பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்234

சரித வரலாறு குறிக்கப்பட்டது. சோழரது புராணமாதலின் பழஞ்சரிதமும் நாடும்
நகரமும் கூறித் தொடங்கும் காவிய அமைப்பு முறைப்படி ஆசிரியர் கூறியபடியாம்;
முன் எறிபத்த நாயனார் புராணத்தினுள் அவர்சரிதம் விரவும் அளவில் அதனுட்பட்ட
வரலாறாகவே இச்சோழனாரைப் பற்றிக் கூற வேண்டி வந்தமையாலும், இங்கு அவரது
சரிதமேயாதலாலும், பழஞ்சரிதம் நாடு நகரம் முதலிய சிறப்புக்கள் முன்கூறாது ஈண்டு
விரிக்கின்றார்; ஒருவகையால் ஆண்டுக் கூறிய நகரச் (கருவூர்) சிறப்பு, அதுவும்
சோழரது தலைநகரமாதலின், இவ்வரசர்க்கும் பொருந்துமாறும் காண்க. புராணம்
பாடுவித்த சிறப்பும், பாடும் அந்நாளில் உலகாளும் சிறப்பும், சோழர்க்குரிமையாதல்
பற்றியும் இவ்விடத்துச் சிறப்பாகக் கூறுதலும் பொருந்தும். இதனை மேல் (3949)
உரைத்தலும் காண்க; இதுமுதல் 7 பாட்டுக்களால் நகர்வளம் முதலியவை கூறப்படும்
அமைதியும் இந்நகரம் சோழர்களது மிகச் சிறந்த தலைநகரங்களுள் ஒன்றாதல்
குறித்தது. ஆளுடையபிள்ளையாரது திருமூக்கீச்சரத் (உறையூர்) தேவாரமும் (பண் -
செவ்வழி), அதனுள் சோழரது அரசாட்சியின் பெருமை பற்றியே போற்றிப்
பாராட்டுதலும் இங்கு நினைவு கூர்தற்பாலன; கொடுமுடி - உயர்ந்த உச்சி;
மலைச்சிகரங்களை முடி என்பது வழக்கு; வேங்கைக் கொடிக்குறி - என்க; வேங்கைக்
கொடி சோழர்க் குரியது; எழுதுதல் - கல்லிற் பொறித்தல்.
 
     இனிதளிக்கும் - சோழர் - நிகழ்காலத்தாற் கூறியது ஆசிரியரது காலத்தில்
அவர்களது ஆட்சி நிலவியமை குறித்தது.
 
     மலர்புகழ் - விரிந்து பரவும் புகழ்; தமிழ்ச்சோழர் - தமிழ் மூவேந்தர்களுள்
சிறந்த ஒரு மரபு என்பது. வளநாடு - சோழ வளநாடு. நாட்டின் பெரும் பிரிவை
வளநாடென்பது மரபு வழக்கு; காவிரியின் வளம் பெருக நிறைந்து உள்ளது
என்றலுமாம்.
     மாமூதூர் - மா - பெரிய; தலைநகரமாதல் குறிப்பு; பெருநகரம்; முதுமை -
பழமையாவது பழங்காலந் தொட்டுச் சிறப்புடன் விளங்குதல்; காவிரிப்பூம்பட்டினம்
போல; இந்நகரச் சிறப்பும் பழமையும் சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களுள்ளும்
பாராட்டப்பட்டன.
 
     அணிக்கெல்லாம் உள்ளுறையூர் ஆம் உறையூர் - உள்ளுறை - கருத்து;
இருப்பிடம் என்றலுமாம். உலகில் வளர்கின்ற அணிகள் - மங்கலங்கள் - எல்லாம்
இந்நகரின் அணிபோல அமைதல் வேண்டுமென்று கருதவருவன என்பது; ஏனை
அணிகள் எல்லாம் விளங்குதல் இந்நகரத்தின் அணியினை உள்ளுறையாகக்
கொண்டமையாலே என்றலுமாம்; ஒரு நாயகியின் விளக்கமெல்லாம் நாயகனது
உள்ளுறையாலே ஆவன என்பது போல. இப்பொருளில் சோழர் ஆட்சியினாலாகிய
மங்கலம் குறிக்கப்பட்டதென்க. உறையூர் - என்ற நகரப் பெயர்ப் பொருளைச்
சொல்லணியில் வைத்து அணி செய்தவாறும் காண்க; “திருவாமூர் திருவாமூர்” (1277)
என்பதாதியாக வந்தன காண்க. இஃது ஆசிரியரது அணிசெய் கவிநலங்களுள் ஒன்று,.
“ஊரெனப் படுவது உறையூர்” என்று பழந்தமிழ் நூல்களுள் விதந்து கூறப்படுகிறது.
 
     உலகுவளர் பணிக்கெல்லாம் - என்பதும் பாடம்.                   1
 
3943. அளவில்பெரும் புகழ்நகர மதனிலணி மணிவிளக்கும்
இளவெயிலின் சுடர்ப்படலை யிரவொழிய வெறிப்பனவாய்க்
கிளரொளிசேர் நெடுவானப் பேர்யாற்றுக் கொடிகெழுவும்
வளரொளிமா ளிகைநிரைகள் மருங்குடைய மறுகெல்லாம்.             2