் அனுசனும், குனி வில்
சல்லியன் பெயர் என விளங்கிய தானை மன்னவனும்
பல்லியங்கள் துவைப்ப, நீடு பணைப் பகட்டுடனே
வல்லியம் பொருமாறு எனப் பொர, மாறுஇலார், ஒரு பால்;

39
உரை
   

மாரனுக்கு இளையாமல் அம்பையை மா தவத்து விடும்
தீரனுக்கும் ஒர் ஆழி கொண்டு செலுத்து தேருடை வெஞ்
சூரனுக்கு எதிராகி மேனி துலங்கு சேரன் எனும்
வீரனுக்கும் மிகுத்த பேர் அமர் விளைய, வேறு ஒரு பால்;
40
உரை
   

முழுது உணர்ந்தருள் முனிவரன் புகல் மும்மை வண் தமிழும்
பழுது அறும்படி தெளிஞர் ஏறிய பலகை ஒன்று உடையான்
வழுதியும், தனி மதி நெடுங் குடை மன்னன் மாதுலனும்,
பொழுது சென்றிடும் அளவும் வெஞ் சமர் புரிய, வேறு ஒரு பால்;
41
உரை
   

குரவர் சொற்கள் மறுத்து வன்பொடு கொண்ட பார் உடையான்
அரவு உயர்த்தவனுக்கு அனந்தரம் ஆன தம்பியுடன்,
கரவு சற்றும் இலாத சிந்தையன் வாயு வேக கதிப்
புரவி வித்தகன் இளவல் சென்று, அமர் புரிய, வேறு ஒரு பால்;
42
உரை
   


அசுவத்தாமனும் வீமனும் செய்த வெம் போர்

வேரி அம்புயன் வேதம் யாவையும் வில்லின் வேதமும் வல்
ஆரியன் தரு கடவுள் மைந்தனும், அனிலன் மைந்தனுமே,
தூரியம் பல கோடி கோடி துவைப்ப, 'வெஞ் சமரே
காரியம்; பிறிது இல்லை' என்று, கலந்து மோதினரே.

43
உரை
   

சுரர் உலோகம் மகிழ்ந்து அணைந்த துரோணன் மா மகன்-மேல்-
வரு சதாகதி மகனை நால்-இரு வாளி ஏவி, வெகுண்டு,
இரத நேமி குலைந்து, சூதனொடு இவுளி நாலும் விழ,
பொருது சீறினன்,-முன் பயந்த புராரியே அனையான்.
44
உரை
   

மீள மற்று ஒரு தேரில் ஏறிய வீமன் வெஞ் சினம் மேல்
மூள, மல் புய கிரி தடித்திட, மூரி வில் வளையா,
வாளம் ஒப்பு என மற்று அவன் கொடி வாசி பாகொடு தேர்
தூளம் உற்றிட முதுகிடும்படி தொட்டனன், கணையே.
45
உரை
   


கைகயனும் சுருதகீர்த்தி முதலியோரும்
இருவர் இருவராய்ப் பொருதல

'கருதி வாய்த்தது போர்' எனா, மெய் களித்த கைகயனும்,
சுருத கீர்த்தியும் உடன் மலைந்து தொடங்கினார் ஒருபால்;
கிருத பார்த்திவனுடன் மலைந்து சிகண்டி கெட்டனன், மா
இரதமேல் கொடி ஆடை வீழ்தர ஏகினான் ஒருபால்.

46
உரை
   

தரும பூபதி சேனையின் பதி-சாப ஆசிரியன்
கிருபனோடு மலைந்து, வெஞ் சமர் கெட்டு, நீடு இரதம்,
புரவி, பாகு, தரித்த திண் சிலை, பொன்ற, அன்று உயிரோடு
அரிது போயினன்-வேள்வி ஆகுதி அங்கிவாய் வருவோன்.
47
உரை
   

திங்களைத் தலையாக மன்னவர் செப்பு மா மரபோர்,
தங்களில் பகை ஆகி, வானவர் தானவர்க்கு எதிராய்,
'எங்களுக்கு, எழு பார் அடங்கலும்!' என்று போர் புரியும்
வெங் களத்தின் இயற்கை எங்ஙன் வியந்து கூறுவதே!
48
உரை
   


வெங்களத்தின் இயற்கை

இற்ற கை கால் செறி களம் முழுதும் கழுகு இட்டன, காவணமே;
உற்றது, கொள் அலகைக் குலம் வெங் களம் உரை பெருகா வணமே,
வெற்று உடல் மன்னர் சரிந்த குடைக்கண் விரிந்தன சாமரமே;
கொற்றம் மிகும் பறை ஓசை அழிந்து குலைந்தன, சா மரமே.

