தொடக்கம் |
|
|
46. பதினெட்டாம் போர்ச் சருக்கம் கடவுள் வாழ்த்து மீன், ஆமை, கோலம், நெடு நரசிங்கம், ஆகி; நிலம் விரகால் அளந்த குறளாய்; ஆனாது சீறும் மழு, வல் வில்லும், வெல்லும் முனை அலம், உற்ற செங் கையவராய்; வான்நாடர் வந்து தொழ, மண்நாடர் யாவரையும் மடிவிக்க வந்த வடிவாய்; நானா விதம் கொள் பரி ஆள் ஆகி நின்று அருளும் நாராயணாய நமவே! | 1 | |
|
உரை
|
|
|
|
|
சூரியன் தோன்றுதல்
சிதையத் தன் மைந்தனை அடும் தன்மை கண்டும், ஒரு செயல் இன்றி, நீடு துயர் கூர் இதையத்தன் ஆகி, அகல் பகலோன், மறித்து, அவுணர் எதிர் அஞ்சுமாறு பொருதான்- உதையத் தடங் கிரியும் ஒளிர் பற்பராக கிரி ஒப்பாக, வீசு கதிரின் புதையப் பரந்த அகல் இருளும் துரந்து, உரகர் புவனத்தினூடு புகவே. | 2 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் இரவில் சகுனியொடு எண்ணி, உதயத்தில் சூரியனைத் தொழுதல்
கண் துஞ்சல் இன்றி, இரவு இரு கண் இலான் மதலை கண்ணீரில் மூழ்கி, 'எவரைக் கொண்டு இங்கு எடுத்த வினை முடிவிப்பது' என்று உயர் சகுனியோடும் எண்ணி, இருள் போய், உண்டும் சுகித்தும் மலர் மது ஒன்று சாதி முதல் ஒண் போது விட்டு, ஞிமிறும் வண்டும் சுரும்பும் அரவிந்தத் தடத்து வர, வருவோனை வந்தனை செய்தான். | 3 |
|
|
உரை
|
|
|
|
|
சல்லியனைத் துரியோதனன் அழைத்துச் சேனாதிபதியாக்குதல்
தொல் ஆண்மை எந்தை முது தந்தைக்கும், மைந்து உறு துரோணற்கும், மண்ணில் நிகர் வேறு இல்லாத வண்மை புனை வெயிலோன் மகற்கும், உடன் எண்ணத் தகும் திறலினான்; வில் ஆண்மையாலும், வடி வாள் ஆண்மையாலும், அயில் வேல் ஆண்மையாலும், அவனே அல்லாது, வேறு சிலர் இலர் என்று, சல்லியனை அதி ஆதரத்தொடு அழையா, | 4 |
|
|
உரை
|
|
|
|
|
'நீயே எனக்கு உயிரும்; நீயே எனக்கு உளமும்; நீயே எனக்கு நிதியும்; நீயே துணைப் புயமும்; நீயே விழித் துணையும்; நீயே அனைத்து நிலையும்; நீயே முனைச் செருவில் அதிரதரின் மாரதரின் நிகர் அற்ற கோவும்; அதனால், நீயே முடித்தி எனது எண்ணத்தை' என்று உவகை நிகழா, வியந்து புகழா, | 5 |
|
|
உரை
|
|
|
|
|
மன் பட்டவர்த்தனரும் மணி மகுடவர்த்தனரும் முறையால் வணங்க, ஒளி கால் நல் பட்டமும் தனது கையால் அணிந்து, 'படை நாலுக்கும் நாயகம்' எனா, மின் பட்ட ஓடை நுதல் இபராசன் வன் பிடரின்-மிசை வைத்து, உகந்தனன்அரோ; என் பட்டது அப்பொழுது குரு சேனை, மெய்ப் புளகம் எழ, ஒண் கண் முத்தம் எழவே! | 6 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் காலைக் கடன்களை முடித்து, சல்லியனோடு களம் புகுதல்
சேனாபதிக்கு வரிசைகள் யாவும் நல்கி, உயர் தெய்வீகமான புனலில் தூ நானம் ஆடி, மறைவாணர்க்கு அநேக வித தானம் சொரிந்து, துகிலும் தேன் ஆர் அலங்கல் பல கலனோடு அணிந்து, பொரு தேரில் புகுந்தனன்-வழா வான் ஆளும் நாதன் அதிர் முகிலில் புகுந்தது என, வன்போடு மன்னர் தொழவே. | 7 |
|
|
உரை
|
|
|
|
|
கிருபாரியன், கடவுள் மருகன், திகத்த பதி, சாலுவன், கிருதன், முதலோர் இரு பாலும் மன்னர் வர, முனிவு ஆர் பெருஞ் சேனை எங்கணும் சூழ வரவே, நிருபாதிபன் தனது சேனாதிபன்தனொடு நீள் களம் புக்கனன்-'அரும் பொரு பாரதச் சமரம் இன்றே முடிப்பல்!' எனும் எண்ணத்தினோடு பொரவே. | 8 |
|
|
உரை
|
|
|
|
|
சல்லியன் சேனையை அணி வகுத்தல்
தாமன் தராதிபர்கள் பலரொடும் வலப்புடை சலிப்பு இன்றி அணிய, விறல் கூர் மாமன் தராதிபர்கள் பலரொடும் இடப்புடை வகுப்பொடு அணிய, தினகரன் கோ மைந்தன் மைந்தன் இருவோரொடும் சேனையைக் கொண்டு உற அணிந்தனன்-இகல் சாமந்தர் மண்டலிகர் முடி மன்னர் சூழ்வர, தரணி பதி பின் அணியவே. | 9 |
|
|
உரை
|
|
|
|
|
ஐவரும் பாசறையில் கன்னன் பிரிவுக்குப் புலம்பிச் சோகமுறுதல்
ஒருவரும் எனக்கு நிகர் இல்லை எனும் மத்திரன் புத்திரனை உரக துவசன் பொரு படை முனைக்கு உரிய சேனாபதிப் பெயர் புனைந்தமை புகன்றனம். இனி, குருகுலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள் இரவி குமரனைக் கொன்ற இரவில் பருவரல் மிகுந்து உளம் இனைந்ததும், பாசறை முனைந்ததும் வியந்து பகர்வாம்: | 10 |
|
|
உரை
|
|
|
|
|
'செவ் இரவி திருமகனை, செகம் புரக்கும் காவலனை, இரவலோருக்கு எவ் இரவும் விடிவிக்கும் இரு கரத்து வள்ளலை, இன்று இழந்தோம்!' என்று விவ் விரவு நறு மலர்த் தார்த் தருமன் முதல் ஐவரும், தம் விழி நீர் சோர, அவ் இரவில், இமைப்பொழுதும் தரியாமல், அழுது அரற்றி அலமந்தாரே. | 11 |
|
|
உரை
|
|
|
|
|
சாயை வெறுத்தனள், அவளின் தலத் தேவி மிக வெறுத்தாள், 'தபனன் ஈன்ற சேயை வெறுத்து, உயிர் கவர்ந்தான் உறவு அறியான், தெயித்தியர் போர் செயித்தான்' என்று, மாயை வெறுத்திட விளைத்த மாயோனை வெறுத்தனன்; வன் மனத்தி ஆன யாயை வெறுத்தனன்; பின்னை விதியை வெறுத்தனன்-வீமற்கு இளைய கோவே. | 12 |
|
|
உரை
|
|
|
|
|
பாண்டவர் போர்க்களம் புகுதல்
அற்றை இரா விடிவு அளவும் தனித்தனியே ஆகுலமுற்று, அனிலன் மைந்தன், மற்றை நால்வரும், மாலும், மன்னவரும், வரூதினியும், மருங்கு சூழ, 'இற்றை நாள் வஞ்சினத்தின் குறை முடிக்க வேண்டும்' எனும் இதயத்தோடும, பிற்றை நாள் முரசு அதிர, வளை முழங்க, களம் புகுந்தான், பிதாவைப் போல்வான். | 13 |
|
|
உரை
|
|
|
|
|
'விம்மு பெரும் பணை ஒலியால் விண்டதுகொல் அண்டம்!' என விண்ணோர் அஞ்ச, கைம் முக மா முதலான கடுஞ் சேனைப் பாஞ்சாலன் காதல் மைந்தன் எம் முகமும் தான் ஆகி, இரதம் ஊர்ந்து, அணி வகுக்க, இளையோர் யாரும் தம்முனை வந்து அடி வணங்கி, புடை சூழ்ந்தார், சிறிதும் மனம் சலிப்பு இலாதார்.
| 14 |
|
|
உரை
|
|
|
|
|
சல்லியனது அத்திரவியூகம் கண்டு தருமன் மனம் தளர, கண்ணன் அவனுக்குத் தேறுதல் உரைத்தல்
அத்திரயூகம்அது ஆக அரும் பெருஞ் சேனையை வகுத்து, ஆங்கு அதிபன் ஆகி, மத்திர பூபதி நின்ற வலியினைக் கண்டு, அதிசயித்து, மாலை நோக்கி, 'இத் திறம் ஆகிய படையோடு எப்படி நாம் சில படைகொண்டு எதிர்ப்பது?' என்றான்- குத்திரம் ஆகிய வினைகள் ஒருகாலும் திருவுளத்தில் குடிபுகாதான். | 15 |
|
|
உரை
|
|
|
|
|
'வீடுமனை, சிலைக் குருவாம் வேதியனை, நும்முனை, முன் வீடு சேர்த்த நீடு மணிப் பொலங் கழலோர் நின் அருகே நிற்கின்றார்; நிகர் இலாய்! கேள்! ஆடு திரைக் கடல் நீந்தி ஏறினர்க்குக் கழி கடத்தல் அரியது ஒன்றோ? தோடு அவிழ் தார்ச் சல்லியனுக்கு இளைப்பரோ?' என மொழிந்தான், துளப மாலே. | 16 |
|
|
உரை
|
|
|
|
|
'வில்லியரில், வேலாளில், வாள் எடுத்தோர்-தம்மில் ஒரு வேந்தர் ஒவ்வார்; செல் இயல் வெங் கரி ஆளில், தேர் ஆளில், பரி ஆளில், சிலர் வேறு ஒவ்வார்; மல் இயல் பொன்-தோள் வலிக்கும், தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே? சல்லியனுக்கு ஒப்பார் நின் தம்பியரில் இலர்' என்றும் சாற்றினானே. | 17 |
|
|
உரை
|
|
|
|
|
'அரு வரை ஓர் இரண்டு இருபால் அமைந்தனைய தடம் புயம் கண்டு அவனி வேந்தர் வெருவரு போர் மத்திரத்தான், வேறு ஒருவர்மேல் செல்லான், நின்மேல் அன்றி; இருவருமே முனைந்து முனைந்து இரவி கடல் விழும் அளவும் இகல் செய்தாலும், ஒருவர் ஒருவரை வேறல் ஒண்ணாது இன்று, உமக்கு' என்றும் உரைசெய்தானே. | 18 |
|
|
உரை
|
|
|
|
|
'பார்த்தன் ஒருவனும் சென்று பரித்தாமா-வுடன் மலைய, படைஞரோடு மாத்திரி மைந்தரில் இளையோன் சௌபலனை வெல்ல, இகல் மா வலோனும், மூத்தவன் மைந்தரை வெல்ல, முனைப் பவனன் மைந்தனொடு மூண்டு வெம் போர், கோத் தரும! மத்திரத்தார் கோவை உயிர் கவர்தி!' எனக் கூறியிட்டான். | 19 |
|
|
உரை
|
|
|
|
|
திட்டத்துய்மன் அணிவகுத்து நிற்க, சேனைகள் பொரத் தொடங்குதல்
கிருபையால் உயர் கேசவன் இங்கிதக் கேள்விகள் உணர்வுறக் கேட்டு, துருபதேயனும் தன் பெருஞ் சேனையைத் துன்றிய வியூகமாத் தொடுத்து, நிருபர் யாவரும் சூழ்வர, தாழ் சலநிதி என, விதி என, நின்றான்- பொரு பதாகினி இரண்டினும் முனை உறப் போர் வலோர் தூசிகள் பொரவே. | 20 |
|
|
உரை
|
|
|
|
|
சல்லியன் வந்து தருமனோடு பொருதல் ஆய போதினில், குருபதி பதாகினிக்கு அதிபதி ஆய பூபதி, அம் மாயவன் புகல் மொழிப்படி தருமன் மா மதலைமேல் விரைவுடன் வந்தான்; காயும் வெங் கனல் கண்ணினன், செவி உறக் கார்முகம் குனித்த செங் கரத்தான், தீய ஆகிய சிலீமுகம் உரன் உறச் சொரிதரு சிங்கஏறு அனையான். | 21 |
|
|
உரை
|
|
|
|
|
எதிரி தேர் வரும் வன்மை கண்டு, இமிழ் முரசு எழுதிய கொடி நராதிபனும், கதிரின் ஏழ் பரித் தேரினும் கடிய தன் கவன மான் தேர் எதிர் கடவி, முதிர மேல்வரும் கணைகளைக் கணைகளால், முனை கொடு முனை கொள் கார் விசும்பில் பிதிர் படும்படி தொடுத்தனன், தொடித் தடக் கையினில் பிடித்த வில் குனித்தே. | 22 |
|
|
உரை
|
|
|
|
|
கொடிஞ்சி மா நெடுந் தேர்களில் பூட்டிய குரகதக் குரம் படப் பட, மண் இடிஞ்சு, மேல் எழு தூளி முற்பகல் வரும் இரவினை நிகர்த்தது; அவ் இரவு விடிஞ்சதாம் எனப் பரந்தது, அத் தேர்களின் மின்னிய மணிகளின் வெயில்; போய்ப் படிஞ்ச தூளி ஓர் நடம் பயில் அரங்கினில் பரப்பிய எழினி போன்றதுவே. | 23 |
|
|
உரை
|
|
|
|
|
தன் பெருந் தனிச் சங்கினை முழக்கினன், தருமன் மா மதலை, வெம் போரில்; வன் பெரும் பணைச் சங்கினை முழக்கினன், மத்திராதிபன் திருமகனும்; நன் பெருந் துளைச் சங்குகள் எழுப்பிய நாதம் வான் முகடு உற நண்ணி, மின் பெரும் புயல் ஏழும் ஒத்து அதிர்தலின், மிகு குரல் தனிதம் ஒத்து உளதே. | 24 |
|
|
உரை
|
|
|
|
|
தருமனும் சல்லியனும் விற்போர் புரிதல்
வில் எடுத்தனர், வலி உடை நிலையினர், வீக்கு நாண் விரல்களின் தெறித்து, மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர், வடிக் கணை முனை உற அடைசி, செல் எடுத்த பேர் இடி என முறை முறை தொடுத்தனர், தேர்களும் செலுத்தி- கல் எடுத்து எதிர் மலைந்த வாலியும் மணிக் கழுத்து உடையவனுமே அனையார். | 25 |
|
|
உரை
|
|
|
|
|
எய்த அம்புகள் இருவர் மெய்யினும் படாது, இடை இடை எஃகு உடைத் தலைகள் கொய்த அம்புகள் ஆகியே முழுவதும் விழுந்தன; கூறுவது எவன்கொல்! கைதவம் புகலுதற்கு இலா எண்ணுடைக் கருத்தினர், திருத்தகு வரத்தால் செய் தவம் புரை அறப் பலித்தனையவர், திருக் கணும் கைகளும் சிவந்தார். | 26 |
|
|
உரை
|
|
|
|
|
கிரித் தடங் குவடு அணைந்த கேசரி நிகர் சல்லியன்-முரச கேதனன்தன் பரித் தடந் தனித் தேர் விடும் பாகனைப் பாணம் ஒன்றால் தலை துணித்து, வரித் தடஞ் சிலை நாண் அறுத்து, ஒரு முனை வாளியால், வடிக் கணை ஒன்றால், விரித்த வெண் குடை மகுடமும் ஒடித்தனன்-வில் வலோர் எவரினும் மிக்கோன்.
