யுடையமுருகக்கடவுளோ? திறல் நரவாகனன் அளகாபுரி வருவோன் எவன்ஓ - பராக்கிரமத்தையுடைய குபேரனது அளகாபட்டணத்தில் வருபவனானநீ (இவர்களுள்) யாவனோ? உனது உயிர் சிந்தும் முன் நீ யார் உரை-உன்னுடைய பிராணன் (எம்மால் உடம்பினின்று நீக்கப்பட்டுச்) சிதறுதற்குமுன்னமே 'நீயார்?'என்ற வினாவிற்குவிடையைக் கூறுவாய்,' என்றான்- என்று (வீமனைநோக்கிச்சாலேந்திரன்) கூறினான்;(எ-று.) திரிமூர்த்திகளும், அவர்களுள் ஒருமூர்த்தியின்மகனான குமாரக்கடவுளும் என்னும் இவர்கள்மாத்திரமே இந்நகரத்தில் வருதற்கு ஏற்றவரென்பது இச்செய்யுளின் முதல்மூன்றடிகளின்கருத்து, உனது உயிர் சிந்துமுன் என்றது, இவன் தன்னால்விரைவிற் போரிலழிவானென்ற உறுதியைவிளக்கும்பொருட்டு. குபேரனது பட்டணத்துக்கு வரத்தக்கவர்களுள் சிவனைமுதல்வனாகஇச்செய்யுளிற் கூறியது, அவன் குபேரனுக்கு உயிர்நண்ப னாதலாலும்,மிக்கசமீபத்தில் வசிப்பவனாதலாலு மென்னலாம். ஆழி-பாற்கடலென்றாவதுபிரளய ஜல மென்றாவதுகொள்க. சுப்பிரமணியமூர்த்தி சூரபதுமனைப்பொருது அழித்தற்குச் செல்லும் வழியிடையே கிரௌஞ்சனென்னும் அசுரன் பெரிய மலைவடிவங்கொண்டு தம்மை நலிவதாக எதிர்வந்து நிற்க, அதன்மேல் அப்பெருமான் தமது வேலையேவி அதனைத்துளைத்துஅழித்திட்டனரென்பது கதை. நரவாகனன்-நரனைவாகனமாகவுடையவன்;நரன் - குபேரனது வாகனத்தின் பெயர். வருவோன்நீ - வழுவமைதி. (528) 27.-வீமன்தன் வலிமைத்திறந் தோன்றத் தெரிவித்தல். என்னாவவனுரையாடலுமிவனின்புறநகையா முன்னாளொருமலர்க்காரணமுனைவோருயிரெல்லாம் பொன்னாடர்தமுலகிற்புகப்பொருதோனிகலடுபோர் மன்னாகவமதியாவிறல்வயமாருதியென்றான். |
(இ-ள்.) என்னா- என்று, அவன் - அச்சாலேந்திரன், உரை ஆடலும் - சொன்னவளவிலே,-இவன்- இவ்வீமன், இன்பு உற நகையா - மகிழ்ச்சி மிகச் சிரித்து, 'முன்நாள-முன்னொருகாலத்தில்,ஒரு மலர் காரணம் - ஒருபூவின்நிமித்தமாக, முனைவோர்உயிர் எல்லாம் - எதிர்த்துப் போர் செய்தவர்களது உயிரையெல்லாம், பொன் நாடர் தம் உலகில் புக - பொன்மயமான மேலுலகத்தில் வாழ்கிற தேவர்களது வீரசுவர்க்கத்திலே செல்லும்படி, பொருதோன் - போர் செய்து அழித்தவனும், இகல் அடு போர்மன்-வலிமையாற் கொல்லுகின்ற யுத்தத்தில் வல்ல அரசனும், ஆகவம் மதியா விறல் வய மாருதி - (பகைவரது) போரை ஒருபொருளாகக்கருதாத வலிமையையும் வெற்றியையு முடைய வாயுகுமாரனு மான வீமன் (யான்),' என்றான்- என்று (சாலேந்திரனைநோக்கி வீமன்) கூறினான்;(எ-று.) பகைவன் தன்னையிகழ்ந்தமைகாரணமாகவும்,தனக்குப் பகைவனிடத்திலுள்ள இகழ்ச்சிகாரணமாகவும் நகைப்பு வீமனுக்குவிளைந் |