49
உரை
   

மின் புயல்வாய் விரிகின்றன ஒத்தன, விரி நுதல் ஓடைகளே;
என்பு உற ஊறி விழும் கட தாரையின் ஏயின, ஓடைகளே
முன் புடை வாலதி செற்றது, வெம் புகர் முகம் முழுகும் சரமே.
வன்புடை மால் வரை மறிவன போல மறிந்தன, குஞ்சரமே.
50
உரை
   

பட்டம் அணிந்த நுதற்கு இடையே விழு தும்பிகள் பட்டனவே;
தொட்டியுடன் பொரு சமர் முனை சீறிய தும்பிகள் பட்டனவே.
வெட்டி அறன் புதல்வன்தன் வரூதினி வென்று களித்தனவே;
இட்ட குமண்டைய பேய், பிணம் மிக்கன என்று, உகளித்தனவே.
51
உரை
   

பழுது அற வீழ் படை மன்னவர் பேர் உடல் பற்பல அம்பினவே;
பொழி குருதிப் புனல் மூழ்கினர் மேனி புலாலின வம்பினவே.
தழல் விழி வாரண வீரர் முடித் தலை தடிவன, சக்கரமே;
அழல் உமிழ் வாள்கள் சுழற்றின மீளவும், மா வனசக் கரமே.
52
உரை
   

முழுகிய வாளிகள் குழுமிய வீரர் முகத்தின எண் இலவே;
விழிவழி தீ எழ முறுவல் பரப்ப விரித்தன, வெண் நிலவே
உழை மழை வீழ்வன பல படை எங்கும் உமிழ்ந்தன, வெவ் வெயிலே;
அழிவு இல் வரூதினி சூழ் எயிலுக்கு எதிர் ஆவன, எவ் எயிலே!
53
உரை
   

சர மழை, காவலர்தங்கள் மனோ வனசம் புக, மேயினவே;
இரை கவர் புள்ளினொடு உள் உறவு ஆவன, சம்புகம் ஏயினவே.
வரை சிறகு அற்று விழுந்தன என்ன மறிந்தன, வாரணமே;
அருகு நடிப்பன அலகைகள் பாடுவ, யாமள ஆரணமே.
54
உரை
   

செயிருடை ஆடவர் சோரி பரந்து, சிவந்தது, பார் இடமே;
வயிறு பெருங் குருதிச் சுனை ஆக வளர்ந்தன, பாரிடமே.
பயில மறைத்தன, பாறு பருந்தொடு பல கழுகு அந்தரமே;
எயிறுடை வாளி துணிப்ப விழுந்தன, எத்தனை கந்தரமே!
55
உரை
   

உம்பல் அநேகம், இளம் பிடி என்ன, ஒடிந்தன, கோடுகளே;
செம் புனல் யாறு இரு பக்கமும் வீழ் குறை செய்தன, கோடுகளே.
தும்பிகளால் அறையுண்டன, கொற்றவர் சூழ் மன அம்புயமே;
வெம் புகர் வாளில் அழிந்தன, மால் வரை விதம் அன அம் புயமே.
56
உரை
   

தாள் வலி ஆடவர் சிரம் உருளும்படி தைத்தன, சாயகமே;
ஆழ் குருதித் தடம் ஒத்தன, அவர் அவர் அவ் உடல் சாய் அகமே.
ஏழ் புயல் வானம் இருண்டிட எங்கும் எழுந்த, இருந் துகளே;
வீழ் பசியால் உழல் பேயொடு பாரிடம் மிக்க, விருந்துகளே.
57
உரை
   

செய் கடல் ஆம் என வந்து சிவந்த கவந்தம் அலைந்தனவே;
கைகொடு கால்கொடு தம்மின் வெகுண்டு, கவந்தம் மலைந்தனவே.
ஐவகை ஆன கதிக் குரம் நாலும் அழிந்தன, வாசிகளே;
மெய் வகையால், இவை, கூர் எறிகோல் விடு வீரர் கை வாசிகளே.
58
உரை
   

