பக்கம் எண் :

256

Tamil Virtual University

சாந்து புனுகும்,
சவ்வாது நீரும்
சேர்ந்த சந்தனம்
சிறக்கவே பூசி
கொத்தரளி கொடியரளி
கோர்த்தெடுத்த நல்லரளி
முல்லை இருவாச்சி
முனைமுறியாச் செண்பகப்பூ
நாரும் கொழுந்தும்
நந்தியா வட்டமும்
வேரும் கொழுந்தும்
வில்வ பத்திரமும்
தண்டமாலை, கொண்ட மாலை
சுடர் மாலை தானணிந்து
ஆடை ஆபரணம்
அலங்கரித்து வீடதனில்
திட்டமுடன் பேழை தன்னில்
சோறு நிறைநாழி வைத்தார்
நெட்டுமுட்டுத் தான் முழங்க
நாட்டிலுள்ளோர் சபைக்குவர
நாட்டுக்கல் போய்
நலமாக வலம் வந்து
செஞ்சோறு அஞ்சடை
சுற்றியெறிந்து
திட்டி கழித்து சிவ
சூரியனைக் கைதொழுது
அட்டியங்கள் செய்யாமல்
அழகு மணவறை வந்தார்
மணவறையை அலங்கரித்து
மன்னவனைத் தான் இறுத்தி
இணையான தங்கை
ஏந்திழையை அழைத்து வந்து
மந்தாரைப்பூ மல்லிகைப்பூ
மரிக்கொழுந்து மாலையிட்டு
கூரை பிரித்து
குணமுள்ள மங்கையவள்
பேழை முடி தானைடுத்து
புரந்தவனைச் சுற்றி வந்தாள்