பக்கம் எண் :

96பாரதம்ஆரணிய பருவம்

124.-இனி,நான்குகவிகள்-ஒருதொடர்:சிவபிரான்
அருச்சுனனைத்தேற்றி'உனக்குவேண்டியதுயாது?' 
என வினாவியதைத்தெரிவிக்கும்.

சூதினில்யாவையுந் தோற்றுக்கானிடை
ஏதிலர்போலநீ ரிளைத்துவாடினீர்
வாதுசெய்புலன்களையடக்கிமண்ணின்மேல்
நீதவம்புரிந்தமை நினையலாகுமோ.

     (இ - ள்.)சூதினில் - சூதாட்டத்தில், யாவைஉம் - (உங்கள்)
பொருள்களையெல்லாம், தோற்று - தோல்வியடைந்ததனாலிழந்து,நீர் -
நீங்கள் ஐவரும், கானிடை - வனத்தில், ஏதிலர் போல - ஒரு
பொருளுமில்லாத தரித்திரர்போல, இளைத்துவாடினீர் - மெலிந்து
வருந்தினீர்கள்;நீ-, வாது செய் புலன்களை- (நல்வழியிற்செல்ல
வொட்டாமல்) வருத்தந் தருகிற ஐம்புலன்களையும்,அடக்கி - அடங்கச்
செய்து, மண்ணின்மேல்-இந்நில வுலகத்தில், தவம் புரிந்தமை-தவத்தைச்
செய்தவிதம், நினையல்ஆகும்ஓ-எண்ணக் கூடியதோ? (எ - று.)-
இத்தன்மைய தென்று நினைத்துப்பார்ப்பதற்கும் அரியது என்றபடி.

     ஏதிலர் -ஐம்பொறிகளால் நுகரப்படும் பொருளில் எதுவும்
இல்லாதவர்:வறியவர்.  வாது - பாதா என்றவடமொழித்திரிபு:வாதம் என்ற
வடமொழித்திரிபுஆயின், தருக்கமென்றுபொருளாம்.

125.மூகனென்றுரைக்குமம் மூகதானவன்
வேகமோடேனமாய்விரைவில்வந்தனன்
நாகவெங்கொடியவனவின்றவாய்மையால்
யோகுசெயுனதுயிருண்ணவெண்ணியே.

     (இ - ள்.)மூகன் என்று உரைக்கும் - மூகனென்று பெயர்
சொல்லப்படுகின்ற, அ மூக தானவன் - மூடனாகியஅவ்வசுரன், நாகம்
வெம் கொடியவன் நவின்ற வாய்மையால் - பாம்பையெழுதிய
(பகைவர்க்குப்) பயங்கரமான துவசத்தையுடைய துரியோதனன் சொன்ன
வார்த்தையினால், யோகு செய் உனது உயிர் உண்ண எண்ணி -
தவஞ்செய்கின்ற உன்னுடைய உயிரை ஒழிக்கநினைத்து,ஏனம் ஆய்-
பன்றியுருவமாகி, வேகமோடு-உக்கிரத்துடனே, விரைவில்-சீக்கிரமாக,
வந்தனன்-வந்தான்: (எ - று.)

     துரியோதனன்தனதுநாவிரண்டுடைமையையும், நன்மை செய்தார்க்குத்
தீமைசெய்யுந் தகைமையையும், எப்பொழுதுங் கோணலாகவே செல்லுந்
தன்மையையும், கொடுமையையும் புலப்படுத்தற்கு நாகத்தைக்
கொடியிற்கொண்டனன்போலும்.  யோகு=யோகம்:வடமொழித்திரிபு.
உயிருண்ண - உண்ணப்படாதது உண்ணப்படுவதுபோலச் சொல்லப்பட்ட
மரபுவழுவமைதி.                                           (125)