பக்கம் எண் :

96

Tamil Virtual University

தாலாட்டு
(உங்கள் அப்பா)

இத் தாலாட்டில் தாய், தன் கணவன் பெருமையையும், மாமனார் பெருமையையும் பற்றி குழந்தைக்கு எடுத்துரைக்கிறாள்.

சிவகிரி ஜமீனில் கணக்கராக வேலை செய்யும் அவளுடைய கணவரை அவள்,

  “கோடு திறந்து குரிச்சிமேல் உட்கார்ந்து
கோட்டார் வழக்குப் பேசும்
குமாஸ்தா உங்களய்யா.”

என்று படம் தீட்டிக் காட்டுகிறாள்.

தனித்தமிழில் புதிய சொற்களைப் படைக்கும் பிரம்மாக்கள் இவளுடைய தமிழை பின்வருமாறு திருத்தி விடுவார்கள்: கோடு-(ஆங்கிலம்)-அறங்கூறவையம், குரிச்சி-(அரபு) நாற்காலி, கோட்டார்-நடுவர். குமாஸ்தா-(பெர்ஸியன்) எழுத்தர். இவற்றுள் நாற்காலி தவிர, பிற சொற்கள் நமது தமிழ்ப் பெண்களுக்கு விளங்காது. அச்சொற்கள் என்ன மொழிச் சொற்கள் என்று தாலாட்டுப் பாடும் தாய்மாரைக் கேட்டால், அவர்கள் தமிழென்றே சொல்லுவார்கள். தமிழினியற்கை மாறாமல் பிறசொற்களைப் பெண்கள் திரித்து வழங்கி தமிழ்ச் சொற்களஞ்சியத்தை பெருக்கி வருகிறார்கள். இம்முறைகளை மொழி இயலார் ஆராயவேண்டுமேயன்றி, இப்படித்தான் பேச வேண்டும் என்று உத்திரவிட எவர்களுக்கும் உரிமையில்லை. உத்தரவிட்டாலும் பேச்சு வழக்கை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது.

இந்த தாய் குழந்தையின் முன்னோர் செய்து வைத்திருக்கும் தான தருமங்களை எல்லாம் கூறி, ஒளவையின் முதல் அறிவுரையான “அறஞ்செய விரும்பு” என்னும் கருத்தை மகனுக்குப் புகட்டுகிறாள்.