தாரைகள், ஒற்றை, தயங்கிய நீள் வயிர் சங்கம் முழக்கினவே;
ஓர் இமையில் சிலை யானை துரங்க சங்கம் உழக்கினவே.
சேர வளைத்த வில் ஒன்று ஒரு கோடி சிலீமுகம் ஏவினவே;
வீரர் உயிர்ப்பு உடல் விட்டு அரமங்கையர் மெய்ம்முகம்
                                மேவினவே.
59
உரை
   

பொரு கடல் ஒத்த பெருங் குருதிக் கடல் போத இரைந்தனவே;
விரவுறு தேவர் விமானம் விசும்பிடை போத விரைந்தனவே.
கரு முகில் முட்டின பட்டவர் கட் கனல் காலும் அரும் புகையே;
சுரிகையொடு அற்று விழுந்தன, மங்கையர் துனியில் அரும்பு கையே.
60
உரை
   

கட கரி ஏனமொடு ஒத்தன, அம்பொடு போன கரத்தனவே;
புடவியின்மீது உறை நிறை மதியம் பலபோல் நகரத்தனவே.
படு திறல் வேலவர் கண்மணி சென்று பறித்தன, வாயசமே;
அடு பணை யானையின் வெங் குடர் சென்று பிடுங்கின, ஆயசமே.
61
உரை
   

அணி தொடை தேன், மதுகர நிரை சால அருந்த, விளைத்தனவே;
மணி முடி பாரம் உறப் பல நாகம் வருந்த இளைத்தனவே.
கணை பல வீரர் முகத்தன, தோளன, கண்ணன, மார்வனவே;
நிணமொடு மூளை நெடுங் குடர் பூத நிரைக்கணம் ஆர்வனவே.
62
உரை
   

ஆவமொடு ஒத்தன, ஆடவர் நெஞ்சுகள் ஆகிய போது-அகமே;
பூ வலயத்து உடல், ஆர் உயிர் வானிடை புக்கன, போதகமே.
மேவு நரிக்கு விளைந்தன, வெங் கரி வீழ் தலை ஓதனமே;
நாவலருக்கும் உரைப்பு அரிது, அந்த நனந் தலை யோதனமே.
63
உரை
   


திட்டத்துய்மன் பின்னிடும் முன்பே விசயன்
எதிர்ந்து வர, சஞ்சத்தகரும் நாராயண
கோபாலரும் எதிர்த்தல்

பேர் ஆண்மை செய் சேனாபதி பின்னிட்டிடு முன்னே,
தேர் ஆண்மையும் வில் ஆண்மையும் உடையான் எதிர் செல்ல,
தார் ஆர் அகல் வரை மார்பினர் சஞ்சத்தகர்தாமும்,
நாராயண கோபாலரும், அணியாக நடந்தார்.

64
உரை
   

சட் கோண நெடுந் தேர்மிசை வரு சத்தியசேனன்,
புட் கோ எழுதிய சீர் பெறு பொன் அம் கொடி வலவன்
துட்கோடு உளம் மறுகும்படி, சுடு தோமரம் ஒன்றால்,
முள் கோலுடன் வடமும் சிதைவு உற மோதினன், முரணால்.
65
உரை
   

புடையுண்டு உளம் உருகிப் புயல்போல் வண்ணன் நகைத்து,
தொடை உண்ட மலர்த் தும்பை சுமக்கும் திரள் தோளார்
உடையுண்டது ஒர் கடலாம் என ஓடும்படி, அவர்மேல்
தடையுண்ட தடந் தேரினை விட்டான், முனைதரவே.
66
உரை
   

சென்று ஆடு அமர் புரி சேனையுடன், சித்திரசேனன்,
வன் தாள் வலி மிகு மந்திரபாலன்தனை வானோர்
தன் தாதை அளிக்கும் பல சரத்தால், விழ மோதிக்
கொன்றான்-மிடல் வழுவாத குரக்குக் கொடி உடையோன்.
67
உரை
   


சஞ்சத்தகரும் நாராயண கோபாலரும் முற்றும்
இறந்துபட, பகைவர் முதுகிடுதல்

முன் நாள் முதல் நால்-நாலினும் முனைதோறும் முருக்கி,
தன்னால் உயிர் கவராதவர் சஞ்சத்தகர் யாரும்
நல் நாரண கோபாலரும் நாகம் குடி ஏற,
பொன் நாண் வரி சிலை கோலினன், மாலோன் உயிர் போல்வான்.