| 27 |
|
|
உரை
|
|
|
|
|
தருமன் தளர்ச்சி கண்டு, வீமன் சல்லியனோடு வந்து பொருதல்
வலவன் வீழ்ந்ததும், தனுவின் நாண் அற்றதும், மனத்து அழுக்காறு இலா வாய்மைப் புலவன் வெண் குடை ஒடிந்ததும், மேல் வரு போற்றலன் ஏற்றமும் பொறாமல், குலவு திண் சிலைக் குரிசிலை, தம் முனைக் கொண்ட வீரியம் எலாம் கொண்டான்- கலவ மா மயில் ஒழித்து, பஞ்சானனம் எழுதிய தனிக் கொடிக் கந்தன். | 28 |
|
|
உரை
|
|
|
|
|
தனது திண் கையின் சரத்தினும் தம்பி கைச் சரம் விரைந்து உடற்றலின், தடக் கைக் கன தனுத்தனை ஊன்றி நின்று, இருவரும் கணக்கு அற மலையுமா கண்டான்- 'எனது தோள்களில் இளையவன்தனக்கு வேறு யாது' எனும் எண்ணுடை மனத்தான், வினதை காளையோடு உவமை கூர் வலியினான், வேந்தர் யாரினும் புகழ் மிக்கோன். | 29 |
|
|
உரை
|
|
|
|
|
எந்த எந்த வெஞ் சாயகம் மறையுடன் இமையவர் முனிவரர் கொடுத்தார், அந்த அந்த வெஞ் சாயகம் அடங்கலும் அவர் அவர் முறைமையின் தொடுத்தார்; முந்த முந்த மற்று உள்ள ஆயுதங்களும், முடி முதல் அடி அளவாக, உந்த உந்த, வெங் குருதியும் மூளையும் உக உக, உடற்றினார்-உரவோர். | 30 |
|
|
உரை
|
|
|
|
|
வீமன் விற்போரில் அதிர்ந்து கதை கொண்டு பூமியில் நிற்க, சல்லியன் தோமரப் படையால் வீமனை எற்றுதல்
மத்திரப் பெயர்ச் சிங்கஏறு அனையவன் வன் கை வான் படைகளின் மயங்கி, பத்திரப் பெயர்ப் பருத்த கைச் சிறுத்த கண் பாய் மதப் பரூஉப் பகடு அனையான், சித்திரக் கதிர் மணி முடிப் பீடிகைத் திண் திறல் திகிரி அம் தேர்நின்று அத்திரத்தை விட்டு, ஒரு தனிக் கதையுடன் அதிர்ந்து போய், அவனியில் ஆனான். | 31 |
|
|
உரை
|
|
|
|
|
பகைவன் ஏறிய தேர் விடும் வலவனும், திகிரியும், பாய் பரிமாவும், புகை எழும்படி இமைத்த கண் விழிக்கும் முன், பொடி எழ இடி எனப் புடைப்ப, வகை கொள் தார் முடி மத்திரத் தலைவனும் மா மறத் தோமரப் படையால், மிகை கொள் வன் திறல் வீமனை நெற்றியில் எற்றினன், வெற்றி கூர்ந்திடவே. | 32 |
|
|
உரை
|
|
|
|
|
போரில் வீமன் நிலைகுலைய, இரு பெருஞ் சேனையும் பொருதலும், கன்னன் புத்திரர் மூவர் நகுலனால் மடிதலும்
தோமரம்தன்னால் வாயுசுதன் அமர் அழிந்த போதில், ஏ மரு வரி வில் தானை இரு பெருஞ் சேனையோரும், மா மரு தடந் தேர், வாசி, மத்த வாரணங்கள், ஊர்ந்து, தீ மரு கானம் என்ன, தனித் தனிச் செருச் செய்தாரே. | 33 |
|
|
உரை
|
|
|
|
|
தேரவன் மைந்தன் மைந்தர், சித்திரசேனன், ஏனைச் சூரியவன்மன், சித்ரகீர்த்தி, முச் சுடரோடு ஒப்பார், வீரரில் வீரன் ஆன வெம் பரி நகுலனோடும் போரில் வந்து எதிர்ந்து, தாதை போயுழிப் போயினாரே.
| 34 |
|
|
உரை
|
|
|
|
|
சகுனியும், அவன் புதல்வர் இருவரும் நகுலனொடு பொருது தோற்றல்
தசை உற வளர்ந்த பொன்-தோள் சகுனியும், தனயர் ஆகி இசையுடன் வளர்ந்த வீரர் இருவரும், இரத மேலோர், நிசை உறு மத மா வந்து நெருப்பு எதிர்பட்டது என்ன, விசையனது இளவலோடு செருச் செய்து, வெந்நிட்டாரே. | 35 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் கேதுதரன் என்பானைக் கொல்லுதல்
புயங்க வெம் பதாகை நச்சுப் பொங்கு அழல் புங்கயம் போல்வான், தயங்கு வெங் கழல் கால் கேதுதரன் எனும் தனு வலோனை, வயங்கு வெஞ் சிறகர்ப் புங்க வயம் கொள் கூர் வாளி ஒன்றால், 'இயங்குக, வானினூடு!' என்று, இமையவன் ஆக்கினானே. | 36 |
|
|
உரை
|
|
|
|
|
சல்லியன் மீண்டும் தருமனோடு பொருதலும், சுமித்திரன் முதலிய மன்னரை மடிவித்தலும்
இரு பெருஞ் சேனையோரும் இப்படிச் செருச் செய் காலை, தருமன் மா மதலைதன்மேல், சல்லியன்தானும், மீள, பொரு பரித் தடந் தேர் உந்தி, புகை கெழு முனை கொள் வாளி ஒரு தொடைதன்னில் ஓர் ஏழ் உரத்துடன் துரத்தினானே. | 37 |
|
|
உரை
|
|
|
|
|
பின்னரும் விரைவினோடும் பெய் கணை மாரி சிந்தி, முன்ன அரு முனையில் நின்றோர் முதுகிட முரண்டு சீறி, துன்ன அருந் தடந் தேர் ஆண்மைச் சுமித்திரன் முதலா உள்ள மன்னரை, இமைத்த கண்கள் மலரும் முன், மடிவித்தானே. | 38 |
|
|
உரை
|
|
|
|
|
வீமன் வடிவு புதையுமாறு சல்லியன் அம்பு எய்ய, நகுல சகாதேவரும் சாத்தகியும் வந்து, சல்லியனொடு பொருதல்
தனக்கு எதிர் தானே ஆன சல்லியன்தானும், மீளச் சினக் கனல் மூள, வாளச் சிலம்பு எனச் சிலையும் வாங்கி, கனக் குலம் ஏழும் சேரக் கல்மழை பொழிந்தது என்ன, முனைக் கடுங் கணையால் வீமன் வடிவு எலாம் மூழ்க, எய்தான். | 39 |
|
|
உரை
|
|
|
|
|
அறை கழல் வீமன்தானும், அங்கர்கோன் பாகன்தானும், முறை முறை புரிந்த வெம் போர் மொழிவதற்கு யாவர் வல்லார்? நறை கெழு தும்பை மாலை நகுல சாதேவர் என்னும் இறைவரும், செங் கண் மாயன் இளவலும், இவன்மேல் சென்றார். | 40 |
|
|
உரை
|
|
|
|
|
சென்று, வெஞ் சிலைகள் கோலி, சிலீமுகம் உறுப்புத்தோறும் ஒன்று என அநேகம் ஏவி, ஒரு முகமாகப் போர் செய்து, 'இன்று இவன் ஆவி கோறும்!' என்று, சல்லியன்மேல் தங்கள் வன் திறல் யாவும் காட்டி, மாறு இல் போர் மலைந்திட்டாரே. | 41 |
|
|
உரை
|
|
|
|
|
மதம் படு வேழம் அன்ன மத்திர ராசன்தானும்,- விதம்படத் திரண்டு போர் செய் வீரர்தம் மெய்கள் எல்லாம் சதம்படு பகழி ஓர் ஓர் தனுக்களின் உருவி ஓட, இதம்பட எய்து, நக்கான்-ஏவினுக்கு இராமன் போல்வான். | 42 |
|
|
உரை
|
|
|
|
|
தம்பியர் தளர்வு கண்டு, சல்லியனது கொடி முதலியவற்றை வீமன் அழித்தல்
தம்பியர் தளர்ச்சி கண்டு, சமீரணன் புதல்வன் சீறி, தும்பை மா மாலை வேய்ந்து, தொடு கணை வலிதின் வாங்கி, வெம்பு போர் மத்திரேசன் வியன் கொடி, பாகு, வாசி, செம் புணீர் சொரி களத்தில் சிதறிட அறுத்து, வீழ்த்தான். | 43 |
|
|
உரை
|
|
|
|
|
உற்று, இரு புறத்தும், திண் தேர்க்கு உரன் உற உதவி ஆய கொற்றவர் பலரும் வீழ, கொடி குடை கவரி வீழ, சுற்றிய நேமி வாசி துளைக் கரக் கோட்டு நால்வாய்ப் பொற்றைகள் துணிந்து வீழ, புங்க வாளிகளும் தொட்டான். | 44 |
|
|
உரை
|
|
|
|
|
துருபதன் முதலிய அனைவரும் தருமன் தம்பியர்களோடு கூடி முனைந்து பொருதல்
துருபதன் முதலா உள்ளோர், சோமகர் முதலா உள்ளோர், நிருபர்தம் குலத்துள் ஏனை நிருபர்களாகி உள்ளோர், தருமன் மா மதலையோடும் தம்பியரோடும் கூடி, ஒரு முகமாகி மேற்சென்று, உறு செருப் புரியும் வேலை, | 45 |
|
|
உரை
|
|
|
|
|
அருச்சுனனும் அசுவத்தாமனும் விளைத்த போர்
'அறுதியாக இன்று அருஞ் சமர் முடித்தும்!' என்று அறத்தின் மைந்தனுக்கு அன்பால் உறுதி கூறிய பாகன் வெவ் விரைவுடன் ஊர்ந்த வெம் பரித் தேரோன், 'பெறு தியாகம் மா தவம் புரி சிலை முனி பெற்ற வீரனுக்கு இன்றே இறுதி நாள்' என, ஆங்கு அவன் அணிந்த பேர் இகல் அணியிடைச் சென்றான். | 46 |
|
|
உரை
|
|
|
|
|
சென்று போர் புரி அளவையின், அருச்சுனன் செழு மணி முழு நீலக் குன்றுபோல் நிறம் பவள வான் குன்று எனக் குருதியின் சிவப்பு ஏற, ஒன்று போல்வன பிறைமுகக் கடுங் கணை ஒருபது தொடுத்திட்டான்- வென்று போர் புரி அவுணர் ஊர் நீறு செய் வீரன் மைந்தனை ஒப்பான்.
| 47 |
|
|
உரை
|
|
|
|
|
தொடுத்த அம்பினை அம்பினால் வானிடைத் துணித்து, இடை நணித்து ஆக விடுத்த அம்பினால், மருவலன் பாகனும், வெம் பரிகளும், வில்லும், நடுத் தறிந்திட, மார்பினும் தோளினும் நால்-இரு கணை எய்தான்; எடுத்த வெஞ் சிலை தறிதலும், அவனும் மா இரதம் விட்டு, இழிந்தானே. | 48 |
|
|
உரை
|
|
|
|
|
இழிந்து, மீளவும் வேறு ஒரு வில் எடுத்து, எரி முனை புகை காலப் பொழிந்த வாளி ஓர் அளவு இல; அவற்றையும் பொடி படுத்தினன், பார்த்தன்; 'கழிந்த நீர்க்கு அணை கோலி வந்து எதிர்ந்து, தன் கார்முகக் கட்டு ஆண்மை அழிந்து போயினன், முனி மகன்' என எழுந்து ஆர்த்தது, பெருஞ் சேனை. | 49 |
|
|
உரை
|
|
|
|
|
செருப் புலக் கையாம் உரலிடை, விருதராம் தினைக் குரல்களைச் சேர, மருப்பு உலக்கை கொண்டு இடிக்கும் வெஞ் சின மன மத்த வாரணம் அன்னான், பொருப்பு உலக்கையுற்று அலமர அரிந்தவன் புதல்வன்மேல், ஒரு பார இருப்பு உலக்கை கொண்டு எறிந்தனன்; அவனும், அஃது எண் முறி பட எய்தான்.
| 50 |
|
|
உரை
|
|
|
|
|
உலக்கை எட்டு உறுப்பு ஆன பின், ஒரு தனித் தண்டு கொண்டு, உயர் கேள்வி அலக் கை வித்தகன் இளவல் தேர் விட வரும் அருச்சுனன் தடந் தோளாம் இலக்கை உற்றிட எறிந்தனன்; எறிதலும், இவன் அவன் எறி தண்டை வலக் கையின் தொடு கணைகளால், பல துணி ஆக, வில் வளைத்தானே.
| 51 |
|
|
உரை
|
|
|
|
|
'கண்ணன் தேர் விடும் வரையில் விசயனுடன் பொருதல் அரிது!' என அசுவத்தாமன் விலகிச் செல்லுதல்
'பூத்த பைங் கொடி அனைய மெய்ப் பூண் அணி பொதுவியர் தனம் தோயும் தூர்த்தன் வெம் பரித் தேர் விடும் அளவும், இச் சுரபதி மகனோடும் கோத்த அம்பினில், பல படைகளில், அமர் கொளுத்துதல் அரிது!' என்று, பார்த்தன் முன்பு நின்று அமர் புரிந்திலன்-கடல்-பார் புகழ் பரித்தாமா. | 52 |
|
|
உரை
|
|
|
|
|
கிருபன் முதலிய பலரையும் விசயன் வென்று, வீமனைச் சேர்தல்
மற்று அவன்தனை முதுகு கண்டு, அவன் திரு மாதுலன் கிருபப் பேர்க் கொற்றவன் புறம் தர மலைந்து, ஏனை வெங் கொடுஞ் சிலைக் குல வேந்தர் முற்றும் வெந்நிடப் பொருது, சல்லியனொடு முனைபட எதிர் மோதி, செற்ற வன்புடை அன்புடைத் தம்முனை, தெம் முனை கெடச் சேர்ந்தான். | 53 |
|
|
உரை
|
|
|
|
|
சல்லியன் வீமனால் பரி, சிலை, முதலியன இழக்க, துரியோதனன் படையுடன் வந்து உதவுதல்
தயங்கு வெண்குடைச் சல்லியன் தண்டுடைச் சமீரணன் மகன்தன்னால், உயங்கு வெம் பரி, பாகு, தேர், வரி சிலை, உயர்த்த வண் கொடி, அற்று, தியங்குகின்ற பேர் இறுதி கண்டு, உயங்குதல் சிந்தையில் சிறிது அற்ற புயங்க கேதனன், கண்ணினுக்கு இமை எனப் பொரு படையுடன் சேர்ந்தான். | 54 |
|
|
உரை
|
|
|
|
|
சாத்தகி முதலிய பலரும் எதிர்ந்து வர, சல்லியன் பொருது, சாத்தகியையும் நகுலனையும் வெல்லுதல்
சாத்தகிப் பெயரவன், சமீரணன் மகன், நகுலன், வெஞ் சாதேவன், பார்த்தன், என்று இவர் அனைவரும், இவர் பெரும் படைத் தலைவனும், சேர ஆர்த்து எழுந்து மேல் வருதல் கண்டு, அணி கழல் ஆளி ஏறு அனையானும், பேர்த்தும் முந்துறத் திருகினன், அரசொடும் பெரும் படையொடும் அம்மா. | 55 |
|
|
உரை
|
|
|
|
|
தண் துழாய் முடி மாயவன் தம்பியை, சாயகம் பல கோடி கொண்டு, தேர் முதல் யாவையும் அழித்து, மெய் குலைந்திடும்படி மோதி; மண்டு பாய் பரி நகுலனை அன்புடை மருகன் என்று எண்ணாமல், கொண்டல்வாய் இடி நெருப்பு எனச் சிற் சில கூர வாளிகள் எய்தான். | 56 |
|
|
உரை
|
|
|
|
|
நகுலனை ஒழிந்த நால்வரையும் அம்பினால் எய்ய, வீமன் சல்லியனது மகுடத்தை வீழ்த்துதல்
ஒரு கொடுங் கணை தொடுத்தலும், வெந் கொடுத்து ஓடினன், சாதேவன்; இரு கொடுங் கணைக்கு இலக்கம் ஆயினன், மருத்து ஈன்றவன், இரு தோளும்; பொரு கொடுங் கணை மூன்றினால், அருச்சுனன் புயமும் மார்பமும் புண் செய்து, அருகு ஒடுங்குற, நுதலின்மேல், அம்பு நான்கு அறத்தின் மைந்தனை எய்தான். | 57 |
|
|
உரை
|
|
|
|
|
அறத்தின் மைந்தனது ஆனனம் குருதியால் அருக்கன் மண்டலம் போல நிறத்த ஆறு கண்டு, அருகுறக் கதைகொடு நின்ற வாயுவின் மைந்தன், மறத் தடம் புய வரி சிலைச் சல்லியன் மணி முடி கழன்று ஓடிப் புறத்து வீழ்தர எறிந்தனன்; எறிந்தமை புயங்க கேதனன் கண்டான். | 58 |
|
|
உரை
|
|
|
|
|
அது கண்டு பொறாத துரியோதனன், வீமனோடு வந்து பொருது தோற்றல்
தன் படைத் தலைவனைத் தண்டினால் எறி வன்புடைத் தடம் புய மருத்தின் மைந்தன்மேல், மின் படைத்து ஒரு கணை விசையின் ஏவினான்- புன் படைப்பினில் அயன் படைத்த பூபனே. | 59 |
|
|
உரை
|
|
|
|
|
காமனைச் சம்பரன் கனன்ற போர் என, வீமனைப் போர் செய்து வெல்ல முன்னிய தீ மனத்து அரசனைச் சிலீமுகங்களின் மா முனைப் படுத்தினன், மறித்து வீமனே. | 60 |
|
|
உரை
|
|
|
|
|
யாளிகள் இரண்டு எதிர்ந்து இகலுமாறுபோல், மீளிகள் இருவரும் குனித்த வில் உமிழ் வாளிகள் இருவர்தம் வடிவில் பாயும் முன், தூளிகள் பட்டன, துணிந்து வானிலே. | 61 |
|
|
உரை
|
|
|
|
|
தாள் முதல் முடி உறச் சரங்கள் ஏவியும், வாள் முதல் படைகளால் மலைந்தும், மற்று அவர் தோள் முதல் உறுப்பு எலாம் சோரி காலவே, நீள் முதல் தீபமே நிகரும் ஆயினார். | 62 |
|
|
உரை
|
|
|
|
|
வன் பரி, பாகு, தேர், மதி நெடுங் குடை, மின் பொழி கணை உமிழ் வில், விலோதனம், என்பன யாவையும் இற்று வீழுமாறு, ஒன்பது படி அமர் உடற்றினான்அரோ. | 63 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் முதுகிட, சல்லியன் வந்து பொருதல்
இரண வித்தகன் இவன் எறிந்த வேலினால், முரண் உடைச் சுயோதனன் முதுகு தந்த பின், அரணுடைப் படைக்கு அரசு ஆன மத்திரன், 'மரணம் இப்பொழுது' என, வந்து மேவினான். | 64 |
|
|
உரை
|
|
|
|
|
சல்லியனுக்கும் தருமனுக்கும் துணையாகப் பல வீரர்கள் வருதல்
நேர் இலாத கிருபப் பெயர் விறல் குருவும், நீடு சாலுவனும், மற் புய மணிச் சிகர வீரன் ஆன சகுனிப் பெயர் படைத்தவனும், வீறு சால் கிருதபற்பனும், எனப் புகலும் ஆர மார்பினர் முதல் படைஞரில் தலைவர் ஆன வீர துரகத்தினர், களிற்றினர்கள், ஊரும் ஊரும் இரதத்தினர் எனைப் பலரும், ஓத வாரி என, மத்திரனொடு ஒத்தனரே. | 65 |
|
|
உரை
|
|
|
|
|
வீமசேனனும், அவற்கு இளைய பச்சை மயில் வேளின் வானவர் குலப் பகை தொலைத்தவனும், ஏம கூடம் நிகர் உத்தம வயப் புரவி ஏறு வீரனும், அவற்கு இளைய வித்தகனும், நாமம் ஆயிரம் உடைக் கடவுளுக்கு இளைய ஞாயிறோடு உவமை பெற்று ஒளிர் நிறத்தவனும், நேமி சூழ் தரணி பெற்றிட நினைத்து அமர் செய் நீதிமான் அருகு சுற்றினர், துணை செயவே.
