பக்கம் எண் :


மெய்ப்பொருணாயனார் புராணம்607

Periya Puranam
     இடையறாமல் கும்பிடும் கொள்கை - இதுவே சைவ
சித்தாந்தத்தின்படி முத்தியினதிலக்கணமாம். முத்தி நிலையினும் உயிர்
இறைவனுக்கு அடிமையேயாகி அவனைக் கும்பிட்டு இன்புற்றிருக்கும் என்பது.
“மறக்குமாறிலாத வென்னை“ என்ற ஆளுடைய பிள்ளையார் திருத்துருத்தித்
தேவாரமும், “பண்டு திருவடி மறவாப் பான்மையோர்“ என்ற ஆளுடைய
பிள்ளையார் புராணமும் காண்க. இடைவிடாது. சிந்தித்துக்கொண்டிருத்தல்.
“குஞ்சித்த சேவடியுங் கும்பிட்டேயிருப்பர்“ (சிவஞானசித்தியார்)
கொள்கை
- கும்பிடுதலை உட்கொண்ட நிலை.

     கொண்டவா விடை - கொண்டவரிடை - என்பனவும் பாடங்கள். 23

490. இன்னுயிர் செகுக்கக் கண்டு மெம்பிரா னன்ப
                                ரென்றெ
 
  நன்னெறி காத்த சேதி நாதனார் பெருமை தன்னி
லென்னுரை செய்தே னாக; விகல்விறல் மிண்டர்
                              பொற்றாள்
சென்னிவைத் தவர்முன் செய்த திருத்தொண்டு
                          செப்ப லுற்றேன
24

     (இ-ள்.) இன்னுயிர்...ஆக. (பகைவனான பொய்த்தவவேடத்தான் தமது)
இனிய உயிரைப் பிரிக்கும் செகுத்தல் செய்யக் கண்ட பின்னும் இவன்
தாங்கிய திருவேடத்தாலே எம்பிரான் அன்பனேயாவான் என உட்கொண்டு,
திருவேடமே சிந்தை செய்வதாகிய தாம் கொண்ட நன்னெறியினைச்
சோர்வுபடாது பாதுகாத்தளித்த சேதிநாட்டரசராகிய
மெய்ப்பொருணாயனாரது
பெருமையில் எனது ஆற்றலினுட்பட்ட
சிறிதளவே ஈண்டுச் சொல்லினேனாக; அவர் பொற்றாள் சென்னி வைத்து -
அந்த நாயனாரது பொன்னடிகளைத் தலைமேற் சூடி அத்துணை கொண்டு;
இகல் விறன்மிண்டர் முன்செய்த திருத்தொண்டு செப்பலுற்றேன் - (அடிமைத்
திறத்தல்லாதார் எனத் தாம் கண்டவர்களை) இகல்புரியும் விறன்மிண்ட
நாயனார்
முன்னே செய்த திருத்தொண்டின் வரலாற்றினையும் பண்பினையும்
சொல்லத் துணிகின்றேன்.

     (வி-ரை.) இன்னுயிர் - எந்தப் பிராணிக்கும் தனதுயிரினும்
இனியதும்சிறந்ததும் வேறில்லை. “என்னில் யாரு மெனக்கினி யாரில்லை“
என்பது தேவாரம்; யாவர்க்கு மினியதா யிருந்த தமது உயிர் என்ற
குறிப்புமாம்.

     உயிர் செகுக்கக் கண்டும் - செகுக்க - சிதைக்க. இங்குச்
செகுத்தது உடலையேயாயினும் அச்செயல் உடலினின்றும் உயிரைப் பிரிக்கும்
காரியத்தை விளைத்தது; ஆதலின் உடல் செகுக்க என்னாது உயிர் செகுக்க
என்றார். உயிர்க்கிடனாகிய உடலைச் செகுத்து, அதற்கிடனாகாமற் செய்து
என்க. உயிர் அவயவமுடையதன்றாதலின் அதனைச் செகுத்தலியலா தென்பது.
உயிர் செகுத்தபின் காண்டல் முதலிய செயல்களில்லையாதலின் செகுக்கக்
கண்டும்
என்பது உடலினைச் செகுத்தலால் இன்னுயிரினைப் பிரிக்க நின்ற
செயலினைத் தாமே கண்டும் என்று பொருள் கொள்க. செகுப்பதற்கு முன்
காத்ததே யன்றிக், கண்ட பின்னும் என உம்மை இறந்தது தழுவிய
எச்சவும்மை.

     நன்னெறி - திருவேடத்தினையும் திருவேடத்தாரையும் அரனெனவே
தொழும் நெறி. அன்பர் என்றே - அன்பல்லாத செயல் கண்டும்
அன்பனல்லாதானையும் அன்பர் எனவே திருவேடங்காரணமாக உட்கொண்டு.
ஏகாரம் தேற்றம்.

     என்னுரை செய்தேனாக - அந்தப் பெருமையின் பெரிய
அளவுக்குரிய உரை செய்ய மாட்டாதவனாதலின் என்னுரையேயாம் எனது
ஆற்றலுட்பட்ட சிற்றுரையே செய்தேன் என்பது ஆசிரியர் கூற்று.

     அவர்பொற்றாள் சென்னி வைத்து, இகல் விறன்மிண்டர்
செய்ததிருத்தொண்டு செப்ப லுற்றேன்
என மாற்றி உரைத்துக் கொள்க.
ஒவ்வோர் புராணத்திறுதியிலும் அந்த நாயனாரைத் துதித்து, அவர் சரிதம்
சொல்லிய புண்ணியத் துணை