பக்கம் எண் :


1282 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     நிரயம் - எரிவாய் நரகம். சிவனடியாரை அலைப்போர் அலகைகளாய்
எரிவாய் நரகிடை வெகுகாலம் நின்று அலைவர் என்பது நூற்றுணிபு.
"நாணரகத்து நிற்கும், அலகா வுறுவீர் அரனடி யாரை அலைமின்களே"
(பொன் - அந் - 14) என்ற கழறிற்றறிவார் நாயனார் திருவாக்கும் காண்க.
"ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந், தான்புக் கழுந்தும் அளறு"
என்ற திருக்குறளும், அதற்கு "முடிவில் காலமெல்லாம் தான் நிரயத்து
உழத்தற் கேதுவாங் கொடுவினைகளையே யறிந்து செய்து கோடல்
பிறர்க்கரிதாகலின் ஆற்றும் என்றார்" என்ற பரிமேலழகர் உரையும்காண்க.
இக்கருத்தேபற்றி முன்னர் "வன்புன்கண் விளைத்தவன்" (989) என்றதும்,
மேல்வரும்பாட்டில் "முழுதும் பழுதேபுரி மூர்க்கன்" என்பதும் காண்க. 25

993. முழுதும்பழு தேபுரி மூர்க்க னுலந்த போதின்
எழுதுங்கொடி போல்பவ ருட்பட வேங்கு சுற்றம்
முழுதும்புலர் வுற்றது; மற்றவ னன்ன மாலைப்
பொழுதும்புலர் வுற்றது; செங்கதிர் மீது போத.
26

     (இ-ள்.) வெளிப்படை. முழுவதும் தீமைகளையே செய்த மூர்க்கன்
இறந்துபட்டபோது எழுதும்கொடி போல்பவராகிய அவனது பெண்டிர் உட்பட
ஏங்குகின்ற சுற்றம் முற்றவும் புலம்பி வாட்டமுறுவாராயினர்; மற்றவனைப்
போன்ற மாலைக்குப் பின் வரும் யாமப்பொழுதும் செங்கதிரவனாகிய
ஞாயிறுமேல் வர விடியலுற்றது.

     (வி-ரை.) முழுதும் பழுதேபுரி மூர்க்கன் - இப்பழுதுகள் 978 முதல்
984 வரை கூறப்பட்டன. அவை ஒவ்வொன்றும் பழுதே என்று
முன்காட்டப்பட்டமையின் இங்கு இவ்வாறு தொகுத்துக் கூறினார். மூர்க்கன்
- "முதலையு மூர்க்கனுங் கொண்டது விடா" என்றபடி தீமைகளைத் தீமை
என்றறிந்தபின்னும் மேன்மேல் விடாது செய்வோனாதலின் இவ்வாறு கூறினார்.

     உலத்தல் - இறத்தல். "உலந்தார் தலையிற் பலிகொண் டுழல்வாய்"
(கொல்லி - அதிகை - 7) என்ற அப்பர் சுவாமிகள் தேவாரம் காண்க.

     எழுதும் கொடிபோல்பவர் - (அவனது) மனைவியர். அவன் மிக
விரைவில் இறந்தொழிந்தமையால் சடுதியில் நேர்ந்த அதன்
காரணமறியமாட்டாமையாலும், சிறிதும் எதிர்பாராதநிலையில் இடி
வீழ்ந்ததுபோல அது தாக்கியபடியாலும் தம்பித்து அசைவற்றவராயினர் என்று
குறிப்பார் கொடிபோல்பவர் என்னாது எழுதும்கொடிபோல்பவர் என்று
கூறினார். எழுதுங்கொடி - சுவரில் கொடி போல எழுதும் ஓவியம்
இவ்வாறன்றி, படம் எழுதி உயர்த்திய கொடி நிற்கலாற்றாது பெருங்காற்றா
லலைப்புண்பதுபோல நிலைகுலைந்தனர் என்றுரைத்தலுமாம். கொடி
போல்பவர்
- குலமகளிர் எனவும், ஏங்கு சுற்றம் - காமமொழிந்த நுகர்ச்சி
கொடுத்தற்குரிய மகளிர் (சிந்தா - 296) எனவும், புலர்வுற்றது - அழிந்தது
எனவும் உரைப்பாருமுண்டு.

     உட்பட - சுற்றத்தார் என்ற பொதுப்பகுப்பினுள் மனைவியரும்
அடங்கியவர்களாதலின் இவ்வாறு கூறினார். தலையன்பினராகி அவனுடன்
கழியாது "இல்லும் பொருளும் இருந்த மனையளவே" (ஐயடிகள் - க்ஷேத் .
வெண் - 14) என்றபடி உயிர் வைத்திருந்தார்களாதலின் மனைவியரை வேறு
பிரித்தும் சுற்றத்துடன் ஒன்று சேர்த்து உட்பட ஏங்கு சுற்றம் முழுதும்
புலர்வுற்றது
என முடித்தார்.

     முழுதும் புலர்வுற்றது - முழுமையும் புலர்ச்சியை அடைந்தது.
எல்லாவகையானும் என்க. புலர்தல் - வாட்டமுறுதல். ஏங்கும் சுற்றம்.
ஏங்கும்
என்றதன் மேலும் புலர்வுற்றது என்றது, அவனுக்குக் குலமைந்தரு
மின்மையாலும் (994), அவன் புதிதாய் வந்து வலிந்து
நிலங்கொண்டமையாலும், இங்குத் தமக்கு வேறு பற்றுக்கோடின்மையாலும்,
ஒருவாற்றாலும் தேறுதல் அடையாத வருத்தமிகுதி குறித்தது. முழுதும் -
சுற்றம் முழுமையும் என்றலுமாம். உம்மை முற்றும்மை.