தவஞ்செய்து மயனென்பவனாற் சுவர்க்க மத்திய பாதாளமென்னும் மூன்றிடத்திலும் முறையே பசும்பொன் வெண்பொன் கரும்பொன்களால் அரண் வகுக்கப்பட்டு ஆகாயமார்க்கத்திற் சஞ்சரிக்குந் தன்மையையுடைய மூன்றுபட்டணங்களைப் பெற்று மற்றும் பல அசுரர்களோடும் அந்நகரங்களுடனே தாம் நினைத்தவிடங்களிற் பறந்து சென்று பலவிடங்களையும் பாழாக்கிவருகையில், அத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாத தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால், சிவபெருமான் பூமியைத் தேராகவும், சந்திர சூரியர்களைத் தேர்ச்சக்கரங்களாகவும், நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும், மகாமேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், விஷ்ணுவை வாயுவாகிய சிறகமைந்து அக்கினியை முனையாகவுடைய அம்பாகவும், மற்றைத் தேவர்ளைப் பிற போர்க்கருவிகளாகவும் அமைத்துக்கொண்டு, யுத்தசன்னத்தராகிச் சென்று போர்செய்ய யத்தனிக்கையில், தேவர்கள் தத்தமது வல்லமையைநினைத்து அகங்கரித்ததனை உணர்ந்து சினந்து அவர்களுதவியைச் சிறிதும் ஏற்றுக்கொள்ளாமல், தாமே புன்சிரிப்புச்செய்து அசுரரனைவரையும் பட்டணங்களோடு எரித்தருளினரென்பது. (35) 36.-இதுவும், மேற்கவியும் - குளகம்: ஸ்ரீகைலாசகிரியில் தவம்புரியும் அருச்சுனனது தவச்சிறப்பைத் தெரிவிக்கும். உருகியவெள்ளிபோல வுயர்முழைதோறும்வீழும் அருவிநீர்புனிதன்வேணி யமருமாநதியிற்றோன்ற உருகியபனிவான்குன்றி லொண்பனிக்கடவுள்வந்து மருவியதென்னத்தோன்றும்வருணமால்வரையின்றென்பால். |
(இ-ள்.) உருகிய வெள்ளி போல-உருகிய வெள்ளியானது போல, உயர் முழை தோறுஉம் வீழும்-உயர்ந்த மலைக்குகைகளிலெல்லாம் விழுகின்ற, அருவிநீர்-மலைநீர் வெள்ளம், புனிதன் வேணி அமரும் மா நதியின் தோன்ற-பரிசுத்தனாகிய பரமசிவனது சடையிற் பொருந்திய சிறந்த கங்காநதிபோல (வெண்ணிறமுடையதாய்)க் காணப்பட, உருகிய பனி வான் குன்றில்-நீராய்க் கரைகின்ற பனிக்கட்டிகளையுடைய பெரிய (அல்லது சிறந்த) இமயமலையிலுள்ள, ஒள் பனி கடவுள்-பிரகாசமான பனிக்கு உரிய தெய்வம், வந்து மருவியது என்ன-(இங்கே) வந்து பொருந்திற்றென்று சொல்லும்படி, தோன்றும்-காணப்படுகின்ற, வருணம்-வெண்ணிறத்தையுடைய, மால்-பெரிய, வரையின்-ஸ்ரீகைலாசகிரியின், தென்பால்-தெற்குப் பக்கத்திலே-, (எ-று.)- மேற்கவியில் 'பூசினான்சேர்ந்தான்'என்று முடியும். ஆகாச கங்காநதி பகீரதசக்கரவர்த்தியின் வேண்டுகோளாற் பூலோகத்துக்கு வரும்பொழுது சிவபெருமான் ஏற்றுக்கொண்டார்: இதற்கு வேறுகதை கூறுவாருமுளர். பனிக்கடவுள் வந்து மருவியதென்னத் தோன்றும் வருணமால்வரையென்ற இடத்துத் தற்குறிப்பேற்றவணி காண்க: வெள்ளிமலை யாதலால், இவ்வாறு |