|
இதுகேட்டுச்
சுற்றத்தாரும் ஊரவரும் இவ்வாறு யாவர் செய்தார்?
இயற்பகை பித்தனேயாம்; ஆயின் அதுகாரணமாகப் பெண்ணை
ஒருவன் கொண்டு போவதா? என்று பழிவாராமற் காக்கும்பொருட்டு,
வேல் - வாள் - சுரிகை முதலிய படைகளை ஏந்திக்கொண்டு
மிகவும்
ஆர்ப்பரித்துப் பரவி அழிதகனே! நீ போகாதே நில்; எம் குலக்
கொடியாகிய பெண்ணைவிட்டு நீ போ என்று சொல்லி எதிர்த்துவந்தார்கள்.
வேதியர் அஞ்சினார்போல அம்மையாரைப் பார்த்தார். அம்மையார்
இறைவனே! அஞ்சவேண்டா; இயற்பகை வெல்லும் என்றார்.
இதனையெல்லாம் இயற்பகையார் கேட்டு அடியேன் அவர்களை யெல்லாம்
வீழ்த்துகின்றேன்; தளரவேண்டா என்று சொல்லிக் கிட்டிவந்த
சுற்றத்தார்களைக் கோபித்துப் பார்த்து நீங்கள் ஒருவரும் எதிர் நில்லாமால்
ஒடிப்போய்ப் பிழையுங்கள். இல்லாவிட்டால் எனது வாளினாற்
கூறாக்கப்பட்டுத் துடிக்கின்றீர் என்று எச்சரித்தார். அதற்கு அவர்கள்
ஏடா! நீ என்ன காரியம் செய்தாய்? இப்படிச் சொல்லுகின்றாய். நாட்டவர்
பழியையும் பகைவர் நகையினையும் பற்றி நாணுகின்றாயில்லை. உன்
மனைவியை வேதியர்க்குக் கொடுத்து விட்டா இப்படி வீரம் பேசுகின்றாய்?
நாங்களும் கூடவே மாண்டுபோவதே யல்லாமல் அவளை நீ கொடுக்க
நாங்கள் சம்மதிக்கமாட்டோம் என்றார்கள்.
இயற்பகை யார் கடுங்கோபங் கொண்டு, உங்களையெல்லாம்
துண்டித்து வீழ்த்திச் சுவர்க்கத்துக் கேற்றி விட்டு இத்தவசியைப் போக
விடுவேன் என்றெழுந்தார். அவர்களோ இவர்மேற் செல்லாது,
பொண்ணைக் கொண்டுபோகும் வேதியர்மேற் சென்று எதிர்த்துத்
தடுத்தார்கள். இயற்பகையார் சீறி அவர்கள் மேற் பாய்ந்து வாளுந்
தாமுமேயாக அத்தனைபேருக்கும் அத்தனை பேராய் விரைந்து இடசாரி
வலசாரியாக மாறி வந்து அவர்களை யெல்லாம் கையும் காலும்
தலையுமாகத் துண்டித்து வீழ்த்தினார். அவர்களுள் உயிர்காக்கத் தப்பி
ஓடினவர்களே பிழைத்தனர்; ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டனர். அதன்பின்
வேதியரை நோக்கித் தேவரீர் அஞ்சாது இந்தச் சோலையைக் கடக்க
நான் துணை வந்து வழிவிடுவேன் என்று சொல்லி நாயனார் கூடவே
போயினர். முன்னே வேதியரும், பின்னர் அம்மையாரும், அவர் பின்னே
இயற்பகையாருமாகச் சென்று சோலைகடந்து திருச்சாயக்காடு என்னும்
தலத்தை அணையவே, வேதியர் இயற்பகையாரை நோக்கி இனி நீ மீள்க
என்றார். அவரும் இவரது பாதங்களைப் பொருந்தப் பணிந்து இவரது
திருவருள் பெறப் பெற்றேன் என்று மகிழ்ந்து மீண்டார்.
இவ்வாறு அவர் போகவே வேதியர் மகிழ்ந்து நோக்கி,
பொய்ம்மையில்லாத மனமுடையான்; திரும்பிக்கூடப் பாராமற்
போயினான் என்று அவரை மீளவும் இயற்பகை முனிவா ஓலம்!
ஈண்டு நீ வருவாய் ஓலம்! என்று பன்முறை ஓலமிட்டுக் கூவி
அழைத்தனர். அவர் அது கேட்டு அடியேன் இதோ வந்தேன்! வந்தேன்!
இன்னும் பிழைத்தவர்களுண்டானால் என் வாளினால் வெட்டுண்கிறார்கள்
என்று சொல்லிக் கொண்டே விரைந்து மீண்டு வந்தார். அப்போதே
வேதியர் மறைந்தனர். வந்தவர் வேதியரைக் காணவில்லை; அம்மையாரை
மட்டும் கண்டார்; வானிலே விடையின் மேல் உமையம்மையாரும்
தாமுமாக இறைவன் காட்சிதரக் கண்டார்; வீழ்ந்தனர்;எழுந்தனர்
பன்முறையும் பல்வகையும் போற்றி! போற்றி! என்று துதித்தனர்.
இறைவன் தமக்குச் செய்த பேரருளைப் போற்றி நின்றனர்.
இறைவன் தொண்டரை நோக்கி, இவ்வாறு உலகிலே
நீ நம்மிடத்துப்
பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தோம்; நண்ணிய மனைவியோடு
நம்முடன்போதுக! என்று அருளிச் செய்து இவர்க்குத் தக்க பேறு தந்து
பொன்னம்பலத்திலே எழுந்தருளினார். தேவர்கள் பூமழை பொழிந்தனர்.
மறைகள் ஆர்த்தன. ஞானமுனிவர்
|