| (இ - ள்.) ஆழ்கதிர் விலங்கல் ஆளும் அரச - மிகுந்த ஒளியினையுடைய வெள்ளிமலையினை அரசாட்சிபுரியும் மன்ன! சூழ்கதிர்ப் புரிசை வேலிச் சுரேந்திர காந்தம் ஆளும் - சுற்றிலும் ஒளிகள்சூழ்ந்த மதிலை வேலியாகக்கொண்ட சுரேந்திர காந்தத்தினை அரசாட்சிபுரியும், தாழ் கதிர் ஆரம் மார்பில் தமனியக் குழையினான்தன் - தாழ்ந்து ஒளிவீசும் முத்து மாலையையணிந்த மார்பினையும் பொன்னினானாகிய குண்டலத்தை யணிந்த காதுகளையுமுடைய மேகவாகனனின், போழ்கதிர்க் கடவுள் போலும் புதல்வனுக்கு - இருளைப் பிளக்கின்ற ஞாயிற்றைப் போன்ற விச்சுவனுக்கு, உரிமைசெய்வது - உரிமை செய்தலென்னும் செயலான, அஃது அரிது கண்டாய் - அஃது அருமையான தாகுமென்பதை உணர்ந்து கொள்வாயாக! (எ - று.) சுயம்பிரபையை விச்சுவனுக்குக் கொடுத்தல் அருமை என்றபடி விச்சுவன் திருமணஞ்செய்து கொள்ள இசையான் என்பது பட உரிமை செய்வது அரிது என்றான். |