பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்61

அகக்கண்ணால்தரிசிக்கப்படுகிறவனும் ஆகிய சிவபெருமான், எழுந்தான்-
இருக்கைவிட்டு எழுந்தான்;(எ-று.)

     மற்று-அசை. வாஸவன் - அஷ்டவசுக்களுக்குத் தலைவன்;அல்லது,
எல்லாஐசுவரியமு முடையவன்.  கேட்டன-இயல்புபற்றி எதிர்காலம்
இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி. கருத்து-மனம்;அதனாற்
காணுதல்-தியானித்தல். கற்றவர் என்பது ஓரடியில்தானே வெவ்வேறு
பொருளில் வந்தது-மடக்கு என்னுஞ் சொல்லணி.               (80)

81.-பரமசிவனும்பார்வதியும் வேடவடிவங்கொள்ளுதல்.

நனைமலர்சிதறித்தொழுதுமுன்னின்றநந்திமேனயனம்வைத்தருளி
வினைபடுகேழல்வேட்டைநாமின்றேவேடராயாடுதல்வேண்டும்
நினைவுறவெமதுகணத்தொடிக்கணத்தேநீயுமவ்வுருக்கொளுகென்று
மனைவியுந்தானுங்கிராதர்தங்குலத்துமகிழ்நனும்வனிதையுமானார்.

     (இ-ள்.)(பரமசிவன்),நனைமலர்-(தேனினால்)நனைந்தபூக்களை,
சிதறி - (தம்முடையதிருவடிகளில்)இட்டு அருச்சித்து, தொழுது-வணங்கி,
முன் நின்ற - (தமது)எதிரில் நின்ற, நந்திமேல் - நந்திகேசுவரர் மேலே,
நயனம் வைத்து அருளி - கண்களைவைத்து நோக்கியருளி, 'நாம்-,
இன்றே - இப்பொழுதே, வேடர் ஆய்-வேடராகி, வினைபடு கேழல்
வேட்டை - தீத்தொழிலிற் பொருந்திய பன்றியைக்கொல்லும் வேட்டையை,
ஆடுதல் வேண்டும் - ஆடவேண்டும்;(ஆதலால்),நினைவுஉற -
அவ்வெண்ணத்திற்கு ஏற்க, இ கணத்தே - இந்த க்ஷணத்தில்தானே, எமது
கணத்தொடு-எம்முடைய கணத்துடனே, நீயும்-,அ உரு கொளுக-அவ்வேட
வடிவத்தை எடுத்துக்கொள்வாயாக',என்று - என்று கட்டளையிட்டு,
(உடனே),மனைவிஉம்தான்உம்-தன்மனைவியும்தாமுமாக, கிராதர் தம்
குலத்து மகிழ்நன்உம் வனிதைஉம் ஆனார்-வேடர்குலத்திற்பிறந்தஒரு
கணவனும் மனைவியுமாகவடிவங்கொண்டார்;(எ-று.)

     சிவபெருமான்எழுந்தருள இருப்பதை உணர்ந்த நந்திகேசுவரன் 'யாது
கட்டளை?'என்று வினாவுதற்குறிப்பாகப் புஷ்பங்களைஅப்பெருமான்
திருவடிகளில் அருச்சித்துத்தொழுது முன்னே நிற்க, அந்த நந்திதேவனைக்
கடாக்ஷித்து அப்பெருமான் 'எமதுகருத்துக்கு இசைய நீ
பிரமதகணங்களோடு வேட்டுவவுருக் கொண்டு வருக'என்று கட்டளையிட்டு,
தமது மனைவியோடுவேட்டுவவடிவுகொண்டனரென்பதாம்.  நனைமலர்-
வினைத்தொகை: வேற்றுமைத் தொகையாய், அரும்புகளோடு கூடிய
பூக்களென்றுமாம்.  நந்தியென்பவர் - பரமசிவனருகிருந்து பலவகை
உபசாரங்களைச்செய்கின்றபக்தர்களாகிய பிரமதகணங்களுக்குத் தலைவரும்
சில சமயங்களிற் சிவபெருமானுக்கு வாகனமும் ஆகி நிற்கும் ஒரு
மெய்யடியவர்.  வேடுஎன்னுந் தொழிலின் பெயராகிய நெடிற்றொடர்க்
குற்றியலுகரம், டகரவொற்றிரட்டி ஐகாரச்சாரியை பெற்று 'வேட்டை'என
நின்றது;அத்தொழிலுடையவர்,