(இ-ள்.)கதிர் உதித்த அ காலையில்- சூரியன் உதயமான அந்தக்காலத்தில், புதல்வன் உற்றது உணரான் புரந்தரன் - (தன்) புத்திரனாகியஅருச்சுனன் (பேடித்தன்மையை) அடைந்ததை அறியாதவனாகிய இந்திரன், மா மறை முதல்வர் - சிறந்த வேதங்களுக்குத் தலைவர்களாகியமுனிவர்களும், முப்பத்துமூவர்உம்-முப்பத்து மூன்று தேவர்களும், சூழ்வர - (தன்னைச்)சுற்றிலும்வரும்படி, விதம் மணி பணி மண்டபம் - பலவகைப்பட்ட இரத்தினங்களைப்பதித்துச்செய்த சித்திரவேலையையுடைய(சுதர்மையென்னுந்) தேவசபாமண்டபத்தை, மேவினான்- அடைந்தான்;(எ - று.) முப்பத்துமூவராவார் - ஆதித்தர்பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும்,வசுக்கள்எண்மரும், அசுவினீதேவர் இருவருமாம். முதல்வர் முப்பத்துமூவர்எனின், - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. முப்பத்துமூவர் - உம்மைத்தொகை:தொகைக் குறிப்பு. இதுமுதற்பத்துக்கவிகள் - இச்சருக்கத்தின் நான்காங்கவி போன்ற கலிவருத்தங்கள். (167) 168.-அருச்சுனனையழைத்துவருமாறு இந்திரன் ஒரு கந்தருவனையேவுதல். கண்பரப்பியொர் கந்தருவன்றனை விண்புரக்குமவ் வேந்தனிருந்தபின் மண்புரக்கும் வரிசிலைவீரனை எண்பெறக்கொணர் வாயெனவேவினான். |
(இ-ள்.) விண்புரக்கும் அ வேந்தன் - சுவர்க்கலோகத்தையாளுகின்ற அந்த இந்திரன், இருந்த பின் - (தனக்குரிய சிங்காதனத்தில்) வீற்றிருந்தவுடனே, ஒர் கந்தருவன்தனை- கந்தருவனொருவனைகண் பரப்பி - கண்ணைப்பரக்கவிழித்துக்குறிப்பாய் நோக்கி, மண் புரக்கும் வரி சிலைவீரனைஎண் பெற கொணர்வாய் என - நிலவுலகமுழுவதையும் காத்தற்குரிய கட்டமைந்த வில்லின் தொழிலில்வல்ல வீரனாகிய அருச்சுனனைக்கௌரவமாக அழைத்து வருவாயாகவென்று, ஏவினான்- கட்டளையிட்டான்; "கண்ணிற்சொலிச்செவியினோக்குமிறைமாட்சி"என்ப ஆதலால், 'கண்பரப்பியேவினான்'எனப்பட்டது. வேந்தன்-தேவேந்திரன் என்பதன் முதற்குறைபோலும்:வேந்தனென்பது இந்திரனென்னும் பொருளில் வருதலை 'வேந்தன்மேயதீம்புனலுலகம்"எனத் தொல்காப்பியத்திலும், "வேந்தனும் வேந்துகெடும்"என்ற திருக்குறளிலும் காண்க. (168) 169.-சென்றகந்தருவன் அருச்சுனனிடங்குறுகி அவனுக்கு உற்றனஉணர்ந்து இந்திரனிடம் தெரிவித்தல். மற்றவன்றிருத் தாண்மலர் போற்றியக் கொற்றவன்றிரு முன்னர்க் குறுகியாங்கு உற்றயாவு முணர்ந்தனன் மீண்டுபோய்ச் சொற்றனன்சுரர் கோமுன் றொழுதரோ. |
|