பக்கம் எண் :

300

Tamil Virtual University

தூரத்து மாப்பிள்ளை

வெகு தூரத்துக்கு அப்பால் பார்க்கும் ஒருவனுக்குத் தங்கள் பெண்ணைக் கட்டி வைத்தார்கள். அவன் இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவான். மணம் முடிந்து போனவன் சில வருஷங்கள் ஊருக்கு வரவேயில்லை. பெரிய நகரங்களில் வேலைப் பார்ப்பவர்கள் குறைந்த வாடகைக்கு வீடு கிடைக்காததாலும், மனைவியை அழைத்துச் செல்ல வசதியில்லாததாலும், அழைத்துச் செல்லவில்லை. அவனடைய மனைவி பெற்றோர்களிடம் தன்னுடைய கவலையைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது இப்பாடல்.

மனைவி : காலடியில் பொன் பொதைச்சா
கவலையத்து இருப்பான்னு
காசுக்கே மைவாங்கி
காதத்துக்கே பொன் பொதச்சு
கவலையேத் தேடி வச்சீர்
கவலையே நீஞ்சுவனா
நீங்கிருக்கும்
கழனி வந்து சேருவனா?
தோளடியா பொன் பொதச்சு
துக்க மில்லா திருப்பான்னு
துட்டுக்கே மைவாங்கி
தூரத்துக்கே பொன் பொதச்சு
துயரத்தே நீஞ்சுவனா
நீங்கிருக்கும்
சீமை வந்து சேருவானா?
 

வட்டார வழக்கு: கவலையத்து-கவலையற்று ; பொன் பொதைச்சு-பொன் பூட்டி.

உதவியவர் : செல்லம்மாள்
சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி

இடம் :
பொன்னேரிப்பட்டி,
சேலம் மாவட்டம்