| 66
|
|
|
உரை
|
|
|
|
|
இரு திறத்தாரும் மலைந்த போர்ச் சிறப்பு
ஆடல் மாவும், மலை ஒப்பன மதக் கரியும், ஆழி சேர் பவனம் ஒத்த இரதத் திரளும், நாடு போரில் அரி ஒத்த அனிகத் திரளும், நாலு பாலும் எழ, ஒத்து அமர் உடற்றினர்கள்; ஓடி ஓடி எதிர் உற்றவர் முடித் தலைகள் ஊறு சோரி உததிக்கிடை விழுத்தினர்கள்;- கோடி கோடி தமரப் பறை முழக்கினொடு கோடு கோடுகள் குறித்த இரு பக்கமுமே. | 67 |
|
|
உரை
|
|
|
|
|
ஆன போது இரு தளத்தினும் மிகுத்த விறல் ஆண்மை வீரர் ஒருவர்க்கு ஒருவர், மெய்க் கவசம் மானமே என நினைத்து, வரி பொற் சிலையும், வாளும் வேலும் முதல் எத் திற விதப் படையும், மேனியூடு உருவ வெட்டிய நிலைக்கு உவமை வேறு கூற இலது; எப்படி மலைத்தனர்கள், தான வானவர்கள் யுத்தமும், அரக்கரொடு சாகை மா மிருக யுத்தமும், நிகர்த்தனவே. | 68 |
|
|
உரை
|
|
|
|
|
தம்பியர் முதலியோரை விலக்கித் தருமன் சல்லியனோடு பொருதல்
வீமசேனனொடு அருச்சுனன், வயப் புரவி வீர மா நகுலன், நட்பின் அவனுக்கு இளைய தாம மீளி, அளி மொய்த்த துளவப் புதிய தாரினான் அநுசன், விற் குருவை முன் பொருத சோமகேச பதி மெய்ப் புதல்வன், மற்றும் உள சூரர் ஆனவரை முற்றுற விலக்கி, எதிர், மாமன் ஆகியும் மிகைத்து வரு மத்திரனை, 'வா!' எனா, அமர் தொடக்கினன், உதிட்டிரனே. | 69 |
|
|
உரை
|
|
|
|
|
வீர சாபம் ஓர் இமைப்பினில் வளைத்து, எதிர் கொள் வேக சாயக விதத் திறம் எனைப் பலவும், மார சாயகம் என, சிகர மற் புயமும், மார்பும் மூழ்க, உடல் முற்றும் முனையின் புதைய, ஈரம் ஆன குருதிப் பிரளயம் எப் புறமும் யாறுபோல் பெருக, எற்றுதலும், வெற்றி புனை சூரர் யாரினும் மிகுத்து இருள் முடிக்க வரு சூரன் ஆம் என வியப்புடைய மத்திரனே, | 70 |
|
|
உரை
|
|
|
|
|
ஆரவார முரசக் கொடி உயர்த்தவனது ஆகமீது அணி மணிக் கவசம் அற்று விழ, ஊரும் நேமி இரதத்து வயிர் அச்சு உடைய, ஓடு வாசி தலை அற்று இரு நிலத்து உருள, நேர் இலா வலவன் நெற்றி துளை பட்டு உருவ, நீடு நாணொடு பிடித்த குனி வில் துணிய, ஈர வாய் முனை நெருப்பு உமிழ் வடிக் கணைகள் ஏவினான், ஒரு நொடிக்குள் எதிர் அற்றிடவே. | 71 |
|
|
உரை
|
|
|
|
|
தருமன் வேல் எறிந்து, சல்லியனது முடித்தலை துணித்தல்
வீறு சால் அருள் அறத்தின் மகன், அப்பொழுது, வேறு ஒர் தேர்மிசை குதித்து, இமய வெற்பினிடை ஏறு கேசரியொடு ஒத்து, உளம் நெருப்பு உமிழ, ஈறு இலார் புரம் எரித்தவன் நிகர்க்கும் என, மாறு இலாதது ஒரு சத்தியை எடுத்து, நெடு வாயு ஆகும் என விட்டனன்; இமைப்பொழுதில் ஆறு பாய் அருவி முக் குவடு இறுத்த செயல் ஆனதால், முனை கொள் மத்திரன் முடித் தலையே. | 72 |
|
|
உரை
|
|
|
|
|
சல்லியன் மாண்டமை கண்டு துரியோதனன் சேனை நிலை குலைய, எழுநூறு தேர் வீரர்கள் தருமனை எதிர்த்தல்
'தொட்ட வரி சிலைத் தடக் கை இராமன் என்ன, தொடுத்த கணை தப்பாமல், தொழாத வேந்தர் இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர், எடுத்தது ஒரு வடி வேலால், இளையோன் என்ன, மட்டு அவிழும் தும்பை அம் தார்த் தருமன் மைந்தன் வாகு வலியுடன் எறிய, மத்திரேசன் பட்டனன்' என்று, அணி குலைந்து முதுகிட்டு ஓடி, படாது பட்டது, உயர்ந்த பணிப் பதாகன் சேனை. | 73 |
|
|
உரை
|
|
|
|
|
மதி கண்ட பெருங் கடல்போல், குந்தி மைந்தர் வன் சேனை ஆர்ப்பதுவும், மன்னன் சேனை நுதி கொண்ட கனல் கொளுத்தும் இராம பாணம் நுழை கடல்போல் நொந்ததுவும், நோக்கி நோக்கி, கதி கொண்ட பரித் தடந் தேர்ச் சல்லியன்தன் கண் போல்வார் எழு நூறு கடுந் தேர் ஆட்கள், விதி கொண்ட படைபோல் வெம் படைகள் ஏவி, வெம் முரசக் கொடி வேந்தன்மேல் சென்றாரே.
| 74 |
|
|
உரை
|
|
|
|
|
சகுனி முதலானோரோடு, துரியோதனனும் தருமனை எதிர்க்க வருதல்
அவர் அளவோ, அரவு உயர்த்த அரசன்தானும், ஆகுலத்தோடு அருஞ் சமரில், அரி ஏறு என்னக் கவரி புடை பணிமாற, தவளக் கொற்றக் கவிகை ஒரு தனி நிழற்ற, கரை காணாத உவரி நிகர் பெருஞ் சேனை வெள்ளம் சூழ, உயிர் அனைய துணைவருடன் மாமன் சூழ, தவர் முதலாம் படைகளொடு தன்னை வென்று தரணி கொள வரு நிருபன்தன்னைச் சார்ந்தான். | 75 |
|
|
உரை
|
|
|
|
|
வீமன் முதலியோர் பகைவரை எதிர்த்துப் பொருத திறம்
வீமன் முதல் தம்பியரும், பொரு இலாத வெஞ் சேனைத் தலைவரும், போர் வென்றி கூரும் சோமகரும் முதலாய தறுகண் வீரர், தும்பிகளை அரி இனங்கள் துரக்குமாபோல், தாமம் மணித் தடஞ் சிகரத் தோளும் மார்பும் சரம் முழுகத் தனு வணக்கி, சாய்ந்த சோரி பூ முழுதும் பரந்து வர, பொருத வீரம் புலவோர்க்கும் அதிசயித்துப் புகலல் ஆமோ? | 76
|
|
|
உரை
|
|
|
|
|
வீமன் துரியோதனன் தம்பியர் எழுவரை மாய்த்தலும், துரியோதனன் சோகமும்
தன் தமையன்தனைப் பொருது வெல்ல வந்த தானை எலாம் நீறு ஆக்கி தரணி ஆளும் புன் தமையன் எதிர் அவனுக்கு இளைய வீரர் பொர வந்தோர் எழுவரையும் புவிமேல் வீழ்த்தி, 'இன்று அமையும் சமரம், இனிக் காண்டல் பாவம்' என்று இமையோர் அதிசயிப்ப, இமயம் போல நின்றமை கண்டு, ஆனிலனை மகிழ்ந்து நோக்கி, நெஞ்சுற, அன்று என் செய்தான், நெடிய மாலே! | 77 |
|
|
உரை
|
|
|
|
|
செயகந்தன், செயவன்மன், செயசேனன், சேனாவிந்து, செய்த்திரதன், திறல் ஆர் விந்து, வயம் ஒன்று விக்கிரமன், என்போர் ஆவி வான்நாடு புகுந்ததன் பின், மதங்கள் ஏழும் கயம் ஒன்று சொரிய எதிர் நின்றது என்னக் களித்து, வலம்புரி வீமன் முழக்கக் கண்டு, அங்கு அயல் நின்ற வலம்புரித் தார் அண்ணல் சோர்ந்தான்;- அநுசர்மேல் அன்பு எவர்க்கும் ஆற்றல் ஆமோ? | 78 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் தம்பியர் ஐவரோடும் பெருஞ் சேனையோடும் கிருதவன்மன் வந்து பொர, வீமன் கணையால் தம்பியர் ஐவரும் மாளுதல்
தனக்கு நிகர்தான் ஆன கிருத்தவன்மன், தம்பியர்கள் எழுவர் படத் தம்முன் பட்ட மனக் கவலை அறிந்து, பெருஞ் சேனையோடும் மற்று அவன் தம்பியர் ஐவரோடும் வந்து, சினக் கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி, செருச் செய்தான்; இமைப்பு அளவில் திருகி ஓட, எனக்கு இவரே அமையும் எனப் புறக்கிடாத இளையவர்மேல், கடுங் கணை ஐந்து ஏவினானே. | 79 |
|
|
உரை
|
|
|
|
|
சித்திரவாகுவி"னாடு, பெல"சனன், "பார்ச் செயசூரன், சித்திரன், உத்தமவிந், என்"ற அத்திர வில் ஆண்மயினில் திகழாநின்ற ஐவர் இவர், யாவர"ம் அடர்ப்பான் வந்"தார், சத்திரம் யாவ"ம் ஏவி, சங்கம் ஊதி, சமர் விளத்தார், நெடும் பொழு; சமீரணன்தன் புத்திரனால் முன் சென்ற எழுவ"ராடும் பொன்னுலகம் குடி புகுந்தார், புலன்கள் "பால்வார். | 80 |
|
|
உரை
|
|
|
|
|
அப்பொழுது துரியோதனன் சீற்றத்தொடு வந்து பொர, அவனைச் சகாதேவன் வெல்லுதல்
ஏற்றிடை வெங் கனல் நுழைந்தது என்ன, முன்னம் எழுவருடன் தனக்கு இளையோர் ஐவர் சேரக் கூற்றிடை ஏகுதலும், மிகக் கொதித்து, நாகக் கொடி வேந்தன், முடி வேந்தர் பலரும் சூழ, நால்-திசையும் எழுந்து பெருங் கடலை மோதி நடு வடவைக் கனல் அவித்து நடவாநின்ற காற்று எனவே, பாண்டவர்தம் உடலம்தோறும் கணை முழுக, வில் விசயம் காட்டினானே. | 81 |
|
|
உரை
|
|
|
|
|
தன் கரத்தில் வில் துணிய, வேறு ஓர் வில்லால் சாதேவன் வலம்புரிப் பூந் தாம வேந்தன் வன் கரத்தும், மார்பகத்தும், முகத்தும், சேர வை வாளி குளிப்பித்தான்; மற்றும் மற்றும் முன் களத்துள் எதிர்ந்துளோர் இரு சேனைக்கும் முன் எண்ணும் திறலுடையோர் மூண்டு மூண்டு, பின் களத்தைச் சோரியினால் பரவை ஆக்கி, பிறங்கலும் ஆக்கினர் மடிந்த பிணங்களாலே. | 82 |
|
|
உரை
|
|
|
|
|
சகுனி முதலிய பலரும் வீமனோடு பொருது பின்னிட, துரியோதனன் தம்பியர் ஒன்பதின்மர் வந்து பொருது மடிதல்
காந்து கனல் உமிழ் சின வேல் கைக் காந்தாரர் காவலனாம் சகுனியும், தன் கனிட்டன் ஆன வேந்தனும், மன்னவனுடன் பல் வேந்தரோடும், வெம் பனைக் கைப் பல கோடி வேழத்தோடும், ஏந்து தடம் புயச் சிகரி வீமன்தன்னோடு இகல் மலைந்து, தொலைந்து இரிந்தார்; இவரை அல்லால், ஊர்ந்த மணிப் பணிக் கொடியோன் இளைஞர் மீள ஒன்பதின்மர் அவனுடன் வந்து, உடற்றினாரே. | 83 |
|
|
உரை
|
|
|
|
|
பிறங்கிய உத்தமன், உதயபானு, கீர்த்தி, பெலவன்மன், பெலவீமன், ப்ரபலதானன், மறம் கிளர் விக்ரமவாகு, சுசீலன், சீலன், வரு பெயர் கொள் ஒன்பதின்மர் வானில் ஏற, திறம் கொள் கச ரத துரக பதாதி கோடி சேர ஒரு கணத்து அவிய, சிலை கால் வாங்கி, கறங்கு எனவே சூழ்வந்து பொருதான்; வீமன் கட்டாண்மைக்கு இது பொருளோ, கருதுங்காலே? | 84 |
|
|
உரை
|
|
|
|
|
எஞ்சியிருந்த துரியோதனன் தம்பியரும் வீமனால் இறத்தல்
பாண்டவரில் வீமன் கைப் படையால் முன்னம் பட்டு ஒழிந்தோர் ஒழிந்தோர்கள் பலரும் கூடி, காண் தகைய கேசரி வெஞ் சாபம் அன்னார், கண்இலான் மதலையர், அக் களத்தில் அன்று மூண்டு பெரும் பணித் துவச முன்னோன் காண, முனைந்து அமர் செய்து, அவனியின்மேல் முடிகள் வீழ, தீண்ட அரிய திருமேனி தேரில் வீழ, சேண் அடைந்தார், அரம்பையர்கள் சிந்தை வீழ. | 85 |
|
|
உரை
|
|
|
|
|
தன் தம்பியர் தொண்ணூற்றொன்பதின்மரும் வீமன் வாளியாலும் கதையாலும் இறந்தது குறித்துத் துரியோதனன் கவலையுற, ச குனி அவனுக்கு ஆறுதல் மொழிதல்
தனக்கு இளையோர் தொண்ணூற்று ஒன்பதின்மர்தாமும் சய வீமன் சரத்தாலும், தண்டினாலும், கனக் குடிலில் குடியேறக் கண்டு கண்டு, கை சோர, மெய் சோர, கண்ணீர் சோர, எனக்கு உறுதி உரைத்தவர்தம் உரை கேளாமல் என் செய்தேன்! எப் பொருளும் இழந்தேன்!' என்று, மனக் கவலை உறும் மன்னன்தன்னை நோக்கி, மாமனும், மற்று ஒரு கோடி மாற்றம் சொன்னான்: | 86
|
|
|
உரை
|
|
|
|
|
'அருகு சாயைபோல் வாழும் அனுசர் யாரும் வான் ஏற உருகி மாழ்கி நீ சோகம் உறினும் மீள வாரார்கள்; மருக! வாழி! கேள்: போரில் மடிவுறாத பூபாலர் முருகவேளையே போல்வர்; முரண் அறாத கூர் வேலோய்!
| 87 |
|
|
உரை
|
|
|
|
|
'கிருத நாமன், நால் வேத கிருபன், ஆதியோரான நிருபர் சேனை சூழ் போத, நிமிர ஓடி, மாறாது பொருது, சீறி மேல் மோது புலியின் ஏறு போல்வாரை முரசகேதுவோடு ஓட, முரணு போரில் மூள்வோமே!'
