பக்கம் : 1051
 

     போர் முதலிய செய்திகள் அரசன் தேவியோடிருக்கும்போது உணர்த்தற்பாலன அல்ல,
இது திருமணச் செய்தியாகலின், அரசன் தேவியரோடு இருக்கும் அமயமே சாலச் சிறந்தது
என்று தூதன் கருதினான் என்க. உரிமை - அரசன் தேவியராகிய உரிமைச் சுற்றம்.

     நம்பி உரிமையோடிருந்தபோது இச்செய்தி உணர்த்தற்குரியதே எனத் தூதன் கருதி
ஓலையை நம்பிக்குக் கொடுக்க, அதனைத் தேவிமருங்கு நின்ற உழைக்கலமகள் ஓத
யுணர்த்த, நம்பி மகிழ்ந்து எல்லா அணிகளும் தூதனுக்கீந்தான் என்க.

 (566)

 

தூதன் திருமுகம் ஓதுதல்

1697. கனிவளர் கிளவி யாருங்
     கதிர்மணிக் கலங்கள் வாங்கிப்
பனிமதி விசும்பின் வந்தான்
     1பல்வரப் பணித்த பின்னை
இனியிது பெயர்த்து 2நீயே
     யுரையென வெடுத்துக் கொண்டு
துனிவள ரிலங்கு வேலான்
     கழலடி தொழுது சொன்னான்.
 
     (இ - ள்.) கனிவளர் கிளவியாரும் - அன்புடைமையாலே கனிவுமிக்க மொழிகளை
உடையவராய தேவிமாரும், கதிர் மணிக்கலங்கள் வாங்கி - ஒளிமிக்க மணியணிகலன்களைக்
களைந்து, பனிமதி விசும்பின் வந்தான் பால்வரப் பணித்த பின்னை - குளிர்ந்த
திங்களையுடைய வான்வழியாக வந்த தூதனிடத்தே அவைகள் சேருமாறு செய்த பின்னர்,
இனி இது பெயர்த்து நீயே உரையென - நம்பி தூதனை நோக்கி இனி இம் மங்கல ஓலைச்
செய்தியை ஈண்டுள்ளார் யாவரும் உணரும்படி நீயே ஓதக் கடவாய் என்று பணிக்க,
எடுத்துக்கொண்டு - அத்தூதன் அத்திருமுகத்தைத் தன் கையிலே ஏந்திக்கொண்டு,
துனிவளர் இலங்கு வேலான் - பகைவர்க்கு அச்சத்தை வளர்க்கின்ற ஒளிரும் வேலையுடைய
நம்பியின், கழல்அடி தொழுது - வீரக்கழல் யாத்த திருவடிகளைத்தொழுது, சொன்னான் -
ஓதுவானாயினான், (எ - று.)

     முன்னர் உழைக்கலமகள் ஒருசிலரே அறியும்படி மெல்ல ஓதி அரசற்குணர்த்தினாள்;
அது நற்செய்தி என்றறிந்த பின்னர் நம்பி அனைவருக்கும் ஓதி உணர்த்தப் பணித்தான்
என்க.

     தேவிமாரும் மகிழ்ந்து தூதனுக்கு அணிகலன்களை அருளாநிற்ப, நம்பி தூதனை
நோக்கி, நீயே உரையென, அவனும் எடுத்துக்கொண்டு அடி தொழுது ஓதினான், என்க.

(567)

 

     (பாடம்) 1 பாலவர். 2 நல்ல.