பக்கம் எண் :

48பாரதம்ஆரணிய பருவம்

தேவாமிருதத்தை, பருகுவார்-குடிப்பார்: உகிரால் - (தம்முடைய)
நகங்களினால், மெல் மலர் கொய்து-மெல்லிய மலரைப்பறித்து,மேல்
எறிவார்-ஒருவர்மீது ஒருவர் வீசுவார்: எண் உடை-(அருச்சுனனுடைய
தவத்தைக் கெடுக்கவேணுமென்ற) எண்ணங்கொண்ட, மடவார்-அம்மகளிர்,
இ ஆறு புரிந்தன-இவ்வாறு செய்தனவாகிய, இங்கிதம்-காமக்குறிப்பையுடைய
சேஷ்டைகள், எத்தனை கோடி - எத்தனை கோடிகள்! [மிகப்பலவாகும்]!!
(எ-று.)

     மடம் என்பதைப் பெண்ணுக்கு அடைமொழியாக்கலாம். எண் உடை-
நல்லெண்ணம் உடைந்த [தவிர்ந்த]எனினுமாம்.                      (63)

64.-மன்மதன்அருச்சுனன்மீது பலமுறை அம்பெய்து
இளைத்தல்.

காவும்வண்புறவுங்கயங்களுமரும்பக் கவர்ந்தவெங்கணைகளா
                                         மைந்து,
பூவும்வந்துள்ளமுறவுறப்பட்டுப்புதையவும் புலன்வழியின்றி,
மேவுதன்கருத்தின் வழியிலேநின்றவிசயனையங்கிபால்வில்லும்,
ஏவுமுன்பெற்றவிறைவனையெய்தெய்திளைத்தனனிரதிகேள்
                                          வனுமே.

     (இ-ள்.)காஉம்-சோலைகளும், வண் புறவுஉம்-வளப்பமுள்ள
காடுகளும், கயங்களும்-நீர்நிலைகளும், அரும்ப-(அசோகுமுல்லை மா
தாமரை குவளை என்ற இவைகளைத்)தோற்றுவிக்க,-கவர்ந்த-
(அவற்றினின்றும்மன்மதன்)பறித்தெடுத்த, வெம் கணைகள் ஆம்
ஐந்துபூஉம்-வெவ்விய பாணங்களாகிய ஐந்து மலர்களும், வந்து-
(கரும்புவில்லினின்றும்வெளிப்பட்டு)வந்து, உள்ளம் - (அருச்சுனனுடைய)
மனத்திலே, உற உறபட்டு புதையஉம்-மிகவும் நன்றாகப் பதிந்து
புதையவும்,-புலன்வழிஅன்றி-புலன்களின் வழியிலேயல்லாமல், மேவு-
பொருந்திய, தன் கருத்தின் வழியில்ஏ-தன் எண்ணத்தின் வழியில்தானே,
நின்ற-நிலையாகநின்ற, விசயனை-அருச்சுனனை, அங்கிபால் -
அக்கினிதேவனிடத்திலே, வில்உம் - காண்டீவமென்ற வில்லையும், ஏஉம்-
அம்புகளையும், முன்-முன்னே [காண்டவதகன காலத்திலே], பெற்ற-
அடைந்த, இறைவனை-தலைவனை, எய்துஎய்து-பலமுறை அம்புதொடுத்து
எய்து, இரதிகேள்வன்உம்-இரதீதேவிக்குக் கணவனாகிய மன்மதனும்,
இளைத்தனன்-இளைத்தான்; (எ- று.)

     மன்மதனுக்குக் கணைகளாக அமையும் அரவிந்தம் முதலிய
ஐம்மலர்கள் கா முதலிய இடங்களில் தோன்றுவன வாதலால், 'காவும்
வண்புறவும் கயங்களும் அரும்ப'என்றார்.  ஐம்புலவாசையையொறுத்துத்
தியானத்தில்தானே மனமூன்றியிருந்தனன் அருச்சுன னென்க.
'ஐங்கணைகளாம்'என்றும் பாடம்.                               (64)

65.-அருச்சுனன்சிவத்தியானங்கொண்டு சலியாது
நிற்றல்.

கூற்றினையுதைத்த பாதமுமுடுத்த குஞ்சரத்துரிவையுமணிந்த,
நீற்றொளிபரந்துநிலவெழுவடிவு நிலாவெயிலனலுமிழ்விழியும்,
ஆற்றறல்பரந்தகொன்றைவார்சடையுமல்லதையாவையுங்
                                        கருதான்,
மாற்றமொன்றின்றிநின்றனன்வரைபோல்வச்சிராயுதன்றிரு
                                         மகனும்.