68
உரை
   

'சஞ்சத்தகர், கண்ணன் தரு தனயோர் பலர், அடைவே
எஞ்சப் பொருதனன் வெஞ் சிலை இமையோர் பதி மகன்' என்று
அஞ்சிக் களம் முழுதும் கழுகு ஆட, குறை ஆட,
குஞ்சத்தொடு குடை வீழ்தர, முதுகிட்டனர் கூடார்.
69
உரை
   


சேனை முதுகிட்டமை அறிந்து துரியோதனன் பெரும்
படையுடன் வர, தருமன் அவனை எதிர்த்தல

முதுகிட்டவர் துரியோதனன் முன் வீழ்தலும், நூறைம்-
பது கற்கியும், நாலாயிரம் விகடப் பொரு பகடும்,
மதுகைப் படு தேர் ஆயிரமும், கொண்டு, எதிர் வந்தான்-
எதிர்கைப் பட ஒரு மன்னரும் இல்லா அமர் வல்லான்.

70
உரை
   

'குருமித்து நடக்கின்றனன்; இவனோடு கொடுங் கார்
உருமின் பொருகுவம்!' என்று உளம் உகளித்து எழ முனைமேல்
நிருமித்து நடந்தான்-மனு நீதிக்கு ஒரு நிலையான்,
தருமத்தினது உயிர் என்று உரை தக்கோர் சொல மிக்கோன்.
71
உரை
   

'துனை வெங் கபோல விகட கட கரி, துரகம், பதாதி, இரதம்,
                                அளவு இல'
என நின்ற சேனை முடுகி, அயில் சிலை எறி துங்க வாளொடு
                                இகலி எழ, எதிர்
குனி சங்கு, தாரை, வயிர்கள், முதலிய, குணில் கொண்டு சாடு
                                பறைகள் முதலிய,
தனிதம் கொள் மேகம் எனவும், மலை பொரு தமரம் கொள்
                                வேலை எனவும், அதிரவே,
72
உரை
   

கதி கொண்ட சேனை நடவ, எழு துகள் ககனம் சுலாவி அனில கதி உற,
முதிர் சண்ட சூர கிரணம் இருள் எழ, முகில் பஞ்ச பூத வடிவு
                                பெற, வியன்
நதி வண்டலாக, அமரர் உறைதரும் நகரம் பொன் வீதி புழுதி எழ, முழு-
மதி அங்க மாசு கழிய, நிரை நிரை வளர் அண்ட கூட முகடு பிதிரவே,
73
உரை
   

குதி கொண்ட வாசி வயவர் பலரொடு குதி கொண்ட வாசி
                                வயவர் குறுகினர்;
துதி வெங் கை வேழ மறவர் பலரொடு துதி வெங் கை வேழ
                                மறவர் துதையினர்;
அதிர் சண்ட வேக இரதர் பலரொடும் அதிர் சண்ட வேக
                                இரதர் அணுகினர்;-
பொதி வெம் பதாதி விருதர் பலரொடு, பொதி வெம் பதாதி
                                விருதர் பொதுளவே.
74
உரை
   

புரி செம் பொன் நேமி விசையொடு இரு கிரி பொரு வன்பு போல
                                நவமணியின் ஒளி
விரி தந்த சோதி படலம் மிகுவன மிசைகொண்ட தேர்கள்
                                கடவ, வல்லவர்கள்,
எரி செங் கண் நாக அரசும் முரசமும் எழுதும் பதாகை
                                நிருபர் இருவரும்,
முரி தந்த சாபம் முடுகு பகழியின் முகில் தங்கு வானம்
                                முழுதும் மறையவே,
75
உரை
   

