தாரம் - தாரா:என்னும் வடசொற்றிரிபு. அலாது - எதிர் மறைக்குறிப்பு வினையாலணையும்பெயர்;ஆ - சாரியை. நினையாய். எதிர்மறை முற்றெச்சமாய், நினைக்காமலென்றுமாம். (485) 10.-அப்போதுமறையவரிடுக்கண் தீர்த்து மீண்டுவரும் வீமன் நிகழ்வதுகாணுதல். என்றிவாறுரைத்துச்சரத்தின்மாமாரி யிருவரும்விரைவுடனேவக், கன்றிவாளரக்கன்கனமெனவதிர்ந்து கண்சிவந்துருத் தெழுமெல்லை, ஒன்றிவாழ்மறையோரருந்துயரொழித்தாங் கொருநொடிப்போழ்தி னின்மீளும், வென்றிவாள்வீமனுற்றதும்நிருதன் வெகுள்வதும்விசும் பிடைக்கண்டான். |
(இ-ள்.) என்றுஇ ஆறு உரைத்து-என்று இந்தப்படி சொல்லி, இருவர்உம்-(நகுல சகதேவர்) இரண்டுபேரும், சரத்தின் மா மாரி-மிக்க பாண வருஷத்தை, விரைவுடன் ஏவ-துரிதமாகப் பிரயோகிக்க,-வாள் அரக்கன் - வாள்போலுங் கொடிய அச்சடாசுரன், கன்றி-மனம்வெதும்பி, கனம் என அதிர்ந்து-மேகம்போலக் கர்ச்சித்து, கண் சிவந்து உருத்து - கண்கள் சிவந்து கோபித்து, எழும் எல்லை- (போருக்கு மேல்) எழுகிறவளவில்,- ஒன்றி வாழ் மறையோர் அரு துயர் ஒழித்து - (அவ்வனத்திற்) பொருந்தி வாழ்கிற முனிவர்களது (கொடுவிலங்குகளாலாகிய ஒழித்தற்கு) அரிய துன்பத்தை ஒழியச்செய்து, ஆங்கு ஒரு நொடிபோழ்தினில்மீளும்- அவ்விடத்தினின்று ஒருமாத்திரைப் பொழுதினுள்ளே மீண்டும் வருகிற, வென்றி வாள் வீமன்-வெற்றியைத் தருகிற ஆயுதத்தையேந்திய வீமசேனன்,- உற்றதுஉம்-நேர்ந்த செய்தியையும், விசும்பிடை நிருதன் வெகுள்வதுஉம் - ஆகாயத்திலே அரக்கன் கோபிப்பதையும், கண்டான் - பார்த்தான்; (எ -று.) (486) 11.-வீமன் சினந்துசடாசுரன்மேல் நெருங்கிச் செல்லுதல். கண்டனனிரண்டுகண்களுங்கருத்துங் கனன்றுசெந்தீச்சுடர் காலக், கொண்டவெஞ்சினத்தீக்கதுவியெண்டிசையுங் குலைகுலைந் துடன்வெரூஉக்கொள்ள, அண்டமுங்குலுங்கநகைத்தெதிர்ந்துரப்பி யார்த்தனனழன்றுதோள்கொட்டி, மண்டிமேனடந்தானுகாந்தகாலத்துமருத்தெனமருத்தின் மாமைந்தன். |
(இ-ள்.)மருத்தின் மா மைந்தன் - வாயுவினது சிறந்தகுமாரனான வீமன்,-கண்டனன் - (அவற்றைப்) பார்த்து, இரண்டு கண்கள்உம் கருத்தும்உம் கனன்று செம் தீ சுடர் கால - (தனது) கண்களிரண்டும் மனமும் எரிந்து சிவந்த அக்கினிச்சுவாலையையுமிழும்படி, கொண்ட வெம் சினம் தீ கதுவி - (தான்) கொண்ட கொடிய கோபாக்கினி மூண்டு, எண் திசைஉம் குலைகுலைந்துஉடன்வெரூஉ கொள்ள-எட்டுத் திக்குக்களிலுமுள்ள பிராணிகளெல்லாம் நடு நடுங்கி ஒருங்கு அச்சத்தையடையவும், அண்டம்உம் குலுங்க-அண்ட கோளங்களும் அதிரவும், நகைத்து-பெருஞ்சிரிப்புச்சிரித்து, எதிர்ந்து - (அவ்வரக்கனுக்கு) எதிர்சென்று, உரப்பி - அதட்டி, |