64. திருப்பூவணம்
பதிக வரலாறு:
திருப்புத்தூரை வணங்கிப் பதிகம்பாடி
எழுந்தருளும் பிள்ளையார், புற்றில்வாழ் அரவம்பூண்ட
பெருமான் எழுந்தருளியுள்ள திருப்பூவணத்தைச் சேர்ந்தார்.
‘அறையார் புனலும்‘ என்னும் இப்பதிகத்தை
யருளினார்.
பண் : தக்கேசி
பதிக எண் : 64
திருச்சிற்றம்பலம்
690. அறையார்புனலு மாமலரு
மாடரவார் சடைமேல்
குறையார்மதியுஞ் சூடிமாதோர்
கூறுடையா னிடமாம்
முறையார்முடிசேர் தென்னர்சேரர்
சோழர்கள்தாம் வணங்கும்
திறையாரொளிசேர் செம்மையோங்குந்
தென்றிருப் பூவணமே. 1
__________________________________________________
1. பொ-ரை: ஆரவாரித்து வரும் கங்கையும்,
ஆத்தி மலரும், ஆடும் பாம்பும் பொருந்திய சடையின்
மேல், ஒரு கலையாய்க் குறைந்த பிறை மதியையும் சூடி
மாதொர் பாகனாக விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய
இடம், நீதியோடு கூடியவராய் முடிசூடி ஆளும் பாண்டியர்,
சேரர், சோழர் ஆகிய மூவேந்தர்களும் வணங்குவதும்,
வையை ஆற்றின் அலைகள் வீசுவதும், புகழோடு கூடியதும்,
வயல் வளம் மிக்கதுமாகிய அழகிய திருப்பூவணமாகும்.
கு-ரை: புனலும், ஆத்திமலரும், மதியும்
சூடிய உமையொரு பாகன் இடம் பூவணம் என்கின்றது. அறை
- பாறை. ஆ - ஆச்சா (ஆத்தி.) குறையார்மதி - பிறைமதி.
தென்னர் - பாண்டியர். திறை - கப்பம். செம்மை -
ஒழுங்கு.
குருவருள்: ‘முறையார் முடிசேர் தென்னர்
சேரர் சோழர்கள் தாம் வணங்கும் திறையாரொளி சேர்
செம்மை ஓங்கும் தென்திருப்
|