பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்29

     (இ - ள்,) பூபர் - அரசர்கள், தங்கள் - தங்களுடைய, புயங்கள்உம் -
தோள்களிலும், மார்பம்உம் - மார்பிலும், சாபம் வெம்கணை - (பகைவர்)
வில்லால்எய்த கொடிய அம்புகள். தைத்து - பாய்ந்து, உகு - (அவ்வழியே)
பெருகுகிற, சோரியால் - இரத்தத்தால், தீபம் என்னஉம் - சோதி
விருட்சங்கள்போலவும், செம் மலர் கோடுஉடை நீபம் என்னஉம் - செந்நிறமான
பூக்களைக்கொண்ட கிளைகளையுடைய (செங்) கடம்பமரம்போலவும், ஆண்மையால்
நின்றனர் - வீரத்தன்மையோடு நின்றார்கள்; (எ-று.)

     செந்நிறம்பற்றிய உவமை. போரிற் பின்வாங்காமல் எதிர்நின்று முகத்தினும்
மார்பினும் விழுப்புண்படுதலே ஆண்மைவிளங்கும் வழியாதலால், 'ஆண்மையால்
நின்றனர்' என்றார். தீபம்- தீபமரம்; சோதி விருக்ஷம்: இது, பகலில் தன்னொளி
தோன்றாமல் இரவில் தோன்றப் பெறுகின்றதொருமரம்; இரவெரி எனவும் படும்.
'செந்தழலொளியிற் பொங்குந் தீபமாமரங்கள்' என்றது பெரிய புராணம். பூபர் -
பூமியைக்காப்பவர்; வடசொல். மார்பம்-அம் - சாரியை. சொரிவது, சோரி. தீபம்,
நீபம்- வடசொற்கள். மரம் - வீரர்க்கும், கிளைகள் - அவர் அவயவங்களுக்கும்,
மலர்கள்- செந்நீருக்கும் ஒப்பாம். தைத்து = தைக்க : எச்சத்திரிபு.     (26)

27.-நான்குகவிகள் - போர்வீரர்களின் பெருவீரம்
புலப்படுத்தும்.

கையில்வாளிதொலைந்தபின்காய்ந்துதம்
மெய்யில்வாளிகள்வாங்கிவில்வாங்கினார்
பொய்யிலாமொழிப்பூபதிசேனையின்
மையிலாண்மையினார்சிலமன்னரே.

     (இ-ள்.) பொய் இலா மொழி-(சிறிதும்) அசத்தியமில்லாத
வார்த்தைகளையுடைய,பூபதி - யுதிட்டிரமகாராசனது, சேனையில்- சேனையிலே,
மை இல் ஆண்மையினார்- குற்றமில்லாத பராக்கிரமத்தையுடையவர்களான, சில
மன்னர் - சில அரசர்கள்,கையில் வாளி தொலைந்த பின்-(தங்கள்) கையிலிருந்த
அம்புகளெல்லாம்(பகைவர்மேலெய்து) ஒழிந்துபோனபின்பு, காய்ந்து -
(பகைவர்மேற்) கோபங்கொண்டு,தம் மெய்யில் வாளிகள் வாங்கி-தமது உடம்பில்
(பகைவரால் எய்யப்பட்டுத்தைத்துஉள்ள) அம்புகளைப் பறித்தெடுத்து, வில்
வாங்கினார்-வில்லைவளைத்துஎய்தார்கள்; (எ - று.)

     இதனால், அவர்களது கலங்காதஉறுதிநிலை விளங்கும். இது, நூழிலாட்டு;
அதாவது உடலிற்புதைந்த படையைப்பறித்துப் பகைவர்மேல் விடுதல். இது -
புறப்பொருளின் பகுதியாகிய தும்பைத் திணைக்குரிய துறைகளில் ஒன்று;
புறப்பொருள் வெண்பாமாலையில் "களங்கழுமிய படையிரிய, வுளங்கிழித்த வேல்
பறித்தோச்சின்று" எனக் கூறிய இலக்கணத்தையும், 'மொய்யகத்து மன்னர் முரணினி
யென்னாங்கொல், கையகத்துக் கொண்டான் கழல் விடலை-வெய்ய, விடுசுடர் சிந்தி
விரையகலம் போழ்ந்த, படுசுட ரெஃகம் பறித்து" எனக் காட்டிய இலக்கியத்தையும்,
"கைவேல்களிற்றொடு போக்கி வருபவன், மெய்வேல் பறியா நகும்" என்ற
திருக்குறளையுங் காண்க. எய்தலாகிய காரியத்தை வில்வாங்குத