பக்கம் எண் :

266

Tamil Virtual University

சமையல்

சமையல் தெரியாதவள் படும்பாட்டை முன்னிரண்டு பாடல்களில் கண்டோம். இப்பாடலிலும் ஆக்கத் தெரியாதவள் படும் அவதியை நாம் காண்கிறோம். இவள் கணவன் கதவடைத்துக் கொல்லுகிறான். இவள் எதிர்த்து நிற்கவும் தயாராயில்லை. அவள் தகப்பனாருக்குச் சொல்லிவிடவும் தயாராயி்ல்லை. காலையில் ஓடிப்போய் விடுவதாகச் சொல்லுகிறாள்.

கான மிளகா வச்சு
கறிக்கு மசால் அரைச்சுக்கூட்டி
குழம்பு ஒரைச்சதுண்ணு
கொல்லுதாரே கதவடைச்சு !
காளான் குழம்பு வச்சு
களியவே கிண்டி வச்சு
துரந்து வச்சு ஆறித்திண்ணு
துடுப்பெடுத்துக் கொல்லுதாரே !
படிச்சவண்ணு தெரிஞ்சிருந்து
பாவி மகன் என்னைக் கூட்டி
கூழுக் காச்சத் தெரியலேண்ணு
குறுக் கொடியக் கொல்லு தாரே !
சுண்டச் செவப் பிண்ணுல்ல
சொக்கியவர் என்னைக் கட்டி
சோறு காச்சத் தெரியலேண்ணு-என்
சொகுசைக் குறைக்காரே !
அறியாத ஊரிலேயும்
தெரியாம வாக்கப் பட்டேன்
அடியாதங்க புடியாதங்க
விடியாம ஓடிப்போரேன்

வட்டார வழக்கு : ஒரைச்சுது-எரித்தது ; படிச்சவண்ணு-படித்தவள் என்று ; குறுக்கு-இடுப்பு ; சுண்டச் சிவப்பு-விரலால் சுண்டினால் சிவந்து விடும் ; அடிபுடி-சேர்ந்து வருவது வழக்கு.

சேகரித்தவர் :
S.M. கார்க்கி

இடம் :
சிவகிரி,
நெல்லை மாவட்டம்.