142. மயில்புல்குதண் பெடையோடுட
னாடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடுங்குளிர்
சோலைக்கொடுங் குன்றம்
அயில்வேன்மலி நெடுவெஞ்சுடர்
அனலேந்திநின் றாடி
எயில்முன்பட எய்தானவன்
மேயவ்வெழில் நகரே. 2
143. மிளிரும்மணி பைம்பொன்னொடு
விரைமாமல ருந்திக்
குளிரும்புனல் பாயுங்குளிர்
சாரற்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொ டிளவெண்மதி
கெழுவுஞ்சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும்
வைத்தான்வள நகரே. 3
__________________________________________________
2. பொ-ரை: ஆண் மயில்கள் தண்ணிய
தம் பெடைகளைத் தழுவித் தோகைவிரித்தாடும் விரிந்த
சாரலையும், குயில்கள் இன்னிசைபாடும் குளிர்ந்த
சோலைகளையும் உடைய கொடுங்குன்றம், கூரிய வேல்போலும்
நெடிய வெம்மையான ஒளியோடு கூடிய அனலைக் கையில் ஏந்தி
நின்றாடி முப்புரங்களைக் கணை தொடுத்து அழித்த சிவபிரான்
எழுந்தருளிய திருத்தலமாகும்.
கு-ரை: புல்கு - தழுவிய, தண்பெடை
என்றது மயிலுக்குள்ள கற்பின் சிறப்புக்கருதி.
குயில் இன்னிசைபாடும் சாரல், மயில் தண்பெடையோடு
ஆடும் சாரல் என்றது, தன்வசமற்றுப் பாடியும்
ஆடியும் செல்லும் அன்பர்க்குக் குளிருஞ்சாரல்
கொடுங்குன்றம் என்ற கருத்துத் தொனித்தல் காண்க.
3. பொ-ரை: அருவிகள், ஒளிவீசும்
மணிகள், பசும்பொன், மணமுள்ள மலர்கள் ஆகியவற்றைத்
தள்ளிக்கொண்டு வந்து நீரைச் சொரிதலால்,
குளிர்ந்துள்ள மலைச்சாரலை உடைய கொடுங்குன்றம்,
பொங்கி எழும் கங்கையோடு, வெள்ளிய பிறைமதி
பொருந்திய சடை முடிமேல், மணம் வளரும்
கொன்றை மலரையும் மதத்தை ஊட்டும்
|