அறன் மைந்தன் வாளி அடைய, நயனமி-லவன் மைந்தன் வாளி
                                விலக; விரகுடை
விறல் மைந்தன் வாளி அடைய, விரகு இலி விடு புங்க வாளி விலக;
                                முறை முறை,
மறமும் பொறாத சினமும் இரு புய வலியும் தவாமல் அரிது பொருத
                                பின், நிறம் ஒன்றும் ஏழு
பகழி முழுகின, நிருபன்தன் மார்பு குருதி பொழியவே.
76
உரை
   

விரிகின்ற நீள கிரியில் இள வெயில் விழுகின்ற தாரை அனைய அழகொடு
                                சொரிகின்ற சோரி
உடைய மகிபதி, சுளிவு இன்றி மீள ஒரு கை நொடியினில் முரிகின்ற நீடு
                                புருவம் நிகர் என
முனைகின்ற சாபம் முரிய, விரைவொடு
தெரிகின்ற கோல்கள் முழுகி அறன் அருள் திருமைந்தன் மார்பு குருதி
                                பொழியவே,
77
உரை
   

மருமங்கள் சோரி வடிய, இருவரும் மலைகின்ற போதில்,
                                மதுகை நிலையொடு
தருமன் குமாரன் நகைகொடு அவனிபர் தலைவன் குமாரன்
                                உரக துவசமும்,
அருமந்த தேரும், விசய வலவனும், அடல் கொண்டு பாய்
                                புரவியும் அழிவுற,
உரும் அஞ்ச நாணி எறியும் ஒலி எழ ஒளி விஞ்சு நாலு
                                பகழி உதையவே,
78
உரை
   

இழிதந்து மீள இமயம் அனையது ஓர் இரதம் கடவி எதிரி உரனிடை
அழிதந்து மீள அயில் கொள் முனையது ஒர் அயில் கொண்டு வீசி
                                எறியும் அளவினில்,
மொழிதந்த வேலின் முனையும் ஒடிவுற முரிவுண்டு கீறி வழியில்
                                விழ, எதிர்
பொழிதந்ததால் ஒர் பகழி-அறன் அருள் புதல்வன் கை வாகை
                                புனையும் வரி விலே.
79
உரை
   

பிளவுண்டு வேல் விழுதலின், மகிபதி பிழை கொண்ட வேழம் அனைய
                                மெலிவினன், உளம் நொந்து
நாண உருளும் இரதமும் உடைதந்து, போரும் ஒழியும்வகை சில
கிளர் அம்பு வீசி, ஒரு பவள முது கிரி நின்றது ஆகும் என,
                                முன் நிலைபெறு
வள மைந்தன் வாய்மை உரைசெய்தனன், மிசை வரும் உம்பர் யாரும்
                                இதயம் மகிழவே.
80
உரை
   


துரியோதனன் தளர்வுற, தருமன்,
'இன்று போய் நாளை வா!' எனக் கூறுதல்

'அளி தங்கு மாலை அரசர் அவையில் உன் அதி வஞ்ச மாமன்
                                அவனி கவர்வுற,
எளிவந்த சூது பொருத விரகு அரிது; 'எளிது, இன்று பூசல்' என
                                முன் விரவினை;
ஒளி விஞ்சு தேரும் உடைய படைகளும் உடையுண்டு, நீயும்
                                உறுதி தவறினை;
தெளிவு என்பது ஆசும் இலது, உன் மனம்; உறு செரு வென்ற
                                வீரம் அமையும், அமையுமே!

81
உரை
   

'அனிலன் குமாரன், அரசர் அசனி, என் அநுசன் சொல் வாய்மை
                                பழுதுபடும் என உனை இன்று
கோறல் ஒழிவது அலது, நின் உரம் என்கொல் ஆகும், எனது
                                கணை எதிர்?
புனை தும்பை மாலை சருகு பட எழு பொடி மண்ட ஓடி
                                மறைக, விரைவுடன்!
இனி எங்கள் ஆண்மை உரைசெய்து எது பயன்? எதிர் வந்து
                                நாளை அணிக, இகலியே!'
82
உரை
   


துரியோதனன் முறுவலித்து, கதை கொண்டு எறிய,
அதைத் தருமன் வேலால் உருவ எறிதல்

முதிர் குந்திபோசன் மகள்தன் மகன் இவை மொழிதந்த போழ்து,
                                பெருக முறுவல் செய்து,
அதிரும் சுயோதனனும், ஒர் உயர் கதை அவன் மன்றல் மார்பின்
                                உரனொடு எறிதர,
எதிர் சென்று நீதி புனையும் நிருபனும், எறி தண்டு கூறுபடவும்,
                                எறிபவன்
விதிருண்டு பாரில் விழவும், ஒரு தனி விறல் உந்து வேல்கொடு
                                உருவ எறியவே,

