பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்149

சுவர்ணமயமானகிரீடத்தையும் பெற்ற நீ, எங்கள் நெஞ்சில் குறை எலாம்
தீர்த்தி - எங்கள் மனத்திலுள்ள குறைமுழுவதையுந் தீர்ப்பாய், என்றார்-
என்று சொன்னார்கள்:(யாவரெனின்), போதில் வாழ் அயன்உம் ஒவ்வா -
(திருமாலினது நாபித்தாமரை) மலரில் வாழ்கின்ற பிரமனும் ஒப்பாகாத, வாய்
மொழி - வாயிலிருந்து வருஞ் சொற்களையுடைய,புலவர் எல்லாம் -
தேவர்கள் யாவரும்;

     இது, தங்கள்மனக்குறையைத் தீர்க்குமாறு தேவர்கள் அருச்சுனனை
வேண்டியது.  பெற்றாய்- வினையாலணையும்பெயர். குறை - அசுரர்களை
வெல்ல வேண்டுதல்.  அயன் - அஜன்;இதற்கு - திருமாலினிடத்துத்
தோன்றியவனென்று பொருள். 'மொழி'என்றவிடத்து 'வாய்'என
வேண்டாது கூறினார்,அருள்கொண்டு கூறினாலும்வெகுண்டுகூறினாலும்
அவ்வப்பயன்களைப்பயந்தேவிடுகின்ற சாபாநுக்கிரக சக்தியுடையதெனத்
தாம் வேண்டியதன் சிறப்பை முடித்தற்கு. இப்படிப்பட்ட நிறைமொழிகளின்
சிறப்பைக் கருதியே, 'அயனுமொவ்வா'என்னும் அடைமொழி கொடுத்தது.

29.-இதுவும்,மேற்கவியும் - குளகம்.  விசும்புவழியாத்
தேர்மீது சென்றஅருச்சுனன் கடற்கரை சார்தலும்
மாதலியை நோக்கிச்சில கூறலுறுதல்.

வீரனுமுவகைதூண்ட விண்ணவர்மலர்த்தாள்போற்றிச்
சாரதிதடந்தேர்தூண்டத் தபனனில்விசும்பிற்சென்றான்
கார்நிறக்குன்றமொன்றைக் கனகவான்குன்றொன்றேந்திச்
சீருறப்பறந்துவானில் திசையுறச்செல்வதொத்தே.

     (இ-ள்.)வீரன்உம் - அருச்சுனனும்,-உவகைதூண்ட - மகிழ்ச்சிமிக,
விண்ணவர் மலர் தாள் போற்றி - அந்தத் தேவர்களது தாமரைமலர்போலும்
பாதங்களைவணங்கி,-சாரதி தட தேர் தூண்ட - மாதலி பெரிய தேரைச்
செலுத்தாநிற்க, (அத்தேரின்மீது), தபனனில் - சூரியன்போல, விசும்பில் -
ஆகாயமார்க்கத்தில், சென்றான்- போனான்;(அந்தத் தேரானது), கனகம்
வான் குன்று ஒன்று - பொன்மயமான பெரிய மலையொன்று,கார் நிறம்
குன்றம் ஒன்றை - கருமைநிறமுடையதொரு மலையை,ஏந்தி-
எடுத்துக்கொண்டு, சீர் உற - அழகுமிகு,  வானில் - ஆகாயத்திலே, திசை
உற- (மேற்குத்) திக்கை நோக்க, பறந்து செல்வது - விரைந்து போவதனை,
ஒத்து - போன்று,-(எ-று.)-'போய்க்குறுகலும்'என மேற்கவியோடு முடியும்.

     அருச்சுனனுக்குச்சூரியனுவமை - ஒளிக்கும் மிகவிரைந்து செல்லுந்
தேரிலேறி வானத்தில் மேற்குத் திசையை நோக்கிச் செல்லுதற்கு மென்க.
பின்னிரண்டடி - இல்பொருளுவமை.  கார் நிறக்குன்றத்துக்கு -
அருச்சுனனும், கனகவான்குன்றுக்கு-பொன்மயமான தேரும் உபமேயமாம்.
கனகவான் குன்று - மேருமலையென்னலாம். விண்ணவர் -
விண்ணிலுள்ளவர்;விண் - வானம்.  எல்லாமலர்களுள்ளுந் தாமரை
சிறத்தல்பற்றி, மலர் எனப்