பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்101

     (இ-ள்.)மரு வரு கற்பகம் மாலைமௌலிஉம் - வாசனைமிகுந்த
கற்பகமரங்களின் மலர்களாலாகிய மாலையைச்சூடியமுடியையுடைய
இந்திரனும், விரி புகழ் மைந்தன்உம் - பரவிய கீர்த்தியையுடைய அவன்
மகனானஅருச்சுனனும்,-ஒருபெரு மாதலி ஊரும் தேரின்மேல் - ஒப்பற்ற
பெரிய மாதலியென்பவன் செலுத்துகின்ற ஒரு தேரின்மேல், இரு மரகதம்
கிரி இருந்த என்ன - மரகதரத்தினமயமான இரண்டுமலைகள்ஒருங்கு
ஏறியிருந்தனபோல, விளங்கினார்- பிரகாசித்தார்கள்;(எ-று.)

     கருநிறமும் பருமையும்பற்றிவந்த தன்மைத்தற்குறிப்பேற்றவணி. மாதலி -
இந்திரன்சாரதி.  மருவுஅரு - தேவலோகத்தார்க்கு அன்றிப் பிறர்க்குக்
கிடைத்தற்கு அரிய என்றுமாம்.  கற்பகம் - கல்பகம்: தன்னிடம்
வந்தவர்கட்கு நினைத்தவற்றையெல்லாம்கல்பிப்பதென்றுபொருள்.  மாலை
மௌலி - வேற்றுமைத்தொகை யன்மொழி.  இருந்ததென்னவே என்றும்
பாடம்.  அரோ-ஈற்றசை.

135.-இதுமுதல்மூன்று கவிகள்-இந்திரலோக வருணனை.

ஆயிரம்பொலங்கிரி யழித்துவானின்மேல்
மாயிருமொருபுரம் வகுத்ததென்னவே
பாயிரமறைபுகழ் பரமன்றேசெனச்
சேயிரும்பொன்னகர் திகழ்ந்துதோன்றுமால்.

     (இ-ள்.)சேய் இரு பொன் நகர் - நெடுந்தூரத்திலுள்ள பெரிய
பொன்மயமான அமராவதிநகரம்,- ஆயிரம் பொலம் கிரி அழித்து-ஆயிரம்
பொன்மலைகளைஅழித்து (அவற்றால்),வானின்மேல் மா இரு ஒரு புரம்
வகுத்தது என்ன-ஆகாயத்தில் மிகவும் பெரியதொரு பட்டணத்தை
நிருமித்ததுபோலவும், பாயிரம் மறை புகழ் பரமன் தேசுஎன -
ஸ்தோத்திரரூபமான வேதங்கள் புகழ்கின்ற எம்பெருமானது தேஜோரூபமான
பரமபதம் போலவும், திகழ்ந்து தோன்றும்-விளங்கிக் காணப்படும்;(எ-று.)

     பாயிரமென்பதுபுகழ்ச்சியென்னும் பொருளதாதலை"பாயிரங்கூறிப்
படைதொக்காலென் செய்ப" 
என்னுமிடத்திலுங்காண்க.  இனி, பாயிரம்-
முகவுரை எனக்கொண்டால், முதலிலுள்ளதாகிய பிரணவத்தோடு கூடிய மறை
யென்க.  பாயிரம்=பாஹ்யம்.  பாயிரம் மறை-வரலாற்று முறைமையையுடைய
வேதமுமாம்.  ஸ்ரீவைகுண்டத்தின் திருநாமங்களுள் ஒன்றாகியதன்னுடைச்
சோதி யென்பதன் பொருளையுட்கொண்டு, 'பரமன்தேசு' என்றார்.
பரமபதம் மிக்க ஒளியுடைய தாதலை" மதியாதவன்கதிர்மின்மினிபோ
லொளிர் வைகுந்தம்" என்றதனாலுங்காண்க.  மாயிரு - ஒரு
பொருட்பன்மொழி.  பரமதேசென எனவும் பாடம்.              (135)

136.விண்ணவர்முனிவருள் விளங்கிவாழ்தலால்
நண்ணியமுடிப்பெயர்நாகம்பூணலால்
எண்ணருமகபதியிருந்தமாநகர்
புண்ணியன்வடிவெனப்பொலிந்திலங்குமால்.