| 88 |
|
|
உரை
|
|
|
|
|
வீமனோடு சகுனி பொர, அவனது சேனை நிலைகுலைதல்
என, மகீபன் வாடாமல் இனிய வாய்மையே கூறி, அனிக ராசியோடு ஏகி, அமரில் வீமன்மேல் மோத, முனைகொள் வீமன், ஆம் ஆறு, முறுவல் வாள் நிலா வீச, மனனில் ஓடு தேர் மாறி, வலி கொள் பாரில் ஆனானே. | 89 |
|
|
உரை
|
|
|
|
|
தரணி தாழுமா போது சகுனி சேனை வான் ஏற, முரணு வாகுவால் மோதி, முடுகு நீள் கதாபாணி அரணி ஆகவே, ஏனல் அடவி ஆனதால்-நீடும் இரண பூமி மால் யானை, இரதம், வாசி, காலாளே. | 90 |
|
|
உரை
|
|
|
|
|
மீளவும் சகுனி துரியோதனனுக்கு ஊக்கம் அளித்தல்
'அலகு இல் வேலைபோல் சேனை அதிபன் ஆவி போமாறு, பலம்அது ஆக மேல் மோது படைஞர் சாயவே, நாமும் இலகு வாளம், வேல், நேமி, எவரும் ஏவுவேமாக! தலைவ! கேள்' எனா, வீர சகுனி கூறினான், மீள. | 91 |
|
|
உரை
|
|
|
|
|
சகுனிமேல் சகாதேவன் வாளி ஏவுமுன், துரியோதனன் அவன் வேலை வீசுதல்
விரகு அறாத சூது ஆடு விடலைமீது சாதேவன் இரதம் ஏவி, ஓர் வாளி எழில் கொள் மார்பில் ஏவா முன், மருகன் ஆன பூபாலன் மதி கொள் ஞானி பூண் மார்பில் உருவ வீசினான், மாமன் உதவியா, ஒர் கூர் வேலே. | 92 |
|
|
உரை
|
|
|
|
|
அது கண்ட வீமன், துரியோதனன்மேல் வாளி ஏவுதல்
எதிர் இலாத தோள் ஆண்மை இளவல் தேரின்மேல் வீழ, உதவியாக வேல் ஏவும் உலகு காவலான் மார்பில் முதுகில் ஓடவே நூறு முழுக ஏவினான் வாளி, அதல பூமியூடு, ஆழி அமுதம் ஆரும் வாயானே.
| 93 |
|
|
உரை
|
|
|
|
|
வீமன்மேல் வேல் ஏவிய அசுவத்தாமன்மேல், சோழன் அம்பு தொடுத்தல்
சமரில் வீமன் ஏவோடு தலைவன் வீழவே, பூமி அமரனான தாமா ஒர் அயிலை வீமன்மேல் ஏவ, 'எமர்கள் ஆவி போல்வானொடு இகல் செயாமல் ஈசான குமரன் ஆவி போமாறு குடைதும் நாம்' எனா, வீரன். | 94 |
|
|
உரை
|
|
|
|
|
தனுவின் வேத நூல் வாசிதனயனான தாமாவை முனை கொள் மார்பின்வாய் மூழ்கி முதுகில் ஓடவே, ஏழு வினை கொள் வாளி மேல் ஏவி, விதமது ஆகவே போர் செய் மனு குலேசன் நீள் சாப வலிமை கூற வாராதே. | 95 |
|
|
உரை
|
|
|
|
|
அசுவத்தாமன் நிலைகண்டு பொரவந்த அவன் மாமன் கிருபாசாரியனும் வென்னிடுதல்
மருகன் வீழவே, சாப மறை வலானும், ஆர் மாலை விருதனோடு போராடி, வெரிநிடா விடாது ஓட, அருகு சூழும் மா சூரர் அடைய ஓட, ஓடாது திருகினான், அரா ஏறு திகழ் பதாகையான் மாமன். | 96
|
|
|
உரை
|
|
|
|
|
சகுனி மீள வந்து பொர, சகாதேவன் வேல் எறிந்து, அவனை மாய்த்தல்
சகுனி ஆவி போமாறு, சபத வாய்மை கோடாமல், மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல் மேல் ஓட, உகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை இகலொடு ஏவினான், வீமன் இளவலான போர் மீளி. | 97 |
|
|
உரை
|
|
|
|
|
சகுனி இறந்ததும் எங்கும் போர் ஒழிய, துரியோதனனும் வன்மை அழிந்து நிற்றல்
'தாவிய வெம் பரிமா இரதத்திடை, சாதேவன் ஏவிய வேலொடு சௌபல ராசன் இறந்தான்' என்று ஓவியது எங்கணும், வெஞ் சமர்; பார் முழுது உடையானும், ஆவி அழிந்த உடம்பு என, வன்மை அழிந்தானே. | 98 |
|
|
உரை
|
|
|
|
|
தும்பியில், வாசியில், நீடு இரதத்தில், ஓர் துணை இன்றி, பம்பிய சேனை அழிந்து வரும்படி பாராதான், தம்பியர் யாவரும், மாதுலனும், பல தமரும் போய், அம்பி இழந்த பெருங் கடல்வாணரின் அலமந்தான். | 99 |
|
|
உரை
|
|
|
|
|
இறந்தவரை எழுப்பும் மறையால் சேனையோரை எழச் செய்து பொர எண்ணி, துரியோதனன் ஒருவருக்கும் உரையாது தனிச் செல்லுதல்
ஒரு மதி வெண் குடை, இரு கவரிக் குலம், ஊரும் சீர் இரதம், மதங் கயம், இவுளி, பணிக் கொடி, முதலான அரசர் பெருந்தகை, அரசு அடையாளம் அனைத்தும் போய், திரு நயனங்களினும் பத மலர்கள் சிவப்பு ஏற, | 100 |
|
|
உரை
|
|
|
|
|
'அயனிடை அசுரர் குருப் பெறலுற்றது, அவன்பால் முன் கய முனி பெற, இமையோர் குரு விரகொடு கைக் கொண்டு, பயம் உற மா முனிவர்க்கு உரைசெய்தது, பார்மீதே உயர் மறை ஒன்று உளது; அம் மறை ஒரு முனி உரைசெய்தான். | 101 |
|
|
உரை
|
|
|
|
|
'அந் நெடு மா மறையால் அமரத்திடை அழி சேனை இன் உயிர் பெற்றிடும் வகை கொடு மீளவும் இகல்வேன்' என்று, உன்னி, உளம் தெளிவுற்று, ஒருவர்க்கும் இஃது உரையாதே, தன் ஒரு வெங் கதையோடு தராபதி தனி சென்றான்.
| 102 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் ஒரு குளத்தில் மூழ்கி, மறையை மொழிந்து, தவம் செய்தல்
தூய நலம் தரு கங்கை எனப் பல சுரரும் தோய் பாய தடம்தனில் மூழ்கினன், 'அம் மறை பயில்வேன்' என்று ஆயும் மனம்கொடு, சேவடி முன் பினதா ஏகி, சேயவன் வெண் திரை வாரியில் மூழ்கிய செயல் ஒத்தான். | 103 |
|
|
உரை
|
|
|
|
|
கம்பித்து வந்த புலன் ஐந்தும் கலக்கம் மாற, வெம் பித்து அடங்கி, மனம் சித்தொடு மேவல் கூர, தம்பித்த தோயத்திடை, வாயுத் தசமும் ஒக்கக் கும்பித்து, ஞானப் பெருந் தீபம் கொளுத்தினானே. | 104 |
|
|
உரை
|
|
|
|
|
பல் நாளும் யோகம் பயில்வோரின் பதின் மடங்கா, தன் ஆகம் முற்றும் மெலிவு இன்றித் தயங்குமாறு, நல் நாள மூல நளினத்தை மலர்த்தி, நாவால் உன்னாமல் உன்னும் முறை மந்திரம் ஓதினானே. | 105 |
|
|
உரை
|
|
|
|
|
சோழனுக்கு முதுகிட்ட வீரர்கள் நிலையும் அசுவத்தாமன் முதலியோர் இறந்த சகுனியைக் காணுதலும்
இதயம் சிறிதும் கலங்காத இறைவன், இவ்வாறு உதகம்தனில் புக்கு, உயர் மந்திரம் ஓதும் வேலை, மத வெங் கயப் போர் வளவற்கு முதுகு தந்த வித மண்டலீகர் புலி கண்ட மிருகம் ஒத்தார். | 106
|
|
|
உரை
|
|
|
|
|
பர பாவகமாம் பரித் தாமனும், பாய் பரித் தேர்க் கிருபாரியனும், கிருதப் பெயர்க் கேடு இலோனும், ஒரு பால் இறைகொண்டு ஒழி சேனையும் தாமும் மீண்டு, பொரு பாரதப்போர் புரி சௌபலன் பொன்றல் கண்டார். | 107 |
|
|
உரை
|
|
|
|
|
கண்டார், மிகவும் பரிவோடு கலக்கமுற்றார்; 'தண் தாரகை தோய் விசும்பு ஒத்த சமர பூமி கொண்டான் முரசக் கொடியோன்' எனக் கோபம் மிஞ்சி, விண்டார், மிகவும் வியந்தார் அவர் வீரம் அம்மா! | 108 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனனைக் களத்தில் காணாது, அசுவத்தாமன் சஞ்சயனைக் கண்டு வினவுதல்
பூண் ஆர மார்பின் வலத்தே புரி பூந் தண் மாலைக் கோண் ஆர் சிலைக் கைந் நெடு நாகக் கொடி கொள் வேந்தைக் காணார் களத்தில் ஒரு பாலும், கருகி உள்ளம், வாள் நாடு அருக்கன் குடிபோம் அகல் வானொடு ஒத்தார். | 109 |
|
|
உரை
|
|
|
|
|
தனி வந்து தோன்றுதலும், சஞ்சயன் என்னும் வேத முனிவன்தனைக் கண்டு, இரு தாளில் முடிகள் சேர்த்தி, 'அனிகம் கெழும் போர் அரசன்தனை, அங்கை நெல்லிக் கனி கண்டனையாய்! எவண் காண்குதும்? காட்டுக!' என்றார்.
| 110 |
|
|
உரை
|
|
|
|
|
சஞ்சயன் துரியோதனன் இருக்கும் இடம் கூறல்
இவ்வோர் விரைவின் இவன்தன்னை வினவ, 'அஞ்சல்! அவ்வோன் உயிருக்கு அழிவு இல்லை; அமரில் மோதி வெவ் ஓடை யானை விறல் மன்னவர் வீய, யாரும் ஒவ்வோன், மறித்தும் அமர் மோத உணர்தலுற்றான். | 111 |
|
|
உரை
|
|
|
|
|
'ஈண்டுச் சமரின் இறந்தோர்கள் எவரும் இன்றே மீண்டு உற்பவிக்க, விடுவித்து விரகினோடும், பாண்டுப் பயந்தோர் படை யாவும் மடிய மோதப் பூண்டு, உத்தமம் ஆம் மறை கொண்டு, அகன் பொய்கை புக்கான். | 112 |
|
|
உரை
|
|
|
|
|
'என்னைத் துருபன் மகன் ஆதியர் கோறல் எண்ண, பின்னைக்கு வாய்த்தோன் பிழைப்பித்தனன்; யானும் வந்தேன்; தன் ஐக்கு மூழ்கத் தடம் வாய்த்தமை, தந்தையோடும் அன்னைக்கு உரைப்பேன்' எனப் போயினன், அந்தணாளன். | 113 |
|
|
உரை
|
|
|
|
|
அசுவத்தாமன் முதலியோர் நீர்நிலையை அடைந்து, துரியோதனனை அழைத்தல்
வேதியன் வாய்மை கேட்ட வேதியன் மகனும், மற்றை ஓதிய கிருபன் ஆதி உள்ளவர் தாமும், எய்தி, மா துயர் அகற்றும் மற்ற வாய்மை கேட்டு, அங்கு ஞான ஊதியம் பெற்றால் என்ன ஒடுங்கிய ஓடை கண்டார். | 114 |
|
|
உரை
|
|
|
|
|
புள் இயல் அரவம் காணார்; பொருது எறி தரங்கம் காணார்; துள்ளிய மீனம் காணார்; சூழ்வரும் அனிலம் காணார்; ஒள்ளிய மலர்கள் எல்லாம் உறங்குதல் அன்றி, மன்றல் வள்ளிய தோடுதோறும் மது நுகர் வண்டும் காணார். | 115 |
|
|
உரை
|
|
|
|
|
ஏறிய பாதம் போல இறங்கிய பாதம் நோக்கி, சாறு இயல் இரதம் மிஞ்சும் தடம் புனல் அடங்க நோக்கி, மாறு இயல் வேந்தர் தம்மில் வாள் முகம் நோக்கி நோக்கி, கூறிய அரசன்தன்னைக் கூவினர், அழைக்கலுற்றார். | 116
|
|
|
உரை
|
|
|
|
|
'நின் கிளை ஆகி வந்த நிருபரும், துணைவர் யாரும், வன் களிறு, இவுளி, பொன்-தேர், வாள் முதல் படைகள் யாவும் புன் களம்அதனில் சேரப் பொன்றின, இம்பர், அன்றோ; என் கருதினைகொல்? ஐயா! என் பெறற்கு என் செய்தாயே!
| 117 |
|
|
உரை
|
|
|
|
|
அசுவத்தாமன் ஐவரை அழிப்பதாகச் சபதம் செய்து கூறுதல்
'வீரியம் விளம்பல் போதாது ஆயினும், விளம்புகின்றேன்; போர் இயல் அமரில் என் நேர் பொரு சிலை எடுத்து நின்றால், தேர் இயல் விசயனோடு நால்வரும் சேர என் கை மூரி வெங் கணைகளாலே முடித் தலை துணிவர் கண்டாய். | 118 |
|
|
உரை
|
|
|
|
|
'எல்லவன் வீழும் முன்னம், யாரையும் தொலைத்து, வேலைத் தொல்லை மண் அளித்திலேனேல், துரோணன் மா மதலை அல்லேன்; வில் எனும் படையும் தீண்டேன்; விடையவன் முதலோர் தந்த வல்லிய கணையும் பொய்த்து, என் மறைகளும் பொய்க்கும்மாதோ! | 119 |
|
|
உரை
|
|
|
|
|
'மோது மோகரப் போர் வென்று முடித்துமோ, ஒன்றில்? ஒன்றில் சாதுமோ? இரண்டும் அல்லால், தரணிபர்க்கு உறுதி உண்டோ? யாதுமோ தெளிதி; நின்போல் ஏற்றம் உள்ளவர்க்கு இவ்வாறு போதுமோ? பூண்ட பூண்ட புகழ் எலாம் போய்விடாதோ? | 120 |
|
|
உரை
|
|
|
|
|
'பாண்டவர் முடிய வென்று, இப் பார் எலாம் உனக்கே தந்தால், மாண்டவர்தம்மை நின் வாய் மறைமொழிதன்னைக் கொண்டு மீண்டவர் ஆக்கி, பின்னை வேறு ஒரு பகையும் இன்றி, ஆண்டவர் இவரே என்னத் துணைவரோடு ஆளலாமே.' | 121 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் மறுமொழி கொடாது தவநிலையில் நிற்க, அசுவத்தாமன் முதலியோர் மீளுதல்
என்று இவை போல்வ பல் நூறு இயம்பவும், இராசராசன் ஒன்றினும் கவலை செல்லா உணர்வுடை உளத்தன் ஆகி, அன்று இகல் வருணன் கூறும் ஆகும் என்று அறிஞர் சொல்ல, துன்றிய வடிவத்தோடும் அடங்கினான், தோயத்தூடே. | 122 |
|
|
உரை
|
|
|
|
|
உரைத்தன உரைகட்கு எல்லாம் உத்தரம் உரைசெய்யாத வரைத் தடந் தோளான் நெஞ்சின் வலிமையை வலிதின் எண்ணி, நிரைத்த வெங் கதிர் கொள் வாளி நெடுஞ் சிலைத் துரோணன் மைந்தன், விரைத் தொடைக் கிருதனோடும், மாதுலனோடும், மீண்டான். | 123 |
|
|
உரை
|
|
|
|
|
மிருக மாக்கள் கூற, துரியோதனன் சென்ற இடத்தை வீமன் அறிந்து, தருமன் முதலியோர்க்கு அறிவித்தல்
மற்று அவர் மீண்ட பின்னர், மா தவக் குந்தி ஈன்ற கொற்றவர்தாமும், சேனைக் குழாத்தொடும் தங்களோடும் செற்றவர்தம்மை எல்லாம் சேண் உலகு ஏற ஏற்றி, பொன்-தவர் இராசராசன் புக்குழி அறிவுறாமல், | 124 |
|
|
உரை
|
|
|
|
|
பாடியும், களமும், சூழ்ந்த பாங்கரும், அங்கும் இங்கும், தேடியும் காண்கிலாத சிந்தை ஆகுலத்தர் ஆகி, நீடு உயிர்த்து உயிர்த்து நின்ற பொழுதினில், நிகழும் வேட்டை ஆடிய வலைஞர் கண்டோர் ஆனிலற்கு உரைசெய்வாரே: | 125 |
|
|
உரை
|
|
|
|
|
'துவம் மிகு முனிவரோடு சுரர்களும் தோயும் நல் நீர்த் தவம் முயல் பொய்கைதன்னில் தண்டுடைக் கையன் ஆகி, புவி முழுது ஆண்ட வேந்தன் புக்கனன்; கண்டோம்' என்றார், கவலை இல் மனத்தனான காற்று அருள் கூற்று அனாற்கே. | 126 |
|
|
உரை
|
|
|
|
|
கரு முகில் அனைய மேனிக் கண்ணனும், பவள மேனித் தருமனும், எவரும் கேட்ப, தாம வேல் வீமன் சொன்னான்,- ' 'பொரும் அரவு உயர்த்தோன் இன்று ஓர் பொய்கையில் புகுந்தான்" என்று தெருமரு மிருக மாக்கள் செப்பினர்' என்று கொண்டே. | 127 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் இறந்தாரை எழுப்பும் மந்திரம் பெற்றதைக் கண்ணன் அறிவித்தல்
என்றலும், தன்னைச் சேர்ந்தோர் இடுக்கணும் இளைப்பும் மாற்ற நின்ற எம் பெருமான் நேமி நெடியவன் அருளிச்செய்வான்: 'அன்று அயன் முகத்தினால் பெற்று, அநேக மா முனிவர்தம்பால் நின்ற மந்திரம் ஒன்று உண்டு; நிகர் அதற்கு இல்லை, வேறே. | 128 |
|
|
உரை
|
|
|
|
|
'வெஞ் சமர் இறந்தோர் எல்லாம் மீண்டு உயிர் பெறுவர்; அந்த வஞ்சக மறை முன் பெற்றான் வலம்புரித் தாரினானும்; நெஞ்சு அமர் வலிமையோடு நீரிடை மூழ்கி, நீங்கள் துஞ்சிடப் பொருவான் இன்னம் சூழ்ந்தனன் போலும்!' என்றான். | 129 |
|
|
உரை
|
|
|
|
|
வீமன் குளத்தை அடைந்து, துரியோதனனை இகழ்ந்து, போருக்கு அழைத்தல்
மாயவன் உரைத்த மாற்றம் மாருதி கேட்டு, தந்தை ஆயவன்தன்னைப் போல அப் பெரும் பொய்கை எய்தி, தூய தண் துளவினானும் துணைவரும் சூழ்ந்து நிற்ப, தீ எனத் தீய நெஞ்சன் செவி சுட, சில சொல் சொல்வான்: | 130 |
|
|
உரை
|
|
|
|
|
'கங்கை மகன் முதலாகக் காந்தாரன் முடிவாகக் களத்தில் வீழ்ந்த துங்க மணி முடி வேந்தர் சொல்லி முடிப்பதற்கு அடங்கார்; துரக மாவும், செங் கனக மணிக் கொடிஞ்சித் திண் தேரும், பெரும் பனைக்கைச் சிறுத்த செங் கண் வெங் கயமும் ஏறாமல், வீழ் கயத்தில் ஏறினையோ?-வேந்தர் வேந்தே!
