பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்185

மனத்தில்கொள்ள-மனத்திலே (செயற்பாலதென்று) கொண்டு,-தேன் உடை
தெரியல் வீரன் - தேனினையுடையமாலையையுடையஅருச்சுனன்,-
தேரினை-ரதத்தை,திரிய ஓட்டி-திரும்பச் செலுத்தி, கானிடை கடவுள்
வேடன் தரும் கணைகரத்தில் கொண்டு (கைலாசகிரியைச் சார்ந்த)
தவவனத்திலே சிவபிரானாகியவேடன் தனக்குத் தந்தருளிய
பாசுபதாஸ்திரத்தைக் கையிலே எடுத்து, தான் உடை தனுவில் பூட்டி - தான்
உடைத்தாயிருக்கின்ற வில்லிலே தொடுத்து, அனு பட சமைந்தது -
பிற்பட்டுப் போர்செய்யச் சித்தனாயிருந்ததை,ஓரார்-(அசுரர்கள்)
அறியாதவர்களாய்,-(எ-று.)-'ஆவலங்கொட்டியார்த்தார்'என அடுத்த
கவியோடு இயையும்.

     அருச்சுனனுக்குப்பாசுபதந் தருங் காலத்துப் பரமசிவன் வேட வடிவம்
பூண்டு வந்ததனால்,'கடவுள்வேடன்'என்றார். அனுப்படச்சமைதலாவது
-"ஊக்கமுடையானொடுக்கம்பொருதகர், தாக்கற்குப் பேருந் தகைத்து"
என்றவாறு போர்செய்கின்ற ஆட்டுக்கடா தன்பகைகெடப் பாய்தற்பொருட்டு
பின்னே கால்வாங்குந் தன்மைபோல வலிமிகுதியுடைய அரசன் தன்
பகைவர் மேற் செல்லும்பொருட்டுக் காலம்பார்த்துப் பின்னடைந்திருத்தல்.
அனுப்படுதல் - பின்படுதல்;அனு - பின்னென்னும் பொருள் தருவதோர்
வடமொழி யிடைச்சொல்.  அனுப்பட என்பதற்கு - பின்புறமாகக் கணை
வெளிப்பட என்று பொருள் கூறுதலும் உண்டு: இவன் பின்புறமாக
வாளிதொடுத்ததை 17 - ஆம்போர்ச்சருக்கத்து 225- ஆங் கவியிலுமறிக.
ஓரார் என்றதனால்,தம்முன் நிற்கமாட்டாமல், அருச்சுனன் தோற்றுப்
புறங்கொடுப்பதாகக் கருதினார்அவுணர் என்க. மனத்திற் கொள்ளுதல் -
அங்கீகரித்தல்.                                          (270)

95.-அருச்சுனன்புறங்கொடுத்ததாகக் கருதியதனால்
அவுணர் ஆவலங்கொட்டியார்த்தல்.

தானவர்சமுகத்தோடு சமர்புரிந்தாற்றாதஞ்சி
மானவன்முதுகுதந்தா னென்றுவாளசுரரெல்லாம் [ங்கி
வேனில்வேளனையான்றன்மேல்வெகுண்டுவெங்கடலிற்பொ
ஆனதங்கைவாய்சேர்த்தி யாவலங்கொட்டியார்த்தார்.

     (இ-ள்.)'மானவன்- மனிதன்'தானவர் சமுகத்தோடு - அசுரர்
கூட்டத்துடனே, சமர் புரிந்து - போர்செய்து, ஆற்றாது-முன்
நிற்கமாட்டாமல், அஞ்சி - பயந்து, முதுகு தந்தான் - புறங்கொடுத்தான்,'
என்று - என்று எண்ணிக்கொண்டும் சொல்லிக் கொண்டும், வாள் அசுரர்
எல்லாம் - ஆயுதங்களையுடையஅசுரர்கள் யாவரும்,-வேனில்வேள்
அனையான்தன்மேல்- வசந்தகாலத்துக்குரிய மன்மதனையொத்துஅழகிய
அருச்சுனன்மேலே, வெகுண்டு - கோபித்து, வெம் கடலின் பொங்கி -
கொடிய (பிரளயகாலத்துக்) கடல்போலச் சீறியெழுந்து, ஆன தம் கை வாய்
சேர்த்தி - பொருந்திய தத்தமது கையைத் தத்தம்  வாயினிடத்துச் சேர்த்து,
ஆவலம் கொட்டி ஆர்த்தார் - இகழ்ச்சியொலியை யுண்டாக்கி
ஆரவாரித்தார்கள்;(எ-று.)