83
உரை
   


துரியோதனன் பாரில் விழ, கன்னன், அசுவத்தாமன் முதலிய பலரும் அங்கு வருதல்

'சூழ்ந்தது விதிகொல்? பாகும் துரகமும் தேரும் வீழ,
வீழ்ந்தனன் வேந்தர் வேந்தன், மெய் தவா வேந்தன் வேலால்;
தாழ்ந்தது, நமது கொற்றம்' என நடுத் தரிப்பு ஒன்று இன்றி,
ஆழ்ந்த பைங் கடலோடு ஒப்பான் அடுத்தனன், அங்கர் கோமான்.

84
உரை
   

முன் படு தினத்தில் தந்தை முடிந்த மெய் வருத்தத்தோடு
கல் படு புண்ணின் மீளத் தடி படு கணக்கிற்று ஆக,
வெற்பு அடு தடந் தோள் வேந்தன் வீழ்ந்தனன் என்று, வெய்தின்
எல் படு பரிதி என்னத் தோன்றினன், இவுளித்தாமா.
85
உரை
   

வேட்ட வெங் களிறோடு ஒப்பான், மேதினிக்கு அரசன், வில் போர்ப்
பூட்டு அறு புரவித் தேரும் பொன்றிய புலனும் ஆகி,
ஓட்டம் இல் தானையான் கை வேலினால் உடைந்த மாற்றம்
கேட்டனன், அவர்க்கு முன்னே கிருபஆசிரியன் வந்தான்.
86
உரை
   

காப்புடை ஒற்றை நேமிக் காவலன் தாம மார்பில்
நாப் புகல் வாய்மையான்தன் நாள்மலர்ச் செங் கை வை வேல்
கோப்புற வீழும் முன்னர்க் கொதித்து எழு மனத்தன் ஆகி,
தாப் புலி பாய்ந்தது என்ன, சல்லியன்தானும் வந்தான்.
87
உரை
   


தருமனைப் பலரும் வளைக்க, விசயன் முதலியோர்
அவனுக்கு வந்து உதவுதல்

எப் பெருஞ் சேனையோடும், எக் குல வேந்தும், வந்து,
தப்பு அருங் கொற்ற வேல் கைத் தருமனை வளைந்த காலை,
அப் பெருந் தானைதன்னில் அருச்சுனன் ஆதியான
ஒப்பு அருந் தரணி பாலர் இவற்கும் வந்து உதவினாரே.

88
உரை
   


துரியோதனாதியர் உடைந்து பாசறைக்கு மீள,
தருமன் முதலியோர் உவகையோடு மீளுதல்

இரு படை அரசும் தம்மில் ஈர்-இரண்டு அங்கம் ஆகி,
வரு படை கொண்டு நின்று, வல்லவா பூசல் தாக்க,
பொரு பணியுடைப் பதாகைப் பூபதிதனையும் கொண்டு, ஆங்கு
ஒரு படை கைக் கொளாமல், ஒன்னலர் உடைந்து போனார்.

89
உரை
   

நா கையாப் புகழான், பெண்ணை நதி வளம் சுரக்கும் நாடன்,
வாகையால் பொலி திண் தோளான், மாகதக் கொங்கர் கோமான்,
பாகை ஆட்கொண்டான், செங்கைப் பரிசு பெற்றவர்கள் போல
ஓகையால் செருக்கி மீண்டார், உதிட்டிரன் சேனை உள்ளார்.
90
உரை
   


சூரியன் மேல்கடலில் மூழ்கி, குணகடலில் பிறத்தல்

அருக்கனும், தருமன் மைந்தன் ஆண்மையும் நிலையும் கண்டு,
வெருக் கொளும் நிருபர் என்ன, மேல் திசை வேலை மூழ்கி,
சுருக்கம் இல் கங்குற் காலம் சென்ற பின், சுதன்மேல் அன்பு
பெருக்க உண்டாக, மீண்டும் குண கடல் பிறந்திட்டானே.

91
உரை