| 131 |
|
|
உரை
|
|
|
|
|
'நெஞ்சு அறிய நீ எமக்கு நிலை நின்ற பழியாக நெடு நாள் செய்த வஞ்சகமும், பொய்மொழியும், மனு நீதி தவறியதும், மறந்தாய்கொல்லோ? துஞ்சிய நின் சேனையெல்லாம் மீண்டு வர நீ அறையும் சுருதி, இற்றை வெஞ் சமரம் முடித்து அன்றோ, அறைவது? இவை வீரருக்கு வீரம் ஆமோ? | 132 |
|
|
உரை
|
|
|
|
|
'அடி மாறி நீரிடைப் புக்கு, அரு மறை நீ புகன்றாலும், அரவப் பைம் பொன் கொடி மாறி, குருகுலத்தார் கோவே! நின் பேர் மாறி, குலவும் மாலை முடி மாறி, ஒரு தனி மா முத்த நெடுங் குடை நிழற் கீழ் ளும் முந்நீர்ப் படி மாறி ஒழிய விடேன்; புறப்படாய், மறைபட இப் பகல் போம் முன்னே. | 133 |
|
|
உரை
|
|
|
|
|
'ஓதப் பைங் கடல் புடை சூழ் உலகு ஆளும் முடி வேந்தர் உறு போர் அஞ்சிப் பாதத்தில் வீழ்வரோ? பார் அரசர் கேட்டாலும், பழியே அன்றோ? மேதக்க அரமகளிர் கைப் பிடிக்க, இந்திரனும் விண்ணோர்தாமும் காதத்தில் எதிர்கொள்ள, கற்பக நீழலில் வைப்பன்; கலங்கல், அம்மா! | 134 |
|
|
உரை
|
|
|
|
|
'களந்தனில் எத்தனை கவந்தம் கண் களிக்கக் கண்டனை நீ; கைத் தண்டோடு இக் குளந்தனில் இக் கவந்தமும் கண்டு ஏகுதற்குப் புகுந்தனையோ? கொற்ற வேந்தே! வளந்தனில் இக் கோபமும் என் வஞ்சினமும் போகாது; வந்து உன் பாவி உளந்தனில் இக் கவலையை விட்டு, உடற்றுதல் அல்லது, மற்று ஓர் உறுதி உண்டோ? | 135 |
|
|
உரை
|
|
|
|
|
'இனத்திடை நின்று ஒருபதின் மேல் எழு நாளும் ஒருவருடன் இகல் செய்யாமல், தனத்திடை நின்று உளம் மகிழும் புல்லரைப்போல், மதத்துடனே தருக்கி வாழ்ந்தாய்; சினத்திடை வெம் பொறி பறக்கச் செயிர்த்து, இரு கண் சிவப்பு ஏறச் செருச் செய்யாமல், வனத்திடை சென்று ஒளிப்பரோ, மண் முழுதும் தனி ஆளும் மன்னர் ஆனோர்? | 136 |
|
|
உரை
|
|
|
|
|
'திரிபுவனங்களும் சேரச் செங்கோன்மை செலுத்திய நின் சீர்த்தி, இந்த விரி புவனம்தனில் ஒளித்தால் மிகு வசையாய்ப் போகாதோ? வெருவலாமோ? புரி புவனம் உண்டு உமிழ்ந்தோன் பொன் இலங்கை வழி காணப் பாருத வாளி எரி புவனம் நுகர்ந்ததுபோல், இத் தடமும் புகையாமுன் எழுந்திராயே!' | 137 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் வெளி வருதல்
பாவனன் இப்படி உரைத்த பழி மொழியும் தனது செவிப் பட்ட காலை, சீவனம் முற்றையும் விடுவோன் இருக்குமோ? மறை மொழியும் சேர விட்டான்;- ஆவன மற்று அறியாமல், அழிவன மற்று அறியாமல், அடுத்தோர் ஆவி வீவன மற்று அறியாமல், நினையும் நினைவினுக்கு உவமை வேறு இலாதான். | 138 |
|
|
உரை
|
|
|
|
|
நீளம் உற, பரவை உற, வாளம் உற, கரை பரந்து நிமிர்ந்த நீத்த
நாள மலர்ப் பொய்கையின்நின்று எழுவான், மெய்ச் சுருதி மறை நவிலும் நாவான், காள நிறக் கொண்டல், பெருங் கடல் முழுகி வெள்ளம் எலாம் கவர்வுற்று அண்ட கோளம் உறக் கிளர்ந்ததுபோல், தோன்றினான், மணி உரகக் கோடியினானே. யாரொடு பொருவது?' என்று, துரியோதனன் வினாவுதலும், கண்ணன் 'வீமனோடு | 139 |
|
|
உரை
|
|
|
|
|
தோன்றி, நெடுங் கரை ஏறி, கரை முழுதும் நெருக்கம் உறச் சூழ்ந்து நின்ற தேன் திகழ் தார் ஐவரையும், செந் திருமாலையும் நோக்கி, சேனையோடும், மான் திகழ் தேர் முதலான வாகனங்களொடும் நின்றீர்; வலி கூர் என் கை ஊன்றிய தண்டுடன் நின்றேன்; ஒரு தமியேன் எப்படியே உடற்றும் ஆறே? | 140 |
|
|
உரை
|
|
|
|
|
'ஐவரினும் இப்பொழுது இங்கு ஆர் என்னோடு அமர் மலைவார்? அறுகால் மொய்க்கும் கொய்வரு தார்ப் புய வீரர்! கூறும்' என, திருநெடுமால் கூறல் உற்றான்: 'செய் வரு சேல் இளம் பூக மடல் ஒடிக்கும் திரு நாடா! செருச் செய்வான், இம் மெய் வரு சொல் தவறாத வீமசேனனை ஒழிந்தால், வேறும் உண்டோ?
| 141 |
|
|
உரை
|
|
|
|
|
'இளம் பருவம் முதல் உனக்கும் இவனுக்கும் வயிர்ப்பு எண்ணில், எண் ஒணாதால்; உளம் புகல, அரசவையில் வஞ்சினமும் பற்பல, அன்று, உரைத்தே நின்றான்; களம் புகுந்து நின் ஒழிந்த துணைவரையும் தனது தடக் கையால் கொன்றான்; விளம்புவதோ? வேறு ஒருவர் நின்னுடன் போர் மலைவரோ? வேந்தர் வேந்தே! | 142 |
|
|
உரை
|
|
|
|
|
'வில்லாலும், வாளாலும், வேலாலும், பரி நெடுந் தேர் வேழத்தாலும், தொல் ஆண்மை தவறாமல் செரு மலைந்தோர் சான்றாகச் சூழ்ந்து நிற்ப, புல்லாரைப் புறங்காணும் போர் வேலோய்! இருவரும் நீர் பொருது, நும்மில் வல்லார்கள் வென்றி புனைந்து, அவனிதலம் பெறும் இதுவே வழக்கும்' என்றான். | 143 |
|
|
உரை
|
|
|
|
|
எந்த ஆயுதத்தால் போர் செய வேண்டும்?' என வீமனைத் துரியோதனன் வினாவுதல்
கொண்டல் நிகர் திருமேனிக் கோபாலன் இவை உரைப்ப, வண்டு படி வலம்புரித் தார் வய வேந்தன் மனம் களித்து, திண் திறல் வீமனை நோக்கி, 'சிலை முதல் ஆம் படை கொண்டோ? தண்டு எனும் நின் படை கொண்டோ? சமர் விளைப்பாய்' சாற்று' என்றான். | 144 |
|
|
உரை
|
|
|
|
|
'கதை கொண்டே போர் செய்யலாம்' என வீமன் மொழிதல்
'நின கரத்தின் மிசை ஏந்தி நின்றது நீள் கதையாகில், என கரத்தில் தண்டுகொண்டே யானும் உடற்றுவன்' என்றான்- தனகரற்கும், குமரற்கும், தண் துழாய் முடியவற்கும், தினகரற்கும், மேலான சிந்தையுடன் செருச் செய்வோன். | 145 |
|
|
உரை
|
|
|
|
|
'எந்த இடத்தில் போர் புரிவது?' என்று வினாவிய துரியோதனனுக்குக் கண்ணன் விடை கூறும் அளவில், பலராமனும் விதுரனும் அங்கு வருதல்
'எவ் இடை வீமனும் யானும் இகல் புரிதற்கு இடம்?' என்று, பொய் விடை ஏழ் அடர்த்தோனைப் புயங்ககேதனன் கேட்ப, மெய் விடை ஆன் நிரைப் பின்போய் வேய் ஊதும் திரு நெடுமால், அவ் இடை, ஆங்கு, இருவருக்கும் ஆம் பரிசால் அருள் புரிந்தான். | 146 |
|
|
உரை
|
|
|
|
|
அரும் பெறல் ஆயோதனம் மற்று அவன் உரைக்கும் வேலையினில், இரும் புனல் ஆடுதற்கு அகன்றோர் இருவரும் வந்து அவண் எய்த, கரும் புயலே அனையானும், காவலரும், கண் களித்து, விரும்பி மனம் களி கூர, மேதகவே எதிர்கொண்டார். | 147 |
|
|
உரை
|
|
|
|
|
பலராமனையும் விதுரனையும் கண்ணன் முதலியோர் வரவேற்றுப் பாராட்டுதல்
மதுரை நகர்க்கு அரசான மாயனும் தம்முனை வணங்கி, விதுரனையும் மெய் தழுவ, வேல் வேந்தர் அனைவோரும் கதிரவர் ஓர் இருவரையும் கண்டு களிப்பவர் போல, எதிர் எதிர் போய்க் கை தொழுதார், இகல் ஆண்மைக்கு எதிர் இல்லார். | 148 |
|
|
உரை
|
|
|
|
|
புண்ணிய நீர் ஆடி வந்த இருவரும் தாம் சென்று மீண்ட வரலாறு உரைக்க, கண்ணன் பாண்டவ கௌரவர்களின் போர்ச் செயலைக் கூறுதல்
அன்று முதல், ஏகிய நாள் அளவாக, இருவோரும் குன்று இடமும், கடல் இடமும், குறித்த நதிகளின் இடமும், சென்று, சுரரும் படியும் தீர்த்தங்கள், திசைதோறும் ஒன்றுபட மகிழ்ந்து ஆடி, மீண்டவாறு உரைசெய்தார். | 149 |
|
|
உரை
|
|
|
|
|
அறன் தரு காளையும் முகுரானனன் தரு காளையும் புரிந்த மறம் தரு போர் வெங் களத்து, மன்னவர்கள் அனைவோரும் இறந்த நிலையும், தினங்கள் ஈர்-ஒன்பானிலும், தோன்ற மறம் திகழ் தோள் இருவருக்கும், மா மாயன் கட்டுரைத்தான். | 150 |
|
|
உரை
|
|
|
|
|
பலராமன் துரியோதனன் தோல்விக்கு வருந்தி, மேல் நடப்பது பற்றி அறிந்து கண்ணனையே பொரு களம் வரையறுக்குமாறு கூறுதல் கேட்டருளி நெடுந் தால கேதனன் மா மனம் தளர்வுற்று, 'ஆட்டு அரவம் உடையவற்கோ, அழிவு வருவது போரில்? நாட்டம் இனி ஏது?' என்று நராந்தகனை வினவுதலும், மீட்டும் அவற்கு உரைசெய்தான், விரி திரை நீர் மறந்தோனே: | 151 |
|
|
உரை
|
|
|
|
|
' "வீமனுக்கும், வீமனுடன் வெகுண்டு அமர் செய் வலம்புரிப் பூந் தாமனுக்கும், அமர் புரியும் தலம் ஏது?' என்று உயாவுகின்றோம்; நீ மனத்தின் நிகழ்ந்தபடி நிகழ்த்துக!' என, நிலவு ஒளியால் சோமனுக்கு நிகர் ஆனோன், இளவலை, 'நீ சொல்!' என்றான். | 152 |
|
|
உரை
|
|
|
|
|
கண்ணன் போர்க்களம் குறிக்க, யாவரும் அவ்விடம் நோக்கிச் செல்லுதல்
'தாவு எழு மா மணி நெடுந் தேர்த் தபனன் நிகர் மழுப் படையோன் மூ-எழு கால் முடி வேந்தர் அனைவரையும் முடிப்பித்து, நா எழு பான்மையின் உடையோன் களிக்க, நரமேதம் செய் பூ எழு தீவினும் சிறந்து, பொன்னுலகோடு ஒத்துளதால். | 153 |
|
|
உரை
|
|
|
|
|
'அந் நிலமே இருவருக்கும் அமர் புரியல் ஆன இடம்; மன்னவர்தம் உடல் சோரி வழிந்து சமந்த பஞ்சகம் ஆம் என்ன நிலைபெற்ற தடங்களும் அங்கங்கே உண்டு; உன்னில் எதிர் இல் அதனுக்கு, ஒலி கடல் சூழ் நிலத்து' என்றான். | 154 |
|
|
உரை
|
|
|
|
|
வேகமுடன் நடந்து செல்லும் துரியோதனன், தன் நிலைக்கு மனம் இரங்குதல்
அத் தலத்தின் திசை நோக்கி அனீகினியும், அனைவோரும், முத்த நெடுங் குடை நிழற்ற, மூவகை வாகனம் ஏறி, கொத்துடனே நெறி படர, கொற்றவர் கொற்றவன்தானும் கைத்தலமும் தண்டமுமாக் கால் வேகம் உறச் சென்றான். | 155 |
|
|
உரை
|
|
|
|
|
தம்பியர்கள் புடை சூழ, தருமன் மகன், பல் இயமும் பம்பி எழ, நடக்கின்ற பரிசுதனை முகம் நோக்கி, 'எம்பியரும், எம் கிளையும் இறக்க இருந்தனம்!' என்றே, வெம்பி மனம் மிகத் தளர்ந்தான், விதிதனக்கும் விதி போல்வான்.
