பக்கம் எண் :


திருமலைச்சிறப்பு57

Periya Puranam
     (வி-ரை.) பதிகம் - நூற்பொருளைச் சுருக்கி நூன்முகத்திலே
சொல்லும் பகுதி. இத்திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகம் இதன்கீழ்
அமைக்கப் பெறுகின்றது.

     புற்றிடத்தெம் புராணர் - திருவாரூரிலே எழுந்தருளிய புற்றிடங்
கொண்டார்; வன்மீகநாதர். புராணர் - மிகப் பழமை வாய்ந்தவர். இவரது
பழமையை அப்பர் சுவாமிகள் “முன்னோ பின்னோ திருவாரூர்க் கோயிலாக்
கொண்ட நாளே“ என்று இதற்கென அருளிய ஒரு தனித் திருத்தாண்டகப்
பதிகத்தால் அருளிச்செய்தனர். “முன்னைப் பழம் பொருட்கு முன்னைப்
பழம்பொருள்" என்ற திருவாசகமும் காண்க. அருளினாற் சொற்ற வரலாறு
தடுத்தாட்கொண்ட புராணத்திலே காண்க. திருவாரூர்ப் பெருமான் "தில்லைவா
ழந்தணர்தம் அடியார்க்கு மடியேன்“ என்று அடி எடுத்துக் கொடுத்துப் பாடி
முடிக்கப்பெற்றதாம். பிருதிவித் தலமாகிய திருவாரூரிலே
இறைவனிடத்திலிருந்து இவ்வாறு கிளம்பித் தொடங்கிய நாதத் தொகுதியாகிய
தொகை, அது தொடங்கிக் காட்டிய “தில்லை “யிலே இறைவனிடத்திலிருந்து
கிளம்பிய “உலகெலாம்“ என்ற நாதத் தொகுதியாகி இப்புராணத்தில் விரிந்து
முடிவுபெறும் அழகையும் தகுதியையும் காண்க.

     மெய் - சத்திய வாக்கு - ஆப்த வசனம். “அன்ன மெய்த்திரு
வாக்கெனும் அமுதம்“ திருஞான - புரா - 1088 பாட்டிற் காண்க.
மெய்வாக்காவது - அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப்
பயன்களைப் பயந்தேவிடும் மொழி. இதுவே நிறைமொழி - அவரது ஆணை.
வரும் பாட்டிலும் “மெய்ப்பதிகம்“ என்றமையும் காண்க.

     தொழப்பெற்றது - தொழுது எடுத்துக் கொள்ளப்பெற்றது. அந்த
மெய்வாக்காகிய பொருளையே நான்தொழுது எனது வாக்காகிய
இப்புராணத்துக்குப் பதிகமாக அமைத்துக் கொண்டேன் என்றபடி.

     முன்னோர் பொருளை மேற்கொள்ளும்போது அதனைத் தொழுது
நன்றி பாராட்டிய பின்னர் மேற்கொள்ளுதல் மரபு.

“சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார், மீதுதாழ்ந்து“                        (திருஞான - புரா - 216)

என்பது காண்க.

     நற்பதிகமே - இதற்குப் பதிகமாகத் - தொழப்பெற்றது - என்று
கூட்டுக.

     பெற்றதாம் - என்பதும் பாடம்.  38

49. அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை  
  நந்த நாதனா நம்பியாண் டார்நம்பி
புந்தி யாரப் புகன்ற வகையினால்
வந்த வாறு வழாம லியம்புவாம்.
39

     (இ-ள்.) அந்த......வகையினால் - அந்தத் திருத்தொண்டத்தொகை
என்ற மெய்ப்பதிகத்திலே துதிக்கப்பெற்ற அடியார்களை நமது நாதனாகிய
நம்பியாண்டார் நம்பிகள் மனமுவந்து நிறையத் துதித்தருளிய திருத்தொண்டர்
திருவந்தாதியை வகை நூலாகவும் வழிநூலாகவும் மேற்கொண்டு; வந்தவாறு
- எமது ஆற்றலிலே திருவருள் புகுந்து கைதந்தபடி; வழாமலியம்புவாம் -
தவிராமற் சொல்வோமாக.

     அடியார்களை - நம்பி - புகன்ற - வகையினால் இயம்புவாம் என்க.

     (வி-ரை.) நம்பியாண்டார் நம்பிகள் திருநாரையூரிலே
பொள்ளாப்பிள்ளையாரது திருவருள் பெற்று அதன் வழியே திருமுறைகளைக்
காண்பதற்கு உபகரித்த பெரியார். பதினோராம் திருமுறையிலே இவர்
அருளிய நூல்களைக் காண்க. திருஞானசம்பந்த சுவாமிகளைத் தமது
உபாசனாமூர்த்திகளாகக்கொண்டு அவர் திருவடிகளிலே சிறந்த பத்திசெய்து
பலசித்திகளையும் பெற்றனர் என்பது