வந்தியாதவர் - வணங்காதவர், மண்ணின்உம் - இந்தநிலவுலகத்திலும், வானின்உம் -மேலுலகத்திலும், இல்லை-: (இப்படிப்பட்டசந்திரன்),- புந்தியால் உயர் -புத்தியினான்மேம்பட்ட, புதன்எனும் புதல்வனை - புதனென்னும் பேரையுடையபுத்திரனை, மகிழ்வால் தந்து - மகிழ்ச்சியோடு (தாரையினிடமாகப்) பெற்று, யாவர்உம்களிப்புஉற - (அந்தப் புதனுடைய நுண்ணறிவைக்கண்டு) எல்லாரும் மகிழ்ச்சியடைய, இருக்கும் நாள் தன்னில்-, -(எ-று.)- மநுவருண்மைந்தன்... ... இளையெனும் பெயர்மடவரலாயினனென்ப" என்று அடுத்த கவியோடு தொடர்ந்துமுடியும். வியாழனென்னுந் தேவகுருவின் பத்தினியான தாரையைச் சந்திரன் கண்டு காதல்கொண்டு அன்னாளோடுகூடிப் புதனென்ற புதல்வனைப் பெற்றானென்க. தந்தியாவரும் - குற்றியலிகரம்." உந்தியாரழகுடைய பேருரோகிணிவயிற்றிற், புந்தியாலுயர் புதனையப் புண்ணியன் பயந்தான்" என்று சிறுபான்மையாகக் காணப்படும் பாடம், புராணகதையோடு மாறுபடுதலாற் கொள்ளத்தக்கதன்று. மாலைச்சந்தியைத்தொழுவதைச் சந்திரனைத்தொழுவதாகக்கொண்டு கூறினார் போலும். (14) 7.- மநுவின் புதல்வன், சாபத்தால் இளையென்னும் பெண்ணாதல். வளைநெடுஞ்சிலைக்கரத்தினன் மநுவருண்மைந்தன் உளையெழும்பரித்தேரின னுறுவதொன்றுணரான் விளையருந்தவவிபினமுற் றம்பிகைவிதியால் இளையெனும்பெயர் மடவரலாயினனென்ப. |
(இ - ள்.) வளை நெடுஞ் சிலை கரத்தினன் - வளைந்துள்ள நீண்டவில்லைக்கையிலேந்தியவனான, மநு - மனுவென்றஅரசன், அருள் - பெற்ற, மைந்தன் -புதல்வனான இளனென்பவன், உளை எழும் பரி தேரினன் - பிடரிமயிர்ஓங்கிவளரப்பெற்ற குதிரையைப்பூட்டிய தேரின்மீது ஏறிச்செல்பவனாய், உறுவது-(அங்குச் சென்றால் தனக்கு) நேரிடக் கூடிய தீங்கை, ஒன்று - சிறிதும், உணரான் -அறியாதவனாகி,- விளை அரு தவம் விபினம் உற்று - முதிர்ந்த அருமையானதவத்திற்குரிய காட்டையடைந்து, அம்பிகை விதியால் - உமாதேவி கட்டளையிட்டிருந்ததனால், இளை எனும் பெயர் மடவரல் - இளையென்று பெயர்கொண்ட ஒருபெண்ணாக, ஆயினன்-, என்ப - என்று கூறுவார்; (எ - று.) மநுபுத்திரனான இளனென்பான் ஒருகால் தேரின்மீது ஏறிக்கொண்டு காடுசென்றவன், 'இங்குவருபவர் பெண்ணாய்விடுக' என்று பார்வதிதேவி ஏற்படுத்தியிருந்த ஓரிடத்து அதனை யறியாமையாற் சென்றுசார, அந்தப் பார்வதிதேவியின் ஏற்பாட்டின்படியே பெண்ணுருவம் அந்த இளனைச் சேர, அவன்இளையென்று யாவரும் பேரிட்டழைக்கும் பெண்ணாயினனென்பதாம். அம்பிகை=அம்பிகா.மடவரல் - மடமைக்குணம் வருதலையுடையவள். இளையை வைவஸ்வதமநுவின் மகவாக மகாபாரதத்திற் கூறியிருக்கின்றது. (பாலபாரதத்திலோ கர்த்தமரிஷியின் மகவாகக் கூறியுள்ளது.) (15) |