| 156 |
|
|
உரை
|
|
|
|
|
தருமன் அரசாட்சியை ஏற்குமாறு துரியோதனனை வேண்ட, அவன் இசையாமை
'முடிக் குல மன்னவர் தம்தம் முடிகளினால் சிவக்கின்ற அடிக் கமலம் நடந்து சிவப்பு ஆவதே!' என இரங்கி, கொடிக்கண் முரசு எழுதிய அக் கோவேந்தன் கொடித் தேர்விட்டு, இடிக்கும் முரசு எனப் புகல்வான், இராசராசனுக்கு அம்மா! | 157 |
|
|
உரை
|
|
|
|
|
'என் துணைவருடன் யானும் ஏவிய நின் தொழில் புரிந்து, வன் துணையாய்ச் சேவிப்ப, மடங்கல் ஆசனம் ஏறி, "இன் துணைவர் குருகுலத்தார்" எனும் இசை போய்த் திசை ஏற, நல் துணைவா! ஆளுதியால், ஞாலம் எலாம் நின் குடைக்கீழ். | 158 |
|
|
உரை
|
|
|
|
|
'தப்பாது, என் மொழி' என்று தருமன் மா மதலை, முகில் ஒப்பன திருமேனி உம்பர் பிரான் சான்று ஆக, செப்பாத வாய்மை எலாம் செப்பினான்; செப்பவும், அக் கைப்பான வல் நெஞ்சக் கடுங் கண்ணான் கண் மறுத்தான். | 159 |
|
|
உரை
|
|
|
|
|
'எம் கிளைஞர், எம் துணைவர், எம்பொருட்டால் இறந்து ஏக, உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர்வாழ்வின் இனிது அன்றோ- அங்கம் எலாம் வேறுபட, ஆறுபடு குரிதியின்வாய், கங்கமும் காகமும் கொத்த, களத்து அவிந்தான் எனும் பெயரே?' | 160 |
|
|
உரை
|
|
|
|
|
எல்லாரும் யமுனை கடந்து, சமந்தபஞ் சகத்தை அடைதல்
எனத் தருமன் வார்த்தைதனக்கு இசையாமல் அவன் ஏக, அனைத்து வரூதினிகளொடும், ஐவரும் ஆங்கு உடன் ஏக, கனத்தில் வடிவு உடையோனும், கைலை வடிவு உடையோனும், வினைத் தடந் தேர் விதுரனொடும் விரைவுடன் ஏகினர் அம்மா. | 161 |
|
|
உரை
|
|
|
|
|
யாவரும் சூழ்ந்து நிற்க, வீமனும் துரியோதனனும் போருக்குச் சித்தமாதல்
கலங்கள் பல இனம் ஏறி, காளிந்திக் கரை ஏறி, தலங்களில் நல் தலமான சமந்தபஞ்சகம் எய்தி, வலம் கொள் படைத் தலைவர் எலாம் வளைத்த கடல் என, வாள விலங்கல் என, சூழ் நிற்ப, வெஞ் சமரம் தொடங்கினரே. | 162 |
|
|
உரை
|
|
|
|
|
'பூங் கவசத்துள் புகுந்து, பூண் அனைத்தும் திருத்தி, மணி ஓங்கல்இவை இரண்டு உயிர் பெற்று உடற்றுகின்றது' என உரைப்ப, வாங்கிய தண்டமும், தோளும், மலர்க் கரமும் வலி கூர, ஆங்கு உலகு செவிடுபட, அடல் அரிநாதமும் செய்தார். | 163 |
|
|
உரை
|
|
|
|
|
வீமன் துரியோதனனை இகழ்ந்து, தன் வீரம் பேசுதல்
கந்த நறு மலர்க் கூந்தல் காந்தாரி புதல்வனை அக் குந்தி மகன் முகம் நோக்கி, கொடுஞ் சொற்கள் சில சொல்வான்: 'கந்தருவர் அன்று உன்னைக் கட்டிய தோள் வலி கொண்டோ, சிந்தைதனின் வலி கொண்டோ, செருச் செய நீ புகுந்தாயே? | 164 |
|
|
உரை
|
|
|
|
|
'இடிப்பதும் இன்று இரு கதையும்; என் கதையால் இடியுண்டு, துடிப்பதும், இன்று உன் உடலம், உயிர் துறக்கம் குடியேற; முடிப்பதும் இன்று, அழல்-பிறந்தாள் முகில்ஓதி; முகில் பொழி நீர் குடிப்பதும் இன்று, ஒருவேன் நின் குருதி நீர் குடித்தாலே.' | 165 |
|
|
உரை
|
|
|
|
|
வீமனைப் போர் தொடங்குமாறு துரியோதனன் மொழிந்து அவனோடு கதைப் போர் புரிதல்
'இனி விடு மேன்மேல் உரைக்கும் வாசகம்; எனது உயிர் நீ கோறல், இற்றை நாளிடை, உனது உயிர் வான் ஏற விட்டு, நான் உலகு ஒரு குடை மா நீழல் வைத்தலே துணிவு; அனிகமும், மாயோன் நடத்து தேருடை அநுசனும், வாள் ஆண்மை மற்றை மூவரும் நினைவுடனே காண, வச்ர ஆயுதம் நிகர் கதை, வீமா! எடுத்தி நீ' என, | 166 |
|
|
உரை
|
|
|
|
|
நடை ஒழியாதோன் விறல் குமாரனும், நயனம் இலாதோன் முதல் குமாரனும், அடலொடு கார் வான் இடிக்குமாறு என அதிர்வு உறவே கூறி, மத்த வாரணம், விடை, அரிமாஏறு, என ப்ரதாபமும், விசயமும் மேன்மேல் மிகுத்து, மேலிடு கடையுகநாள் வாயு ஒத்து நீடிய கதை கெழு போர் ஆதரித்து, மூளவே, | 167 |
|
|
உரை
|
|
|
|
|
இருவரும் பொருத வகை
ஒரு தமனீயாசலத்தினோடு எதிர் ஒரு முழு மா நீல வெற்பு நீடு அமர் புரிவதுபோல், மேல் விசைத்து, மீமிசை பொறி எழ மாறாமல் எற்றி, வீரர்கள் இருவரும், ஆகாயம் முட்ட, நாகர்கள் இறைகொள, நால் நாலு திக்கு நாகரும் வெருவர, நீள் நாகர் உட்க, வீசினர்- விசையுடனே போர் விறற் கதாயுதம். | 168 |
|
|
உரை
|
|
|
|
|
உகவையினாலே சிரிப்பர்; நீள் சினம் உறுதலினாலே மடிப்பர், வாய் மலர்; புகை எழவே தீ விழிப்பர்; மார்பொடு புனை கிரி போலே தடிப்பர், தோள் இணை; இகல் புரி நூலோடு கற்ற சாரிகை இடம் வலமே போவர்; வட்டம் ஆகுவர்; முகடு உற மீதே குதிப்பர்; பார்மகள் முதுகு இற நேரே குதிப்பர், மீளவே. | 169 |
|
|
உரை
|
|
|
|
|
ஒரு கையினாலே சுழற்றி, வான் முகடு உடைபட மேலே கிளப்பி, நீள் கதை, இரு நில மீதே மறித்து வீழு முன், எறி கையினாலே தரிப்பர்; மேல் அவர் விரைவுடனே தாளம் ஒத்தி ஓடுவர்; விசையுடனே கால் ஒதுக்கி மீளுவர்; பரிதிகள் போலே விருத்தம் ஆம் முறை பவுரி கொளா வீசி நிற்பர், வீரரே. | 170 |
|
|
உரை
|
|
|
|
|
மலர் அடி, தாள், ஊரு, வட்டம் ஆர் தனம், வயிறு, மனோராக பற்பம், மார்பொடு, குல கிரி நேர் தோள், கழுத்து, நீடு அணல், குறுநகை, கூர் வாய், கதுப்பு, வார் குழை, இலகு புரூர் பாகம், நெற்றி, ஆனனம், என அடைவே கூறு உறுப்பு யாவையும் உலைவுற, மேன்மேல் மிகுத்து, மூளையும் உதிரமும் மாறாது உகுக்க, மோதியே,
| 171 |
|
|
உரை
|
|
|
|
|
கதை கதையோடே அடிக்கும் ஓதைகொல்' கதை உடையோர்தாம் நகைக்கும் ஓதைகொல்' எதிர் மொழி ஓவாது இசைக்கும் ஓதைகொல்' இணை உடலூடே இடிக்கும் ஓதைகொல்' பத யுகம் மாறாடி வைக்கும் ஓதைகொல்' பணை பல சூழ்போத எற்றும் ஓதைகொல்'- திதியொடு வானூடு செற்றும் வானவர் செவி செவிடு ஆமாறு அதிர்க்கும் ஓதையே! | 172 |
|
|
உரை
|
|
|
|
|
இளைத்த துரியோதனன், வீமனது உயிர் நிலையை உசாவி அறிந்து தாக்க, வீமன் மயங்கி விழுதல்
அரி வய மாஏறு உயர்த்த சூரனும், அழல் விட நாகேறு உயர்த்த வீரனும், இருவருமே வாலி சுக்கிரீவர்கள் என அமர் மோதா இளைத்த காலையில், வரை முடி மேனாள் ஒடித்த காளைதன் மதலையை, ஏழ் பார் படைத்த கோமகன் உரை தடுமாறா, உயிர்த்து, 'நீ உனது உயிர்நிலை கூறாய், எனக்கு' எனா முனம், | 173 |
|
|
உரை
|
|
|
|
|
இரு வினை கூறா அறத்தின் மா மகன் இளவல், விதாதாவொடு ஒத்த கேள்வியன், உரை தவறாதான் மறைக்குமோ' 'எனது உயிர், துணைவா! கேள், சிரத்திலே' என அரி மகவு ஆனோன் உரைத்தபோது, இவன் அவன் முடிமேலே புடைக்க, வீமனும் உரும் உறும் மா மேரு வெற்புஅதுஆம் என உரை தடுமாறா, உழற்றினான்அரோ. | 174 |
|
|
உரை
|
|
|
|
|
வீமன் துரியோதனனது உயிர் நிலையை வினாவ, அவன் மாறுபட மொழிதல்
மகிதலம்மேல் வீழ்தல் உற்றும், மீளவும், வலியுடனே போர் குறித்து மேல்வரு பகைவனை, 'நீ ஆவி நிற்பது ஓர் நிலை பகர்' என, மாறாடு சர்ப்பகேதுவும், 'இகல் நுதலூடே எனக்கும் ஆர் உயிர்' என, மதியாதே உருத்து, வீமனும், உகுதரு சேய் நீர் பரக்க மோதினன், உயர் கதையாலே, சிரத்தின்மேலுமே. | 175 |
|
|
உரை
|
|
|
|
|
வீமன் தாக்குதலால் துரியோதனன் நிலைகுலைய, வீமன் அவனை, 'இளைப்பாறுக!' எனல்
உரிய கதாபாணியர்க்குள் ஒத ஒர் உவமை இலாதான் அடித்தபோது, உயர் சிரம் முடியூடே பிளக்க, நால்-இரு திசையினும் வார் சோரி கக்கி வீழ்தர, இரு நிலமீதே பதைத்து வீழ்தலும், இரிதர மோதாமல் விட்டு, ' நீ இனி விரைவுடன் ஆறு ஆறு!' எனத் தன் ஆண்மையை விருதர் முன், மேன்மேல் விளக்க வீமனே, | 176 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் தெளிவு பெற்று வீமனைத் தாக்க, இருவரும் கடும் போர் புரிதல்
வரு களை ஆறா, உயிர்ப்பு உறா, விழி மலர் திறவா, நா வறட்சி போய், உகு குருதி உகாமே துடைத்து, வீழ்தரு குருகுல பூபாலன் உக்ர வேகமொடு உரும் எறி மா மேகம் ஒத்த காயமும் உதறி, மனோவீரம் உற்று, மீளவும் அருகு ஒருபால் மேவி நிற்கும் வீமனை அடு கதையால், ஓடி முட்டி மோதவே, | 177 |
|
|
உரை
|
|
|
|
|
ஓம உண்டி கொள் பேர் அழலோடு அடல் ஊதை வெஞ் சமர் ஆடியவாறு என, ஆ மரங்களினால் மதியாது அமர் ஆடுகின்ற நிசாசரர் ஆம் என, வீமனும், துரியோதன நாமனும், வேகம் ஒன்றிய வீரியராய், அடு சேம வன் கதையால் அமர் ஆடினர், தேறி நின்றவர் வாள் விழி மூடவே. | 178 |
|
|
உரை
|
|
|
|
|
மேவு சிங்க, வியாள, விலோதனர் வீசுகின்ற கதாரவம் மேலிட, வாவு வெம் பரி ஆதபனும் தடு- மாறி நின்றனன்; வானவர், தானவர் நா அடங்கினர்; மா முனிவோரொடு நாகர் அஞ்சினர்; நான்முகன் ஆதிய மூவரும் செயல் ஏது என நாடினர்; மோழை கொண்டது, மூடிய கோளமே. | 179 |
|
|
உரை
|
|
|
|
|
வீமனது தாழ்வு கண்டு, 'துரியோதனனை வெல்லும் வகை யாது'' என, கண்ணனை விசயன் வினாவுதல்
தார் வலம்புரியானொடு போர் அழி தாழ்வு கண்டனன் வீமனை, வாசி கொள் தேர் விடும் திருமால் அடி நீள் முடி சேர நின்று உரையாடினன், ' மாருதி நேர் தளர்ந்தனன்; யாதுகொலோ செயல்' நீ மொழிந்தருள்வாய்!' என, வானவர் ஊர் புரந்தவன் ஓத, முராரியும் ஓதினன், பரிவோடு அவனோடு இவை: | 180 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனனைக் கொல்லும் உபாயத்தைக் கண்ணன் கூறுதல்
'நீ நயந்தனை கேள்: உறு போரிடை நேர் மலைந்திடுவோர் இருவோரினும், ஆனிலன் பெலவான்; அதிலே முகு-ரானனன் தரு சேய் வினை ஆதிகன்; நான் இயம்பல் தகாது; இவர் ஆயிரம் நாள் மலைந்தனர் ஆயினும், வீவொடு வான்அகம் புகுதார் இருவோர்களும்;- வாசவன் தரு பூண் அணி மார்பனே! | 181 |
|
|
உரை
|
|
|
|
|
'மாறு கொண்டவர் ஆவி கொள் நீள் கதை மாருதன் சுதனோடு இவண் ஓர் உரை கூறல் இங்கிதமே அல; ஓர் உரை கூறில், வஞ்சகம் ஆம்; இவன் ஆண்மையின் நூறு மைந்தரின் ஆதிபன் ஆகிய நூல் நலம் திகழ் மார்பனை ஆர் உயிர் ஈறு கண்டிடலாம், அவன் ஊருவை ஏறு புண்படவே எதிர் மோதிலே.' | 182 |
|
|
உரை
|
|
|
|
|
விசயன் குறிப்பினால் வீமனுக்கு உபாயம் உரைக்க, அவன் அதனை உணர்ந்து, துரியோதனனது தொடையில் அடித்துப் பூமியில் வீழ்த்துதல்
ஏழ் பெருங் கடல் சூழ் புவி பாரமும் ஏதமும் கெட, ஏதம் இல் ஐவரும் வாழ, அன்று உயர் நாரணனார் திரு-வாய் மலர்ந்த சொலால் மகிழா மிக, 'ஊழினும் புரி தாள் வலிதே' என, ஊருவின் புடை சேர் கர நாள்மலர், காழ் நெடுங் கிரியே அனையான் விழி காண, நின்றனன், வான் அரி காளையே. | 183 |
|
|
உரை
|
|
|
|
|
ஞான பண்டிதன் வாயு குமாரனும், நாரணன் பணியால் இளையோன் மொழி மோன வண் குறி தான் உணரா, எதிர் மோதினன் கதை, பூபதி ஊருவின்; மான கஞ்சுகன் ஆறு அடி ஏழ் அடி மாறி நின்றிடவே பிழைபோதலின், மேல் முழங்கின வானவர் தூரியம்; மேல் விழுந்தது பூ மழை சாலவே.
| 184 |
|
|
உரை
|
|
|
|
|
மாறி நின்ற சுயோதனன் மீளவும் வாயு மைந்தனை வாகுவும், மார்பமும், நீறு எழும்படி சாடியபோது, அவன் நீள் நிலம்தனில் ஓடி விழாது, தன் ஊறு மிஞ்சிய பேர் உடலோடு எதிர் ஓடி, வன் தொடை கீறிட, மாறு அடும் வீறு கொண்ட கதாயுதம் வீசினன், வீரன் அம் புவிமீது உற வீழவே.
| 185 |
|
|
உரை
|
|
|
|
|
அரிப் பதாகன் உரகப் பதாகனை அதிர்த்து, மேல் உற அடர்த்து, நீடு உருப்பினோடு அதிசயிக்க ஊருவை ஒடிக்கவே, அவன் உடற்றலும்; நெருப்பு உறா விழி சிவத்து, வார் கடை நிமிர்ப்பு உறாத புருவத்தனாய், மருப்பு நால் உறு மதத்த மா என மதத்து, மார்பமிசை குத்தினான். | 186 |
|
|
உரை
|
|
|
|
|
கதுப்பும் வாயும் நெரிய, கதாயுத கரத்தினால் நனி கலக்கினான், எதிர்த்த யானையை அடர்த்த கேசரி எனப் பொன் மௌலியை இருத்தினான், உதைத்து மேல் இரு பதத்தினால், அவன் உரத்தை வாகுவை ஒடித்து, நீள் விதத்தினால் இரு நிலத்துமீது உடல் விதிர்த்து வீழ்தர விழுத்தினான். | 187 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் கண்ணனைப் பழித்துக் கூறுதல்
நிறத்த நீல கிரி ஒக்கவே இரு நிலத்தின் வீழ் குரு குலத்தினோன், உறைத்து மீளவும் உயிர்த்து, மாயனொடு உருத்து வாசகம் உறச் சொல்வான்; 'குறிப்பினால் விசயனைக் கொடு ஆர் உயிர் குறிக்கும் மா மதி கொளுத்தினாய்; அறத்தினால் அடல் மறத்தின் நீர்மையை அவித்தை ஆ | 188 |
|
|
உரை
|
|
|
|
|
'மலைத்த போர்தொறும் எனக்கு நீ செய் பிழை மற்றுளோர் செய நினைப்பரோ' குலத்திலே இழிகுலத்தர் ஆனவர் குறிப்பு இலாது, இவை பிறக்குமோ' சலத்தினால் வினை இயற்றுவார் முடி தரித்த காவலரொடு ஒப்பரோ' நிலத்தில் வாழ்வு அவர் பெறக் கொடாய், இனி; நினைத்த காரியம் முடித்தியே!' | 189 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் மீண்டும் எதிர்க்க எழுந்தபோது, வீமன் அவனை முடியில் உதைக்க, அது கண்டு பலராமன் சினந்து கூறி, வீமனோடு பொருதற்கு எழுதல்
எனச் சில் வாசகம் மிழற்றி, மீளவும் எதிர்ப்பதாக எழல் உற்றபோது, அனல் சகாயன் முன் அளித்த காளை தன் அடல் சரோருக பதத்தினால், 'உனக்கு வாழ்வு இனி எனக் கொல் ஆம்'' என உதைத்து, மௌலியை உடைக்கவே, சினத்து அலாயுதன் நிறத்த வாள் விழி சிவக்க, வாய்மை சில செப்புவான்: | 190 |
|
|
உரை
|
|
|
|
|
எம் பிரானை, முராரியை, மாயனை, இம்பர் ஏழ் கடல் சூழ் புவிமேல் ஒரு தம்பியா உடையான், அவனோடு எதிர் சந்தியா, வெகுளா, விழி தீ எழ, 'நம்பி! கேள்: அரியோடு உடன் மேவிய நஞ்சு போலும் நரேசர் முன்னே, உடல் கம்பியா விழ, ஊருவின் மோதுதல் கண்ட போது, எனது ஆர் உயிர் போனதே.
| 191 |
|
|
உரை
|
|
|
|
|
'கதை எடுத்து உடற்றும் ஆடவர்கள் கடிதடத்தினுக்கு மேல் ஒழிய, அதிர்வு உறப் புடைப்பரோ, தொடையில்' அடிபடத் துகைப்பரோ, முடியில்' எதிரியைச் சலத்தினால் என் விழி எதிர் வழக்கு அழித்த பாவனனை முதுகிடப் புடைப்பல் யானும்' என, முசல கைத்தலத்தொடு ஓடினனே. | 192 |
|
|
உரை
|
|
|
|
|
கண்ணன் பலராமனைத் தடுத்து, சமாதானம் கூறுதல்
மதி இரவியோடு போர் செயுமாறு என, வலிய திறல் வீமன்மேல் இவன் ஓடலும், இதய மலர்தோறும் மேவரு நாயகன் இவனை விரைவோடு போய் விலகா, இரு பதுமம் நிகரான தாள் பணியா, 'மிகு பரிவினொடு சீறும் ஆண்மை தகாது' என, அதி மதுர வாய்மையால், வெகுளாவகை, 'அடிகள்! இவை கேண்மினோ!' என, ஓதினான்: | 193 |
|
|
உரை
|
|
|
|
|
'முகுரானனன் மைந்தனும் வீமனுமே முடியாத பெரும் பகையாளர்கள் காண்; மகிபாலர் திருந்து அவையூடு உரையா வழுவாதன வஞ்சினம் ஓதி, நனி இகல்வார்; சிலையின் குரு ஆனவர்தாம் இடு சாபமும் உண்டு; திரௌபதியார் பகர் சாபமும் உண்டு; அதனால், எதிரே படுமே, இவன் வெங் கதையால் அவனே. | 194 |
|
|
உரை
|
|
|
|
|
'வெஞ் சிலை விதுரன்அவனும் நீவிரும் மிஞ்சிய புனல்கள் படிய ஏகினிர்; பஞ்சவர்களொடு வயிரியாய் ஒரு பண்பு அற வினை செய் சமர பூமியில் வஞ்சனை வழியில் ஒழிய, நேர்பட வன்பொடு மறமும் அறமது ஆம் வகை, எஞ்சிய பதினெண் வகைகொள் நாளினும், இன்று, அமர் பொருதது, உரக கேதுவே.' | 195 |
|
|
உரை
|
|
|
|
|
பலராமன் செல்ல, துரியோதனன் குற்றுயிராய்க் களத்தில் கிடத்தல்
வெற்றி புனை பலபத்ரராமனும் மெய்த் துணைவன் இவை சொற்ற காலையில், மற்றை அநுசனொடு உற்ற நீள் களம் வட்டம் இட ஒர் இமைப்பின் ஏகினன்; அற்றை அடல் அமரில் சுயோதனன் அற்ப உயிர் நிலை நிற்ப, நீடு உடல் முற்றும் உகு குருதிக்கண் மூழ்குற, மொய்த்த கழுகின் நிழற்கண் மேவினன். | 196 |
|
|
உரை
|
|
|
|
|
சூரியன் மறைய, ஐவரும் பாசறைக்கு மீளுதல்
மைந்தினால் பெரியோன் எனும் வாயுவின் மைந்தனால் துரியோதனன் மா முடி சிந்த, ஆர்த்தனர், நீள் திசை காவலர்; சிந்தி வாழ்த்தினர், பூமழை தேவர்கள்; முந்த ஓட்டிய தேரொடு காய் கதிர் மொய்ம்பன் மேல் கடல் மூழ்கினன்; மாலை கொள் அந்திவாய்த் தம பாசறை மேவினர், ஐந்து பார்த்திவர்ஆனவர்தாமுமே. | 197 |
|
|
உரை
|
|
|
|
|
'பாசறை புகுதல் கடன் அன்று' என்று, ஐவரையும் கண்ணன் பக்கத்திலுள்ள ஒரு காட்டிற்கு அழைத்துச் செல்லுதல்
'மிடல் மிஞ்சு மேவலர் வானிடை போதர, வினை வென்ற காவலர் பாசறை சேருதல் கடன் அன்று' எனா, முனி மா மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு அறியாவகை, அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வுற, அவர் ஐந்து வீரருமே வரவே, ஒரு புடை தங்கு கானிடை போயினனால், நனி பொழி கொண்டல்போல் திரு மேனி முராரியே. | 198 |
|
|
உரை
|
|
|
|
|
அசுவத்தாமன் செய்தி தெரிந்து, துரியோதனனை அணுகிச் சோகமுறுதல்
'ஆன கமல மலர் வாவியிடையே முழுகி, ஆவி உதவு மறை யோக பரன் ஆகி மொழி மான கவச வர ராச துரியோதனனை, வாயு குமரன் முதிர் போரில் எதிர் வீழும்வகை தான கரட கரிமாவை அரிமா பொருத தாயம் என உழறினான்' எனும் முன், வேகம் உற, ஞான சரித குருவாகிய துரோணன் மகன் நாடு களம் அணுகினான், ஒரு விநாழிகையில். . | 199 |
|
|
உரை
|
|
|
|
|
உரக துவசன் அயர்கின்ற ஆவியின் உணர்வொடு துயில்வது கண்டு, பேர் உடல் கரதல மலர்மிசை கொண்டு, வார் புனல் கலுழ்தரு விழியினன், நண்பினால், அமர் பொரு களனிடை தன தந்தை வீடிய பொழுதினும் மனம் மிக நொந்துளான், உயர் சுரர்களும் உருக இரங்கினான், வரி தொடு சிலை விசைய துரங்கதாமனே. | 200 |
|
|
உரை
|
|
|
|
|
'பாண்டவரை விடிவதற்குள் அழித்து வருவேன்!' என்று அசுவத்தாமன் வஞ்சினம் கூற, துரியோதனன் தன் முடி மணியை அளித்தல்
முனைத்தலை அழிந்து உடல் சோரவும், 'யான் வினை முடிப்பன்!' எனும் நெஞ்சுடை வாள் வய வீரனை, அனைத்து உலகினும் குரு ஆன சராசனன் அளித்த முனி அன்புற மார்பு தழீஇயினன், 'நினைத்த நினைவின்படியே மிகு போர் செய்து, நினக்கு அவனி தந்திட, நீ தலைநாளினில் எனைத் தனி தெளிந்திலை, யாதவன் மாயையின்!' என, பரிவு கொண்டு, சில் வாய்மைகள் கூறியே, | 201 |
|
|
உரை
|
|
|
|
|
'"அருள் உற வழக்கு அழிவு உறாததொர் மாற்றமும், அறனுடன் அழுக்கறல் அணுகுறா ஏற்றமும், இரு நிலம் மதித்திட, இனிது கோல் ஓச்சுதல் இயல்பு நிருபர்க்கு" எனும் முறைமையோ பார்த்திலை; நரை கெழு முடித் தலை என் பிதா, மீப் படு நதி மகன், முறித்த வில் விதுரனேபோல் பல குரவரும் உரைத்த சொல் உறுதி நீ கேட்டிலை; குரு மரபினுக்கு ஒரு திலகமாம் மூர்த்தியே!
| 202 |
|
|
உரை
|
|
|
|
|
'இடி இடித்திடு சிகரிகள் ஆம் என எறி மருச்சுதன் முதல் இகலோர் தலை துடிதுடித்திட, அவர் அவர் சேனைகள் துணிபடப் பொருது, எழு புவி நீ பெற, விடிவதற்கு முன் வருகுவன் யான்' என, விடை கொடுத்தனன், அரவ விலோதனன், முடிமிசைத் தனது உடைய சிகாமணி முனிமகற்கு இனிது அருள் செய்து, மீளவே. | 203 |
|
|
உரை
|
|
|
|
|
அசுவத்தாமன், கிருபன், கிருதவன்மன், மூவரும் பாண்டவரது பாசறை புகுதல்
பூசுரர் பெருந் தகை பரித்தாமா, இரியல் போன கிருபன், கிருதபத்மா, மூவரும், முன் வாசவன், விரிஞ்சன், உமை பத்தா, மாயன், முதல் வானவர் வழங்கிய வயப் போர் வாளிகளின், ஆசுகன் மகன்தனையும், அப்போதே, துணைவர் ஆனவரையும் தலை துணிப்பான் நாடி, அவர் பாசறை புகுந்தனர், பரித் தேர் யானையொடு, பாரதம் முடிந்த பதினெட்டாம் நாள் இரவே. | 204 |
|
|
உரை
|
|
|
|
|
வேல் அமர் தடக் கை வீரர் இப் பாடி- வீடு சென்று அணைதலும், புறத்து ஓர் ஆல் அமர் சினையில் பல் பெருங் காகம் அரும் பகல் அழிந்த கூகையினால், சாலவும் இடருற்று அலமரக் கண்டு, தம்மிலே முகம் முகம் நோக்கி, 'காலமும் இடனும் அறிந்து அமர் செகுத்தல் கடன்' எனக் கருதினர் அன்றே. | 205 |
|
|
உரை
|
|
|
|
|
ஒரு பூதம் அவர்களைத் தடுத்துவிட, அவர்கள் மூவரும் அருகிலுள்ள ஆலமரத்தின் அடியைச் சார்தல்
உரத்து வாரணங்கள் மதம் மிகுத்தென்ன ஊக்கமோடு ஒன்றையும் மதியார், புரத் துவாரத்துப் புகுதலும், வெகுண்டு, பொங்கு அழல் போல்வது ஓர் பூதம், பரத்துவாசனையும், மாதுலன் கிருத-பன்மன் என்று இவரையும், முனைந்து, கரத்து வார் சிலையும், கணைகளும் முறித்து, கடவு திண் தேர்களும் கலக்கி, | 206 |
|
|
உரை
|
|
|
|
|
முன் புகு விசய முனி மகன்தன்னை முரண் நெடுந் தோள்களும், உரனும், என்புடன் நிணமும், தசைகளும், சிந்த, இணைக் கருஞ் சிறு குறுங் கரத்தால் வன் புகை எழுமாறு உள் உற மலைந்து, மற்றுளோர் கொற்றமும் அழித்து, பின் புகல் அறுமா துரந்தது; அப் பூதப் பெருமை யாம் பேசுறும் தகைத்தோ? | 207 |
|
|
உரை
|
|
|
|
|
மாதவன் விதியால், அகன் பெரும் பாடி மா நகர் காவல் கொண்டு உற்ற பூதமே பொருது துரத்தலின், மீண்டு போய், வட தரு நிழல் புகுந்து, பேதுற வெருவோடு இருந்தனர்; கரிய பெரிய அக் கங்குலில், துரோண சாதனன் மதலை, 'என் செய்தும்!' என்னத் தன் மனத்து எத்தனை நினைந்தான்.
| 208 |
|
|
உரை
|
|
|
|
|
அசுவத்தாமன் பற்பல சிந்தை செய்து, பின் சிவனைப் சித்து, அவனால் ஆயுதம் பெறுதலை
'எஞ்சின நிருபன் உயிரினை நிறுத்தி, "இவ் இரவு அகல்வதன் முன்னர் வெஞ் சினம் உறச் சென்று, உன் பகை முடித்து மீளுதும்!" எனப் பல படியும் வஞ்சினம் உரைத்து வந்தனம்; இன்னம் வன் குறள் பாரிடம்தன்னால், துஞ்சினம் எனினும் அமையும்!' என்று எண்ணி, துணிந்தனன், துயில் அறு கண்ணான். | 209 |
|
|
உரை
|
|
|
|
|
எண்ணிய கருமம் முடியினும், முடியாது ஒழியினும், ஈசனைத் தொழுதல் புண்ணியம் எனுமாறு உன்னி, ஆங்கு ஒரு தண் பொய்கையின் புனல் படிந்து ஏறி, பண் இயல் இசையின் படிவமாம் தெரிவை பங்கனைப் பங்கய மலர் கொண்டு, அண்ணிய கருத்தில் இருத்தி, அஞ்சு-எழுத்தால் ஆகமப்படி அடி பணிந்தான். | 210 |
|
|
உரை
|
|
|
|
|
அன்று அவன் மறையின் முறையினால் புரிந்த அருச்சனைதனை உவந்தருளி, நின்றனன், விழியும் இதயமும் களிப்ப நீறுடை ஏறுடைக் கடவுள். வல் திறல் முனிவன் மதலையும் விதலை மாறி, 'மாறு அடர்ப்பது ஓர் படை நல்கு!' என்றனன்; என்ற உரை முடிவதன்முன், ஏதி ஒன்று ஈசனும் ஈந்தான். | 211 |
|
|
உரை
|
|
|
|
|
அசுவத்தாமன் சிவன் அளித்த ஆயுதம் ஏந்தி, உடன் வந்த வீரரோடு பாசறை புக, பூதம் அஞ்சி ஓடுதல்
பாதி மெய் நீலம் ஆகிய பவளப் பருப்பதம் விருப்புடன் அளித்த ஏதி பெற்று, உவகையுடன் இமைப்பு அளவின், இருந்த அவ் வீரரும் தானும் வீதி கொள் பாடி வீடு உற, பூதம் மீள வந்து அடர்த்து, இவன் கரத்தில் ஆதி நல்கிய வெம் படையினால் அஞ்சி, ஆவி கொண்டு ஓடியதுஅன்றே. | 212 |
|
|
உரை
|
|
|
|
|
உடன் வந்த இருவரையும் வாயிலில் நிறுத்தி, அசுவத்தாமன் உட்புகுந்து, திட்டத்துய்மனது தலையைத் துணிக்க, பாஞ்சாலர் அவனை எதிர்த்தல்
பருவரல் அகற்றி, இருவர் வீரரையும் பாசறை வாயிலில் நிறுத்தி, மரு வரும் கமல மாலையான் கடப்ப மாலையான் என மனம் களித்து, பொரு வரு முனைக்குக் குரிசிலாய், எல்லாப் போரினும் புறமிடாது அடர்த்த துருபதன் மதலை வரி சிலைத் திட்டத் துய்மனை மணித் தலை துணித்தான். | 213 |
|
|
உரை
|
|
|
|
|
'கயில் புரி கழற் கால் தந்தையைச் செற்ற காளையைப் பாளையத்திடையே, துயில் புரி அமையத்து, இமைக்கு முன், சென்னி துணித்தனன் சுதன்' எனக் கலங்கி, வெயில் புரிவதன்முன் வல் இருளிடையே உணர்ந்தவர் வெருவுடன் அரற்ற, பயில் புரி சிலைக் கைச் சிகண்டியை முதலோர் பலரும் வந்தனர்கள், பாஞ்சாலர். | 214 |
|
|
உரை
|
|
|
|
|
எதிர்ந்த பலரைக் கொன்று, ஐவரைத் தேடும் அசுவத்தாமன், உறங்கும் அவர்களது புதல்வர் ஐவரையும் அடுத்தல்
உத்தமோசாவும், உதாமனும், முதலிட்டு உள்ளவர் யாவரும், பிறரும், தம்தம் ஓகையினால் வந்து எதிர் மலைந்தோர் தலைகளால் பல மலை ஆக்கி, மெத்த மோகரித்து, பாரதம் முடித்த வீரரைத் தேடி, மேல் வெகுளும் சித்தமோடு எங்கும் திரிந்துளான், அவர்தம் சிறுவர் ஐவரையும் முன் சேர்ந்தான். | 215 |
|
|
உரை
|
|
|
|
|
கனவுபோல் அசுவத்தாமனைக் கண்ட இளம் பாண்டவர், தமது படையை எடுப்பதற்குள், அவர்களைப் பாண்டவர் என மயங்கி, அவர்களது தலைகளை அசுவத்தாமன் கொய்தல
பூதலம் முழுதும் கவர்ந்த தந்தையர்கள் புறத்திடைப் போயதும், துயின்ற மாதுலன் முனிவன் மதலை கைப் படையால் மடிந்திடத் தடிந்ததும் உணரார், தாது அலர் அலங்கல் சமர வாள் முனியைத் தழலிடை வரு பெருந் தையல் காதல் அம் புதல்வர், கண் துயில் புரிவோர், கனவு கண்டனர் எனக் கண்டார். | 216 |
|
|
உரை
|
|
|
|
|
கண்டவர் தம்தம் படை எடுப்பதன் முன், 'காசினி முழுவதும் வென்று கொண்டவர் இவர்' என்று எண்ணியே, சுடரில் கொளுத்திய சுடர் அனையாரை, திண் தவர்தமக்குச் சிகாமணி அனையான் சினத்து உறக் கலங்கி, வண் தேறல் உண்டவர்தமைப்போல், மதத்தினால், வாளால், ஒரு நொடியினில் தலை துணித்தான். | 217 |
|
|
உரை
|
|
|
|
|
சோழன் அசுவத்தாமனை எதிர்த்து, சேனைகளுடன் மடிதல்
'துருபதன் மைந்தர் அனைவரும், பஞ்சத் திரௌபதேயரும் துயில் பொழுதில், புரவிஅம்தாமா நினைவு அறப் புகுந்து, பொன்றுவித்தனன்' எனப் புலம்ப, 'இரவிடை அமர் மற்று என்னைகொல்?' என்னா, இரவிதன் திருக்குலத்து இறைவன்,- பெருமையோடு எழுந்தான், பகைவன்மேல் - அவன் முன் பின்னிடப் பொருதிடும் பெரியோன். | 218 |
|
|
உரை
|
|
|
|
|
பொன்னி நல் நதியும் நேரி அம் பொருப்பும் புகார் எனும் நகரியும் படைத்த சென்னியும், அவன் தன் சேனையின் விதமும், சேனை மண்டலீகரும், சேர, முன்னிய சிலைக் கை முனிமகனுடன் போய், மோதிய ஏதியால் மடிந்தார்;- பின்னிய சடையோன் வழங்கிய படைமுன், பிழைத்தவர் யாவரே, பிழைத்தார்? | 219 |
|
|
உரை
|
|
|
|
|
அசுவத்தாமன் தனியாகப் பொருது, மேலும் பலரை அழித்தல்
புகல் அரும் பதினெண் பூமி முற்று உடைய பூபதிகளும், அவர் படைத்த இகல் அருந் தந்தி, தேர், பரி, காலாள், என்பன யாவையும், சேர, பகல் அருஞ் சமரில் பதின்மடங்கு ஆகப் பாதி நாள் இரவினில் படுத்தான், தகல் அருங் கேள்வித் தாமனே-தாமச் சடையவன் தனயன் ஆதலினால். | 220 |
|
|
உரை
|
|
|
|
|
அசுவத்தாமன் இளம் பாண்டவர் தலைகளுடன் விடிவதன்முன் துரியோதனனை அடைதல்
உள்ளியபடியே கடுஞ் சினம் கன்றி, உள்ளவர் யாரையும் முருக்கி, துள்ளிய விடைபோல் செருக்கி, அப் புரத்தின் துவாரம் நின்றவரையும் கூட்டி, தெள்ளிய குமரர் சென்னி ஐந்தினையும் தேவரும் திகைத்திடத் தூக்கி, வெள்ளிய குரு வந்து எழு முனே, குருவின் மிகு குல வேந்தை வந்து அடைந்தான். | 221 |
|
|
உரை
|
|
|
|
|
அசுவத்தாமன் தான் சென்று செய்தன கூறி, கொணர்ந்த தலைகளைத் துரியோதனன் முன் வைத்தல்
'வந்தனேன்- ஐய! மாதவன் ஏவலால் முந்து பூதம் முதுகிட, மா முடி சிந்த, யாரையும் செற்று, அகன் பாசறை ஐந்து வீரர்தம் ஆவியும் கொண்டுஅரோ. | 222 |
|
|
உரை
|
|
|
|
|
'சொன்ன சிங்கத் துவசனை ஆதியா மன்னர் ஐவரும் மாண்டனர்; மற்று அவர் சென்னி' என்று, சிறுவர்தம் சென்னியை முன்னர் வைத்தனனால், முனி மைந்தனே. | 223 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் அவற்றை நோக்கி, 'சிறுவர் முகம்' என்று கூறி, இரங்கி மொழிதல்
வைத்த சென்னியை நோக்கி, வயா உறு சித்தம் மன்னவன் தேறி, 'சிறார் முகம்; தம்தம் அன்புடைத் தந்தையர் வாள் முகம் ஒத்த ஆகும்; இஃது உண்மை' என்று ஓதினான். | 224 |
|
|
உரை
|
|
|
|
|
ஓதும் வேந்துக்கு ஒரு மொழியும் சொலான், வேத பண்டிதன் நிற்க, அவ் வீரனை, 'பாதகம் செய்கை பார்ப்பன மாக்களுக்கு ஏதம், ஏதம்; இது என் செய்தவாறுஅரோ!' | 225 |
|
|
உரை
|
|
|
|
|
'துன்னு பாரதம் தோன்றிய நாள் முதல், மன்னர் ஓட மலைந்தனை, வாளியால்; சொன்ன பாலர் மகுடம் துணித்தது இன்று என்ன வீரியம்! என் நினைந்து, என் செய்தாய்! | 226 |
|
|
உரை
|
|
|
|
|
'இரு குலத்தில், எமக்கும் அவர்க்கும் இங்கு ஒரு குலத்தினும் உண்டு என இல்லையால்; குருகுலத்தின் கொழுந்தினைக் கிள்ளினை- வரு குலத்து ஒரு மாசு அறு மைந்தனே! | 227 |
|
|
உரை
|
|
|
|
|
'ஆற்றின் நீர் விளையாடிய நாள்முதல், காற்றின் மைந்தனொடு எத்தனை கன்றினேன்! சாற்றின், என் வினைதான் என்னையே சுட, கூற்றின் வாய்ப் புகுந்தேற்கு என்ன கூற்று? ஐயா! | 228 |
|
|
உரை
|
|
|
|
|
'பணை நெடுங் கைப் பகட்டு வெஞ் சேனை சூழ் இணைதரும் சொல் கிளைஞர்கள் யாரையும், துணைவர் யாரையும், தோற்று நின்றேன்; எனக்கு இணையர் பார்மிசை யார் உளர். எண்ணிலே!' | 229 |
|
|
உரை
|
|
|
|
|
'தீவினை நீங்கத் தவம் செய்' என்று அசுவத்தாமனுக்கு விடை அளிக்க, அவனோடு கிருதனும் கிருபனும் போதல்
என்று பல் மொழி கூறி, இம் மைந்தரைக் கொன்று வந்த குமரனை, 'போர்தொறும் நின்ற தீவினை நீங்கிட, நீ தவம் ஒன்றி வாழ்க!' என்று, உயர் விடை நல்கினான். | 230 |
|
|
உரை
|
|
|
|
|
வெஞ் சராசன வீரனும், மாமனும், நெஞ்சம் மாழ்குற நின்றவர் போனபின், கஞ்ச நாள் மலர்க் கண் புனல் சோர்தரும் சஞ்சயாரியன்தன்னொடு கூறுவான்:
| 231 |
|
|
உரை
|
|
|
|
|
சஞ்சயனிடம் தந்தைக்குச் செய்தி சொல்லி, அவனை அனுப்பிவிட்டு, துரியோதனன் உயிர் நீத்தல்
'யாயொடு எந்தை இரக்கம் உறாவகை ஆய இன் சொலினால் துயர் ஆற்றிட, நீ எழுந்தருள்; நின் மொழி வல்லபம் தூய சிந்தைச் சுரர்களும் வல்லரோ? | 232 |
|
|
உரை
|
|
|
|
|
'யானும் எம்பியரும் இறந்தோம் எனும் மான பங்கம் மறந்து, தன் நெஞ்சினுக்கு ஆன தம்பி அளித்தவர்தம்மொடும், கோன் நிலம் புரக்கும்படி கூறுவாய்!' | 233 |
|
|
உரை
|
|
|
|
|
என்ன, அம் முனிதன் இணைத் தாள்மலர் சென்னிமீதும், விழியினும் சேர்த்திடா, உன்னில், ஆண்மைக்கு உவமை இல்லாதவன் பொன்னிலத்தின் உணர்வொடும் போயினான். | 234 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் பொன்னுலகம் புகுதல்
வயிரம் செறிதரு மனனும், வாய்மையும், வலியும், பொரு படை வினையின் மேல் வரு செயிரும் திகழ் குருகுல மகீபதி, திறல் வெஞ் செரு முனை அதனில், மேதகும் அயிர் நுண் குழல் அரமடநலார் பலர் அளி கொண்டு எதிர்கொள, அமரன் ஆனபின், உயிர் கொண்டது, சுரர் உறையும் வானுலகு; உடல் கொண்டது, தனதுடைய பூமியே! | 235 |
|
|
உரை
|
|
|
|
|
கிடந்த உடல் வானவர்தம் கிளை சொரிந்த பூ மழையால் கெழுமுற்று ஓங்க, நடந்த உயிர் புத்தேளிர் அரமகளிர் விழி மலரால் நலன் உற்று ஓங்க, அடர்ந்து அளிகள் மொகு மொகு எனும் ஆமோத வலம்புரித் தார் அண்ணல், யாரும் மிடைந்து மிடைந்து எதிர்கொள்ள, வீரர் உறை பேர் உலகம் மேவினானே. | 236 |
|
|
உரை
|
|
|
|
|
அசுவத்தாமன் முதலிய மூவரும் வியாதரை அடைந்து செய்தி சொல்ல, அவர், கிருபனையும் அசுவத்தாமனையும் தவம் இயற்றக்கூறி, கிருதவன்மாவுக்கு விடைகொடுத்தல்
கேள்வியுடை வரி சிலைக் கை முனி மகனும், மாதுலனும், கிருதன் என்னும் வாள் விறல் கூர் நரபதியும், குருபதிதன் வாய்மையினால் மாழ்கி ஏகி, வேள்வி அருங் கனல் மூன்றும் ஒரு வடிவாய்ப் பிறந்தனைய வியாதற்கு, ஐவர் தோள் வலியும், தம் செயலும், தொழா முடியோன் துஞ்சியதும், தொழுது சொன்னார். | 237 |
|
|
உரை
|
|
|
|
|
புரி தவத்திற்கு ஆன வனம் கிருபனுக்கும், துரோணமுனி புதல்வன் ஆன துரகததாமனுக்கும் அமைத்து, 'இவ்வுழி நீர் இருத்திர்' எனச் சொன்ன பின்னர், கிருதனுக்கு விடை கொடுத்தான்; இவரும் அவன் மொழிப்படியே, கிரி சூழ் கானில், தரு நிலத்தோர் அதிசயிப்ப, சிவபெருமான்- தனை நினைந்து, தவம் செய்தாரே. | 238 |
|
|
உரை
|
|
|
|
|
திருதராட்டிரனுக்கும் காந்தாரிக்கும் சஞ்சயன் செய்தி கூற, அவர்கள் இருவரும் சோகத்துள் ஆழ்தல்
நாடிய சொல் சுருதி நிகழ் நாவினான் சஞ்சயனும், நள்ளென் கங்குல் ஓடி ஒளித்திடு கதிரோன் உதிப்பதன்முன், விலோசனம் நீர் உகுப்ப எய்தி, ஆடிமுகத்து அரசினுக்கும், ஐ-இருபது அரசரையும் அளித்து, வாழ்ந்து, வாடிய மெய்ச் சவுபலைக்கும், உற்றது எல்லாம் வாய்மலர்ந்தான், வாய்மை வல்லான். | 239 |
|
|
உரை
|
|
|
|
|
சேனாவிந்துவை முதலாம் திரு மைந்தர் ஐவரும் வான் சென்ற நாள் தொட்டு, ஆனாமல், சொரி கண்ணீர் ஆறு பெருங் கடலாக அழுது சோர்வாள், பால் நாள் வந்து, அருள் முனிவன் பகரும் மொழி விடம் செவியில் பட்ட காலை, தூ நாகம் உரும் ஒலி கேட்டு அயர்வதுபோல், வீழ்ந்து அழுதாள், சுபலன் பாவை. | 240 |
|
|
உரை
|
|
|
|
|
'மருத்தின் மகன் எனும் சண்டமருத்து அனைய புய வலியோன் வன் கைத் தண்டால், உருத்து, அமரின் உடன்று, உம்பர் ஊர் புகுந்தான், வாள் அரவம் உயர்த்தோன்' என்று, வருத்தமுடன் உயங்கி, மிக மயங்கி, நில-மிசை வீழ்ந்து, வயிரம் ஆன கருத்தினுடன் அலமந்தான், அழுது பெரும் புனல் சொரிய, கண் இலாதான். | 241 |
|
|
உரை
|
|
|
|
|
சூரியன் தோற்றம் செய்ய, பாண்டவர் பாசறை சேர்ந்து, இரவில் நிகழ்ந்தன அறிதல்
இப்பால், மற்று இவர் இரங்க, எப் பாலும் இருள் ஒளிப்ப, இரவி பானுத் துப்பு ஆர் செங் கொடிகள் என உதயகிரி-மிசைப் படர்ந்து தோற்றம் செய்ய, தப்பாமல் நிலமடந்தைதன் பாரம் அகற்றுவித்த சார்ங்கபாணி அப் பால் அப் பாண்டவர்கள் ஐவரொடும் புரிந்த செயல் அறைதும் அம்மா: | 242 |
|
|
உரை
|
|
|
|
|
ஐந்து பெரும் பார்த்திவரோடு ஆரணியம் புகுந்த பிரான் அரிய கங்குல் சிந்து தினகரன் உதயம் சேரும் முனம், பாசறையில் சென்று நோக்க, இந்திரனே நிகர் நிருபர் முடித் தலைகள் வெவ்வேறாய் இடையே சிந்த, மைந்தர் உடற் குறை தழுவி, ஆகுலித்து, மெலிந்து, அரற்றும் மானைக் கண்டார். | 243 |
|
|
உரை
|
|
|
|
|
சீற்றமுற்று எழுந்த வீமனையும் விசயனையும் கண்ணன் தடுத்து, சமாதானம் செய்தல்
கண்டவுடன், மனம் மெலிவுற்று, 'இவ்வண்ணம் எவன்கொல்?' என, கரிய மேனிக் கொண்டல் உரைத்தனன், துரகதாமாவின் வினைகள் எலாம், கூற்றும் உட்க, அண்ட முகடு அதிர உருத்து, அருச்சுனனும், மாருதியும், 'அவன்தன் ஆவி உண்டு அலது தவிரோம்' என்று உரைத்து ஓட, மால் தடுத்தே, உரைக்கும்அன்றே. | 244 |
|
|
உரை
|
|
|
|
|
'பாரிடம் ஒன்றினை, 'புரத்தி பாசறையை' எனப் புகன்று, பரிவின் சென்றேம்; வீரருக்கு முனைத் தாமன் சுயோதனற்குச் சூள் உரைத்து மீண்டான், 'ஐவர் ஆர மணி முடி கொய்து, தரணி எலாம் உன் குடைக்கீழ் அமைப்பன் இன்றே; கார் இருக்கும் மலர் அளகக் காந்தாரி சுத! உள்ளம் களித்தி' என்றே. | 245 |
|
|
உரை
|
|
|
|
|
'திருகு சினத்தொடும் கடுகி, பாசறையில் புகுதலுமே, செங் கண் பூதம் பெருகு விழி நீர் சொரிய அடர்த்தலும், பின்னிட்டு, அரனைப் பெட்பின் போற்றி, முருகு இதழிச் சுடர் அருளும் படைக்கலம் பெற்று, இவ்வண்ணம் முடித்தான் அம்மா! குருகு கிரி எறிந்தோனை நிகர்த்தவன்தன் விறல் எவர்க்கும் கூறல் ஆமோ?'
| 246 |
|
|
உரை
|
|
|
|
|
என்று, பினும், 'அபாண்டவியம் எனும் படையும் துரந்தால், மற்று எவரே காப்பார்? அன்று, 'நுமது உயிர் ஐந்தும் அளிப்பன்' எனும் வாய்மையினால், அகன்றேன்; இன்னும் வென்றி உமதுழி அடைவின் சேர்ப்பவன், யான்; விடுமின்' என, மின் அனாளைத் துன்றி, 'விதியினை எவரே வெல்பவர்?' என்று எடுத்தருளி, சூழ்ச்சி வல்லான், | 247 |
|
|
உரை
|
|
|
|
|
பின், கண்ணன் திரௌபதியைத் தேற்றுதலும், அவன் உரைப்படி தருமன் இறந்தார்க்கு உரிய கடன்கள் செய்தலும்
'மைந்தர் உயிர்க்கு இரங்குவது என்? மலர்க் குழலாய்! உன் கொழுநர் வாழ்தற்கு யான் செய் தந்திரம் மற்று ஒரு கோடி; உரைக்கு அடங்கா' எனத் துயரம் தவிர்த்து, தன்மன் கொந்து அலரும் முகம் நோக்கி, 'கன்னன் முதல் யாவருக்கும் குலவும் ஈமத்து அந்தம் உறு கடன் கழித்தி' என, உலுகன் சொற்படி நின்று அளித்த பின்னர், | 248 |
|
|
உரை
|
|
|
|
|
பின், எல்லோரும் அத்தினாபுரி சேர்ந்து, திருதராட்டிரனை வணங்குதல்
அத்தினாபுரி அதனில் ஐவருடன் சென்று, அரியும், அந்தன் முன்னர்ப் பத்தியினால் இறைஞ்சிட, மற்று 'எவர்கொல்?' என, 'தருமன் முதல் பாலர்' என்ன, வித்தகனும், ஆசி சொற்று, 'சதாகதி சேயினைத் தழுவ வேண்டும்' என்ன, அத்தன் அத் தூண் அளித்தருள, தழுவி நெரித்தனன்; துகள்கள் ஆயது அம்மா! | 249 |
|
|
உரை
|
|
|
|
|
அத்தினாபுரியில் ஐவரையும், 'ஊழி வாழ்திர்' எனக் கண்ணன் இருத்தி, துவாரகைக்கு மீளுதல்
'இனி ஊழி வாழ்திர்!' என, இளைஞர் ஒரு நால்வருடன் அறத்தின் மைந்தன்- தனை இருத்தி, 'மீள்வல்' எனச் சாத்தகியும் அலாயுதனும் தன்னைச் சூழ, வினை அகற்றும் பசுந் துளவோன் துவரை நகர்த் திசை நோக்கி மீண்டான்; சீர்த்திக் கனை கடல் பார் அளித்து, அவரும் அந் நகரின் அறநெறியே கருதி வாழ்ந்தார். | 250 |
|
|
உரை
|
|
|
|